Share

Showing posts with label ஜெமினி கணேசன். Show all posts
Showing posts with label ஜெமினி கணேசன். Show all posts

May 14, 2020

காருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்

காருக்குறிச்சிக்கு ஆருடக்குறிப்பு மூலம்
நேரம் சரியில்லை என தெரிந்ததால்
சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறு
சென்று விட்டு வந்திருக்கிறார்.
மதுரையில் மெடிக்கல் செக் அப் செய்த பின் டயட் கன்ட்ரோல். இரவில் கோதுமை கஞ்சி.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டி பங்களாவில் மதிய உணவு சாப்பிடுகிறார்.
அவருடைய முதல் மனைவி ராமலட்சுமி தான் வீட்டின் பட்டத்தரசி.
தன்னுடைய ஓரகத்திகளின் பன்னிரெண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவர். சமையல் பக்குவத்திலிருந்து கணவருக்கு
முகம் கோணாமல் பறிமாறுவது வரை
பார்த்து பார்த்து செய்பவர்.
சாப்பிட்டு முடித்தவுடன் திருநெல்வேலி கிளம்புகிறார்.
அங்கே ஒரு கச்சேரி. அது முடிந்தவுடன்
கலெக்டரை சந்திக்க வேண்டியிருக்கிறது.
காருக்குறிச்சி 'நாதஸ்வரம் குரு குலம்' நடத்தும் திட்டம் வைத்திருந்தார்.
அதற்கு திருநெல்வேலி கலெக்டர் நிலம் கடலையூர் சாலையில் ஒதுக்கித்தர இசைந்திருந்தார்.
அவரையும் சந்திக்க வேண்டும்.
கச்சேரி முடித்து விட்டு கலெக்டரை சந்திக்கிறார்.
இரவு ஏழு மணி. பேசுக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்.
திருநெல்வேலி ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.
அவருடன் உப நாயனம் வாசிப்பவர், அவர் பெயரும் அருணாசலம் தான். அந்த அருணாசலம் உடனேயே கோவில்பட்டி வருகிறார்.
அப்போது அவருடைய மனைவியர், புத்திரங்கள் அனைவரும் தியேட்டரில் 'அல்லி' படம் பார்த்து விட்டு அப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
உப நாயனம் அருணாசலம் தகவல் சொல்கிறார்.
குடும்பம் திருநெல்வேலி பயணம்.
மறு நாள் காருக்குறிச்சிக்கு நினைவு திரும்பி
கண் விழித்து பார்த்த போது துயரத்துடன்
வாய் விட்டு சொல்லியிருக்கிறார்.
"எனக்கு இப்படி ஆயிடுச்சே. நான் புள்ளக்குட்டிக்காரன்"
சுற்றிலும் மனைவியரும் குழந்தைகளும்.
மீண்டும் நினைவு மறந்த நிலை.
அந்த திங்கள்கிழமை, அடுத்த நாள் செவ்வாய் கிழமை இரண்டு நாளும் சுயநினைவு
இல்லாமல் தான் படுக்கையில்.
ஆனால் மறக்கவே முடியாத படி
ஒரு பவித்ர நிகழ்வு.
அவ்வப்போது அவர் வாய் ஸ்வரங்களை முணுமுணுக்கிறது.
கைகள் நாதஸ்வரம் வாசிக்கிற பாவனையில் இயங்குகின்றன.
செவ்வாய் கிழமை அவர் மரணமடைந்து விட்டார்.
Medical report - 'Diabetic Coma.
கோவில்பட்டி கடலையூர் சாலையில் கலெக்டர் கொடுத்த நிலத்திலேயே
காருக்குறிச்சி அருணாசலம் சமாதி.
கோவில்பட்டியில் காருக்குறிச்சி சிலை அமைக்க 
நிதி உதவி ஜெமினி கணேசன் - சாவித்திரி.
திருநெல்வேலி கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன் தலைமையில்
ஜெமினி கணேசன் தான் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.
பின்னாளில் தமிழக தலைமை செயலராக உயர்ந்து,
ஒரிசா மாநில கவர்னர் பதவியும் வகித்த பெருந்தகை எம். எம். ராஜேந்திரன் அவர்கள்.  

Feb 25, 2020

என் அப்பாவும் ஜெமினியும்


ஒரு விஷயம் நான் அதிகமாக எப்போதுமே
கேட்க நேர்ந்திருக்கிறது.
என் பால்ய காலம் தொட்டு.
எத்தனை ஆயிரக்கணக்கான தடவை.
கணக்கே கிடையாது.
என் 'தலைமுறைகள்' ஸ்டேட்டஸில் இப்போது
சாரு நிவேதிதா கமெண்ட் போட்டிருக்கிறார்.
'அப்பா ஜெமினி மாதிரியே  இருக்காங்களே'

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது
ஒரு பத்தாம்  வகுப்பு படிக்கும் அக்கா
"டேய் உங்கப்பா அச்சு அசல் ஜெமினி கணேசன் மாதிரியே இருக்குறாருடா"
ஒரு நாள் மழை பெய்த போது பள்ளியில் இருந்து அழைத்து போக அப்பா வரக்காணோமேன்னு அழுத போது சொன்னாள் 'கடிதம் எழுதி மழையில போடு. அப்பா வருவார்.' அவளே டிக்டேட் செய்தாள். கடிதத்தை மழையில் வீசினேன்.
அந்த அக்கா என் அப்பாவுக்கு எழுதிய
காதல் கடிதம் அந்த பள்ளியின் மதர் சுப்பீரியர் கைக்கு சிக்கும்படியாகி, ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தவளை உடனே, உடனே ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மிக பிரபலமான ஒரு குடும்பத்தை சேர்ந்த
பெண் அந்த அக்கா.
I must admit that my father was very promiscuous.
இது பற்றி எங்கள் குடும்ப அந்த கால கிழவிகள் காதாட்டிக்கொண்டே,
என் அம்மாவிடம் சொல்லும் ஆறுதல்
"ஒன் புருஷன் என்ன பண்ணுவான். பாவம். அவுளுங்க வந்து அவன் மேல விழுகிறாளுங்க. சிறுக்கி முண்டைக"
சாயல் வேறு.
சாயல் என்பது ஒருவர் சொல்லும்போது இன்னொருவர் எனக்கு அப்படி தெரியல என்று மறுக்கும்படியாகவே இருக்கும். சம்பந்தப்பட்டவரே மறக்கலாம். 'எனக்கும் அவருக்கும் என்னங்க சாயல்'
உருவ ஒற்றுமை என்பது அப்படியல்ல. ஆச்சரியம் ஏற்படும்.
பிரபலங்களின் உருவ ஒற்றுமை சிலருக்கு அமைந்து விடும்.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது விபரீதமாக என் அப்பா பற்றி ஒரு பையன் சீரியஸாக "ஜெமினி ஏன் ஒன்ன பாக்க அடிக்கடி ஸ்கூலுக்கு வர்றாரு" வெள்ளந்தியாக கேட்டிருக்கிறான்.
சீனியர் ஸ்டூடண்ட்ஸ் தான் கன்ஃபர்மா சொன்னாங்களாம்.
கல்லூரியில் படிக்கும்போதும்.
என் அப்பா ஜெமினியை விட பத்து வயது இளையவர்.
கஸ்டம்ஸ் அன்ட் சென்ட்ரல் எக்ஸைஸ் ஆஃபிஸர்.
குற்றாலத்தில் அப்பா எண்ணெய் தேய்த்து விட்டு குளிக்க அருவியை நோக்கி சென்ற போது, ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டமே "ஜெமினி கணேசன், ஜெமினி கணேசன்" என்று ஓடி வந்திருக்கிறது.
இதே போல விக்ரம சிங்க புரம் அகஸ்தியர் ஃபால்ஸிலும் நடந்திருக்கிறது.
எங்கள் குடும்ப திருமணம் ஒன்றில்
ஜெமினி கணேசன் கலந்து கொண்ட போது பலரும் குழம்பிப் போய் என் அப்பாவிடம் ஆட்டோக்ராப் கேட்டார்கள்.

ஜெமினியே " என்ன மாதிரி இருக்கீங்க" என்றார்.
ஒரு வயதான அம்மணி அப்பாவிடம் வந்து பரவசமாக " நான் டைரக்டர் கே. சோமுவோட தங்கச்சிப்பா, ஒன் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா. " ஜெமினியின் படங்களாக சொல்ல ஆரம்பித்து விட்டார்.
கே. சோமு டவுன் பஸ், சம்பூர்ண ராமாயணம், பட்டினத்தார் படங்களின் இயக்குநர்.
..............
....

Mar 27, 2019

மாஸ்டர் ராஜ்குமார்


ஏ.வி.எம் நிறுவனம் எடுத்த அந்த படத்திற்காக நூறு குழந்தைகளை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களில் மாஸ்டர் ராஜ்குமாரைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அந்தப்படம் ’ராமு’. எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

எஸ்.வி.சுப்பையா குழந்தை ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
சொல்லும் பிரபல வசனம் “ தெய்வத்துக்கு ஆயிரம் கை. அதில் ஒரு கை கூட என் கண்ணீரை துடைத்து விட்டதில்லை.”
ராமுவாக டைட்டில் ரோலில் நடித்த ராஜ்குமார் ‘எனக்கு சாகத்தெரியலயே அப்பா’ என்று மணலில் எழுதிக்காட்டும் போது தியேட்டரில் கண் கலங்கி கண்ணீர் விட்டவர்கள் அனேகர்.

ஜனாதிபதி ஜாகிர் உசேன் கையால் அகில இந்தியாவிலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் தேசிய விருது பெற்றார். ராமுவில் நடிக்கும்போது சிறுவனுக்கு எட்டு வயது.
தமிழில் நூறு நாள் ஓடிய படம். தமிழில் ஜெமினி கணேசன் கதாநாயகன். தெலுங்கில் என்.டி.ராமராவ். ராமுவாக தெலுங்கிலும் மாஸ்டர் ராஜ்குமார் தான் நடித்தார். ஆந்திராவில் முப்பத்தைந்து வாரங்கள் ஓடியது. தெலுங்கில் கோவர்த்தனம் இசையமைத்தார்.
எம்.ஜி.ஆருடன் பெற்றால் தான் பிள்ளையா? ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ பாடலில் ஆட்டம் போட்ட சிறுவன்.
ராஜ்குமார் ’சபாஷ் தம்பி’ படத்திலும் டைட்டில் ரோல் செய்தார்.
பாலிஷ் பூட் பாலிஷ் பாடல்.
ஜெய்சங்கர் இவரை புகழ்ந்து பாடுவது “ சபாஷ் தம்பி, உன் செய்கையை போற்றுகிறேன்.நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றிடுவேன்.”

’அதேகண்கள்’ காஞ்சனாவுடன் ”பூம்பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி”
இருமலர்களில் நாகேஷின் மகனாக.
தெய்வமகன் படத்தில் ஜுனியர் சிவாஜியாக கலக்கியவர்.
தனிப்பட்ட முறையில் எனக்கு பால்யத்தில் ராஜ்குமாரை வைத்து சில மறக்கமுடியாத நினைவுகள் உண்டு.
அப்பா முதல் முறையாக டேப் ரிக்கார்டர் வாங்கி வந்திருந்த போது அதில் நான் பாடிய பாடல் “பச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு, பாட்டு சொல்லி தூங்கச்செய்வேன் ஆரிராரோ,” ஒரு பாடலில் என் குரல் முதல் முறையாக கேட்ட த்ரில்.
பள்ளியில் நான் குட்டி பத்மினியின் பாடல்கள் பாடியிருக்கிறேன். “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,”
“கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே.” பாடிய போது அரங்கமே கை தட்டி அதிர்ந்திருக்கிறது.
பாட்டுப்போட்டியில் நான் பரிசு வாங்கிய பாடல் எம்.ஜி.ஆருடன் ராஜ்குமார் ஆடிய “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி”
சென்னைக்கு சிறுவனாக நான் முதல் முறை வந்திருந்த போது ஒரு வீட்டில் எனக்கு விருந்து. அங்கே இருந்த கிராம போன் ரிக்கார்ட் ப்ளேயரில் நான் கேட்ட பாடல் “ பாலீஷ், பூட் பாலீஷ்”

சாயல் என்பது ஒவ்வொருவர் கண்ணுக்கும் எப்போதும் ஒவ்வொரு மாதிரி தெரியும். பால்யத்தில் என் சாயலில் ராமு முகம் தெரிகிறது என்று சொன்னவர்கள் உண்டு.
அதிகம் பேசாத என் மூத்த மகன் கீர்த்தியின் இயல்பில் ராமுவையே நான் பார்த்திருக்கிறேன்.
ராஜ்குமார் அப்போது நடித்த பிற படங்கள் - ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்த நாலும் தெரிந்தவன்,
ரவிச்சந்திரன், விஜயகுமாரி ( அபூர்வமான ஜோடி) இணைந்த “செல்வியின் செல்வன்”.
ஏ.வி.எம் ராஜன் நடித்த ’பிரார்த்தனை’ தான் ராஜ்குமார் நடித்த கடைசிப்படம்.

தமிழ் தெலுங்கு படங்கள் மட்டுமின்றி, தாய்மொழி கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
மொத்தம் ஐம்பது படங்கள்.

இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர் தான் நம்பும் நம்பிக்கை நட்சத்திரங்களாக 
கேப்டன் சசிகுமார், அதே கண்கள் வசந்தகுமார், மாஸ்டர் ராஜ்குமார் ஆகியோரை குறிப்பிட்டதுண்டு.
கேப்டன் சசிகுமார் தன் மனைவி நெருப்பில் சிக்கிய போது அவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தார்.
அதே கண்கள் பட வில்லன் வசந்தகுமார் துபாய் பயணம் செய்த போது விமான விபத்தில் மறைந்து விட்டார்.

காலம் காட்டும் விசித்திரம். மாஸ்டர் ராஜ்குமார் இசைக்கருவி வாசிக்கும் கலைஞராக மாறி விட்டார்.
இவருடைய அப்பா ஹனுமந்தாச்சார் ஒரு இசைக்கலைஞர். சிந்தஸைசர் எனப்படும் கீ போர்ட் வாசிப்பவர்.
கோவர்த்தனம் மூலமாக ரீரிக்கார்டிங்கில் வாசிக்க இளைஞன் ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைத்த போது நல்ல எக்ஸ்போசர். அதன் பின் திரையுலக இசைக்கலைஞராக பரிமாணமே மாறியிருக்கிறது.
Life is a walking shadow – Shakespeare in Macbeth.

(மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி. 
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.)


அக்கார்டியன் பிரமாதமாக ராஜ்குமார் வாசிப்பார்.
அந்த நேர நெருக்கடி பற்றியும் வெள்ளந்தியாக சொல்கிறார். “அப்பாவுக்கு வேலையில்லை. நான் எனக்கு வந்த இசைத்துறை வாய்ப்புகளை கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய சூழ் நிலை. மீண்டும் நடிக்க போக பயம். அரசனை நம்பி புருஷனை கை விட்டு விடக்கூடாதே”


விட்டோரியா டெசிக்காவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பின்னாளில் பள்ளிக்கூட வாத்தியாராகிப்போனார் என்பது நினைவுக்கு வருகிறது.

Fickle and Elusive Popularity.

விந்தை என்னவென்றால் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அதே ஏ.வி.எம். ஸ்டுடியோ விஜயா வாஹினி, பிரசாத் ஸ்டுடியோவில் தான் ராஜ்குமாரின் பிற்கால வாழ்க்கையும் என்றாகிப்போனது என்பது தான்.
எம்.எஸ்.வி, கே.வி. மஹாதேவன் பாடல்களில் அக்கார்டியன் வாசித்திருக்கிறார்.
இளையராஜாவிடம் 1977 முதல் 1990 வரை பாடல் பதிவில் அக்கார்டியன் இசைக்கலைஞர் ராஜ்குமார் பணி புரிந்திருக்கிறார்.
அன்று ஆரம்பித்த திரை இசைக்கலைஞர் பணி ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்காக “மாற்றான்” படத்தில் கூட அக்கார்டியன் வாசித்தார்.
தேவி பிரசாத் பாடல் “ என்றென்றும் புன்னகை”
’பத்மினியும் பண்ணையாரும்’ படத்தில் ’உனக்காக, உனக்காக’ பாடல்.
ராஜ்குமாருக்கு இரண்டு மகன்கள்.
சமீபத்தில் சென்ற அக்டோபர் மாதம் அவருக்கும் அவர் மனைவிக்கும் மிகப்பெரிய மீளமுடியாத துயரம். மூத்த மகனின் திடீர் மறைவு.
புத்திரசோகம் தான் எத்தகைய கொடியது.
இளைய மகன் பவன் குமார் தான் இன்று அவர்களுக்கு ஆறுதல்.
ராஜ்குமார் முழுமையாக நொறுங்கிப்போய் இருக்கும் நிலையில் தான் அவரை நான் நேரில் சந்திக்க வாய்த்திருக்கிறது.

(இந்த மாஸ்டர் ராஜ்குமார் பதிவை படித்து தெரிந்து கொண்டு குங்குமம் பத்திரிக்கையில் இருந்து என்னை தொடர்பு கொண்ட கதிர்வேலன் ஒரு பேட்டி எடுக்க வேண்டி ராஜ்குமார் மொபைல் எண் கேட்டார். நானும் கொடுத்திருக்கிறேன். குங்குமத்தில் பேட்டி வெளியாக இருக்கிறது.)

........






Jul 7, 2018

LADIES NOT ALLOWED


ஜெமினி கணேசன் தாத்தா நாராயணசாமி ஐயர் புதுக்கோட்டை மஹாராஜா கல்லூரி பிரின்சிபாலாயிருந்தாராம்.. இவர் ஒரு இசை வேளாளர் இன பெண்ணை அபிமான தாரமாக மணந்திருக்கிறார். அவருக்கு பிறந்தவர்கள் பின்னால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என அறியப்பட்டவரும், ஜெமினி கணேசனின் தந்தை ராமசாமியும். ராமசாமியும் ஒரு இசை வேளாளர் இனப்பெண்ணைத் தான் மணந்திருக்கிறார். அவரை தான் கங்கா பாட்டி என்று ஜெமினி மகள் கமலா செல்வராஜ் சொல்கிறார்.
ஜெமினி சுத்த பிராமணர் அல்ல. ஆனால் ஜெமினியின் மகள் இவரை பிராமணர் என்றே சித்தரிக்கிறார். ஜெமினி பெருமளவுக்கு ’முக்கா படி அரை வீசம்’ இசை வேளாளர் இனம் தான்.
ஜெமினியின் தாயார் முண்டனம் செய்த பிராமண விதவைக்கோலத்தில் தான் தன் வாழ்நாளில் இருந்தார். ஒரு விஷயம். இசை வேளாள இனம் பிராமண ஜாதியுடன் கலந்து விட்டால் அப்படிப்பட்டவர்கள் பிராமண கோலம் கொள்வதையே விரும்புவர் என்பதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மடிசார் புடவையே சாட்சி.
” என்னோட அம்மா ஒரு கம்மனாட்டி. கம்மனாட்டி வளத்த பிள்ளை நான்” என்று என்னிடம் ஜெமினி சொன்னார். (தன் தாய் இளமையிலேயே விதவையானவர் என்பதை ’கம்மனாட்டி’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி சொன்னார்.)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தன் அத்தை என்பதை ஜெமினி மறைத்ததில்லை. ஆனால் எப்படியோ ஜெமினிக்கு பிராமணர் என்ற பிம்பம் சாசுவதமாயிருந்திருக்கிறது.
ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி பிராமணப்பெண் என்று சொல்லப்படுகிறது.
ஜெமினியின் பேச்சே பிராமண பாஷை தானே.
பி.யூ.சின்னப்பா புதுக்கோட்டைக்காரர்.
புதுக்கோட்டைக்காரர் ஜெமினி என்னும்போது மற்றொரு திரைப்பட நடிகர் ஏ.வி.எம்.ராஜனும் புதுக்கோட்டைக்காரர் தான். ஜெமினிக்கு தம்பி போல இருப்பார். இவர் அம்மா இசை வேளாளர், அப்பா முக்குலத்தோர் என சொல்லி கேள்வி.
ஜெமினியின் திரையுலக அந்தஸ்து பற்றி நான் தெளிவாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
தமிழ் திரையுலக மூவேந்தர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று கூர்முனை என்பது ஐம்பதுகளில். அதில் ஜெமினி என்ற கூர் முனை 1960களில் மெல்ல மழுங்கிப்போனதை யாரும் மறக்கக்கூடாது. ஜெமினியின் இயல்பும் இதற்கு ஒரு காரணம். சிவாஜியோடு இரண்டாவது கதாநாயகனாக நடித்ததோடு நிற்கவில்லை. எம்.ஜி.ஆர் இதற்கே “ ஜெமினி தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே” என்று வருத்தப்பட்டார்.
தன் திரையுலக அந்தஸ்திற்கு குறைவான நடிகர்கள் ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.ஏம்.ராஜன், ரவிச்சந்திரனோடும் இணைந்து ஜெமினி பல படங்கள் நடித்தார். எஸ்.எஸ்.ஆரோடு வைராக்கியம், குலவிளக்கு ஆகிய படங்கள்.
திரையுலக மூவேந்தர் என்ற அமைப்பு மாறி திரையுலகின் இரண்டு திலகங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி உச்ச அந்தஸ்து பெற்று விட்டனர்.
ஜெமினி சின்ன பட்ஜெட் நடிகராகி விட்டார்.
சின்ன பட்ஜெட் நடிகரானது Blessing in disguise. கே.பாலச்சந்தரின் தரமான படங்கள் அவருக்கு கிடைத்தன.
சாவித்திரியோடு அவர் வாழ்ந்த காலங்கள். சாவித்திரி கொடி கட்டிய காலங்களில் ஜெமினிக்கு மார்க்கெட் தமிழ் திரையுலகம் மட்டும் தான். ஆனால் சாவித்திரிக்கு பிரமாண்டமான தெலுங்கு திரையுலகிலும் மார்க்கெட். ஆந்திர மண்ணின் மகள்.
தெலுங்கில், தமிழில் அவர் மொத்த சம்பாத்தியம், ஜெமினியின் சம்பாத்தியத்தை விட நிச்சயம் அதிகம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. சாவித்திரி பிஸியாக இருந்த காலங்களில் அவர் அந்தஸ்து ஜெமினியை விட கூடுதல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஜெமினி நடித்த இந்திபடங்கள் கூட வெற்றி பெற்றன என்பது வேறு விஷயம். ஆனால் ஒன்று. சாவித்திரி தெலுங்கு, தமிழில் கதாநாயகி அந்தஸ்து இழந்த பின்னும் தமிழ் திரையில் பல வருடங்கள் ஜெமினி கணேசன் கதாநாயகன் அந்தஸ்தில் இருந்தார்.
1953ல் ஜெமினி ’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் தொடங்கி 1974ல் ’நான் அவனில்லை’ படத்தோடு அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது.
”உண்மைக்கின்னே ‘புன்னகை’ (1971)ன்னு ஒரு படம் நடிச்சேனே..அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க.. பொய்க்குன்னே ஒரு படம் ‘ நான் அவனில்லை’ …அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க..” என்று ஜெமினி வேதனையோடு சொன்னார்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் 1974ல் உரிமைக்குரல், தங்கப்பதக்கம் என சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
1953 துவங்கி 1974 வரை ஜெமினி 21 வருடங்கள் மார்க்கெட்டில் இருந்ததாகக் கொள்ளலாம்.
பின்னரும் ஜெமினி எத்தனையோ படங்களில் இருந்தார் என்றாலும் அவை ஜெமினி கணேசன் படம் என்றெல்லாம் சொல்லலாகாது.
மார்க்கெட் போனதை ஜெமினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழு மேக்கப், தலையில் விக் வைத்துக்கொண்டு ஸ்டுடியோக்களில் காரில் வலம் வருவார். பார்ப்பதற்கு ஜெமினி இன்னும் மார்க்கெட்டில் இருப்பதாக தெரிய வேண்டும்!
மார்க்கெட். தினத்தந்தியில் ஒரு செய்தி அந்தக்காலத்தில்.
”சௌகார் ஜானகியின் மார்கட்டு சரிந்தது!”
மார் கட்டு.
நடிகையர் திலகம் படம் பார்க்கிற விசேஷ ஆர்வம் எனக்கு இல்லை. சாவித்திரியம்மாவைப் பற்றி ராஜநாயஹம் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
BioPic எப்போதும் ஒரு ஆளுமை பற்றி கூடுதல் புகழ்ச்சி இருக்கும். படத்தை மஹாநதி என்று தெலுங்கர்கள் எடுத்திருக்கிறார்கள். மண்ணின் மகளை உயர்த்திப்பிடிக்கவே செய்வார்கள். பொதுப்புத்தி காவிய நாயகியாக உயர்த்தும்போது கணவன் வில்லனாக மாறுவது என்ன அதிசயமா?
சாவித்திரியின் தெலுங்கு திரைச் சாதனைகள் இங்கே உள்ளவர்களுக்கு எப்படி முழுமையாக அறிய முடியும்.
ஜெமினி கணேசனை மட்டம் தட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஜெமினி பேச்சை சாவித்திரி கேட்டிருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தடுத்திருக்க முடியும்.
சாவித்திரியின் Bio pic கமலா செல்வராஜ் சகோதரிகள், சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி, மகன் சதீஷ் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
புஸ்பவல்லி, மகள்கள் ரேகா, ராதா நல்லவர்கள். ஆனால் சாவித்திரி மகள்? என்று பொங்குகிறார் கமலா.
சாவித்திரி Possessive lady. புஸ்பவல்லியும் அப்படித்தான் என்று ஜெமினியே சொல்லியிருக்கிறார். புஸ்பவல்லியுடன் வாழ்ந்த காலத்தில் கூட பாப்ஜியின் வீட்டை மறந்து தான் இருந்ததாக ஜெமினி குமுதம் பேட்டியொன்றில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.
சமந்தா ‘என் முதல் காதலன் ஜெமினி மாதிரி தான். நல்லவேளை அவனை நான் கட்டியிருந்தால் எனக்கு சாவித்திரி நிலை தான்’ என்று ஆசுவாசப்படுகிறாள்.
சாவித்திரிக்கு ஜெயசித்ரா கேள்வி ‘ நீங்க ஏம்மா ஜெமினிய கட்டினீங்க. வேற யாரயாவது கட்டியிருக்கலாமே’
கமல் அந்தக்காலத்தில் சொல்வார் “ ஜெமினி மாமாவை யாராலும் அவமானப்படுத்தவே முடியாது. உங்களப் பத்தி இப்படி இந்த ஆள் பேசறான்னு அவர் கிட்ட சொன்னா ‘போறாண்டா. சொல்லிட்டுப்போறான்…’ என்பார்”
இப்போது அவர் உயிருடன் இருந்து இந்த ’நடிகையர் திலகம்’ பார்த்திருந்தால் “சாவித்திரிய நன்னாத்தான்டா காண்பிச்சிருக்கான்….” அது போதுமே என்று திருப்திப்பட்டிருப்பாரோ.
விஜய சாமுண்டீஸ்வரி சாவித்திரியோடு பகை பாராட்டியதால் தான் அண்ணா நகரில் தனியாக வசித்திருக்கிறார். ஜெமினி கணேசன் மீது சாவித்திரி மகள் கேஸ் போட்டதுண்டு. ஜெமினியை கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்ததுண்டு.
கமலா செல்வராஜ் தன் தாயை விட சாவித்திரியம்மாவை பிடிக்கும் என்று கூட பேட்டியில் சொன்னதுண்டு. ஆனால் சாவித்திரி படம் அவர் மீது மிகுந்த துவேசத்தை ஏற்படுத்தி விட்டது. “She is very bad. கல்யாணத்திற்கு பிறகும் சாவித்திரிக்கு affairs இருந்தது.” என்று கமலா தூற்றும்படியாக இந்த சாவித்திரி படம் மாற்றி விட்டது.

Caesar’s wife is above suspicion.

என்னுடைய சாவித்திரி கட்டுரையில் அவர் affairs பற்றி குறிப்பிட்டதில்லை.
இப்போது நடிகர் ராஜேஷ் “ அப்படி சாவித்திரியோடு affair வைத்திருந்த நடிகர்களை எம்.ஜி.ஆர் மிரட்டியிருக்கிறார் தெரியுமா?’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார்!
கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்.

அவர் மறைந்து இவ்வளவு காலம் கழித்து அவர் கற்பு விவாதத்துக்குள்ளாகிறது.
ஜெமினி, சாவித்திரி இருவருமே Promiscous persons. Yet both are honourable.

எம்.எஸ் பெருமாள் என்னுடைய ’நடிகையர் திலகம் சாவித்திரி’ கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்ன ஒரு விஷயம்.
’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் இப்போது கேட்கும் போதாவது ஜெமினி மாமா உங்க கூட இனிமேலாவது சேரமாட்டாரா’ என்று 1970களில் எம்.எஸ்.பெருமாள் கேட்ட போது சாவித்திரி “இப்ப அந்த பாட்ட பார்த்தா அவர் என் கையில உள்ள பெண் குழந்தை இப்ப பெரிய பிள்ளையாயிருப்பாளே, அவள எப்படி கணக்கு பண்ணலாம்னு தான் அவர் புத்தி போகும்” என்றாராம்.
கமலா செல்வராஜுக்கு அவர் அப்பா பற்றி ரொம்ப பிரமையிருக்கிறது. அவர் அழகானவர் என்பதால் எல்லா பெண்களும் அவரை காதலித்தார்களாம். அவரைத் தேடி வந்தார்களாம். அவர் மேல தப்பில்லையாம். எல்லா நடிகைகளுமே அவரை விரும்பினார்கள் என்று பட்டவர்த்தனமாக சொல்கிறார்.
என் பங்குக்கு நானும் சொல்கிறேன்.
”குழந்தையுள்ளம்” (1969) படம் சாவித்திரி இயக்கிய சொந்தப்படம். ஜெமினி கணேசனும் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த படம். சௌகார் ஜானகியும் உண்டு.எஸ்.பி.பியின் ஆரம்பக்கால பாடல் ”முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு”. சாவித்திரி டாக்டரம்மாவாக வருவார்.
இந்தப்படத்தில் பி.வாசுவின் சித்தப்பா சேகர் கேமராவில் பணி புரிந்திருக்கிறார். அப்பா பீதாம்பரம் மேக் அப்.
சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் சண்டை பார்த்திருக்கிறீர்களா என்று நான் சேகரிடம் கேட்டேன்.
சேகர் சொன்னார். “ ரெண்டு பேருக்கும் சண்ட என்ன…. ’நீ அவன் கூட படுத்தில்ல..எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டியா?’ன்னு இவரு கேப்பார்..பதிலுக்கு அந்தம்மா ’நீ அவ கூட, இவ கூடல்லாம் படுத்தேல்ல’ன்னு சொல்லும்.

எல்லா கேசனோவோக்களும் பெண்களிடம் செருப்படி வாங்கித்தான் ஆக வேண்டும்.
கமல் மற்றொரு நடிகரிடம் சொன்னதாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். என்னுடைய புரிதல் கீழ்கண்டவாறு.
ஜெமினி ஒரு நடிகையை தொடக்கூடாத இடத்தில் தொட்டிருக்கிறார். நடிகை இவரை உடனே மறுதலித்து எதிர்த்து கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் அப்போது உள்ளே நுழைந்தவர் அதை பார்த்து விட்டார். இந்த மூன்றுமே சில வினாடிகளில். எதுவுமே நடக்காதது போல ஜெமினி சௌஜன்யமாக கமலைப்பார்த்து கேட்டாராம் “ என்னடா பிள்ளையாண்டான்! எப்படிடா இருக்கே..எப்படா வந்தே…”
அவருடைய கடைசி மனைவி(!) ஜூலியானா அவருடைய தள்ளாத வயதில் குடையால் அடித்திருக்கிறாள்.
ஜூலியானா Spendthrift. ஜெமினி சிக்கனக்காரர். ’எவ்வளவு நகை வாங்கியிருக்கா. இப்பவும் உங்க கடையிலும் நகைய அள்ளறா பாருங்க.’ என்று என் மாமா அங்குராஜிடம் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்.
ஜூலியானாவிடம் இருந்து தன் அப்பாவை மீட்டு கமலா செல்வராஜ் ஜி.ஜி.ஆஸ்பிடலில் வைத்திருந்த போது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு.
“ LADIES NOT ALLOWED”

The height of Irony!
இந்த ‘Ladies not allowed’ அறிவிப்பு காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா? சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா?
…………………………….









Jun 10, 2018

தகவல் பிழை


ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் லட்சுமி நாராயணன். நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்காரர் வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்.
இவருடைய மனைவி (பெயர் ஜெயலட்சுமி என்று நினைவு.) குற்றாலம் பராசக்தி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மகளிர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.
லட்சுமி நாராயணன் தென்காசியில் சொந்த வீட்டுக்காரர். அவ்வப்போது தென்காசிக்கு ஒரு சில நாட்கள் செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் யூ.கே.ஜி படித்துக்கொண்டிருந்த என் இளைய மகன் அஷ்வத் தான் மாமியோடு கூட துணைக்கு படுத்துக்கொள்வான். சுட்டிப்பயல். ஒரு சில நாட்களில் பெட்டிலயே ஒன் டாய்லட் போய் விடுவான். ஆனால் மாமி அதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வார்.
லட்சுமி நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் போது கூட அவரிடம் அஷ்வத் “ நீங்க எப்ப ஊருக்கு போவீங்க. நீங்க ஊருக்கு போங்க. நான் மாமியோடு படுத்துக்கிறேன். நீங்க ஊருக்கு போங்க.. நான் மாமியோடு படுத்துக்கிறேன்.” என்று அனத்துவான். “டேய், என்ன இங்க இருக்க விட மாட்டியா..என்னடா என் பொண்டாட்டி கூட படுத்துக்கிறேன்னு ஏங்கிட்டவே சொல்றே… சரி… நான் போகும்போது சொல்றண்டா..” என்று ஜாலியாக அவர் பதில் சொல்வார்.
எங்கள் வீட்டிலும் அவர் வீட்டிலும் சீனியம்மா என்ற அருந்ததியப் பெண் வேலை பார்த்தாள். வீட்டு வேலை பார்க்கும்போது அவளுடைய குழந்தையை தூங்க வைப்பது, கவனித்துக்கொள்வது எல்லாம் லட்சுமி நாராயண அய்யங்கார் தான். சீனியம்மாவின் குழந்தையை சீராட்டுவார்.
என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா, மணோன்மணியம் சுந்தரனார் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஆகியோருடைய வகுப்புத்தோழராக லட்சுமி நாராயணன் தன்னைப் பற்றி சொல்வார். க.ப.அறவாணன் இவருடைய பெயரை தூய தமிழில் மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவாராம். இவர் மறுத்து விட்டாராம். அப்போது பாப்பையா தன் பெயரை ‘வளவன்’ என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டிருந்தாராம்.
என்னிடம் பேசும்போது அடிக்கடி ஒரு விஷயம் குறிப்பிட்டதுண்டு. ‘ஜெமினி கணேசன் மனைவியும் லா.ச.ராமாமிருதம் மனைவியும் கஸின்ஸ். ஜெமினி பற்றி லா.ச.ரா ‘ நான் கேரக்டர் இல்லாத மனிதனை மதிப்பில்லை’ என்று சொல்வார்.
இதனை என் பதிவுகளில் லட்சுமி நாராயணன் சொன்னதாகவே நான் எழுதியிருந்தேன்.

இப்போது ஜெமினி மனைவி பாப்ஜியும் லா.ச.ரா மனைவியும் உறவினர்கள் அல்ல என்று எனக்கு தெரிய வந்தது. உடனே அதை என் பதிவில் இருந்து நீக்கி விட்டேன். என் பதிவுகளில் தகவல் பிழை இருப்பது உறுதியாக தெரிந்தால் நான் எப்போதும் அதை திருத்திக்கொள்வேன்.
முன்பு எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய உறவினன் ஒருவன் 2002ல் என்னிடம் அவருக்கு 80 வயது என்று சொன்னான். என்னால் நம்ப முடியவே இல்லை. ஆனால் அவன் எஸ்.எஸ்.ஆர் வயது எண்பது தான் என அடித்து சொன்னான்.

2008ல், 2013ல் என் பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆனால் பின்னர் அவன் சொன்னது உண்மையல்ல என்பது உறுதியாக தெரிய வந்தது. உடனே அதனை என் பதிவுகளிலிருந்து நீக்கியிருக்கிறேன்.
எஸ்.எஸ்.ஆர் இறந்த போது நான் தான் ’இந்தியா டுடே’யில் இரங்கல் எழுதியிருந்தேன்.
அதற்கு முன் ஜெமினி மறைந்த போது ’காலச்சுவடு’ அஞ்சலி நான் எழுதியது தான்.

அது எப்படி லட்சுமி நாராயணன் என்னிடம் இப்படி இல்லாத ஒரு விஷயத்தை பேசியிருக்க முடியும். அப்படியென்றால் லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

தென்காசியில் லா.ச.ரா வங்கி ஒன்றில் பணி புரிந்த போது தான் லட்சுமி நாராயணன் அடிக்கடி சந்தித்திருக்கிறார். இன்னொன்றும் தோன்றுகிறது. லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லவில்லை என்றால் லா.ச.ரா ஏன் அப்படி அவரிடம் பொய் சொல்ல வேண்டும். குழப்பமாயிருக்கிறது. இருவரும் இப்போது உயிருடன் இல்லை. ஜெமினி கணேசனும் தான் இல்லை. அவருடைய முதல் மனைவி பாப்ஜியும் தான்.
லட்சுமி நாராயணன் சொன்ன மற்றொரு விஷயம் பற்றி என் “ உண்டிங்கு ஜாதி எனில்” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனால் அதனை ஒரு எள்ளலோடு வேடிக்கையாக தாமரை இலை தண்ணீராக அந்த விஷயத்தில் ஒட்டாமல் எழுதியிருந்தேன்.
ஏனென்றால் நம்மாழ்வார் காலத்தில் அவர் ஜாதி பற்றி இப்படி உறுதிப்படுத்துவதெல்லாம் அபத்தம்.
எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்கு அருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என் தாத்தா செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக நம்மாழ்வார் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ? என்றெல்லாம் புல்லரித்து, செடியரித்து, மரமரித்து……
………………………………………………………….



.

Mar 31, 2018

Golden Chance?


காதலிக்க நேரமில்லை (1964) படத்திலேயே வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி பின் ரொம்ப சின்னப்பெண்ணாக இருப்பதாக தீர்மானித்து ’கேன்சல்’ ஆனதாக நிர்மலா பேட்டிகளில் சொல்வார்.
வெண்ணிற ஆடை படத்தில் ஹேமாமாலினி புக் ஆகி பின் ஸ்ரீதர் திருப்தியில்லாமல் உதட்டை பிதுக்கி கேன்சல் செய்தார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் நடித்து பெயர் பெற்ற விஷயம் எல்லோரும் அறிந்தது.
அவர் நடிப்பதற்கு முன் என் பெரிய மாமனார் எஸ்.எம்.டி. அங்குராஜ் நடித்து “ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா? உதவிக்கு வரலாமா?” பாடல் ஷூட் செய்யப்பட்டது.
அந்த படத்தில் அந்த ரோலுக்கு முதலில் புக் செய்யப்பட்டவர் எஸ்.எம்.டி. அங்குராஜ். என் மாமனாரின் அண்ணன். ஆனால் தாத்தா எஸ்.எம். தங்கமுடியாபிள்ளைக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.


என் மாமனார் தன் தகப்பனாரை சகல விஷயத்திலும் எதிர்த்து நின்றவர். ஆனால் அங்குராஜ் மாமா அப்படிப்பட்டவரல்ல. சினிமா மீது மிகுந்த பிடிப்பு உள்ளவராயினும் தகப்பனாருக்கு பணிந்தார்.
He has lost a golden chance என்று தான் நினைப்பார்கள். அவருக்கு சினிமா மூலம் நடிகராக பிரபலம் கிடைக்கவில்லை.
ஆனால் வசதி, வாய்ப்பு, அந்தஸ்து விஷயத்தில் அங்குராஜ் நிச்சயம் ரவிச்சந்திரனை விட மிகப்பெரிய கோடீஸ்வராக வாழ்ந்தவர்.

ஜெமினி கணேசனின் நண்பர். ஜெமினி இவரைப்பற்றி எல்லோரிடமும் நண்பர் என்று சொல்ல மாட்டார்.
“ Anguraj is my relative” என்பார்.
என்னிடமே ஒரு கல்லூரி முதல்வர் “ ஜெமினி கணேசன் உங்க மாமாவை ’Anguraj is my relative’ னு சொல்றாரே”ன்னு ஆச்சரியப்பட்டு கேட்டார்.
ஜெமினி கணேசன் 1987ல் ஒரு செய்திப்பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில்
“காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரனுக்கு முன் எஸ்.எம்.டி. அங்குராஜ் தான் ஒப்பந்தமானார்.ஆனால் பெரியவர் தங்கமுடியாபிள்ளை அதற்கு மறுத்து விட்டார். அதன் பின் தான் ரவிச்சந்திரன் நடித்தார்” என குறிப்பிட்டு சொன்னார்.
..........................................................
புகைப்படங்கள்
ஜெமினியுடன் ராஜநாயஹம்
எஸ்.எம்.டி.அங்குராஜ் (1972)
எஸ்.எம்.டி.அங்குராஜ் (1980)

Mar 6, 2018

பாப்ஜி


நடிகை புஷ்பவல்லியின் மூத்த மகன் பாப்ஜியை ஹிந்தி நடிகை ரேகாவின் சகோதரர் என்று சொன்னால் இன்று புரியும்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, குட்டி பத்மினி இருவரின் மூத்த சகோதரி விஜயலட்சுமி அவர்களின் கணவர்.
அழகானவர் பாப்ஜி என்று சொல்லத் தேவையில்லை. புஷ்பவல்லி தமிழ் திரை கண்ட மிக அழகான நடிகைகளில் ஒருவர்.
பாப்ஜியின் அப்பா யார்? ஜெமினி ஸ்டுடியோவில் நட்சத்திரமாக ஜொலித்தவர் புஷ்பவல்லி. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தான் பாப்ஜியின் அப்பா என்ற சந்தேகம் கூட இன்றும் உண்டு.
ஒரு இயக்குனரின் மனைவியாக புஷ்பவல்லி இருந்திருக்கிறார். அவர் யார் என்று தெரியவில்லை.
பாப்ஜியின் பாஸ்போர்ட்டில் அவருடைய தந்தை பெயராக ஜெமினி கணேசன் பெயர் தான் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஜெமினி கணேசன் முதல் மனைவி பெயர் கூட பாப்ஜி தானே!)
பாப்ஜியின் இளைய சகோதரிகள் ரேகா, ராதா என்ற இரு குழந்தைகள் ஜெமினி கணேசனுடன் வாழ்ந்த போது புஷ்பவல்லிக்கு பிறந்தவர்கள்.
ஜெமினி கணேசனை விட்டு பிரிந்த பின் புஷ்பவல்லிக்கு ஒரு மியூசிக் டைரக்டருடன் வாழும்படியான நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மியூசிக் டைரக்டருக்கும் புஷ்பவல்லிக்கும் தனலட்சுமி, ஷேசு என்று இரண்டு புத்ரங்கள்.
அந்த தெலுங்கு மியூசிக் டைரக்டர் பெயர் பிரகாஷ் ராவ் என்று கேள்வி.
இயக்குனர் வேதாந்தம் ராகவையாவின் மனைவி நடிகை சூரிய பிரபா தான் புஷ்பவல்லியின் உடன் பிறந்த தங்கை.
சூரிய பிரபாவின் மகள் சுபா தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்தவர் தான். பட்டிக்காடா பட்டணமாவில் சிவாஜி “ என்னடி ராக்கம்மா” என்று இவரை பார்த்து தான் பாடுவார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் கண்ணாடி போட்டு மூத்த சகோதரியாக சுபா நடித்திருக்கிறார்.
பாப்ஜி தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான்.
வியட்நாம் வீடு படத்தில் சைக்கிளில் வந்து சிவாஜி கணேசனின் மகளை காதலிப்பது பாப்ஜி தான்.
குல விளக்கு படத்தில் சரோஜாதேவியின் தம்பியாக மெடிக்கல் கல்லூரி மாணவராக நடித்திருப்பவர் பாப்ஜி.
பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜெயலலிதாவுக்கு Fix செய்யப்பட்ட மாப்பிள்ளையாக நடித்திருக்கிறார்.
கவனிக்கும்படியான நல்ல கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைக்கவில்லை.
பாப்ஜி ஒரு Multi-dimensional person.
பாப்ஜி கதாநாயகனாகவும் குட்டி பத்மினி கதாநாயகியாகவும் நடிக்க ஒரு படம் 1970களின் முன் பகுதியில் தயாரானதுண்டு.

“அவளில்லாமல் நானில்லை”
படத்தின் தயாரிப்பாளர் பாப்ஜியின் மாமனார் சக்ரவர்த்தி.
’அவளில்லாமல் நானில்லை’ படத்திற்கு கதை வசனம், பாடல்கள், இசை, இயக்கம் எல்லாமே பாப்ஜி தான்.
திரைப்படம் எடுப்பதே ஒரு Herculian Task. இந்த பெருமுயற்சியில் சக்ரவர்த்தியாலும் பாப்ஜியாலும் வெற்றி பெறவே முடியவில்லை.
விஜயலட்சுமியின் சொந்த சித்தி முன் முன். இவருடைய மகள் உஷாவின் கணவர்
டி.ராஜேந்தர் 1980களில் சாதிக்க முடிந்ததை ஒரு பத்து வருடம் முன் விஜயலட்சுமியின் கணவரால் சாதிக்க முடியவில்லை.

பாப்ஜியின் மாமியார் ரூத் என்ற ராதாபாய் அவர்கள் சரோஜா தேவி, சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா ஆகியோரின் ஹேர் ட்ரஸ்ஸர் ஆக இருந்தவர். 
பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
ரேகா ’சாவன் பாதன்’ இந்தி படத்தின் மூலம் அகில இந்திய நடிகையாக உயர்ந்த பின் பாப்ஜியை உயர்த்த முயற்சித்திருந்தால் ஒருவேளை இவர் தன் திரை முயற்சிகளில் ஜெயித்திருக்கலாம். ஆனால் அப்படி தெரியவில்லை.
எத்துனை பின்புலம் இருந்தாலும், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் திரையுலகில் ஏன் ஜொலிக்க முடியவில்லை என்கிற புதிருக்கு விடையில்லை.
………………………………………………..
பாப்ஜி உணவு உண்ணும் போதே அவருக்கு உயிர் பிரிந்திருக்கிறது. விஜயலட்சுமி இன்று பெந்தகோஸ்ட் கிறிஸ்தவராக முதுமையில் வாழ்கிறார்.
பாப்ஜியின் புகைப்படம் கிடைக்கவில்லை.
இந்த Write up எழுத வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் உதவியும் கிடைத்தது. அவருக்கு என் நன்றி

……………………………………




Mar 1, 2018

நுட்ப தொடர்பு


சரோஜா தேவி பல படங்களில் ஜெமினி கணேசனுடன் ஜோடியாக நடித்தவர். கல்யாண பரிசு, வாழ வைத்த தெய்வம், ஆடிப்பெருக்கு, பனித்திரை, வாழ்க்கை வாழ்வதற்கே, பணமா பாசமா, ஐந்து லட்சம், தங்கமலர், தாமரை நெஞ்சம், குலவிளக்கு, மாலதி என எத்தனையோ படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

சரோஜா தேவி எப்போதும் ஜெமினி கணேசனை அண்ணா என்று தான் அழைத்திருந்திருக்கிறார்.
கமல்ஹாசன் முதல் முதலாக ஸ்ரீதேவியை 15, 16 வயது பெண்ணாக சந்தித்ததாக சொல்கிறார். தினத்தந்தி செய்தி. மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவிக்கு 15,16 வயது.

27 படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. நிச்சயம் அவரே சொல்வது போல ஆயுளில் குறிப்பிட்ட ஒரு பகுதி.
ஆனந்த விகடனில் கமல் “ஸ்ரீதேவி என் தங்கச்சி” என்று சொல்கிறார்.’ அண்ணன் தங்கை போல தான் நானும் ஸ்ரீதேவியும்.’
“உங்களை அப்படி ஜோடியா கொண்டாடிட்டிருக்கிறப்ப இதெல்லாம் வெளியில போய்ச் சொல்லாதீங்க” என்பார்களாம்.
இது உண்மையென்றால் அபூர்வமான விஷயம்.
விரித்துப் பேச வேண்டியதில்லை.
............................................

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு மடாதிபதியும் இளைய மடாதிபதியும் காவிரிக்கரையை ஒட்டிய ஒரு ஊரில் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பூஜை, வியாக்யானம் என்று திவ்விய நிகழ்வில் உள்ளூர் ஆண்கள், பெண்கள் கலந்து பக்தியில் ஊறி கரைந்திருக்கிறார்கள்.
ஒரு பெண் இளைய மடாதிபதியிடம் வந்து “ நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறாள்.
மூத்த சுவாமி இளைய மடாதிபதியை பார்த்து 
” காவிரி நீரில் இறங்கி நில்” என்று தண்டனையாக சொன்னாராம்.
மணிக்கணக்கில் இளைய மடாதிபதி இடுப்பு நனைய நீரில் நின்றாராம்.
ஊரை விட்டு கிளம்பும் போது தான் நீரை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டார் இளைஞனாய் இருந்த அந்த இளைய மடாதிபதி.
மூத்த சுவாமிகள் சொன்னாராம் “ உன்னிடமிருந்து காதல் கசிய, விரக பார்வை, சமிக்ஞை வராமல் நிச்சயம் அந்தப் பெண் உன்னிடம் அப்படி கேட்டிருக்கவே மாட்டாள்.”
.....................................