Share

Showing posts with label கே.டி.சந்தானம். Show all posts
Showing posts with label கே.டி.சந்தானம். Show all posts

Oct 25, 2008

கவிஞர் கே டி சந்தானம்


'என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் ' பாட்டில் 'அங்கே என்னம்மா சத்தம் ' என கேட்டு கடைசியில் தானும் ' ஆஹா என்ன பொருத்தம்' எனபரவசமாகும் பெரியவரை யாரோ துணை நடிகர் என்று தான் எல்லோரும் நினைப்பர். ஆனால் அவர் ஒரு கவிஞர் . கவிஞர் கே .டி . சந்தானம் .
'காவேரி ஓரம் கவி சொன்ன பாடல் கதை சொல்லி நான் பாடவா,
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா '
என்ற சுசிலா பாடிய ' ஆடிபெருக்கு ' படப்பாடலை ஏ .எம் .ராஜா இசைக்கு எழுதியவர் .

'கண்காட்சி 'என்ற ஏ பி நாகராஜன் படத்தில் குன்னக்குடிவைத்யநாதன் இசையில் கே .டி .சந்தானம் எழுதிய பாடல் தொகையறா ஏபிநாகராஜனே தன் மென்மையான குரலில் சொல்வார் .
'வெண்ணிலவை குடை பிடித்து , வீசு தென்றல் தேர் ஏறி
மென் குயில் தான் இசை முழங்க ,மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி , கனகமணி பொற்பாவை
அன்னநடை ரதியுடனே , அழகு மதன் வில்லேந்தி
தன்முல்லை , மா , தனிநீலம் , அசோகம் எனும்
வண்ண மலர் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே !'
ஏ பி நாகராஜன் முடித்ததும் சந்தபாடல் ஆரம்பிக்கும் .
"அனங்கன் அங்கஜ்ஜன் , அன்பன் , வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா , மன்னுயிர்க்கின்பம் வழங்கும் உன் கதை சொல்லவா ?
கதம்பம் , செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயற்கண்ணியே , அன்பெழுந்தங்கம்  கலந்தின்பம் தரும் கன்னியே !"

கவிஞர் கே டி சந்தானம் பாசமலர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் . தர்ம சங்கடம் என்ற உணர்வை அழகாக பாசமலரில் வெளிப்படுத்துவார் .
இவரை கதாநாயகியின் தந்தையாக இரண்டு காட்சிக்கு நடிக்க தேர்ந்தெடுத்திருந்தார்கள் . முருகாலயா ஸ்டூடியோ வில் ஷூட்டிங் .நான் அந்த படத்தின் உதவி இயக்குனர்.
அவருக்கு மேக்கப் போடும்போது நான் அவரிடம் சென்று அவர் பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தேன் .
அந்த நேரத்தில் மற்றொரு உதவி இயக்குனர் வந்து ' உங்கள் பேர் என்ன சார் ?' என பேடை வைத்துக்கொண்டு எழுத நின்றான் . அவர் பதில் சொல்லுமுன் நான் ' கவிஞர் கே டி சந்தானம் ' என்றவுடன் அவன் மண் மாதிரி எழுதிக்கொண்டு திரும்பி போனான் .
தொடர்ந்து அவர் சொன்னார் . ' இந்த தலைமுறைக்கு என்னை யாரென்று தெரியாது . நீ தெரிந்து வைத்து என் பாடல்கள் பற்றி பேசுவது ஆச்சரியாமாய் இருக்கிறது . இதே மாதிரி பல வருடங்களுக்கு முன் நீ பேசுவது போலவே என் பாடல்கள் பற்றி 'அம்பிகாபதி ' படத்தின் போது ஒரு பையன் என்னிடம் பேசினான். கண்ணதாசனின் அண்ணன் மகன் . ' அப்புச்சி பாட்டில் கூட உங்கள் சந்தம் மாதிரி வருவதில்லையே ' - ஆச்சரியபட்டான். அந்த பையன் பஞ்சு அருணாசலம் மாதிரி நீயும் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவாய் ' -
என்னை ஆசிர்வதித்து இப்படி சொன்னார்.

அவரிடம் பேசிய போது மேலும் பல விஷயங்கள் பற்றி சொன்னார்.
'அந்த காலத்தில் நாடக கம்பெனியில் சேர சிவாஜி கணேசன் , காக்கா ராதாகிருஷ்ணன் இருவரையும் பாலகர்களாக அவர்கள் இருவரின் தாயார்கள் கூட்டி வந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது' என்றார்.
’பி டி சம்பந்தம் தான் எல்லோருக்குமே ஆசிரியர். அவர் ரொம்ப கண்டிப்பானவர். என் .எஸ் .கிருஷ்ணனுக்கே அவர் தான் ஆசிரியர்’ என்ற இந்த செய்தியை அவர் தான் என்னிடம் முதலில் சொன்னார்.

எம்ஜியார் படம் ரகசிய போலிஸ் 115 ல் நடித்த பின் அந்த காலத்தில் இவர் மார்கெட் காய்கறி வாங்க போனால் இவரை பின்தொடர்ந்து சிறு பிள்ளைகள் கூட்டமாக " என்ன பொருத்தம் , ஆஹா என்ன பொருத்தம் " என்று பாடிகொண்டே வருவார்களாம்!
.............