Share

Showing posts with label நடிகர் கல்யாண்குமார். Show all posts
Showing posts with label நடிகர் கல்யாண்குமார். Show all posts

Jul 21, 2020

கல்யாண்குமார் காரில் சிவாஜி

1960 களில் நடந்த சம்பவம் ஒன்றை 
'நெஞ்சில் ஓர் ஆலயம்'கல்யாண்குமார் 
என்னிடம் 1992ல் சொன்னார். 

மௌன்ட் ரோட்டில் கல்யாண் குமார் 
தன்னுடைய அந்த நேரத்து மாடர்ன் காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். 
சிவாஜி கார் இவரை தாண்டிப் போயிருக்கிறது. 

 ஓவர் டேக் செய்து போகும் போதே கல்யாண்குமாரை சிவாஜி கவனித்து விட்டார். 
சிவாஜியின் கார் டிரைவர் 
இவரை காரை நிறுத்த சொல்லி
 சிக்னல் செய்து, காரை தானும் 
இந்த கார் முன் நிறுத்தி விட்டார். 

ஜன நடமாட்டமுள்ள மௌன்ட் ரோட்டில், கடைகளில் உள்ளவர்களும் கவனிக்கும் முன் சிவாஜி அவர் காரில் இருந்து கல்யாண்குமார் காரில் மின்னலென நுழைந்திருக்கிறார். 

"டேய், எப்படா இந்த கார் வாங்குனே"

"எங்கடா போற "

கல்யாண் ஸ்டுடியோ பெயரைச் சொல்லியிருக்கிறார். 

" எனக்கும் அங்க தான்டா ஷுட்டிங் "

சிவாஜிகணேசனின் டிரைவர் வந்து எட்டிப்பார்த்திருக்கிறார். 

சிவாஜி "நான் இவன் கூட வந்துடறேன்டா. நீ ஸ்டுடியோவுக்கு போயிடு" 

டிரைவரை தன் கார் எடுத்துக் கொண்டு போக பணித்து விட்டார். 

கல்யாண்குமார் செல்ஃப் டிரைவிங். 

ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார். ஒரு நூறடியில் கார் நின்று விட்டது. 

என்ன முயன்று பார்த்தும் கார் கிளம்பவில்லை. 

சிவாஜிகணேசன் பதற்றம் அதிகமாகி 
திட்ட ஆரம்பித்து விட்டார். 

" பாவி, ஒன்னய நம்புனது தப்பாயிடுச்சேடா, ஏமாந்துட்டேனேடா, 
எவனாவது ஒர்த்தன் பாத்துட்டான்னா
 'சிவாஜி, சிவாஜி' ன்னு கூப்பாடு போட்டு 
கூட்டம் கூடிடுவானுங்களேடா"

'அண்ணே, அண்ணே மன்னிச்சிக்கங்க,
 ஐ ஆம் சாரி ' தவிப்பில் உளறியிருக்கிறார். 

சிவாஜிக்கு பங்க்சுவாலிட்டி
 வேறு ரொம்ப முக்கியம். 

கல்யாண் குமாருக்கு சிவாஜி சாருக்கு இப்படி
 ஒரு கஷ்டத்தை கொடுக்கும்படி ஆகி விட்டதே என்ற 
தர்ம சங்கடம். 

கல்யாண் குமார் சொன்னதில் இது வரை தான்                       எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது. 

அதன் பிறகு என்ன ஆயிற்று என்பது
 எவ்வளவு யோசித்தாலும் 
குழப்பம் தான் மிஞ்சுகிறது.

It's in my memory locked. 
- Shakespeare in Hamlet 

இது இயல்பான ஒன்று. 
நினைவில் நிழல் விழுவதும் 
ஞாபக சிக்கல் ஏற்படுவதும்.

May 15, 2019

ரெட்ட மாட்டு சாணியும், கல்யாண்குமார் கண்ணீரும்


மேட்டூர் அருகே காவேரி க்ராஸ் என்ற இடத்தில் ஷூட்டிங்.
ரெட்ட மாட்டுவண்டியோடு கதாநாயகன் பாலத்தை கடக்கிற சீன். ஷாட் ப்ரேக்கில் ரெண்டு மாடும் சாணி போட்டு விட்டது. அதை வெம்மை அடங்கு முன் அள்ளி நான் தான் அப்புறப்படுத்தினேன். அசிஸ்டண்ட் டைரக்டர்னா எல்லா வேலையும் செய்ய வேண்டும். காலையில் ஆறு மணிக்கு நிக்க ஆரம்பித்தால் ராத்திரி பன்னிரெண்டு மணின்னா கூட நின்னுக்கிட்டே தான் இருக்கணும்.
நல்ல உச்சி வெய்யில். நெஞ்சில் ஓர் ஆலயம் கதாநாயகன் கல்யாண்குமார் இந்த படத்தில் கதாநாயகனின் அப்பா ரோல்.
கதாநாயக நடிகருக்கு சிகரெட் ரோத்மன்ஸ் மெந்தால் மிஸ்ட் ஒரு நாளைக்கு ஐந்து பாக்கெட். கல்யாண்குமாருக்கு ஒரு ட்ரிபிள் ஃபைவ் சிகரெட் பாக்கெட். கதாநாயகன் ஒரு நாளைக்கு மொத்தம் நூறு சிகரெட் என்பதால் பற்ற வைத்து ஐந்தாறு இழுப்பு இழுத்து விட்டு சிகரெட்டை பாதியிலேயே கீழே போட்டு விடுவார். ஆனால் கல்யாண்குமாருக்கு ஒரு நாள் பூராவுக்கும் இருபது சிகரெட் தான் என்பதால் ஒவ்வொரு சிகரெட்டையும் ஒட்ட,ஒட்ட சிகரெட்டின் பஞ்சு வரும் வரை இழுப்பார்.

யாருக்கு சொந்தம் மாடர்ன் தியேட்டர்ஸ் படத்தில் கதாநாயகனா நடிச்சப்ப மொதலாளி டி.ஆர் சுந்தரம் முன்னாடியே சிகரெட்ட பத்த வைப்பேன்’ என்று கல்யாண்குமார் பழைய நினைவில் மூழ்கி விடுவார். வசதியெல்லாம் போய் அப்பா ரோல் செஞ்சப்ப அசதியில் இருந்தார்.
ரெண்டு மாட்டு சாணிய எடுத்து தூர போட்டுட்டு கைய தண்ணியில கழுவிட்டு வந்தப்ப, அந்த படத்தில் வில்லன் ரோல் செய்த நடிகர், அப்பா நடிகரிடம் “ராஜநாயஹம் ‘தேவன் கோவில் மணியோசை’ பாடல் பிரமாதமா பாடுறார்’’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
பி.மாதவன் முதல் முதலாக இயக்கிய படம்’தேவன் கோவில் மணியோசை’. அதில் கல்யாண்குமார் தான் கதாநாயகன். கூணனாக வருவார். சீர்காழியின் பாடல் “தேவன் கோவில் மணியோசை, நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை”.
கல்யாண்குமார் சிகரெட்டை ஒட்ட,ஒட்ட இழுத்து கீழே போட்டு விட்டு என்னிடம் அந்தப்பாடலை பாடச்சொல்லி வற்புறுத்தினார். நான் அந்த உச்சிவெய்யிலில் நின்று கொண்டு பாடினேன். எந்த பக்கவாத்தியமுமின்றி என் பாட்டு. சுற்றிலும் சில நடிகர் நடிகைகள்.
கல்யாண்குமார் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். எனக்கு இன்று நன்றாக நினைவில் இருக்கிறது. ‘இது ஆசைக்கிழவன் குரலோசை, இவன் அன்பினைக் காட்டும் மணியோசை’ வரியை மீண்டும் எடுத்து இரண்டாம் முறையாக நான் பாடிய போது
அந்தப் பெரியவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
டி.எஸ்.எலியட் சொன்னான் - An Oldman will not forsake the world which has already forsaken him.

Mar 21, 2017

தைரிய லட்சுமி


சினிமாவில் ஜெயிக்க தீராவேட்கை நடிக்க, இயக்க முனைபவர்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கும். காலம் ரயில் மாதிரி. யாருக்காகவும் காத்திருக்காது. திடீரென்று பத்து வருடம் காணாமல் போயிருக்கும். வயிற்றில் புளி கரைத்தாற் போல திகில். பைத்தியம் பிடித்தாற் போல என்ன, பைத்தியமே உச்சந்தலையில் பிடித்து விடும்.


புட்டன்னா கனகல். கன்னட திரையில் இயக்குனராக பெரிய அளவில் சாதித்தவர். முதல் சினிமாஸ்கோப் படம் கன்னடத்தில் இவருடையது.

 தமிழில் இருளும் ஒளியும், சுடரும் சூறாவளியும் படங்களின் இயக்குனர். பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனராய் இருந்தவர்.

வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட உதவி இயக்குனராக பி.ஆர்.பந்துலுவிடம் வேலை பார்த்தவர் புட்டன்னா.
கன்னடப்படங்களில் உதவி இயக்குனராக இருந்த புட்டன்னா வருடங்கள் காணாமல் போன நிலையில், அதாவது சினிமாவில் குப்பை கொட்டிய நிலையில் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி மன நிலை பலவீனமாகி தவித்திருக்கிறார்.
நடிகர் கல்யாண்குமார் வீட்டிற்கு போய் வாய் விட்டு கண்ணீர் விட்டு குமுறி அழுதிருக்கிறார்.

கல்யாண்குமார் பிரபல கன்னட நடிகர். தமிழ் ரசிகர்களுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, மணி ஓசை படங்கள் மூலம் மறக்க முடியாத ஒரு நடிகராக இவரைத் தெரியும்.

கல்யாண் குமார் தேற்றியிருக்கிறார். புட்டன்னா சமாதானமாகவில்லை. “வாழ்க்கையே பாழாயிடுச்சி சார். சினிமாவை நம்பி வீணாப் போயிட்டேன்” – கன்னடத்தில் புலம்பியிருக்கிறார்.

கல்யாண்குமார் வீட்டுக்குள் போய் அடுப்பில் இருந்த சாம்பலை கையில் எடுத்து வந்து புட்டன்னாவின் நெற்றி நிறைய பூசி விட்டு( கன்னடத்தில் தான்) சொல்லியிருக்கிறார்.
“தைரியமா போடா. நீ நிச்சயமா ஜெயிப்ப. கவலப்படாத. பெரிய டைரக்டரா வருவ.”
………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_4870.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_05.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_16.html



Dec 5, 2009

ஐயப்ப மாலை போட்ட கல்யாண் குமார்

டிசெம்பர் மாதம்! நிறைய பேர் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள்.

'நெஞ்சில் ஓர் ஆலயம் ' கல்யாண் குமார் தான் அய்யப்பனுக்கு மாலை போட்ட அனுபவம் பற்றி என்னிடம் சொன்னார்.

எங்கும் சுற்றி ரங்கனைச் சேர் என ஒரு பழமொழி உண்டு. ஆனால் கல்யாண்குமார் எப்போதுமே ஸ்ரீரங்கம் கோவில் பக்தர். இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர் கன்னட ஐயங்கார். இவருக்கு ஐயப்பனுக்கு மாலை போட வேண்டும் என்ற எண்ணம் நம்பியார் சுவாமி மூலம் ஏற்பட்டிருக்கிறது . முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவர் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு போக ஆயத்தமாகிவிட்டார் . 41 நாட்கள் விரதம் முடிகிற நேரம் . மறுநாள் காலை மலைக்கு கிளம்பும் குழுவுடன் கிளம்ப வேண்டும் . கையில் பைசா காசு இல்லை. சொத்துக்களை இழந்து அசதியாகி விட்ட காலம் அது .ஐநூறு ரூபாய் தேவைப் பட்டதாம் . சரி தான். நாளை ஐயப்ப தரிசனம் இல்லை தான் போல என சோர்ந்து விட்டாராம் . இரவு தூக்கம் இல்லாமல் புரண்டிருக்கிறார் . அசந்து தூங்கிய நேரம் இரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டுக் கதவை யாரோ தட்டியிருக்கிறார்கள் . கதவை திறந்தால் இவருடன் நாடகங்களில் கதாநாயகியாய் நடிக்கும் நடிகை . கலைந்த தலையுடன் அவரும் சோர்வாகத்தான் இருந்திருக்கிறார் . 'என்னம்மா ?'
நடிகை சொன்னாராம் ." அண்ணே இன்னைக்கு விடிஞ்சா நீங்க ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பனும் . உங்களிடம் காசும் இல்லை . எனக்கு தெரியும்ணே.அதுக்காக நான் ஒரு காரியம் செஞ்சேன் . " ஒரு வி வி ஐ பி பெயரை அந்த நடிகை சொல்லி " அவருட்ட போய் படுத்து எந்திரிச்சி அவர் கொடுத்த காசை வாங்கிக்கிட்டு வந்திருக்கேன் அண்ணே . இந்தாங்கண்ணே . கோவில் காரியத்திற்கு வச்சிக்கங்க . மலைக்கு போயிட்டு வாங்க . "

கல்யாண்குமார் திகைத்துப் போய் நின்றிருக்கிறார்.

"யோசிக்காதீங்க.. நாய் வித்த காசு குரைக்காது. தைரியமா போயிட்டு ஐயப்பனை சேவிச்சிட்டு வாங்க . வாங்கிக்கங்க அண்ணே "

கல்யாண் குமார் என்னிடம் சொன்னார் ." அவ அந்த வி வி ஐ பி யோட பஜனை பண்ணி வாங்கிட்டு வந்த காசிலே அன்னைக்கு மலைக்கு போயிட்டு வந்தேன் . ஆனா தரிசனத்தின் போது ஐயப்பன் ஜோதி யாய் என்னிடம் '' எங்கடா வந்தே ! எப்படி வந்தே ?" என்று என்னைப் பார்த்து கேட்டதாக எனக்கு ஒரு பிரமை .
" சத்தியமா இனி உன்னைப் பார்க்க நான் வரவே மாட்டேன் . என்னை மன்னிச்சிக்க " என்று சொன்னவன் அதன் பிறகு ஐயப்பனுக்கு மாலை போடவேயில்லை. "

கல்யாண் குமார் மேலும் சொன்னார் . "சில சாமி சிலருக்கு Vibrateஆகும். சில தெய்வங்கள் அதே சிலருக்கு Vibrate ஆகாது. எனக்கு ரங்கநாதன் தான். ஐயப்பன் ஒத்து வரலே."

ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கும் திருப்பதி பெருமாளுக்கும் உள்ள விஷேச குண நலன் பற்றி கல்யாண் குமார் சொன்ன சுவாரசியமான விஷயம் - ஸ்ரீரங்கப் பெருமான் பக்தர்கள் சொல்லும் கஷ்ட நஷ்டங்களுக்கு காது கொடுத்து கேட்பார் . ' சரி . அதனாலே என்ன . கஷ்டப்படத்தானே மனுஷப்பிறப்பு.சொல்லிட்டே .போயிட்டு வா ' என்பாராம் . திருப்பதி சாமி கொஞ்சம் வித்தியாசமானவர் . பக்தன் தன் துயரத்தை சொல்லி அழுதவுடன் ' அப்படியா . இந்த கஷ்டம் சிரமாயிருக்கோ . சரி இனி இந்த வழி உனக்கு ' என்று ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விடுவார் . பழைய கஷ்டம் போய்விடும் . புதிய திருப்பு முனையில் புதிய பிரச்னை, சிரமம் காத்திருக்கும்! '

Dec 5, 2008

கல்யாண்குமார் சொந்தகுரல்

ராசுக்குட்டி படத்தில் மறைந்த கல்யாண்குமார் கதாநாயகனின் தந்தை . அவர் கன்னடபடங்கள் நூறுக்கு மேல் நடித்தவர் என்றாலும் தமிழில் அவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் , நெஞ்சம் மறைப்பதில்லை , மணி ஓசை , தாயில்லாபிள்ளை,யாருக்கு சொந்தம் ஆகிய படங்களில் சொந்த குரலில் தான் பேசியிருக்கிறார் .
அவர் ராசுக்குட்டி படத்தில் நடித்தபோது அவருக்கு அந்த காலத்தில் ஏற்படாத சிக்கல் ஒன்று ஏற்பட்டது .
கதாநாயக இயக்குனரின் உதவி இயக்குனர் கூட்டம் ' அவருக்கு டப்பிங் பேச வேறு ஆள் போட வேண்டும் . அவர் பேச்சில் கன்னட வாடை அடிக்கிறது ' என்று பேச ஆரம்பித்தது . அவர்கதாநாயகனாய் தமிழ் பேசி நடித்த போது பிறந்திருக்காத ஜென்மங்கள் . " தாயில்லா பிள்ளை " படத்தில் இன்றைய முதல்வர் வசனத்தை பேசி நடித்தவருக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு . அதோடு கன்னடத்துக்காரர் தான் என்றாலும் நாற்பது வருடங்களாக சென்னையில் வாழ்ந்து வந்தவர்.
நான் இப்படி பேச்சு அடிபடுவதை கல்யாண்குமார் அவர்களிடம் வேதனையுடன் தெரிவித்தேன் . அவருக்கு அதிர்ச்சி ! நான் கேட்டேன் “Who will break the ice?” கல்யாண்குமார் சற்று நம்பிக்கையுடன் சொன்னார் “I will break the ice! டைரக்டர் இடம் நான் பேசி அவரை சம்மதிக்க வைத்து விடுவேன் . நான் கருணாநிதி எழுதிய தமிழ் வசனங்களையே உச்சரிப்பு சுத்தமாக பேசியவன் ." அப்படி அவர் பேசிவிட்டு என்னிடம் சந்தோசமாக " டைரக்டர் என் ரோலுக்கு நானே குரல் கொடுக்க சம்மதித்து விட்டார் "
டப்பிங் தியேட்டரில் கல்யாண்குமார் ரோலுக்கு தீனரட்சகன் என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் தான் குரல் கொடுத்தார் .
பாவம் கல்யாண்குமார் ! படத்தில் அவருக்கு டப்பிங் குரல் தான் !

Oct 25, 2008

ஸ்ரீதரும் கல்யாண் குமாரும்

ஸ்ரீதர் இறந்தது எல்லா தமிழர்களையும் பாதித்திருக்கிறது . அவர் "நானும் ஒரு தொழிலாளி" படம் இயக்கும்போது பார்த்திருக்கிறேன் .( ஆரம்பமே பிசிறு தட்டுகிறதா ? ஸ்ரீதரை பற்றி பேச இந்தப்படம் தான் கிடைத்ததா ?) அவர் சிகரெட் ஊதும் ஸ்டைல் , அந்த பெண்மையான பாவனைகள் , நகத்தை கடிப்பது ( தெய்வ மகனில் சிவாஜி யின் ஒரு கதாபாத்திரம் ஸ்ரீதரை இமிடேட் செய்ததை அறிவீர்கள் . இரண்டாவது மகன் ). ஷூட்டிங் போதுசிந்தித்து கொண்டே திடீரென்று " டே சக்கி !" என்று கூப்பிடுவது ....( என்.சி . சக்கரவர்த்தி - இவர் 'உத்தரவின்றி உள்ளே வா 'இயக்குனர் . சி வி ராஜேந்திரனுக்கு பிறகு ஸ்ரீதரின் வலது கரம் . )

' நெஞ்சில் ஓர் ஆலயம் ' 'நெஞ்சம் மறப்பதில்லை ' இரண்டு ஸ்ரீதர் படத்தின் கதா நாயகர் கல்யாண் குமார் . இவரிடம் நான் பேசும்போது ஸ்ரீதர் பற்றி நிறைய கேட்பேன் . தேவ சேனா புகைப்படம் ஸ்ரீதர் காட்டிய போது ' இந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் ' என்று கல்யாண் குமார் பாசிடிவ் ஆக அவரிடம் சொன்னதை என்னிடம் சொன்னார் .
'சரி . அந்த இரு படத்தில் வேலை பார்த்த பிறகு பிற்காலத்தில் அவரை எப்போதெல்லாம் சந்தித்தீர்கள் ?'- என் கேள்வி !
கல்யாண் குமார் பதில் " சந்தித்ததே இல்லை "
'சந்தித்ததே இல்லை . அவரும் என்னை சந்தித்ததில்லை . நானும் தேடிபோய் சந்தித்ததில்லை '
கல்யாண் குமார் எழுபதுகளில் எல்லாவற்றையும் இழந்து விட்டு சொந்த வீடு கார் எதுவும் இல்லாமல் நான் சந்தித்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தவர் . சாகும் வரை அதே நிலை தான் . நாற்பது வருடங்களுக்கு மேல் சென்னையிலேயே தான் கல்யாண் குமார் வாழ்ந்திருக்கிறார் .
அதே சமயம் ஸ்ரீதர் அந்தஸ்திலிருந்த பிற கதாநாயகர்கள் ஜெமினி ,சிவாஜி , எம்ஜியார் ஆகியோருடன் மட்டுமல்ல கமல் ,ரஜினி என்ற வரை “Rapport” சரியாக Maintain பண்ணியிருக்கிறார்.

சினிமாவில் மனித உறவுகள் இந்த அளவுக்கு தான் .