Share

Showing posts with label கிருஷ்ணன் நம்பி. Show all posts
Showing posts with label கிருஷ்ணன் நம்பி. Show all posts

Jul 9, 2019

வாலாஜா ரோடு மாடி போர்ஷன் வீடு


க.நா.சுவின் ’இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் உள்ள கட்டுரைகள் படிக்க மிகவும் சந்தோஷம் தருபவை.
எப்படியோ ந.பிச்சமூர்த்தி பற்றி இதில் எழுதாமல் விட்டிருக்கிறார்.
சி.சு செல்லப்பாவை வேண்டும் என்றே தான் தவிர்த்திருப்பார்.
1985ல் இருந்து எத்தனை தடவை இந்த நூலை நான் வாசித்திருக்கிறேன்.

முதுமையில் குங்குமத்தில் தொடராக எழுதப்பட்ட கட்டுரைகள். எவ்வளவு ஆளுமைகள் பற்றி சின்ன சின்னதாக பேசுகிற தொனியிலேயே எழுதியிருக்கிறார். ஆராய்ச்சிக்காரனும், கல்வித்துறையாளனும், செக்குமாட்டு விமர்சகனும் ’இதில க.நா.சு. என்னத்த எழுதிட்டாரு. பொறுப்பே இல்லாத எழுத்து. தன்னப்பத்தியே எழுதியிருக்காரு. ஆளுமைகள பத்தி கூட தெளிவில்லாம சொல்லியிருக்காரு’ என்று கால் மேல கால் போட்டு, கண்ண விரிச்சி, உதட்ட பிதுக்கி தலைய ரெண்டு பக்கமும் ஆட்டுவான்.
இது பொக்கிஷம் என்பேன்.
பி.ஸ்ரீ.ஆச்சாரியா கிருஷ்ணன் நம்பியின் மாமா. அப்பாவின் சகோதரியின் கணவர்.

பி.ஸ்ரீ ஆச்சாரியா பற்றி அவர் எழுதியதை மீண்டும் நேற்றிரவு வாசித்துக்கொண்டிருந்தேன்.
வெள்ளக்காரன் காலத்தில் ஆச்சாரியா போலீஸ்காரர். அரசு ஆணையின் பேரில் பாரதியாரை ஃபாலோ செய்து, அவர் பிரசங்கங்கள் பற்றி சர்க்காருக்கு ரிப்போர்ட் செய்தவர்.
தமிழ் பண்டிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு மக்களுக்குக் கிட்டாததாக இருந்ததை, பத்திரிக்கை வாயிலாக எல்லோருக்கும் விளங்கும்படியாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தவர்களில் முதலாமவர் பி.ஸ்ரீ.ஆச்சாரியா தானாம். அவருடைய கம்ப சித்திரம் ஆனந்தவிகடனில் தொடராக வந்து பின் நூலாகி மதிப்பும் கவனமும் பெற்றதாம்.
பி.ஸ்ரீ.ஆச்சார்யா எழுதிய ஸ்ரீராமானுஜர் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது பற்றி க.நா.சு. முதல் தடவை ஒரு இலக்கிய நூலுக்கு கொடுக்கப்பட்டதாக திருப்தி தெரிவிக்கிறார
(1965ல் பி.ஸ்ரீக்கு சாஹித்ய அக்காடமி விருது கிடைத்தது)
பி.ஸ்ரீ. 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார் என்று எழுதியிருப்பதைப் படித்தவுடன் என் பார்வைக்கு மட்டும் சில விஷயம் கவனப்பட்டது.
ஒரு நூலை அடுத்தடுத்த கால கட்டத்தில் மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கும் போதும் புதிய விஷயங்கள் புலப்படும்.

ந.முத்துசாமியுடன் அவருடைய கடைசி மூன்று வருடங்கள் நெருங்கி பழகியவன் என்பதால் அவர் மூலம் எனக்கு தெரிய வந்த விஷயங்கள் ’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற வரியில் ரொம்ப கனமானது.
இந்த வரியை வேறெவரும் சுலபமாக கடந்து செல்வார். ராஜநாயஹத்தால் முடியவில்லை.
Reading is a multi-faceted process.
க.நா.சு. குடியிருந்த அந்த வீட்டுக்கு தான் க.நா.சுவுக்கு பின் முத்துசாமி மாட்டாங்குப்பத்தில் இருந்து குடியேறியிருந்திருக்கிறார்.
க.நா.சு. சென்னையில் இருந்து பின்னால் ராஜி மாமியுடனும் மகள் ஜமுனாவுடனும் (பின்னால் இவர் தானே பாரதி மணியின் மனைவி) டெல்லிக்கு போகும்போது முத்துசாமியை அந்த வீட்டில் குடியமர்த்த ஏற்பாடு செய்திருக்கிறார்.
க.நா.சு வின் அயலார் ஒரு சாஸ்திரி. கீழ் வீட்டில் குடியிருந்த சாஸ்திரிக்கு க.நா.சு.வின் நடவடிக்கைகள் அவ்வளவு சிலாக்கியமாக தெரிவதில்லை. அனாச்சாரமாக தோன்றியிருந்திருக்கிறது.
முத்துசாமி மீசையை திருகி விட்டுக்கொண்டு மாடி போர்ஷனுக்கு குடி வந்த போது இவர் காது படவே சாஸ்திரிகள் “ஒரு சூத்திரன் போனான். இன்னொரு சூத்திரன் வந்திருக்கான்” என்று சலிப்பாக சொல்லி தன் அதிருப்தியை வெளியிட்டிருந்திருக்கிறார்.
க.நா.சுவின் கட்டில் ஒன்றை முத்துசாமிக்கே கொடுத்து விட்டார். அந்த கட்டில் சென்ற வருடம் வரை இங்கே இப்போது கூத்துப்பட்டறை வீட்டில் இருந்தது. அதை காட்டி முத்துசாமி ‘இது க.நா.சு கொடுத்த கட்டில்’ என்று பல முறை காட்டியிருக்கிறார்.
இங்கே அய்யப்ப நகர் வீட்டுக்கு 1987ல் சொந்த வீட்டுக்கு குடி வரும் வரை அந்த திருவல்லிக்கேணி வாலாஜா ரோடு மாடி வீட்டில் தான் முத்துசாமியும் மாமியும் குழந்தைகளாய் அப்போது இருந்த நடேஷ், ரவி இருவருடனும் இருந்திருக்கிறார்கள். சென்னை வாழ்வின் கணிசமான பகுதி அந்த வாலாஜா ரோடு மாடி போர்ஷன் வீட்டில் தான்.

க.நாசுவுக்கு பின் முத்துசாமி அந்த வீட்டில் குடியிருந்த போது அங்கே மௌனி வந்திருக்கிறார். முத்துசாமியை பார்க்க வந்தவர் நடேஷ் சிறுவனாக ஓவியம் வரைவதை பார்த்து ரசித்திருக்கிறார். 
அசோக மித்திரன் வரும்போதெல்லாம் ஒரு மாங்காய் கொண்டு வந்திருக்கிறார். மாங்காய் பிராமணர்.
 பிரமிள் அடிக்கடி வந்திருக்கிறார். அவர் குண இயல்பு படி வம்பு வளர்த்து முத்துசாமியிடம் மனஸ்தாபம் ஆகியிருக்கிறார்.

’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற ஒரு செய்தி தான் எவ்வளவு விஷயங்களை மேலெழுப்புகிறது.








Jun 18, 2019

கெட்ட கெட்ட வார்த்தைகள்


முந்தாநாள் ஜுன் 16ம் தேதி கிருஷ்ணன் நம்பி நினைவு நாள்.
போன மாதம் நம்பியின் “தங்க ஒரு...” சிறுகதையை கூத்துப்பட்டறையில் வாசித்து விளக்கி பேசினேன்.
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை அப்போது கண் கூடாக கண்டேன்.
சென்னையில் வாடகை வீட்டு பிரச்னையின் மீதான அங்கதம் இந்த மாய யதார்த்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
நகுலன் இந்த கதை பற்றி “ ’ தங்க ஒரு...’ இடம் கிடைக்கவில்லை என்பதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது ஸ்விஃப்ட் எழுதிய கலிவரின் யாத்திரையைப் பின்பற்றுகிறது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையை விட சிறப்பாக வந்திருக்கிறது “ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பியின்’விளையாட்டுத் தோழர்கள்’ கதை பற்றி அவருடைய தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம் ஒரு விஷயம் சொன்னார்.
குட்டிப்பையன் சங்கா பள்ளிக்கூட விடுமுறை நாளில் விளையாட தவிப்பான். விளையாண்டு கொண்டிருக்கும் தோழர்களிடம் “ நானும் வடேன்டா” என்று கெஞ்சுவான். 

கிருஷ்ணன் நம்பி இதற்கு ஒரு சிறுவன் சொல்லும் பதிலாக “ போலே தாயோளி, நீ ஒன்னும் வாண்டாம் ” என்று எழுதியிருந்திருக்கிறார். பத்திரிக்கையாசிரியர் ‘போலே தாயோளி’ என்பதை நீக்கி வெளியிட்டாராம். விஜய பாஸ்கரன் ஆசிரியராய் இருந்த ’சரஸ்வதி’ யில் 1961ல் வந்த கதை ’விளையாட்டுத்தோழர்கள்’.
சுந்தர ராமசாமியிடம் “ உங்க கதையில் வர்ற ’முலை’ய மட்டும் வெட்டிடறேனே “ என்று ட்ரங்க் கால் போட்டு சத்தமாக கூப்பாடு போட்டு பேசியவர் விஜய பாஸ்கரனாய் தான் இருக்குமோ? சு.ராவின் கதைகள் சரஸ்வதியில் பிரசுரமாகியிருக்கிறது. அவருடைய நாவல் “ புளிய மரத்தின் கதை” யின் ஆரம்ப அத்தியாயங்கள் கூட ‘சரஸ்வதி’யில் வந்தது.
இப்போது கூட கெட்ட வார்த்தை எழுத்தில் வரக்கூடாது என்கிற கூச்சம் நிறைய பேருக்கு இருக்கிறது.
என்னை முப்பது வருடங்களுக்கு பின் தேடி கண்டு பிடித்த என் காதலியொருவர் என் எழுத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். கெட்ட வார்த்தைகள் எழுதுவதை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

https://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_27.html






Jun 8, 2019

நம்பியின் தம்பி பேரன் சித்தார்த் தனஞ்செய்


தமிழின் முக்கிய எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம். 

‘பயாஸ்கோப்’ என்று சிறப்பான ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஐம்பது பழைய திரைப்படங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
இன்னொரு சிறிய நூல் ’மாயலோகத்தில் சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்.’
இவருடைய ஒரு பேரன் சித்தார்த் தனஞ்செய்.
ஹாலிவுட் படங்களில் நடித்த இந்திய நடிகர்கள் என்றால் ஐ.எஸ்.ஜோஹர், கபீர் பேடி போன்ற நடிகர்கள் உடனே நினைவுக்கு வருவார்கள்.
’காந்தி’ படத்தில் நிறைய இந்திய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ரோஹினி ஹட்டங்காடி, சயீத் ஜாஃப்ரி, ஓம்பூரி,அம்ரீஷ் பூரி, ரோஷன் சேத்.
ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் அனில் கபூர் உட்பட இந்திய நடிகர்கள்.
பென் கிங்க்ஸ்லி கூட ஆங்கிலோ இந்தியன்? இவருடைய அப்பா ஒரு குஜராத்தி.
ஆங்கில படங்களில் நடிப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ். ஜெயலலிதா ஆங்கிலப்படம் ஒன்றில் நடித்தார். சிவாஜி மகன் பிரபு ஆங்கிலப்படமொன்றில் நடித்தார் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. அவையெல்லாம் ஹாலிவுட் படங்களல்ல.
கிருஷ்ணன் வெங்கடாச்சலத்தின் பேரன் சித்தார்த் தனஞ்செய் இப்போது அமெரிக்க நடிகர். ராப் பாடகர்.

இவர் ராப் பாடல்கள் அமெரிக்காவில் பிரபலமாகியதால் ஹாலிவுட்டில் ’பேட்டி கேக்ஸ்’ படத்தில் 2017ல் நடித்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களில் தலை காட்டுவது பெரிய விஷயமா? பேட்டி கேக்ஸில் சித்தார்த் தனஞ்செய் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தான் சிறப்பு.
‘Dhananjay the first’ என்று ராப் பாடல்களை யூட்யுபில் பார்க்கமுடியும்.
Patti Cake$ கேன்ஸ் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பப்பட்ட படம். சன்டேன்ஸ் ஃபெஸ்டிவலில் பங்கு பெற்றபடம். Musical movie.

ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்.


May 30, 2019

கிருஷ்ணன் நம்பி எனும் குழந்தைமை கலைஞன்


தகவல் பிழை எழுத்தில் வந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும் அதையும் மீறி ஏற்படவே செய்கிறது.
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் அவருடைய நீலக்கடல் முகவுரை இல்லை என்றே எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணன் நம்பி பற்றிய பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
ஆனால் அந்த ’நானும் கடவுளும் அறிஞனும்’ என்ற முகவுரை காலச்சுவடு வெளியிட்ட கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது என்பதை நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாச்சலம் எனக்கு கவனப்படுத்தினார்.
என்னுடைய ‘ இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்’ நூலை படித்து விட்டு தொலைபேசியில் பேசி அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். அவரை சந்தித்த போது என் தகவல் பிழை பற்றி சுட்டிக்காட்டினார்.
அதை உடனே ப்ளாக் பதிவில் திருத்தி விட்டேன். ஆனால் நூலில் இடம் பெற்றிருக்கிறது.
இது போல் சென்ற மாதம் என்னுடைய மற்றொரு தகவல் பிழை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலொன்று ’நாளைய தீர்ப்பு’ படத்தில் இடம்பெற்றிருந்ததாக பி.பி.எஸ் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த படம் ‘நாளைய செய்தி’ என்பதை அறியவந்தேன். இதையும் ப்ளாக்கில் திருத்தினேன்.
நம்பி எழுதிய முகவுரை சிறப்பான ஒன்று. எனக்கு ’குட்டி இளவரசன்’ பிரஞ்சு புனைவில் அந்த்வான் செந்த் எக்சுபெரி எழுதிய குட்டி முகவுரைக்கு ஈடான அற்புதமான ஒன்று.
’நானும் கடவுளும் அறிஞனும்’ படிக்கும்போதெல்லாம் நம்பி தான் சந்திரன் என்றும் சுந்தர ராமசாமி தான் சூரியன் என்பதாகவுமே எண்ணுவேன்.
மீண்டும் அந்த முகவுரையை இங்கே தருவதில் தவறில்லை.

கிருஷ்ணன் நம்பி ’நீலக்கடல்’ சிறுகதைத் தொகுப்புக்கு அந்த எழுதிய முகவுரை.
நானும் கடவுளும் அறிஞனும்
நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.
கிருஷ்ணன் நம்பி பற்றி நகுலன் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்.
“நாஞ்சில் நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் – ஒரு என்று சொல்வதை விட ‘ஒரே’ என்று சொல்லும் அளவுக்கு – ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பி”
’நம்பி ஓர் உண்மையான கலைஞன்’ என்பது நகுலனின் ஆணித்தரமான அபிப்ராயம். ‘ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல் தோல்வி ( இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்’ என்றார்.
குழந்தைமை மனவார்ப்பு அற்புதமாக கொண்டிருந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.
நீலக்கடல், விளையாட்டுத்தோழர்கள் போல எத்தனை குழந்தை கதைகள்.
நீலக்கடல் 1952ல் எழுதஆரம்பித்து அரைகுறையாக அப்படியே போட்டு விட்டு 1961ல் தான் முடித்தாராம்.
இதில் பாட்டி சொல்லும் கதை - பாலகிருஷ்ணன், பாலமுருகன், பிள்ளையார் கிட்டிப்புள் விளையாண்ட கதையை நான் ஸ்போக்கன் இங்க்ளீஷ் டீச்சராய் இருந்த போது குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எப்போதும் சொல்லியிருக்கிறேன்.
மருமகள் வாக்கு, அவனும் ஒரு மரநாயும், தங்க ஒரு .. வருகை, போன்ற கதைகளெல்லாம் பெருஞ்சாதனை.
ஆதவன் மரணம் தந்த துக்கம் அளவிற்கு நம்பி அகாலமாய் இறந்திருக்கக்கூடாது என்ற தவிப்பும் எப்போதும் இருக்கிறது.

Apr 10, 2019

குட்டி பாப்பா


கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்னார் : ’குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப்போகலாம்.’
ஆங்கிலத்தில் ஒரு இடியம் உண்டு.
Left holding the baby - அசௌகரியப்படுத்தப்படுவது. கூடுதல் வேலைப்பளுவால் சிரமப்படுத்தப்படுதல்.
கைக்குழந்தைகளை கவனித்துக்கொள்பவர் is made a scapegoat என்கிற அர்த்தம்.
இன்றைக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு தலை மேல் பாரம் பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வது.
இப்படி கி.ரா.வின் ஒரு சஹிருதயர் தன் இரு மகன்களும், மருமகள்களும் வேலைக்கு செல்வதால் தானும் தன் மனைவியும் கூடுதல் பளுவால் அனுபவிக்கும் பெருந்துயராக, அவர்களின் கைக்குழந்தைகளை கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பைப்பற்றி சொன்னதை என்னிடம் விவரித்தார். ஆயாச பெருமூச்சுடன் அந்த பெரிய மனிதர் ஈனஸ்வரத்தில் நொந்து கொண்டாராம். 
கி.ரா பட்டென்று உடைத்து, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக (அவரிடம் சொல்லாமல்), என்னிடம் சொன்னார்” குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப் போகலாம்.”
எனக்கும் தெரிந்தவர் தான். அவர் இப்போது உயிரோடு இல்லை.
நன்றாக நினைவிருக்கிறது. தன் பிள்ளைகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்த விஷயத்தையெல்லாம் என்னிடம் எவ்வளவோ சந்தோஷமாக சொல்லியிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘விளையாட்டுத்தோழர்கள்’ கதையில் ஒரு குட்டிப் பாப்பா தான் வில்லன்.
சிறுவன் சங்காவின் இடது கால் குதிரைச் சதையில் பாப்பாவின் ஐந்து பற்கள். அழுந்த நெரித்து இறுக்கிய பிடிவாத பாப்பாவின் பற்கள்.

’பாட்டியா வீட்டில் குழந்தை காட்சி’ சுவாரசியமான தி.ஜானகிராமனின் சிறுகதை.
எழுத்தாளர் சி.ஆர். ராஜம்மா பெற்ற ஒரு பச்சைக்குழந்தை,தாயின் பூ விழுந்த கண்ணை பிய்த்து வெளியே எடுத்து விட்டது.
சும்மா ’சுகமான சுமை’ என்று பீற்றிக்கொண்டு பேரப்பிள்ளைப்பீய அள்ளலாம்.ஆனால் யதார்த்தம் வேறு.
சாரு நிவேதிதா ‘குழந்தைகளை எனக்குப் பிடிக்காது’ என்று ஒரு கட்டுரை எழுதியதுண்டு.



Oct 20, 2017

கிருஷ்ணன் நம்பி – சு.ரா- கி.ரா – சூரியோதயம்


சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் படித்தவர்கள் அதில் வருகிற சூரியோதய காட்சியை மறந்திருக்க முடியாது.
”அப்போது கிழக்கே சூரியனின் விளிம்பு தெரிந்தது. நகத்தைப் பிய்த்துக்கொண்ட விரலிலிருந்து ரத்தம் கசிவதைப்போல் சூரியன் வருகிறது. ரத்த வெள்ளம்….”
“காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, பாதை விளிம்பில் நின்று கொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன்…….அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும்………….
”ஒவ்வொரு நாளும் இந்த விசுவரூப தரிசனத்திலிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலான ஞானம் லகுவாகவும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு எதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும்…..”
ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் 1981ல் க்ரியா வெளியீடாக வந்த போது ஏற்படுத்திய பரபரப்பு…..
அசோகமித்திரன் ஜே.ஜே. பற்றி “ அண்ணாந்துன்னா பாக்க வேண்டியிருக்கு.”
மிக பிரமாதமாக 1985ல் அசோகமித்திரன் “ஒற்றன்” நாவல் மூலம் படைப்பாளியாக எதிர்வினையாற்றினார். ஜே.ஜேக்கு பதில் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஜே.ஜேக்கு சரியான சவாலான நாவல்.
இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்” கூட ஜே.ஜே சில குறிப்புகளுக்கு குறைந்த ஒன்று அல்ல.
பின்னாளில் பிரமிள் குறுநாவல் ‘ப்ரசன்னம்’ சு.ரா.வின் ஜே.ஜேவுக்கு எதிர்வினை என்று வெளிப்படையாக சொன்னார்.
ந.முத்துசாமி தன்னுடைய ‘உந்திச்சுழி’ நாடகத்தை ஜே.ஜே என்ற கதாபாத்திரத்திற்கே சமர்ப்பணம் செய்தார்.
ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் ஏராளமாய் விமர்சனத்தை எதிர்கொண்ட நாவல். சாரு நிவேதிதாவின் விமர்சனம் ரொம்ப பிரபலம்.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார்.


2002ல் ஜூலை 16ந்தேதி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பினார். அதில் அவர் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.
My dear R.P.Rajanayahem,

I totally rejected nearly sixty criticisms on J.J. 
Criticisms is a matter of opinion and opinions of writers always tend to vary, assuming they are recording their real voice, which is not often the case, especially in our milieu. 
Difference in opinions are understandable. But if anybody distorts FACTS that are standing in my favour, surely I will try to expose the deliberate falsifications of writers who ever they are.

- Sundara Ramaswamy 

ஜே.ஜே நாவலை கிருஷ்ணன் நம்பியின் நினைவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பியின் நினைவோடை (2003)யில் பிரசுரமானது. அதில் நம்பியும் சுராவும் பார்த்த சூரியோதயத்தைத் தான் ஜே.ஜேயில் விவரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
1976ல் நம்பி பிழைக்கவே இனி வழியில்லை என்ற மருத்துவ உண்மை தெரிந்த பின் நடந்த ஒரு நிகழ்வு.
“ அதிகாலையில் அவன் (கிருஷ்ணன் நம்பி) முதலில் எழுந்தான்.
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்படுவோமே என்று சொன்னேன். புறப்பட்டோம்.
 கார் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் போயிருக்கும். 
அப்போது தான் அந்த அருமையான சூரியோதயத்தை நாங்கள் பார்த்தோம். ஜே.ஜேயில் நான் விவரித்திருந்தது கூட அந்த சூரியோதயத்தைத்தான்.
 தென்னை மரங்களின் மேலாக சூரியன் மெல்ல மேலெலத்தொடங்கியிருந்தது. 
அந்தக் காட்சியை நன்றாக பார்ப்பதற்குத் தோதான இடத்தில் காரை நிறுத்தும்படிச் சொன்னான். இறங்கினோம். அங்கு ஒரு பாலம் இருந்தது. கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றோம். அங்கிருந்த திண்டில் அமர்ந்து கொண்டான். 
கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத்தொடங்கியது. அந்த சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகத் தான் அவன் அதிகாலையில் புறப்பட வேண்டும் என்று சொன்னானா? இனி இது போன்ற காட்சிகளை பார்க்க முடியாதே என்ற விஷயத்தை, மரணத்தை அந்தக் காட்சி அவனுக்கு நினைவு படுத்தியதா…….?”
.............................

கி.ராஜநாராயணன் தன் தொண்ணூறாவது வயதில் குமுதத்தில் “வேதபுரத்தார்க்கு” என்ற சுயசரிதைத் தொடர் ஒன்றை 2012ல் ஆரம்பித்து எழுதி அது புத்தகமாக 2014 வந்திருக்கிறது.

அந்த வேதபுரத்தார்க்கு நூலில் கிருஷ்ணன் நம்பி நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கும்போது கி.ராவுடன் ரயில் பயணத்தின் போது பார்த்த சூரியோதயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.ரா அதை விவரிக்கிறார் : “ மதுரையிலிருந்து கிருஷ்ணன் நம்பியுடன் நான். அதிகாலை நேரத்தில் ரயிலில் வந்து கொண்டிருந்தோம். கோவில் பட்டியைப் பார்த்து. வானம் வெளுக்க ஆரம்பித்தது.
இப்பொ ஒரு அதிசயம் நிகழப்போகிறது என்று கிருஷ்ணன் நம்பிக்குத் தெரியாது. காரணம் அவர் மேற்கே பார்த்துக்கொண்டிருந்தார், என்னிடம் பேசிக்கொண்டு.
மனசுக்குள் நான் அவரை திடீரென்று ‘அதெப் பாருங்க’ என்று கிழக்கே பார்க்க வைக்க வேண்டும்.
சில காட்சிகளை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது கடல் அலைகளைப் பார்ப்பது போலெ. கடல் விளிம்பில், மலை முகட்டில் சூரியப் பிறப்பையும் மறைவதையும் பார்த்திருப்பார்கள். தரையில் அவை நிகழ்வதைப் பெரும்பாலோர் பார்க்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்காது.
ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை உதிப்பது போல சூரியனின் தலை தெரிய ஆரம்பித்தது.
எதை இப்படி வாய்பிளந்து கவனிக்கிறார் என்று நம்பியும் திருப்பிக் கிழக்கே பார்த்தார். அவரையும் அந்தக் குழந்தைச்சந்தோசம் பற்றிக்கொண்டது.

“ஓ” என்று குரல் கொடுத்துக் கத்திக்கொண்டு ரயிலும் ஓடிக்கொண்டிருந்தது தாளத்துடன்.
ரயிலுடன் நம்பியும் சேர்ந்து ஆனந்தக்குரல் கொடுத்தார்.

கண்கூசாத ஒரு பிரம்மாண்டமான பவள உருண்டையாகக் காட்சி தந்தான் சூரியத்தேவன்.
இப்படி ஒரு வாய்ப்பு ஒருவருக்கு எப்போதாவது தான் வாய்க்கும்.”

……………………............

ஃப்ரஞ்ச் கவிஞன் ஆர்தர் ரைம்போவின் Eternity கவிதையில்
"It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!"


It has been found again. What? – Eternity. It is the sea gone with the sun.

it (the sun) will rise (again).

…………………………….


Feb 2, 2013

கிருஷ்ணன் நம்பி




ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை ’கிருஷ்ணன் நம்பியின் நினைவு’க்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

 சமர்ப்பணம் என்பது ஒரு பக்கத்தில் ஒரு வார்த்தையில் வருகிற விஷயம். ஆனால் இது உள்ளடக்கியுள்ள விஷயம் எப்போதும் பெருங்காவியம்.
கமலம் குறுநாவல் தொகுப்பை தி.ஜானகிராமன் சமர்ப்பணம் செய்திருந்த விதம் இப்படி “ இந்த தொகுப்பில் உள்ள கதையொன்றில் ஒரு பாத்திரமாக வருகிற என் இரண்டு சகோதரிகளின் கணவர் ராமச்சந்திரனுக்கு இந்நூல் சமர்ப்பணம். “
இந்த சமர்ப்பணம் சொல்லிவிடுகிற குடும்ப ரகசியம்! 




இரண்டு வருடம் முன் திருப்பூர் புத்தக கண்காட்சியில் 'உயிர்மை' ஸ்டாலில் சாரு நிவேதிதா எழுதிய ’சினிமா சினிமா’ என்ற நூலை தற்செயலாகப் புரட்டிய போது எதிர்பாராத ஆச்சரியம். சமர்ப்பணம் R.P.ராஜநாயஹத்துக்கு.


சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல்கள் எட்டு படித்திருக்கிறேன். க.நா.சு, ஜீவா, சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, பிரமிள், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கு. அழகிரிசாமி ஆகிய மகத்தான ஆளுமைகள் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைகள். அரவிந்தன் தொகுத்தவை.



கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை படித்த போது உடைந்து போய் அழுது விட்டேன். நம்பியும், சுராவும் பார்த்த ( ஜே.ஜே யில் கூட விவரிக்கப்பட்டிருக்கும் )அந்த சூரியோதயக்காட்சி! இதை சுந்தர ராமசாமியிடம் அப்போது தொலைபேசியில் தெரிவித்த போது இன்னும் சிலர் கூட நம்பி நினைவோடை படித்து விட்டு கலங்கிப் போனதாகத் தன்னிடம் தெரிவித்ததாக சொன்னார்.
“No tears in the writer, no tears in the reader. No surprise in the writer, no surprise in the reader.”-
-Robert Frost 



ஜே.ஜே சில குறிப்புகளில் எடுத்தவுடனே சு.ரா ஜே.ஜே வின் மரணம் பற்றி ஆல்பெர் காம்யு இறந்ததற்கு மறு நாள் ஜே.ஜே. இறந்ததாகக் குறிப்பிட்டு விட்டு தமிழிலும் நாற்பதை ஒட்டிய வயதில் புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு. அழகிரி சாமி, மு.தளைய சிங்கம் என்று எத்தனை இழப்புகள் என்பார்.
புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு.அழகிரி சாமியெல்லாம் படித்து முடித்திருந்த நேரம். சுந்தர ராமசாமி மூலம் தெரிய வந்த கிருஷ்ணன் நம்பி, பிரஞ்சு எழுத்தாளன் ஆல்பெர் காம்யூ, இலங்கை எழுத்தாளன் தளைய சிங்கம் இவர்களெல்லாம் யார்?


என் தேடலில் அன்று கிருஷ்ணன் நம்பி, ஆல்பர் காம்யூ, மு.தளைய சிங்கம் இடம் பெற்றது இங்கனம் தான். 


சில வருடங்களுக்கு முன்  எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார்: ”தளைய சிங்கத்தை நினைத்தால் இனி ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது!” 




கிருஷ்ணன் நம்பி கூட காலத்திற்கு முந்தியே நாற்பதையொட்டிய வயதில் தான் மரணமடைந்திருக்கிறார். அப்போது 44 வயதாம்.
தி.ஜானகிராமனின் எழுத்து மீது கிருஷ்ணன் நம்பிக்கு இருந்த ப்ரேமை!
சு.ரா சொல்வது : ’ஜானகிராமன் மீதான அவனது வியப்பு கடைசி வரை நீடித்திருந்தது. ஜானகிராமனை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய கனவு. நேரில் பார்த்தால் என்ன பேசுவாய் என்று கேட்டேன். ஒன்றுமே பேச மாட்டேன். அவரைப் பார்க்கப் போவதற்கு முன் ஒரு தங்க மோதிரத்தைச் செய்து ரெடியாக பாக்கெட்டில் வைத்திருப்பேன். அவரைப் பார்த்ததும் கையைக் கொஞ்சம் நீட்டுங்கள் என்று சொல்வேன். அவர் நீட்டுவார். நான் அந்த மோதிரத்தை அவர் கையில் போட்டு விட்டு எதுவும் பேசாமல் அப்படியே வந்து விடுவேன் என்பான். ஆனால் அப்படி தங்க மோதிரத்தைப் போடும் வாய்ப்பு அவனுக்கு வாழ்க்கையில் கிடைக்கவேயில்லை.’



கிருஷ்ணன் நம்பி, ஆதவன் இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் கூட தி.ஜானகிராமன் சாதனை எழுத்து பற்றி இந்தத் தலைமுறையினருக்கு எவ்வளவோ சொல்லியிருப்பார்களே!


ஜே.ஜே படித்த வேகத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தால் 1964ல்வெளியிடப்பட்டு பதினேழு வருடங்களாக அன்று 1981லும் கூட விற்பனையில் இருந்த 
(எவ்வளவு வருடமாக ஒரே பதிப்பு விற்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது!)கிருஷ்ணன் நம்பியின் ’நீலக்கடல்’ வாங்கிப் படித்து விட்டு நானும் என் நண்பன் M.சரவணனும் அசந்து போய் விட்டோம்.
குழந்தையுலகத்தை அழகாக கண் முன் விரித்துக்காட்டும் அதிசயக்கலைஞன்!  
அந்த சிறுகதைத் தொகுப்புக்கு அழகான சின்ன முகவுரை கிருஷ்ணன் நம்பி எழுதியிருக்கிறார். அந்த முகவுரையை மட்டுமே நாங்கள் எத்தனை முறை அப்போதெல்லாம் படித்திருக்கிறோம் !


கிருஷ்ணன் நம்பியின் முழுத்தொகுப்பு இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இலக்கியக்குறிப்புகள், கட்டுரைகள், கடிதங்கள், என்று எல்லா ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்ற குறிப்புடன் வெளி வந்துள்ள  இந்த நூலை வாங்கியவுடன் ’நானும் கடவுளும் அறிஞனும்’ தலைப்பிலான  அந்த நீலக்கடல் முகவுரையைத் தான் தேடினேன். 
அதனை இங்கே தந்துள்ளேன். 



 கிருஷ்ணன் நம்பி நீலக்கடல் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முகவுரை.

நானும் கடவுளும் அறிஞனும்


நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.


...............................................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_22.html