Share

Showing posts with label மாஸ்டர் பிரபாகர். Show all posts
Showing posts with label மாஸ்டர் பிரபாகர். Show all posts

Jun 21, 2019

அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா


எதிரிகள் ஜாக்கிரதை. 1967ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். இதில் ஒரு பாட்டு. லாலா லல்லலல்லா ஒரு நாள் இருந்தேன் தனியாக, ஒரு பெண் நடந்தாள் அருகே, சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக, சிவக்கும் ரோஜா மலரே என்று ஒரு பாடல்.
ஆர்.எஸ்.மனோகர், மணிமாலா, மாஸ்டர் பிரபாகர் இடம்பெற்ற பாடல். அந்த காலத்தில் ரொம்ப ஹிட் ஆன பாடல்.
இதில் மாஸ்டர் பிரபாகருக்கு வரிகள் – அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா.
இந்த குழந்தை குரல் பாடியவர் வசந்தா ராணி.
அந்த காலத்தில் குழந்தை பாடல்கள் பாடியவர் என்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரி தான்.
வசந்தா ராணி பாடிய அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா மறக்க முடியாத குரல்.
வசந்தாராணி ராமண்ணாவின் ”மூன்றெழுத்து” (1968) படத்தில் நடித்தார். நல்ல நகைச்சுவை நடிப்பையும் இவரிடம் காண முடிந்தது. நாகேஷை “டேய் கூத்தாடியத்தான்” என்று கலாட்டா செய்வார். அசட்டு பாத்திரம். அப்பாவாக ஓ.ஏ.கே தேவர் ஐயராக நடித்திருப்பார். ஐயர் பாஷை ஓ.ஏ.கே தேவர் பிரமாதமாக தன் கணீர் குரலில் பேசுவார். ’மதராஸ் டூ பாண்டிச்சேரி’(1966)யில் ஐயர் ஓட்டல் முதலாளியாக விசிறியால் விசிறிக்கொண்டே வருவார்.
மூன்றெழுத்தில் மாடிப்படியேறும் ஓ.ஏ.கே தேவரின் பின்னால் வசந்தா ராணி போய்க்கொண்டு “ மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ” பாடும்போது தேவர் நின்று திரும்பி ’உன்னை போய் பெத்தனே’ என அர்த்தப்படும் படி தன் வயிற்றில் இரண்டு அடி அடித்துக்கொள்வார். திரும்பி மீண்டும் அவர் படியில் நடக்கும்போது “ ஆக மெல்ல நட மெல்ல நட” பாடுவார் கிறுக்குப்பெண்.
வசந்தி, வசந்தா என்று அன்று அறியப்பட்டவர்
வசந்தா ராணி பின்னால் தற்கொலை செய்து கொண்டார்.

.
’அச்சச்சோ’ சித்ரா வசனம் பாலச்சந்தரின் அரங்கேற்றம் (1973).
“இந்த படம் நல்லாருக்காதுன்னு நான் தான் சொன்னேன். ஏன் நல்லால்லேன்னு பாத்துட்டு வந்துடுவோம்னு அம்மா தான் சொன்னா”

வசனம் பேசும் போது ’அச்சச்சோ, அச்சச்சோ சொல்லி பிரபலமான சித்ரா.

நான் அவனில்லை(1974)யிலும் வருவார் அச்சச்சோ சித்ரா.
இந்த நடிகையும் தற்கொலை செய்து இறந்தார்.

Mar 28, 2019

மாஸ்டர் பிரபாகர்


தேவாலயம் என்பது படப்பெயர். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா நடித்தார்கள். இது கே.ஆர்.விஜயாவுக்கு முதல் படம் என்று சொன்னால் ’சீ தப்பு..கற்பகம் தான்’ என்பீர்கள். ஆனால் இந்தப்படத்தில் தான் கே.ஆர்.விஜயா முதலில் நடித்தார். படம் முடிக்கப்படவுமில்லை. அதனால் ரிலீஸ் ஆகவுமில்லை. இந்த தேவாலயம் தான் மாஸ்டர் பிரபாகருக்கும் முதல் படம்.
All great performances have a ridiculous beginning.
மதுரை சௌராஷ்ட்ரா குடும்பம். பதினொரு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் நான்காவதாக பிறந்தவர்.
கே.எஸ்.ஜி இயக்கி பத்மினி நடித்த ’சித்தி’ தான் பிரபாகருக்கு முதல் படம். ’சித்தி கொடுமை பண்ணுவா’ என்று சுந்தரி பாய் பயமுறுத்தியதை நம்பி சித்தி பத்மினியை பார்த்ததும் நடுங்கும் குழந்தைகளில் பிரபாகரும் ஒருவர்.

சாது மிரண்டால் நாகேஷுடனும் குட்டி பத்மினியுடனும் “ A for apple, B for Biscuit,"
டி.ஆர்.ராமச்சந்திரனுடன் “ அருள்வாயே, நீ அருள்வாயே”( பாலமுரளி கிருஷ்ணா பாடல்)

குழந்தை நட்சத்திரங்களில் படு பிசியானவர் பிரபாகர். பால்ய காலம் முழுக்க சினிமாவுலகம் தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் இந்திபடங்களில் கூட நடித்த பால நடிகர்.
மறக்கமுடியுமா? மறக்க முடியாத காட்சிகள். காகித ஓடம், கடலலை மேலே மறக்க முடியாத பாடல்.
திருவருட்செல்வரில் திருஞானசம்பந்தர் பாத்திரம் பிரமாதமானது.
மாஸ்டர் பிரபாகரை பயன்படுத்திய முக்கிய இயக்குனர்கள் என்றால் ஏ.பி.நாகராஜனும், கே.பாலச்சந்தரும் தான்.
ஸ்டைல் காட்டி நடித்த சுட்டிப்பையன் மாஸ்டர் பிரபாகர்.
பாமாவிஜயம் “வரவு எட்டணா, செலவு பத்தணா” பாடலில் டான்ஸ்.
இருகோடுகள் படத்தில் புத்திசாலி சுட்டியாக துறுதுறு தனத்துடன்.
’புன்னகை மன்னன், பூவிழி கண்ணன் பாட்டின்’ பல்லவி ஆரம்பிக்கு முன் பாலகிருஷ்ணனை வா வா என்று வரவேற்று அழைத்து வரும் அழகு.
தேவரின் ’நேர் வழி’யில் கௌபாய் குதிரை சவாரி, சிங்கத்தின் மீதே உட்கார்ந்த காட்சிகள்.

’வா ராஜா வா’ இன்று உள்ள குழந்தைகளுக்கு கூட பிடித்த படம். மஹாபலிபுரம் பார்க்க போகிறவர்கள் இந்த வா ராஜா வா நினைவில் மூழ்காமல் இருக்கமாட்டார்கள். அதில் கதாநாயகனாக பிரபாகரை நடிக்க வைத்தார் ஏ.பி.நாகராஜன்.
’ராமன் எத்தனை ராமனடி’யில் சிவாஜியை “டேய் சாப்பாட்டு ராமா” என்று கூப்பிடும் சிறுவன். அன்று இது கண்டு பிரமிக்காதவர்கள் கிடையாது.
’எங்க மாமா’ குழந்தைகள் செல்லக்கிளிகளில் ஒன்றாக.
திருமலை தென்குமரியிலும் பிரபாகர் உண்டு.
இளைஞனாக மலையாளப்படம் ’ஈநாடு’.

2009ல் வந்த ’ஈரம்’ த்ரில்லர் படம் தான் அவர் கடைசியாக நடித்த படம்.

இன்று சொன்னால் ஆச்சரியம். மொத்தம் 185 படங்கள்.
ஆனால் ஒரு சிறுவனாக ரொம்ப ரசித்து சந்தோஷமாகத் தான் இத்தனை படங்களிலும் அனுபவித்து நடித்திருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய ரோல் மாடலாக மாஸ்டர் பிரபாகரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவருடைய தங்கை சுமதி இன்று கனடாவில் இருக்கிறார்.

இன்று வடக்கு உஸ்மான் ரோட்டில் மாஸ்டர் ராஜ்குமார் (ராமு) வீட்டிற்கடுத்த க்ரீன் ஹோமில் பெரிய ஜெராக்ஸ் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார்.

https://www.facebook.com/rprajanayahem/posts/2397103570503095