புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்த கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா., நாடோடிக் கதைகள் பற்றிய ஒரு கருத்தரங்கை 1990ம் ஆண்டு நடத்தினார். நாடோடிக் கதைகளில் பாலியல் விஷயங்கள் தவிர்க்க முடியாதது. தமிழ்த்துறைப் பண்டிதர்களுக்கு எப்போதுமே சில மனத்தடைகள் உண்டு. கருத்தரங்கப்பொருள் எதுவாயினும் சரி ‘ தனித்தமிழ்’ , ‘ தமிழ்ப்பண்பாடு’ என்று தவிதவித்துப் போவார்கள். வட்டார வழக்கில் கி.ரா. எழுதுவதையே ஜீரணிக்க முடியாதவர்களை நாடோடிக் கதைக் கருத்தரங்கம் சிரமப்படுத்தாமல் இருக்குமா? ஒவ்வொரு கட்டுரை வாசிக்கப்படும்போதும் தமிழ் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்று யாரேனும் ஒரு புலவர் எழுந்து ஆட்சேபிக்கும்படியாகிவிட்டது.
பாளையங்கோட்டையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் லூர்து இந்தப் பண்டிதர்களின் புலம்பலுக்கு எதிர் வினையாகப் பேசும்போது ” கருத்தரங்கம் நாடோடிக் கதைகள் பற்றியது. விவாதம் இது குறித்து இருக்க வேண்டும். தயவுசெய்து தமிழ்ப் பண்பாடு பேசாதீர்கள். எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பிள்ளைமார் ஜாதி உண்டு. அந்த ஜாதியிலுள்ள ஆண் தன் அக்காள் மகளைத் தன் சகோதரியாகவே நினைக்கிறான். தாய் மாமன் என்பவன் அந்தச் ஜாதிப் பெண்ணுக்கு சகோதரன் முறை. அந்த ஜாதியில் ஒரு பெண் தன் மகளை தன் உடன் பிறந்தவன் பொறுப்பில் விட்டு விட்டு வெளியூருக்குக் கூடப் போய் வரமுடியும். தமிழ் நாட்டில் உள்ள எல்லாத் தமிழர்களும் அக்காள் மகளை முறைப் பெண்ணாக நினைக்கும் போது, எங்கள் ஊர்ப்பக்கம் உள்ள இந்தத் தமிழன் மட்டும் தன் அக்காள் மகளை தாய்க்கு சமமாக மதிக்கிறான். இதற்கு என்ன சொல்கிறீர்கள். இதுவும் தமிழ்ப் பண்பாடுதான் “ என்றார்.
உடனே ஒரு முதிய புலவர் மூச்சிறைக்க சிரமப்பட்டு தன் இருக்கையை விட்டு எழுந்து தள்ளாடி மேடைக்கு வந்து நடுங்கும் குரலில் கோபத்தோடு “ தமிழ்த் துறை நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டையே ஒருவன் பழிப்பானேயாகில் அவன் புதுவையை விட்டு உயிரோடு திரும்ப முடியாது “ என்று பிரச்சினையை திசைமாற்றி சவால் விட்டார்.
இந்த தமிழ் பண்டிதர்கள்! ALSATION DOGS BARK WITHIN THEIR OWN COMPOUND. பாரதியின் ‘ வீரமில்லா நாய்கள் ‘ என்ற வரி நினைவில் வருகிறது. கடவுள் பாரதியைப் படைத்தவுடன் விசுவாமித்திரன் தமிழ்ப் புலவர்களை படைத்திருக்கிறான் என்று ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று உண்டு.
நாட்டார் வழக்காற்றியல்துறைப் பேராசிரியர் லூர்து குறிப்பிட்ட அந்த ஜாதிதான் இல்லத்து பிள்ளைமார். ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் இந்த இல்லத்துப் பிள்ளைமார் மட்டும் மற்ற ஜாதியினரிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதற்கு ‘ தாய்மாமன் உறவுமுறையே’ காரணம். இந்த எதிர் கலாச்சாரம் இல்லத்தாரை ஏனைய பிள்ளைமார்களிடமிருந்து மட்டுமல்ல தமிழகத்தின் பிற ஜாதியார்களிடமிருந்து அந்நியப்படுத்தி விடுகிறது. பிற ஜாதியர்களுடன் திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ளும்போது தவிர்க்க முடியாமல் ஒரு பண்பாட்டு அதிர்ச்சி ( CULTURAL SHOCK ) ஏற்படவே செய்கிறது. தேவர் சமூகத்தில் கொண்டையம் பட்டித் தேவமார் என்ற ஜாதியிலும் இல்லத்துப் பிள்ளைமார் போலவே தாய்மாமன் உறவு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இல்லத்துப் பிள்ளைமார் இனத்திற்கு இன்னொரு கலாச்சாரத் தனித்துவமும் உண்டு. தமிழ்நாடு, கேரளா இரு மாநிலங்களிலும் பரவலாய் உள்ள இனம். இங்கே உள்ளவர்களுக்கு தாய்மொழி தமிழ். கேரளாவில் இந்த இனத்தவருக்கு தாய்மொழி மலையாளம். மாறுபட்ட மொழிப்பண்பாட்டையும் மீறி இன்றும் திருமண சம்பந்தங்கள் நடக்கின்றன. நாஞ்சில் மனோகரனுக்கு பல வருடங்களுக்கு முன்னால் மலையாளி என்ற பிம்பம் அரசியல் ரீதியாகக் கூட ஏற்பட்டதற்கு இந்த IDENTY CRISIS தான் காரணம்.
இன்னொரு சுவாரசியமான செய்தி !
நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்காரர் பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் லெட்சுமி நாரயண அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர். என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார். எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது. ‘ சூழ்ந்து அகன்று தாழ்ந்து உயர்ந்து முடிவில் பெரும்பாழாயோ’ என்று பாடிய நம்மாழ்வார் இல்லத்துப் பிள்ளைமாரா? என்ற ஆச்சரியம் ஒருபுறம். எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்குஅருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என்னுடைய தாத்தா செய்துங்கநல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக பல நூற்றாண்டுகளுக்கு முன் நம்மாழ்வார் வம்சம் இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ ? என்று ஒரு பெருமித உணர்வு ஏற்பட்டுவிட்டது.
குரல்மணி (2001) மற்றும் தூறல் (2004) இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது