Share

Showing posts with label வெங்கட்சாமிநாதன். Show all posts
Showing posts with label வெங்கட்சாமிநாதன். Show all posts

Nov 28, 2016

சார்பு


சார்ந்திருக்க எவ்வளவோ இருக்கிறது.
”எதையேனும் சார்ந்திரு
கலை, இலக்கியம், சங்கீதம்,இங்கிதம்
 இப்படி எதையேனும் சார்ந்திரு.
இல்லையேல் வாழ்க்கை காணாமல் போய் விடும்.”
- வண்ண நிலவன்
‘ மெய்ப்பொருள்’ கவிதைத்தொகுப்பில் ஒரு கவிதை.’

ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கம் நிகழ்விற்காக சென்றிருந்த போது தனிப்பட்ட உரையாடல் போது வெங்கட் சுவாமிநாதனிடன் நான் கேட்டேன். “ ஒரு இலக்கியவாதி பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியுமா?”
உடனே அவர் பதில்: ”ஏன், ஒரு இலக்கியவாதி மார்க்ஸிஸ்ட் ஆக இருக்க முடியும் என்றால் ஏன் பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியாது? ஏன் இருக்கக்கூடாது?”
மௌனியின் பூணூலைப்பார்த்து அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ.ரா “ இந்த சனியனை கழட்டி அந்த ஆணியிலே மாட்டு” என்று சொன்ன போது மௌனி சற்றும் யோசிக்காமல் சொன்னார் “Rather I would cut my cocks and put it there!”
நான் பெரிதும் மதிக்கும் ந. முத்துசாமியிடம் இந்த கேள்வி ’உங்களுக்கு பிடித்த கொள்கை என்ன?’ கேட்கப்பட்டால் எப்போதும் தயங்காமல் உடனே சொல்வார் “ திராவிட இயக்கக் கொள்கைகள்”
முத்துசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் மௌனி!
அசோகமித்திரன் பி.ஜே.பி சார்புடையவர்.
லா.ச.ரா. ஆச்சாரம் எல்லோரும் அறிந்தது.
தி.ஜானகிராமன் ஆன்மீக தேடல் கொண்டிருந்தவர்.

 கி.ரா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருக்கிறார்.
பெரும்பாலான படைப்பாளிகள் மார்க்ஸீயத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவர்கள். மனிதன் மீதான அக்கறை தான் மார்க்ஸீயம் என்பதால் அதை எங்கனம் அலட்சியப்படுத்த முடியும். முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் மார்க்ஸீயத்தின் பால் அபிமானம் கொண்டவர்கள்.
நான் கல்லூரி வாழ்க்கையின் போது தி.மு.க. காரன். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டிலும் உறுப்பினராய் இருந்தவன்.உறுப்பினர் கார்டுகள் பத்திரமாக என்னிடம் ரொம்ப காலம் இருந்ததுண்டு. அந்த நேர என் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய சாட்சிகளாக!
எப்போதுமே அ.தி.மு.க வுக்கு ஓட்டு போட்டதேயில்லை.
என் மார்க்சீய அபிமானம் காரணமாக 'தோழர் ' என்றபட்ட பெயரும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது.இன்றும் என்னை என் பெயரை சொல்லாமல் ' தோழர் ' என்று குறிப்பிட்டு அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு.
சேலம் காம்ரேடுகளோடு மோதல் ஏற்பட்ட போது ஒரு பத்திரிகையில் எழுதிய எதிர்வினைக்கு ”கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள்”தலைப்பை கொடுத்தேன்.
சுந்தர ராமசாமி சொன்னதை அடையாளத்தை நிராகரிக்கும் நானும் சொல்வேன்.
' இலக்கியவாதியாகிய நான் ஒரு மொழிக்கோ, சாதிக்கோ,மதத்திற்கோ இனத்திற்கோ, கட்சிக்கோ, சித்தாந்ததிற்கோ,ஏன் நாட்டிற்கோ கூட விசுவாசமாக இருக்க முடியாது '



.........................................................

Nov 17, 2014

பாரதியுடன் ஒப்பிடப்பட்டு விட்டவர்கள்!



இலங்கை எழுத்தாளரும் தத்துவமேதையுமான மு.தளையசிங்கம் பற்றி சுந்தர ராமசாமி சொன்னார்: 'பாரதியின் கருத்துலகத்தை விட தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது.'
இது போல வெங்கட் சாமிநாதன் பற்றியும் சுரா சொன்னது : " தமிழின் மீதான அக்கறையில் வெங்கட் சுவாமிநாதனை  பாரதியுடனே மட்டுமே ஒப்பிடமுடியும்"

தமிழ் எழுத்தாளர்களில் மு.தளையசிங்கத்துடன் அந்தக்காலத்தில் கடிததொடர்பு கொண்டிருந்தவர் வெங்கட் சுவாமி நாதன் மட்டும் தான்.

'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி' என்ற தளையசிங்கத்தின் அபிப்ராயம்பற்றி  நான் சுட்டிக்காட்டிய போது வெங்கட் சாமிநாதன் ஆர்வத்துடனும் சிறிது குழப்பத்துடனும் என்னிடம் 'அப்படியே சொல்கிறாரா?'அப்படியே சொல்கிறாரா' என்று கேட்டார்.

  எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கட்சியை ஆரம்பித்த போது
பிரான்சில் மார்க்ஸிய தத்துவத்தை தலைகீழாக்கிய புரட்சிகர உபவர்க்கத்துடனும்,
அமெரிக்காவின் பலாத்காரங்களை எதிர்க்கும் ஹிப்பிஸுடனும் சீனாவின் புதிய மார்க்ஸீய செங்காவலர்களுடனும்
 பங்களதேஷின் கொரில்லாக்களோடும்,
பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்த கொரில்லாக்களோடும்
அண்ணா தி.மு.க கட்சியை தோளோடு தோள் நிறுத்தி கருணாநிதியின் நவ பாஸிச ஆட்சியை எதிர்ப்பதாக தளையசிங்கம் எழுதியிருக்கிறார்!

இந்த அபத்தத்தையும் நான் கவனப்படுத்தியிருக்கிறேன்.

12 வருடங்களுக்கு முன் இதனை நான் எழுதிய கட்டுரையில் படித்து விட்டு ஒரு பிரபல எழுத்தாளர் உடனே,உடனே, அவசரஅவசரமாக என்னிடம் கருணாநிதி பற்றி தளையசிங்கம் எந்தப் புத்தகத்தில், எந்தப் பக்கத்தில் இதனைச்சொல்லியிருக்கிறார் என்று என்னிடம்  கேட்டார்.
இது எதற்கென்றால் அப்போது அந்த பச்சோந்தி எழுத்தாளர் கருணாநிதியின் அடிவருடியாக இருந்தார். கருணாநிதியிடம் " இங்க பாருங்க! உங்களைப்பற்றி  தளையசிங்கம் எவ்வளவு பெருமையாக சொல்லியிருக்கிறார் பாருங்க!" என்று காட்டி அவரைப் புளகாங்கிதப்படுத்துவதற்காகவே என்னிடம் இந்த விபரம் கேட்டுத்தெரிந்து கொண்டார்!
'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி'

தளையசிங்கத்துடனும் வெ.சாவுடனும் பாரதியை சுந்தரராமசாமி ஒப்பிட்டார். அதற்கு முன்னமே மு.தளையசிங்கமோ பாரதியை மு.கருணாநிதியுடன் ஒப்பிட்டிருப்பதோடு, புதுமைப்பித்தனை விட, மௌனியை விடவும் கலையின்  நோக்கத்தைப்புரிந்து கொண்டவராகவும் கருணாநிதி பற்றி சொல்லியிருந்திருக்கிறார்!

கருணாநிதியின் திராவிட நச்சுக்கொள்கைகளும் அரசியல் சார்பும் அவருடைய எழுத்தை பாழ்படுத்திவிட்டன என்பதைப் பற்றியும் மு.தளையசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.



2002ல் விமலாதித்த மாமல்லனைப் பார்க்க விரும்பிய சுந்தர ராமசாமியுடன் திருச்சி கஸ்டம்ஸ் ஆபீசுக்கு போயிருந்தேன். மாமல்லன் அப்போது அங்கில்லை. அங்கிருந்த மத்திய அரசுத்துறை அதிகாரிகளுக்கு சுரா பற்றி எளிமையாகப் புரியும்படியாக விளக்க நான் இப்படிச்சொன்னேன்: ” சார், அந்தகாலத்தில் மகாகவி பாரதி போல இந்த காலத்தில் இவர். பெயர் சுந்தர ராமசாமி.”
 அதிகாரிகள் சுந்தர ராமசாமியின் கையைப் பற்றி குலுக்கினார்கள். 
“ சுந்தர ராமசாமி பற்றி நிறைய நரசிம்மன் (மாமல்லன்) சொல்லியிருக்கிறார் சார்.அடிக்கடி உங்களைப் பற்றி பேசுவார் சார்” சுந்தர ராமசாமியிடம் மாறி மாறி  சந்தோசமாக சொன்னார்கள். உடன் மாமல்லனுக்கு தகவல் தொலைபேசி மூலம் சொன்னார்கள். சுரா  தமிழ் நாடு ஓட்டலுக்கு வரச்சொன்னார்.

(விமலாதித்த மாமல்லனைப் பார்க்க கஸ்டம்ஸ் ஆபீஸுக்கு சுராவுடன் சென்ற போது நடந்த இந்த சுவாரசிய நிகழ்வைப் பற்றி கோவையில் 2007ல் நடந்த சுரா-75 புதுமைப்பித்தன் -100 பாரதி - 125 விழாவில் நான் மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன்!)


................................