பத்மா சுப்ரமணியத்தின் பரதநாட்டியம் பார்க்க இதுவரை கொடுத்து வைத்ததில்லை. சென்ற ஞாயிறு தான் இங்கே வாய்த்தது.
"சுகி எவ்வரோ" - தியாகபிரும்மம் கேட்டார் . இதை விட என்ன சுகம் இருக்கிறது . சுகவாசி க்கு தானே சங்கீதமும் பரதமும் கேட்க ,பார்க்க கிடைக்கிறது .
பத்மா திருமணமே செய்துகொள்ளாதது,டைரக்டர் சுப்ரமணியம் அவர்களின் மகள் என்பது எல்லாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். கன்னடத்து பைங்கிளி ,அபிநய சரஸ்வதி என்ற பெயர் பெற்ற நடிகை சரோஜாதேவி க்காக, திரைப்பட வாய்ப்புகளுக்காக பலரிடமும் சிபாரிசு செய்து 195o க்களில் அவரை நடிகையாக்க அரும்பாடு பட்டவர் .
அவருடைய மன்னியின் தாயார் M.S.சௌந்தரம் எழுதிய "சங்கீத நினைவு அலைகள்" ரொம்ப சின்ன புத்தகம் என்றாலும் மிகுந்த மன அவஸ்தை யை ஏற்படுத்திய சுய சரிதை ."அரியக்குடி "யின் மறுபக்கத்தை வெளிப்படுத்திய நூல் .
"விராலிமலை குறவஞ்சி" நாட்டிய நாடகமாக பத்மா சுப்ரமணியத்தின் குழு வினர் நிகழ்த்தி காட்டினர் .
நடனம் என்பது பாதம் எழுதும் கவிதை . பரதநாட்டியத்தில் முகம் ,கண் ,கைகள் என சகல அங்கங்களும் கவிதை எழுதுவது பெரும் சிறப்பு .
பத்மாவுக்கு வயதாகிவிட்டது .இப்படி ஆட வேண்டுமா ?இனிமேல் ஆட வேண்டுமா ? என்று கேட்பதில் நியாயமே கிடையாது . இன்னும் ஒரு முப்பது வருடம் ஆடி பின் உட்காரட்டும் .
'முன்பு போல் இப்போது இல்லை' -உதட்டை பிதுக்குவது சரியாக தோன்றவில்லை .
மேலும் பாடிய வாயும் ஆடின காலும் ஓயாது அல்லவா ?
பத்மா சுப்ரமணியத்திற்கு ஏன் திருமணம் நடக்கவில்லை.அன்று நடன அரங்கத்திலேயே ,திருமணம் நடக்காததற்கு காரணம் என்ன ? என்று என் காதிலும் ஒரு விசித்திர செய்தி விழுந்தது .
ஒவ்வொரு பிரபல பிரமுகரும் " புகழ் விலை" கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது .
There is an optical illusion about every celebrity!