Share

Showing posts with label தினமலர் அந்துமணி. Show all posts
Showing posts with label தினமலர் அந்துமணி. Show all posts

Sep 23, 2009

தினமலர் அந்துமணி

தினமலர் வாரமலர் அந்துமணியின் பா. கே.ப.,கட்டுரைகளும் கேள்விபதில்களும் தமிழக மக்களுக்கு சுவாரசியமானவை.சமீபத்தில் தினமலர் குற்றாலம் சுற்றுலாவில் வாசகர்கள் இவரைப் பார்க்கவேண்டி தவித்தபோதும் , அந்துமணி அவர்களிடையே இருந்த நிலையிலும் முகம் தெரியாததால் அறிய முடியாமல் போய்விட்டது ! தன்னை முகம் ,அடையாளம் மறைத்து எவ்வளவு வருடங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்!
க.நா.சு மொழிப் பெயர்த்த நார்வே நாவல் " பசி"- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதியது . இந்த நாவலை நான் மீண்டும் பலவருடங்களுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன் ரிவைஸ் செய்துகொண்டிருந்தேன் . அப்போது அதே நேரத்தில் தினமலர் வாரமலரில் நார்வே நாட்டைப் பற்றி அந்துமணி எழுதிய குறிப்புகள் படிக்க கிடைத்தது சுவாரசியமாய் இருந்தது .
சென்ற இரண்டு வார இதழ்களை ஒரு சேர நான் நேற்று தான் படிக்க வாய்த்தது .
13.09.09வாரமலரில் அந்துமணி கட்டுரையில் பெரியசாமி அண்ணாச்சி சொல்லும் ஒரு தகவல் தவறானது .
ஒரு கவிஞர் எழுதியதை வேறொருவர் எழுதியதாக புரிந்துகொள்ள நேர்வது அடிக்கடி நிகழ்கிற விஷயம் தான் . " அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை " என்ற பழைய சினிமாப் பாடல் கவி கா.மு . ஷெரிப் எழுதிய பாடல் என தவறுதலாக கட்டுரையில் அந்துமணியின் நண்பர் பெரியசாமி அண்ணாச்சி குறிப்பிட்டது பதிவாகியுள்ளது . ஆனால் " யானைப் பாகன் " படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் கவிஞர் குமாரதேவன் அவர்கள் எழுதியது .

கவி கா.மு.ஷெரிப் மிகப் பிரபலமான " பாட்டும் நானே ! பாவமும் நானே !'' திருவிளையாடல் பாடலை எழுதியவர்.(ஆனால் கண்ணதாசன் எழுதியதாக படத்தில் இடம்பெற்றது) மிகுந்த பண்பாளர்.
கடந்த சிலவாரங்களுக்கு முன் ரசவடைக்கு பிரபலமான ஓட்டல் வள்ளியூர் சரஸ்வதிபவனை அந்துமணி சரஸ்வதி கபே என்று குறிப்பிட்டு இருந்ததை தவறு என்று சொல்லமுடியாது . ஆனால் கவிஞர் குமார தேவன் எழுதிய பாடலைப் பற்றி சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது .ஏனென்றால் இந்த குமாரதேவனுக்கு அடையாளமே இந்த பழைய பாடல் தான் . பாவம் பேர் சொல்ல ஒரு பாட்டு!இவர் எழுதிய மற்றொரு சினிமா பாட்டு " கண்ணிரெண்டும் வெல்லக்கட்டி , உன் கன்னம் மின்னும் தங்கக்கட்டி "
இந்த 'பதினாறும் நிறையாத பருவமங்கை 'பாடலின் சரணங்கள் ஒன்றின் மூன்றாவது வரி எனக்கு நினைவிலிருந்து நழுவி விட்டது .
" மின்னுகிற பல்வரிசை நட்சத்திரமோ
அது வாவென்று அழைப்பெதென்ன விசித்திரமோ
........ .......... ............... .............. .................
யாரும் மெச்சுகின்ற குணங்களே தான் சொத்து சுகமோ
அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை
காதல் மொழிபேசி வசமாக்கும் ரதியின் தங்கை !

பாரதியின் ' வயது பதினாறிருக்கும் இளவயது நங்கை ' வரியை குமாரதேவன் சுட்டு கொஞ்சம் மாற்றி விட்டார் என்பதும் உண்மை தான். பாரதியை பலர் இப்படி ஆட்டையை போட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே.
திண்டுக்கல் சர்தார் சார் அவர்கள் குமாரதேவன் பாடலின் சரியான சரணவரிகளை பின்னூட்டமிட்டுள்ளார் !
"வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ=அது
வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ
மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ-
யாரும் மெச்சுகின்ற குணங்களேதான் சொத்து சுகமோ"
.......


இந்த கவிஞர் குமாரதேவன் பின்னால் ரொம்ப பல காலம் கழித்து சினிமாப் படம் எடுப்பதாக சொல்லி தேங்காமூடி கம்பெனி ஆரம்பித்து எழுத்தாளர் ராஜேந்திரகுமார் அவர்களின் " நான் ஒரு A"நாவலை படமாக்குவதாக சொல்லி என் நண்பன் ஒருவனை கதாநாயகனாக்கி பூஜை போட்டவர் . ' இந்த படம் வராது . ஷூட்டிங் கூட நடக்காது .எச்சரிக்கையாக இரு . பணம் எதுவும் கொடுத்து விடாதே ' என்று பூஜைக்கு சந்தோசமாய் அந்த நண்பன் போய் விட்டு வந்தவுடனே நான் எச்சரித்தேன் . ஆனால் அந்த நண்பனுக்கு நான் அப்படி சொன்னது தான் அபசகுனமாகப் பட்டுவிட்டது . நான் சொன்னபடி தான் கடைசியில் ஆனது !