Share

Showing posts with label அமிதாப் பச்சன். Show all posts
Showing posts with label அமிதாப் பச்சன். Show all posts

Oct 22, 2017

சோழா ஷெரட்டான் சலூன்


சோழா ஷெரட்டான் ஹோட்டல் பகுதியெல்லாம் அப்போது இவ்வளவு பிசியாக இருக்காது. இன்று சோழாவின் சுற்றுப்புறம் பார்க்கக்கிடைக்கும் போதே மூச்சு திணறுகிறது. மெட்ராஸ் முகமே சென்னையாக மாறி விட்டதே.
முடிவெட்டுவதற்கு எப்போதும் மாதாமாதம் சோழா தான் போவது என்று ஒரு காலம் எனக்கு இருந்திருக்கிறது.

சோழாவில் நுழைவதற்கு முன் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. காம்பவுண்டின் முனையில் ரிக்ஷா ஒன்று. ரிக்ஷாக்காரர் கையில் முரசொலி. கருணாநிதியின் கார் கோபாலபுரத்திலிருந்து திரும்புகிறது. நான் கருணாநிதியின் காரைப் பார்க்கிறேன். கருணாநிதி அமர்ந்திருக்க மு.க.தமிழ் காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். ரிக்ஷாக்காரர் கருணாநிதி காரில் வருவதை கவனித்து விடுகிறார். நானும் அந்தக்காட்சியை கவனிப்பதை பார்த்து விட்டு என்னிடம் சொல்கிறார் : ’தலைவர் போறாரு.’
கொஞ்சம் நிறுத்தி பின் என்னிடம் ரகசியம் ஒன்றை உரக்கச் சொல்வது போல ஒரு கையை உயர்த்தி சொல்கிறார் “ வருவாரு”
பின் மீண்டும் சிலேடையை உடைத்து “ கோட்டைக்கு வருவாரு.”
மீண்டும் கருணாநிதி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை. இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம் அது.

இன்று முதுமை நோய் மூடியுள்ள நிலையில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் செல்வது ‘செய்தி’யாகிறது. அன்றும் கூட 
அவர் முரசொலி அலுவலகத்துக்கு தான் சென்று கொண்டிருந்திருப்பார்.



சோழாவில் சலூன் பார்பர் சொல்வார் : 'இப்ப தான் வைஜயந்திமாலா அவர் பையனுக்கு முடி வெட்ட வந்திருந்தார்.'
சோழாவில் அந்த பில் முதலில் நீட்டுவார். மெனு போல நிறைய அழகு சம்பந்தமாக வரிசை கட்டி ஏதேதோ இருக்கும். நான் ஹேர்கட் மட்டும் டிக் செய்வேன். ஷேவிங், ஃபேஷியல் என்று டிக் செய்தால் அவ்வளவு தான். பில் எகிறி விடும்.
ஹேர் கட் செய்யும்போதே பார்பர் நிறைய பேசுவார்.
ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், மாதத்தில் பத்து நாட்களாவது சென்னை ஷூட்டிங். சோழாவில் தான் தங்குவார்கள்.
ராஜேஷ் கன்னா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பெரும்பாலும் பாரில் குடித்துக்கொண்டிருப்பார்.
Introvert. யாரிடமும் பேசக்கூட மாட்டார்.
யாருக்கும் டிப்ஸ் தரமாட்டார். முடி வெட்டிக்கொண்ட போதும் டிப்ஸ் தந்ததேயில்லை.
அமிதாப் எல்லோருக்கும் அப்போதே நூறு ரூபாய் டிப்ஸ் தருவார். ரொம்ப கலகலப்பாக இருப்பார். அவர் குளித்தவுடன் ஹேர் செட்டிங்க்காக அறைக்கு அழைப்பார். அதற்கே கூட பார்பருக்கு நூறு ரூபாய் தருவார்.
எனக்கு முடிவெட்டியதும் பார்பருக்கு நான் ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுப்பேன். ராஜேஷ் கன்னா அளவுக்கு என்னை அவர் நினைக்கத் தேவையில்லை.

Dec 4, 2012

A ridiculous beginning.

காலம் மாறிப்போச்சு 1956ல் வந்த படம். ஜெமினி கணேஷ்,அஞ்சலி தேவி, எஸ்.வி.சுப்பையா நடித்த படம். இந்தப் படத்தில் “ஏரு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே “ என்ற பாடலுக்கு ஆடியிருப்பவர் வஹிதா ரஹ்மான்.அதே வருடம் எம்.ஜி.ஆர்,பானுமதி,பி.எஸ்.வீரப்பா நடித்த ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்திலும் வஹிதா ரஹ்மான் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருக்கிறார்.All great performances have a ridiculous beginning.
வஹிதா ரஹ்மான் செங்கல்பட்டுக்காரர்.உருது பேசுகிற முஸ்லீம் தமிழ்ப்பெண். வாழ்க்கை எவ்வளவு வேகமானது.குருதத் பார்வையில் ஹைதராபாத்தில் இருந்த வஹிதா ரஹ்மான் தென்பட்டு,அடுத்த வருடமே அகில உலக திரைக்காவியம் ’பியாசா’ வில் காவிய நாயகியாகிவிட்டார்.வாழ்க்கை தான் எவ்வளவு பெரிய மாற்றங்களை சிலர் வாழ்வில் ஏற்படுத்தி விடுகிறது. குருதத்துடன் மட்டும் ஐந்து படங்கள்.

’பாசமலர்’ படம் இந்தியில் ’ராக்கி’.சிவாஜி பாத்திரத்தில் அசோக்குமார். சாவித்திரி நடித்த ரோலில் வஹிதா ரஹ்மான் நடித்தார்.
ஆர்.கே.நாராயண் நாவல் The guide இந்தியில் தேவ் ஆனந்த்.கதை நாயகி ’ரோஸி’யாக வஹிதா. எங்க வீட்டுப்பிள்ளை இந்தியில் ராம் அவுர் சியாம். இதில் திலீப்குமாருடன் வஹிதா ரஹ்மான்.

ஹேமா மாலினி திரை வாழ்க்கை தமிழ்ப்படத்தில்  தடுமாற்றத்துடன் தான் ஆரம்பமானது. 'வெண்ணிற ஆடை' படத்தில் சில காட்சிகள் நடித்த பின் ஸ்ரீதர் இவரை ரிஜக்ட் செய்து விட்டார் என்பது பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்’ இது சத்தியம்’(1963) படத்தில் தேயிலைத்தோட்டத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் தலைகாட்டியிருக்கிறார். அசோகன் ஹீரோ.ஹீரோயின் சந்திரகாந்தா. இவர் இப்ப பலரால் மிமிக்ரி செய்யப்படும் ’வயசாயிடுச்சில்லக்கா’ சண்முகசுந்தரத்தின் சகோதரி.

’இது சத்தியம்’ படத்தில்
’சிங்காரத்தேருக்கு சேல கட்டி,சின்னச்சின்ன இடையினில் பூவக்கட்டி தெருத்தெருவாக நடக்கவிட்டா சின்னச்சின்ன மனசுகள் என்னவாகும்’
( சீர்காழி கோவிந்தராஜன்,எல்.ஆர்.ஈஸ்வரி கோரஸ்.)பாடல் காட்சியில் ஹேமா மாலினி ஆடிப்பாடுவதை அசோகன் பார்ப்பார்.அவருக்கு கதாநாயகி சந்திரகாந்தா ஆடிப்பாடுவது போல தோன்றும்.அதாவது ஹேமா ஆடிப்பாடும்போதே அவர் மறைந்து சந்திர காந்தா தோன்றுவார்.உடனே அசோகன் முகம் பரவசமாக மலரும். 

 இந்தப் படம் பழைய படமாக டூரிங் தியேட்டரில் ஓடும்போது தமிழ் ரசிகர்கள்  சீதா அவுர் கீதா, ஷோலே,ஜுக்னு எல்லாம் பார்த்து ரசித்திருந்த காலம். கனவுக்கன்னி ஹேமா மாலினி!
கொட்டகையில் ’டே ஹேமா மாலினி டா !’ என்று சத்தம். அசோகன் பாடல் காட்சியில் ஹேமா முகம் பார்த்து படு சோகமாகும்போது தரை டிக்கட் ரசிகர்கள் “ டே அசோகா!மணிபர்ஸ் வாய்! உனக்கு ஹேமாமாலினி கசக்குதா!சரியான எட்டப்பார்ட்டி!என்னா ரசனைடா..”
தரை டிக்கட் ரசிகர்களில் புலவர்களும் உண்டு. ‘டே.. கனியிருப்ப காய் கவர்ந்தற்று..!ஹேமா மாலினி தாண்டா சூப்பர் தாட்டி...சந்திரகாந்தா டப்பா ஜாரிடா..டே’
’சரி..சரி.. ஒன் தலையில ஓத்த விதி’

இந்தியில் ’சப்னோ கா சவ்தாகர்’ மூலம் ஹேமா மாலினிக்கு 1968ல் ப்ரேக் கிடைத்தது.அதன் பிறகு அவர்  Career  ரொம்ப கலர்ஃபுல் தான்.

...........

 

இது தான் சினிமா! 

தேவர்' தெய்வச்செயல் 'படம் மேஜர் சுந்தர் ராஜனை கதாநாயகனாக்கி எடுத்தார்.கொஞ்ச நாளில் அதை தூசி தட்டி ஹிந்தியில் அப்போது உச்சத்தில் இருந்த ராஜேஷ் கன்னா கதாநாயகனாக 'ஹாத்தி மேரே சாத்தி 'யாக்கி படம் அகில இந்தியாவிலும் சூப்பெர் ஹிட். அதையே மீண்டும் தமிழில் எம்ஜியாரை வைத்து' நல்ல நேரம் ' வியாபார ரீதியில் நல்ல லாபம்.பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை தான். இதில் மேஜர் -ராஜேஷ் கண்ணா -எம்ஜியார் மூவருமே எவ்வளவு மாறுபட்டவர்கள்.மூவரும் ஒரே கதையின் நாயகர்கள்!
தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ’ராமுடு,பீமுடு’ படத்தை நாகிரெட்டி தமிழில்  'எங்க வீட்டு பிள்ளை'யாக எம்ஜியாரை வைத்து ,ஹிந்தியில்' ராம் அவ்ர் ஷியாம் ' - திலிப் குமார் கதாநாயகனாக வைத்து தயாரித்தார். தமிழ் தெலுங்கு போல் ஹிந்தி பெரிய ஹிட்.கொஞ்ச வருடம் கழித்து முக்கிய ரெட்டை கதாபாத்திரங்களை பெண்ணாக்கி ஹேமா மாலினி நடிக்க ' சீதா அவ்ர் கீதா' ஹிந்தியில் சூப்பர் ஹிட். உடனே தமிழில் வாணி-ராணி என்று எடுக்கப்பட்டது.

'சீதா அவ்ர் கீதா ' ஹிட் ஆகியிருந்த நேரம். மற்றொரு ஹிந்தி படத்தில் ஹேமா மாலினி, ஜிதேந்திரா, அமிதாப் பச்சன் நடித்துகொண்டிருந்தார்கள். கிளைமாக்ஸ் கடைசி சண்டைக்காக ஹேமா மாலினியை மோசமானவர்களிடம் இருந்து காப்பாற்ற அமிதாப்பும் ஜிதேந்திராவும் கடுமையாக ரிகர்சல் பார்த்து விட்டு செட்டுக்கு போனார்கள். அங்கே இவர்களை கட்டிப்போட்டார் இயக்குனர். ஹேமா மாலினி மோசமானவர்களிடம் "கட்டி புரண்டு,கட்டி கட்டி புரண்டுபுரண்டு "கடுமையாக சண்டையிட்டு அமிதாப்பையும் ஜிதேந்திராவையும் காப்பாற்றினார். கதை மாற்றப்பட்டுவிட்டது.சீதா அவ்ர் கீதா வில் ஹேமா மாலினி சண்டை மக்களுக்கு பிடித்து விட்டது. அதனால் இந்த படத்தில் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ஹேமா சண்டை!
ஆங்கிரி எங் மேன் அமிதாப் பச்சன் மனம் அன்று என்ன பாடு பட்டிருக்கும்.
வழக்கமா கதாநாயகன் தான் கிளைமாக்ஸ் காட்சியில் "தும்பிக்கையை தரையிலே ஊனி,நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா சுத்துவான்!"