Share

Showing posts with label க.நா.சு. Show all posts
Showing posts with label க.நா.சு. Show all posts

Jun 5, 2020

க. நா.சு கலை நுட்பங்கள்

கநாசு தவிர அவருடைய சமகாலத்தவர்களான மணிகொடி எழுத்தாளர்களுக்கு சினிமா நாட்டம் இருந்தது. 

கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன. கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும். நான் எழுத்தையும் ஆராதனை பண்ணுவேன். இன்னொரு கலையையும் ஆராதனை பண்ணுவேன் என்று சொல்லக்கூடாது என்று நினைப்பவர் க நா சு. 

Jealous Mistress. 
ஒரு கலை இன்னொரு கலைக்கு சக்களத்தி. 

அவருடைய நாவல்கள் சர்மாவின் உயில், பொய்த் தேவு, ஒரு நாள், வாழ்ந்தவர்கள் கெட்டால், அசுர கணம் எல்லாம் மகத்தான படைப்புகள். 
தி. ஜானகிராமனுக்கு முன்பு பிரதியின்பம் என்பதை க. நா. சு தான் காட்டியவர்.
 அவருடைய உரைநடை விஷேச தரமானதாக இருக்கிறதை இப்போது படித்தாலும்
 உணர முடியும். 

த‌ற்போதைய எழுத்தாளர் ஒருவரின் நாவலை படித்த போது போதும் போதும் என்று ஆகி விட்டது. 

உடனே க. நா. சு நாவல்களை மறு வாசிப்பு செய்தேன். அப்போது தான் செரிமான பிரச்சினை சரியாகியது. 

க.நா.சுவின் விமர்சன நூல் 'கலை நுட்பங்கள்' அவருடைய புகைப்படத்துடன் வெளி வந்தது. 
அதை பார்க்க க. நா.சு உயிருடன் இல்லை. 
அந்த நூலை மகாதேவனுக்கு 
சமர்ப்பணம் செய்திருந்தார். 
மகாதேவன் இன்றைய உயர் நீதிமன்ற நீதியரசர். 

க.நா.சுவுக்கு மா. அரங்கநாதனின் மகன் மகாதேவன் மீது மிகுந்த அன்பும் வாஞ்சையும் இருந்திருக்கிறது. 

க. நா.சு மட்டுமல்ல. முன்றில் அலுவலகத்திற்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் மகாதேவனிடம் தான் அதிகமாக பேசுவார்கள் என்று அவருடைய அப்பா மா. அரங்கநாதன் எழுதியிருக்கிறார். 

பிரமிளின் ஆத்மார்த்தமான நண்பராக மகாதேவன் இருந்தார் என்பது அறிந்த விஷயம். போஷகராக அவரை பேணியவர். 
பிரமிள் இவரிடம் மட்டும் தான்
 சண்டை போட்டதில்லை. 

கநாசு எதையும் தொழ மறுத்தவர். 
புனிதம் என புல்லரிப்பு எதுவும் 
அவருக்கு கிடையாது.

 நடராஜர் சிலை பற்றி அவர் சொன்ன 
ஒரு கமெண்ட். 
' ஒற்றை காலை அவர் தூக்கி நிற்பதற்கு 
கொசு கடி கூட காரணமாயிருக்கலாம் .'

நான் இங்கே குறிப்பிட வந்த இன்னொரு விஷயம் 
சுந்தர ராமசாமி ' கநாசு நினைவோடை '
 நூலில் செய்துள்ள தகவல் பிழை பற்றி. 

கநாசு வின் தகப்பனார் தஞ்சை மாவட்டத்தில் 
ஒரு சாதாரண சப் போஸ்ட் மாஸ்டர் தான். 

ஆனால் சுராவின் முதுமை மறதி காரணமாக 
' கநாசு' வின் தகப்பனார் தென் ஆப்பிரிக்காவிலே 'போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' பதவி வகித்தவர் என்று ரொம்ப விசித்திரமாக, படு அபத்தமாக குறிப்பிட்டுள்ளார். 

தபால் துறை யில் போஸ்ட் மாஸ்டர் 
என்பது பொதுவான வார்த்தை. 

பிரான்ச் போஸ்ட் மாஸ்டர், சப் போஸ்ட் மாஸ்டர், ஹெட் போஸ்ட் மாஸ்டர் என்று பல பிரிவு தபால் துறையின் உள்வட்டத்தில் உண்டு. 

ஒரு மாவட்டத்துக்கு அந்த காலத்தில் 
ஒரு ஹெட் போஸ்ட் மாஸ்டர் தான். 

பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் Extra department எனப்படும் கீழ்நிலை ஊழியர். 
அதாவது தபால்துறையின் உள் ஊழியர்களான Postman , Class 4 இவர்களுக்கும் கீழ்.

ஜனங்கள் எல்லோரையுமே போஸ்ட் மாஸ்டர் 
என்று தான் நினைப்பார்கள். 

' போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' என்பது தபால் துறை யில் மாநிலத்திலேயே உயர் அதிகாரி. 

நான் இந்த நினைவோடையை படித்தவுடன்
 சுந்தர ராமசாமிக்கே தொலைபேசியில் தெரிவித்தேன். அதிர்ந்து விட்டார். 

அவருக்கு தான் எழுதியுள்ளபடி தான் ஞாபகமாம்.

 காலச்சுவடு கண்ணனுக்கும் சுட்டி காட்டினேன். அதோடு திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் 2005ல் நடந்த  காலச்சுவடு நிகழ்வில் கனிமொழி கருணாநிதி 
கவிதை வாசிக்க வந்திருந்தார். 
அந்த இலக்கிய கூட்டத்தில் நான் தான் 
அதிக நேரம் பேசினேன். 
அந்த கூட்டத்தில் பகீரங்கமாக 'இந்த தவறை அடுத்த பதிப்பில் திருத்த வேண்டும்'என நான் பேசினேன்.

May 22, 2020

ஏலி, ஏலி, லேமா சபக்தானி



முந்தைய நாள் மயங்கி விழுந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம் மருத்துவ மனையில் அடுத்த நாள் கண் விழித்த போது ஆறாத்துயருடன் வாய் திறந்து சொன்ன வார்த்தைகள்
'எனக்கு இப்படி ஆயிடுச்சே,
நான் புள்ளக்குட்டிக்காரன் '
இது தான் கடைசி வார்த்தை.  கோமாவுக்கு போய் விட்டார். மறு நாள் மறைந்தார்.

க.நா.சு இறந்த பின் அவருடைய மனைவியார் டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய போது        முன்றில் மா. அரங்கநாதனும், சா.கந்தசாமியும் மயிலாப்பூர் சென்று துக்கம் விசாரித்தார்கள்.
"நான் தூங்கிவிடக்கூடாது - தூங்கினால் போய் விடுவேன் " என்றும் தன் அம்மாவின் உருவம் தெரிகிறது என்றும் க. நா. சு கடைசியாகக் கூறினாராம்.

கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போது
தன்னிடம்  சொன்னதாக வசந்த் சொன்னது -
“ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”

பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்
பாலாவிடம் சொன்னாராம்: “என் கண்ணை கவனிக்கச் சொல்லி டாக்டரிடம் சொல். என் கண்ணில் தான் அடிபட்டிருக்கிறது. கண் தான் எனக்கு முக்கியம்...”

......

Dec 16, 2019

ச.து.சு யோகியார்



க.நா.சு. தன் 'இலக்கியச்சாதனையாளர்கள்'  நூலை
சமர்ப்பிப்பது கொஞ்சம் வித்தியாசமாக
காணிக்கை
“நான் தமிழில் எழுத ஆரம்பித்த காலத்தில்
எனக்கு மிகவும் நெருங்கிய தோழர்களாக இருந்து,
சில சமயம் எதிர்த்துச் சொல்லியும்
சில சமயம் ஆதரித்தும் உதவிய
நண்பர்கள் நினைவுக்கு
இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
அவர்களில் முக்கியமானவர்கள் என்று
நான் நினைப்பவர்கள்
சொ.விருத்தாச்சலம் என்கிற புதுமைப்பித்தன்,
ஏ.கே.ராமச்சந்திரன் என்ற கி.ரா,
ச.து.சு.யோகியார்”
‘குட்டி இளவரசன்’
அந்த்வான் செந்த் சமர்ப்பணம் அழகு.
நூலிலும் ச.து.சு.யோகியார் பற்றி க. நா. சு.  மற்றவர்களை விடவும் ஓரளவு சிறப்பாகவே சொல்கிறார்.
ஒரு நாலேகால் பக்கத்தில் அவரை பற்றி எழுதியுள்ள விஷயங்கள் யோகியாரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்படி இருக்கிறது.
1932லிருந்து 1960 வரையிலான காலங்களில் க.நா.சு அவரோடு பழகி நட்பு கொண்டிருந்திருக்கிறார்.

ச.து.சு. யோகி கவிஞர். பால பாரதி என அழைக்கப்பட்டவர்.
துறவி என்ற பிம்பம் இவருக்கு.

போலீஸ் வேலை பார்த்தவர்.
1930களின் ஆரம்பத்தில் ஈ.வெ.ரா. பெரியாரின் பாசறையில் இருந்தவர்.
இரு சகோதரர்கள் 1936ல் கே.பி.கேசவன், பாலையா, எம்.ஜி.ஆர் நடித்து வந்த திரைப்படம். இதற்கு யோகி தான் ஸ்க்ரீன் ப்ளே.
பின்னர் 1939ம் வருடம் ’அதிர்ஷ்டம்’ ச.து.சு.யோகி இயக்கத்திலேயே வெளி வந்த வெற்றிப்படம்.
நடிகர்கள் வி.வி.சடகோபன், டி.சூரிய குமாரி,
கொத்தமங்கலம் சுப்பு, கே.ஆர்.செல்லம்.
’அய்யா என் சிறு பெண் ஏழை என் பால்’ அதிர்ஷ்ம் படப்பாடல்
டி.சூரியகுமாரி பாடியது. யோகியே எழுதியிருந்தார்.
’கவிச்சக்ரவர்த்தி கம்பன்’ நூல் எழுதியவர்.
யோகியின் ’தமிழ் குமரி’ கவிதைத் தொகுப்பு ரொம்ப முக்கியமானது.
சிறந்த கவிதைத்தொகுப்பாம்.
அற்புதமான கவிதைகள் கொண்டிருந்திருக்கிறது.
காசில்லாக் கனகரத்தினம், மேரி மக்தலேனா, தமிழ்க்குமரி, ஜோதிச் சரிகை,கண்மணி ராஜம் போன்ற உன்னத கவிதைகள்.
கம்யூனிச எதிர்ப்பு கவிதைகள் ‘கம்மூனித் தெம்மாங்கு’ என்று எழுதினாராம். தெம்மாங்காக யோகியே பாடிக் கேட்பதை பற்றி க.நா.சு சிலாகிக்கிறார்.
ஒரு தாய் தாசி தன் மகளுக்கு சொல்லும் அறிவுரை ‘நற்றாயிரங்கல்’ காவியம். அதையும் அவரே பாடிக்காட்டுவார்.

யோகியின் அப்பா துரைசாமி ஐயர் ஒரு வக்கீல். அவரிடம் நன்கு ஆங்கிலம் கற்றார்.

இவருடைய மொழிபெயர்ப்புகள் உமர் கய்யாமின் கவிதைகள், அமெரிக்க கவி வால்ட் விட்மனின் Leaves of Grass.
மனிதனைப் பாடுவேன் என்று விட்மனின் அந்த படைப்பிலிருந்து பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இது இப்போது மீண்டும் பதிப்பில் வருவது அவசியம்.
ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.
கவிதை, இலக்கியம், மேஜிக், யோகம், சாஸ்திரம், மரபு எல்லாவற்றிலும் தடம் பதித்தவர். மேஜிக் நிபுணர். இதையே வாழ்வோபாயமாக சில காலம் கொண்டிருந்திருக்கிறார்.
திருமூலர் மரபில் 49வது தலைமுறையினனாக வந்த சித்தராக தன்னைப் பற்றி நம்பியவர்.
திருமூலர் திருமந்திரத்தில் அணுவை பிளப்பதற்கு விஞ்ஞான வழி சொல்லியிருப்பதாக ஒரு தீஸிஸ் சப்மிட் செய்து அரசாங்கத்திடம் இருந்து அந்தக்காலத்தில் ரெண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்.
திருமூலர் ஃபார்முலாவில் அணுவை பிளந்து காட்ட பத்து லட்சம் பட்ஜெட் போட்டு யோகி கவனப்படுத்திய போது, விஞ்ஞான நிலையத்தில் இருந்து பதில் ஏதும் இவருக்கு கிடைக்கவில்லை.
சிறுவனாக இருக்கும் போது ஊட்டியில் நடந்த பதினெண் சித்தர் கூட்டத்துக்கு யோகி கள்ளு வாங்கி வரும் பையனாக சேவை செய்தது பற்றித் தத்ரூபமாக வர்ணிப்பாராம்.
யோகியோடு பழகியதைப் பற்றி சிறந்த அதிர்ஷ்டம்  என்று க.நா.சு அபிப்ராயப்படுகிறார்.
”பலவிதங்களில் என் வாழ்க்கையும் மனமும் வளம் பெறுவதற்கு உதவியவர் ச.து.சு. யோகியார். தெரிந்து கொடுத்து உதவினார் என்று இல்லாமல் இருக்கலாம்; அவர் இருந்ததனாலே, அவரை அறிந்ததனாலேயே, தானாகவே என் வாழ்க்கை வளம் கூடியதாக நினைத்துப் பார்க்கும் போது தோன்றுகிறது.”
க.நா.சுவின் இந்த கனமான வார்த்தைகள்
பிரிட்டிஷ் இயக்குனரின் ”I Daniel Blake” படத்தின் வசனமொன்றை நினைக்கச் செய்கிறது.
“He gave us things that money cannot buy.”


Aug 30, 2019

What is precious, is never to forget


“I think continually of those who were truly great.” 

மிகவும் சிறப்பாக துவங்கும் இந்த கவிதையை எழுதிய ஸ்டீபன் ஸ்பெண்டர் இரண்டாம் முறையாக 1956ல் வந்த போது அவரோடு க.நா.சு. நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
டி.எஸ்.எலியட்டை தன் முன்னோடியாக நம்பியவர் ஸ்டீபன் ஸ்பெண்டர். ஜெர்மானிய யூத பூர்வீகம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலக் கவி.
 
I think continually of those who were truly great.

’எந்தரோ மஹானுபாவலு’ தியாக ப்ரும்மத்தின் ஸ்ரீராக கீர்த்தனை போன்றே தான் முதல் வரி.

ஸ்டீபன் ஸ்பெண்டரிடம் “ முதல் தடவையாக சென்னைக்கு வந்த போது உங்களை கவர்ந்த விஷயம் எது?” என்று க.நா.சு  கேட்ட போது அவர் பதில் “ மெரினா பீச்”

”இரண்டாவது சென்னையின் முக்கிய விஷயமாக அவர் எதைச் சொல்வார்” என்பது க.நா.சு கேட்ட இரண்டாவது கேள்வி.
ஸ்பெண்டர் பதில் : “போன தடவை நான் வந்த போது என் கூட்டங்கல் மூன்றுக்கு சற்றும் அழகில்லாத முகத்துடன் ஒரு வயசானவர் தலைமை வகித்தார். ஒவ்வொரு தடவையும் அவர் வாயைத் திறந்தபோது அழகான ஆங்கிலத்தில், மிகவும் அற்புதமாக, அறிவு தொனிக்கப் பேசினார். அவர் பெயர் நினைவில்லை”
க.நா.சு. அந்தப்பெரியவர் தான் இம்முறையும் ஸ்பெண்டரின் நிகழ்ச்சிகள் இரண்டிற்காவது தலைமை தாங்க இருப்பவர் என்று சொல்கிறார்.
அவர் ஹிண்டுவில் Defacto editor ஆக இருந்த நா.ரகுநாதய்யர். 

Truly Great. 
இவரைப்பற்றி தான் அந்த ஆங்கிலக்கவி பெருமையாக நினைவு கூர்ந்திருக்கிறார். 
Defacto editor? ஹிண்டு பத்திரிக்கையில் இப்படி ஒரு வேலை? defacto = Actual, Real.  Actual Editor! 
ஸ்பெண்டரின் கவிதையின் இரண்டாவது பேராவின் முதல் வரி
What is precious, is never to forget
ஸ்பெண்டருக்கு ஜெமினி ஸ்டுடியோவில் வாசன் ஒரு விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தின் போது ஆர்.பாஸ்கரன் என்பவர் ஸ்டீபன் ஸ்பெண்டரை சந்தித்திருக்கிறார்.
 பித்தப்பூ நாவலில் தியாகராஜன் என்பவரை முக்கிய  கதாபாத்திரமாக க.நா.சு. எழுதியிருப்பார்.
 தஞ்சை ப்ரகாஷ் வெளியிட்ட நாவல் பித்தப்பூ.
நாவலில் ஸ்டீபன் ஸ்பெண்டரும் வருவார். 

வாசன் ஔவையார் படம் போட்டு காட்டியிருக்கிறார். ஸ்பெண்டருக்கு முழு படமும் பார்க்க பொறுமையிருக்கவில்லை. வாசன் விளக்க முற்பட்டது பலன் தரவில்லை.
ஔவையார் பற்றி ஸ்பெண்டர்
“ Magical picture” என்று க.நா.சுவிடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்.  ரசிக்க முடியவில்லை. பாதி படத்தில் க.நா.சு.வுடன் பிடிவாதமாக கிளம்பி விட்டார்.
அப்புறம் ஆங்கில கவி பம்பாய்க்கு போன போதும் ஔவையார் விரட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஜெமினி வாசன் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படத்தை ஸ்பெண்டர் பார்க்கும்படி செய்து விட்டார்.
ஆனால் ஹிண்டு நா.ரகுநாதய்யர் was precious, was never to forget. Truly great. எந்தரோ மஹானுபாவலு, அந்தரிக்கி வந்தனமு.

க.நா.சுவையும் ஸ்பெண்டரால் மறந்திருக்க முடிந்திருக்காது. 




Jul 9, 2019

வாலாஜா ரோடு மாடி போர்ஷன் வீடு


க.நா.சுவின் ’இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் உள்ள கட்டுரைகள் படிக்க மிகவும் சந்தோஷம் தருபவை.
எப்படியோ ந.பிச்சமூர்த்தி பற்றி இதில் எழுதாமல் விட்டிருக்கிறார்.
சி.சு செல்லப்பாவை வேண்டும் என்றே தான் தவிர்த்திருப்பார்.
1985ல் இருந்து எத்தனை தடவை இந்த நூலை நான் வாசித்திருக்கிறேன்.

முதுமையில் குங்குமத்தில் தொடராக எழுதப்பட்ட கட்டுரைகள். எவ்வளவு ஆளுமைகள் பற்றி சின்ன சின்னதாக பேசுகிற தொனியிலேயே எழுதியிருக்கிறார். ஆராய்ச்சிக்காரனும், கல்வித்துறையாளனும், செக்குமாட்டு விமர்சகனும் ’இதில க.நா.சு. என்னத்த எழுதிட்டாரு. பொறுப்பே இல்லாத எழுத்து. தன்னப்பத்தியே எழுதியிருக்காரு. ஆளுமைகள பத்தி கூட தெளிவில்லாம சொல்லியிருக்காரு’ என்று கால் மேல கால் போட்டு, கண்ண விரிச்சி, உதட்ட பிதுக்கி தலைய ரெண்டு பக்கமும் ஆட்டுவான்.
இது பொக்கிஷம் என்பேன்.
பி.ஸ்ரீ.ஆச்சாரியா கிருஷ்ணன் நம்பியின் மாமா. அப்பாவின் சகோதரியின் கணவர்.

பி.ஸ்ரீ ஆச்சாரியா பற்றி அவர் எழுதியதை மீண்டும் நேற்றிரவு வாசித்துக்கொண்டிருந்தேன்.
வெள்ளக்காரன் காலத்தில் ஆச்சாரியா போலீஸ்காரர். அரசு ஆணையின் பேரில் பாரதியாரை ஃபாலோ செய்து, அவர் பிரசங்கங்கள் பற்றி சர்க்காருக்கு ரிப்போர்ட் செய்தவர்.
தமிழ் பண்டிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு மக்களுக்குக் கிட்டாததாக இருந்ததை, பத்திரிக்கை வாயிலாக எல்லோருக்கும் விளங்கும்படியாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தவர்களில் முதலாமவர் பி.ஸ்ரீ.ஆச்சாரியா தானாம். அவருடைய கம்ப சித்திரம் ஆனந்தவிகடனில் தொடராக வந்து பின் நூலாகி மதிப்பும் கவனமும் பெற்றதாம்.
பி.ஸ்ரீ.ஆச்சார்யா எழுதிய ஸ்ரீராமானுஜர் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது பற்றி க.நா.சு. முதல் தடவை ஒரு இலக்கிய நூலுக்கு கொடுக்கப்பட்டதாக திருப்தி தெரிவிக்கிறார
(1965ல் பி.ஸ்ரீக்கு சாஹித்ய அக்காடமி விருது கிடைத்தது)
பி.ஸ்ரீ. 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார் என்று எழுதியிருப்பதைப் படித்தவுடன் என் பார்வைக்கு மட்டும் சில விஷயம் கவனப்பட்டது.
ஒரு நூலை அடுத்தடுத்த கால கட்டத்தில் மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கும் போதும் புதிய விஷயங்கள் புலப்படும்.

ந.முத்துசாமியுடன் அவருடைய கடைசி மூன்று வருடங்கள் நெருங்கி பழகியவன் என்பதால் அவர் மூலம் எனக்கு தெரிய வந்த விஷயங்கள் ’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற வரியில் ரொம்ப கனமானது.
இந்த வரியை வேறெவரும் சுலபமாக கடந்து செல்வார். ராஜநாயஹத்தால் முடியவில்லை.
Reading is a multi-faceted process.
க.நா.சு. குடியிருந்த அந்த வீட்டுக்கு தான் க.நா.சுவுக்கு பின் முத்துசாமி மாட்டாங்குப்பத்தில் இருந்து குடியேறியிருந்திருக்கிறார்.
க.நா.சு. சென்னையில் இருந்து பின்னால் ராஜி மாமியுடனும் மகள் ஜமுனாவுடனும் (பின்னால் இவர் தானே பாரதி மணியின் மனைவி) டெல்லிக்கு போகும்போது முத்துசாமியை அந்த வீட்டில் குடியமர்த்த ஏற்பாடு செய்திருக்கிறார்.
க.நா.சு வின் அயலார் ஒரு சாஸ்திரி. கீழ் வீட்டில் குடியிருந்த சாஸ்திரிக்கு க.நா.சு.வின் நடவடிக்கைகள் அவ்வளவு சிலாக்கியமாக தெரிவதில்லை. அனாச்சாரமாக தோன்றியிருந்திருக்கிறது.
முத்துசாமி மீசையை திருகி விட்டுக்கொண்டு மாடி போர்ஷனுக்கு குடி வந்த போது இவர் காது படவே சாஸ்திரிகள் “ஒரு சூத்திரன் போனான். இன்னொரு சூத்திரன் வந்திருக்கான்” என்று சலிப்பாக சொல்லி தன் அதிருப்தியை வெளியிட்டிருந்திருக்கிறார்.
க.நா.சுவின் கட்டில் ஒன்றை முத்துசாமிக்கே கொடுத்து விட்டார். அந்த கட்டில் சென்ற வருடம் வரை இங்கே இப்போது கூத்துப்பட்டறை வீட்டில் இருந்தது. அதை காட்டி முத்துசாமி ‘இது க.நா.சு கொடுத்த கட்டில்’ என்று பல முறை காட்டியிருக்கிறார்.
இங்கே அய்யப்ப நகர் வீட்டுக்கு 1987ல் சொந்த வீட்டுக்கு குடி வரும் வரை அந்த திருவல்லிக்கேணி வாலாஜா ரோடு மாடி வீட்டில் தான் முத்துசாமியும் மாமியும் குழந்தைகளாய் அப்போது இருந்த நடேஷ், ரவி இருவருடனும் இருந்திருக்கிறார்கள். சென்னை வாழ்வின் கணிசமான பகுதி அந்த வாலாஜா ரோடு மாடி போர்ஷன் வீட்டில் தான்.

க.நாசுவுக்கு பின் முத்துசாமி அந்த வீட்டில் குடியிருந்த போது அங்கே மௌனி வந்திருக்கிறார். முத்துசாமியை பார்க்க வந்தவர் நடேஷ் சிறுவனாக ஓவியம் வரைவதை பார்த்து ரசித்திருக்கிறார். 
அசோக மித்திரன் வரும்போதெல்லாம் ஒரு மாங்காய் கொண்டு வந்திருக்கிறார். மாங்காய் பிராமணர்.
 பிரமிள் அடிக்கடி வந்திருக்கிறார். அவர் குண இயல்பு படி வம்பு வளர்த்து முத்துசாமியிடம் மனஸ்தாபம் ஆகியிருக்கிறார்.

’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற ஒரு செய்தி தான் எவ்வளவு விஷயங்களை மேலெழுப்புகிறது.








May 9, 2019

கு.அழகிரிசாமி


”கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை தனித்தனியாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது படித்துப் பார்த்தபோது அவை அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது, சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல் ‘ஐயோ!’வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது” என்று க.நா.சு 1959லேயே மலைத்துப் போயிருக்கிறார்.

நகுலன் “அழகிரிசாமியின் கதைகள் மனநிலைகளை நுணுக்கமாக விவரிப்பதிலும் சௌந்தரிய உணர்ச்சியின் பரிணாமத்தையும் உள் வளைவுகளையும் தாங்கியிருப்பதிலும் இவ்வளவு இருந்தும் பிரத்தியட்ச உலகின் தொடர்பு அறாமலிருப்பதிலும் நம்மைக் கவர்கின்றன, ஆனால் கு.அழகிரிசாமி கலையைப் புரிந்துகொண்டு அனுபவிப்பதற்கு வாசகனும் நுண்ணுணர்வு பெற்றவனாக இருக்கவேண்டும்.”
மேலும் நகுலன் 1961ல் சொன்னார் “ புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, இவர்களுடன் உடன் வைத்துப் பேசக்கூடிய தகுதி வாய்ந்தவர் கு.அழகிரிசாமி. சொல்லப்போனால் இக்குறிப்பிட்ட ஆசிரியர்களின் சாயை அழகிரிசாமியிடம் ஒரு நூதன ரூபமெடுத்திருக்கின்றன. இவர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து நிற்கும் ஒரு பண்பும் கலைத்திறனும் அவருடைய கதைகளுக்கு உண்டு. அவருடைய கதைகளை ஒருமுறைக்கு இரு முறையாக படிப்பவர்களுக்கு சௌந்தரிய உணர்ச்சி என்பதன் தனி அர்த்தம் தெளிவாக விளங்கும்.
கதைத்தொகுதிகளை இன்று மூன்றாவது முறையாகப்படிக்கும் போது வட்டமிடும் உணர்ச்சி என்னவென்றால் அவர் கதைகளில் காணப்படும் ஒரு நூதனமான ’நகைச்சுவை’. விளக்கமாகச் சொல்லப்போனால் அவருடைய கதைகளுக்கெல்லாம் அர்த்தம் கொடுப்பது ஒரு தனிவிதச் சிரிப்புத்தன்மை. ஆனால் அவரை நாம் ஒரு பொழுதும் ஒரு நகைச்சுவை ஆசிரியராகச் சாதாரணமான அர்த்தத்தில் கருத முடியாது. ஒரு மேல்நாட்டு ஆசிரியர் ஆனந்த பாஷ்பத்தின் அடித்தளத்தில் நாம் துக்கக் கண்ணீரின் உலர்ந்த சுவட்டைக் காணலாம் என்று சொன்னார். அந்த அர்த்தத்திலும் நாம் அழகிரிசாமியின் நகைச்சுவைக்கு வியாக்கியானம் அளிக்க முடியாது. இதைச் சற்று வார்த்தைகளில் விவரிப்பது கடினம் தான்.”
அழகிரிசாமி செய்த ஒரு சபதம் “குழந்தைகளை அடிக்க மாட்டேன். கம்ப ராமாயணத்தின் மீது சத்தியம்.”
அவருடைய பிள்ளைகள் அதிர்ஷ்டக்காரர்கள். சாரங்கன் தன் அப்பா கையால் அடிவாங்காத மகன். கம்பராமாயணத்தின் மீது சபதம்.

அழகிரிசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர். He was having some strong likes and dislikes. மௌனியையும் லா.ச.ராவையும் சுத்தமாக பிடிக்காது. இவர்கள் இருவரும் எழுதியவை கதைகளாகவே தனக்குத்தோன்றவில்லை என்று கடுமையாக பேசினார்.
அழகிரிசாமி சிறுகதைகள் முழு புத்தகமாக பதிப்பாசிரியர் பழ அதியமான் அவர்களின் சீரிய முயற்சியில் காலச்சுவடு வெளியீடாக எட்டு வருடங்களுக்கு முன் வந்திருக்கிறது.


அழகிரிசாமியின் சில கதைகள் படித்து எவ்வளவு காலம் ஆனாலும் கூட சட்டென்று சிரமமின்றி நினைவின் மேலெழும்பி வரக்கூடியவை.
திரிபுரம், அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், திரிவேணி, குமாரபுரம் ஸ்டேசன்,சுயரூபம் ஆகிய கதைகள். சில கதைகளை குறிப்பிடுவதால் கொஞ்சம் நல்ல கதைகள் தான் போல என்று யாருமே எண்ணி விட வேண்டாம்.
கி.ராவுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் காட்டும் உலகம்.

கு.அழகிரி சாமி இசையறிஞர் விளாத்திகுளம் சுவாமிகளைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார்!"
இதே போல கு.அழகிரி சாமி ரசிகமணி டி.கே.சி யைப் பார்த்தவுடன் உடனே,உடனே சொல்லியிருக்கிறார் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார்!"
 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இப்படி அழகிரிசாமி பற்றி கி.ரா. நினைவில் இருந்து அள்ளித் தெளிக்கும் விஷயங்களை கேட்கும்போது அவரை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் தான் ஏற்படும்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.
அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார்.ஆறு மாதமாக தரவேயில்லை.
அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.
நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். முகம் விளங்கவில்லை. புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. “நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்.” என்று சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு நன்றி சொல்லாமலே திரும்பிச் சென்று விட்டார்.

Feb 23, 2017

இன்றைய அரசியல் - நேற்றைய இலக்கிய அரசியல்


சில நாட்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் தலைவர் அப்பர்... ச்சே....சுந்தரரா..சம்பந்தரா.. இல்ல..இல்ல... திருநாவுக்கரசர்
ஒரு பெரிய சந்தேகத்திற்கு விடை சொன்னார்.
”டி.டி.வி தினகரனை அதிமுக துனணைப் பொதுச்செயலாளராக்கியதில் சசிகலாவின் குடும்பத்தலையீடு இல்லை”
”நண்டு வளையில நானும் தான் இருக்கேன்”னு என்ன ஒரு சீர்த்தன்மையோடு மூக்கை நுழைத்து சொன்னார்!
திருவிளையாடல் தருமி : ” ”ஐயோ! ஐயோ! ஆயிரம் பொன்னாச்சே! எனக்கு கிடையாது.. எனக்கு கிடையாது...வேற எவனோ...வேற எவனோ அடிச்சிட்டுப் போகப்போறான்...”
வைகோ, திருநாவுக்கரசர் இருவருமே அதிமுக விற்கு செய்யும் சேவை பற்றி நினைக்கும் போது தியாகப்பிரம்மத்தின் பிலஹரி ராக கீர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது.
“ தொரகுணா இட்டுவண்டி சேவா”
........................................

இலக்கியம் நம்மை எங்கேயும் கொண்டு போய் சேர்க்காது என்பது தனக்கு அப்போது புரிந்ததாக,எப்போதோ ரொம்ப வருடங்களுக்கு முன் ஜெயமோகன் எழுதிய விஷயம் ஒன்று ஞாபகம் வந்தது.
சி.சு செல்லப்பாவை சந்திக்க போனபோது நடந்ததாக.
ஜெயமோகனிடம் கோபத்துடன் செல்லப்பா சொன்னாராம்
“க. நா.சு உடனடியாக கழுவிலே ஏற்றப்பட வேண்டிய தீய சக்தி”
ந.முத்துசாமியிடம் இதை நான் ஒரு உரையாடலின் போது சொன்னேன். செல்லப்பாவின் இயல்பு அவருக்கு நன்கு தெரியுமாதலால் உடனே மிக அழகாக சொன்னார்.
”அவருக்கு தான் கோபமாய் பேசுபவை வெறும் வார்த்தைகளாக இருந்திருக்கிறது.இந்த வார்த்தைகளில் உள்ள ’வயலன்ஸ்’ செல்லப்பாவுக்கு புரியல.”

Feb 21, 2016

Not every friendship is meant to last a lifetime


’வால்மீகத்தில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்வார்கள், நட்பு கொண்டாடுவது லேசு – அதைப் பரிபாலனம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை’ என்று கி.ரா எங்கோ, எப்போதோ எழுதியிருந்தார்.

”புது சினேகம் என்பது சரியாக வேகாத சோறு போல” என்பார் தி.ஜானகிராமன்.

”நாய் கிட்ட கொஞ்சம் பழக ஆரம்பிச்சா மூஞ்சிய நக்குமாம்” – இது ’என் தங்கை’ படத்தில் வேலைக்காரியாக நடிக்கும் எம்.என்.ராஜம் பேசும் டயலாக். எம்.ஜி.ஆர், ஈ.வி.சரோஜா, நரசிம்ம பாரதி நடித்த படம் ’என் தங்கை’.

கூடா நட்பு என்பது கிடக்கட்டும்.
நல்ல நட்பு எல்லாம், நல்லவர்கள் நட்பு எல்லாம் கூட எப்படி எப்படியோ சிதைந்து போய் விடுகிறது.



கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் (’கசடதபற’ பத்திரிக்கைக் காலம்) ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமி, அசோகமித்திரன், எஸ்.வைத்தீஸ்வரன் ஆகிய ஜாம்பவான்கள், இன்னும் பலரும் கூடி பேசுவது வழக்கம்.
ஞானக்கூத்தனும் ந.முத்துசாமியும் மாயவரத்திலேயே வகுப்புத் தோழர்கள். அசோகமித்திரனின் ’தண்ணீர்’ நாவலுக்கு முத்துசாமி சார் முன்னுரை எழுதியிருக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் “ ஜெயகாந்தன், கே.பாலசந்தர் இருவருமே பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சு” என்று எழுதியிருந்தார்.

ஒரே ஒரு முறை ஞானக்கூத்தன் அறைக்கு வந்த ஜெயகாந்தன் சீற்றத்துடன்
 “ வெங்கட் சாமிநாதன் என்ன பெரிய சுன்னியா?” என்று கொந்தளித்து விட்டுப் போய் விட்டார். அப்போது ந.முத்துசாமி அங்கு இல்லை. மறு நாள் அங்கு வந்த முத்துசாமி “என்னய்யா? அந்தாளு இப்படி இங்க வந்து பேசிட்டுப்போயிருக்காரு. இத தட்டிக்கேக்காம விட்டிட்டீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
 முத்துசாமி சாரின் ஆதங்கம் - ‘ஒரு ஸ்டார் வந்தவுன்ன எல்லாரும் விழுந்துட்டாங்க.. சாஸ்டாங்க நமஸ்காரமே பண்ணிட்டாங்க!’

இதில் ஆரம்பித்த Polimics! சங்கிலியாய் தொடர்ந்த கடும் சர்ச்சையில் வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், ந.முத்துசாமிக்கு இடையிலான நல்ல நட்பு முற்றிலுமாக அன்று முறிந்து போய் விட்டது.

என்ன? ஏது என்பதெல்லாம் முத்துசாமி சாருக்கு இன்று ஞாபகம் இல்லை.



சில வருடங்களுக்கு முன் வெ.சா.வின் மனைவி இறந்த விஷயத்தைக்கூட தனக்குச் சொல்லவில்லை என்று முத்துசாமி வருத்தப்பட்டார்.
செல்லப்பாவின் ’எழுத்து’பத்திரிக்கையில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகள் மூலம் தான் ’நாடகம்’ பற்றிய தெளிவு தனக்கு ஏற்பட்டதாக  இப்போதும் சொல்பவர் முத்துசாமி.

 இப்போது சமீபத்தில் சென்ற நவம்பரில் வெங்கட் சாமிநாதன் மறைந்த போது கூத்துப்பட்டறையில் டிசம்பர் மாதம் ஒரு இரங்கல் கூட்டத்திற்கு முத்துசாமி சார் ஏற்பாடு செய்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணன் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் சென்னை வெள்ளத்தில் இந்த இரங்கல் கூட்டமும் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கூட்டம் நடத்தமுடியாமல் போனதில் முத்துசாமி சாருக்கு மிகவும் வருத்தம்.
Not every friendship is meant to last a lifetime. What does 
last forever is the pain when that person is gone.

’அசோகமித்திரனுடன் சமாதானமாகப்போக வழியில்லையா?’ என்று ஏக்கத்துடன் முத்துசாமி சாரிடம் கேட்டேன்.
முத்துசாமி சார் பதில் ’நாங்க இப்ப என்ன சண்டையா போட்டுகிட்டிருக்கோம்? நட்பு கெட்டுப்போச்சி… பேச்சு வார்த்தை கிடையாது.. அவ்வளவு தான்.’
………………………….



’நடை’ பத்திரிக்கை 1960களின் கடைசியில் சி.மணி செலவு செய்து நடத்தினார். மிக பிரமாதமான வடிவில் வெளி வந்தது. முத்துசாமி சாரின் ‘காலம் காலமாக’ நாடகம் 1969ல் நடையில் தான் பிரசுரமானது.
 எட்டு இதழ்கள் தான் வந்தது.
 நடை எட்டாவது இதழில் இதழின் வெற்றுத்தாள்களை நிரப்ப அந்த நேரத்தில் ஏதோ ஒரு content ஐ போட்டார் முத்துசாமி. வி.து.சீனிவாசன் எப்படி இந்த மாதிரி செய்யலாம் என்று பிரச்னையை கிளப்பி விட்டார்.
சி. மணி நடை பத்திரிக்கையையே நிறுத்தி விட்டார்.
சி.மணி இறக்கும் வரை முத்துசாமியுடன் நட்பு நீடித்திருக்கிறது.
.......................


27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தேன். சி.மணி தன்னுடைய ‘வரும் போகும்’ கவிதைத்தொகுப்பில் கையெழுத்திட்டு தந்தார்.

2003ல்திருச்சியில் இருந்து திருப்பூருக்கு போக நேர்ந்த போது ‘ பார்த்துப் பார்த்து சேர்த்திருந்ததெல்லாம் கழுதைப்பொதியாக சேர்ந்திருக்க, லக்கேஜை குறைக்க வீட்டின் கொல்லையில் பழைய கணையாழி, நடை, கசடதபற, ஞானரதம், ’மேலும்’ இதழ்களையெல்லாம் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் ஜாமான்கள் ஏற்றிய வேனில் குடும்பத்துடன் கிளம்பினேன். திரும்பிப்பார்த்தால் இலக்கிய இதழ்கள் எல்லாம் குழந்தைகள் போல ”எங்களை விட்டு விட்டுப்போகிறாயே” என்று கதறுவது போல காதில் கேட்குமே.
Sometimes you have to let go of what you can't live without.

சென்னைக்கு சென்ற செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் வர நேர்ந்த போது ஒரு ஆயிரம் புத்தகங்கள்,
காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸில் இருந்த நூற்றுக்கணக்கான கர்னாடக சங்கீத, இந்துஸ்தானி சங்கீத இசை கேசட்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு கிளம்ப நேர்ந்து விட்டது.( " தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர் ராஜநாயஹம்” என்று கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி’பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.)

You never really know a man until you stand in his shoes and walks around in them
- a popular quote of Atticus in " To kill a mocking Bird "
( 1962 movie)


க. நா.சு சொல்வது போல “எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.”

……………………………………………………………………

 http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_13.html

Apr 30, 2015

Cock a snook at Mother




 அல்டாப்பு வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர் "தாய்"!  எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.
 ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப் ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில் கொஞ்சம்  கேப் கிடைத்த போது “இந்த ‘தாய்’ பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..” 

ஜெயகாந்தனோ வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த  ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன் படிக்கிறீங்க?”
.............................

‘அம்மா வந்தாள்’ நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.
‘மோகமுள்’ நாவலை பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை. 

டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த தலைப்பின் வக்கிரம் புரியும்.
.....................

ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - "Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions. 

..............................................


த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board.  படம் பார்க்கும்போது அதில் ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis, During  the second world war!