Share

Showing posts with label கவிஞர் ராஜசுந்தரராஜன். Show all posts
Showing posts with label கவிஞர் ராஜசுந்தரராஜன். Show all posts

Oct 29, 2009

பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!



எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !




..

Sep 11, 2009

ஹைக்கு

ஹைக்கு கவிதைகளை அந்த காலத்தில் ஆடு புழுக்கை மொத்தமாக போடுவது போல நிறைய பேர் மொத்த மொத்தமாக போட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
பொதுவாகவே கவிதை என்று எப்போதும் ஆடு புழுக்கை போடுவது போல தான் இப்போது கூட மொத்த மொத்தமாக பலரும் போடுகிறார்கள் என்பது வாஸ்தவம் தான். பல கவிதை தொகுப்புகளை பார்க்க நிர்பந்தம் ஏற்படும்போதெல்லாம் 'ஆட்டுபுழுக்கைகள்' ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் ஏனோ சுய தரிசனமாக, சுய விமரிசனமாக 'ஆட்டு புழுக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு கூட இன்று வரை வெளியானதில்லை.
ஹைக்கு சில பல நல்ல படி தேறியிருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் கணையாழியில்( ஆகஸ்ட் 1969) சந்திரலேகாவின் ஹைக்கு கவிதைகள் இரண்டு :
1. தென்னை ஆடுகையில்
தேங்காய்க்குள்ளே
சிற்றலை நெளியுமோ ?
2 . செங்கிரீடம், ராஜ கம்பீரம்
சேவல் ஏறுது குப்பை மேட்டில் .
......
ஆத்மாநாமின் இந்த கவிதை ஹைக்கு தானா ? அல்லது ஹைக்கு நான்கு வரியில் வரக்கூடாதோ?
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின் பற்றாது
வண்ணத்துப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன
..
ராஜ சுந்தரராஜன் ஹைக்கு கவிதை . தலைப்பு 'விட்ட குறை '.
மண் மீது ஒரு பறவைப் பிணம்
மல்லாந்து நோக்குது
வானை .
இவருடைய ' பரஸ்பர ஆதாயம் ' கவிதை
காக்கைகள் கொத்த
எருமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்

Aug 6, 2009

கவிஞர் ராஜசுந்தரராஜன்

rajasundararajan said...
Dear Rajanayahem,
Your length of writing was very convenient to me, for I was using only office computer. Incidentally, I had been given compulsary retirement by 15th April. Yet, I am sad to know about your problem. Let us hope you get your opening very soon. Like you, I too maintain my pen name as it is modified by Pramil.
Take care.
Rajasundararajan
Monday, 06 April, 2009
...


வியாழக்கிழமை 06.08.09

'ஒரு இடைவேளை ' என்ற என் பதிவுக்கு வந்த மேற்கண்ட பின்னூட்டம் நான் எதிர் பாராத ஆச்சரியம் .
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் பின் பகுதியில்' உயிர் மீட்சி ' என்ற அழகான தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு . சுந்தர ராமசாமியின் அற்புதமான முன்னுரையுடன் . கவிஞர் ராஜசுந்தரராஜன் கவிதைகள் .
சட்டென்று நினைவுக்கு வருவது :

" சிறகுகள் சிறைப்படவில்லை .பறக்க முயன்றேன் . முடிய வில்லை .
கால்கள் கணனிக்குள் "


" வான பரியந்தம் உயர்ந்து நிற்கும் கோபுரத்தில் ஏறி நின்று
'இல்லை' என்று கைவிரிக்கும் சிலுவை "

ஒரு கவிதை 'ஓவியம் தீட்டும் தூரிகையால் ஒட்டடை எடுக்கக்கூடாதா ?' என வினவியது நிழலாடுகிறது .
அந்த நேரம் ராஜசுந்தரராஜனின் பல கவிதைகள் எனக்கு மனப்பாடம் . இப்போது சுந்தர ராமசாமி யின் ஒரு வார்த்தையில் சொல்வதானால் " நினைவின் ஞாபக அடுக்குகளில் காலத்தின் பனிக்கட்டி !"

என் வாழ்வில் நான் சந்திக்க முடியாமலே போன புனிதர் " ராஜ மார்த்தாண்டன் ". என்னுடைய துரதிர்ஷ்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று . ராஜ மார்த்தாண்டன் கொண்டாடிய கவிஞர் ராஜசுந்தரராஜன் என்பதும் இப்போது நினைவுக்கு வருகிறது .

மேற்கண்ட ராஜசுந்தரராஜனின் பின்னூட்டம் சொல்லும் விவரங்கள் கூட விஷேசமானவை தான் . அவருக்கு ராஜநாயஹம் ப்ளாக் வாசிக்க ' length of writing 'சௌகரியமாக உள்ளது . அலுவலகத்தில் கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறார் . சொந்த சோகத்திலும் எனக்கு ஆறுதல் சொல்கிறார் . என்னையும் அவருடன் ஒப்பு நோக்குகிறார் .பிரமிள் தான் இவர் பெயரையும் மாற்றியிருக்கிறார் .



பரண் மீது ஏறி " உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை தேடி துழாவி எடுக்கப்போகிறேன் .
....
சனிக்கிழமை 08.08.09
கண்டேன் "உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை ! பரணில் இருந்து கண்டெடுத்து விட்டேன் !!
நன்றி ஆறுமுகம் சார் ! உயிர் மீட்சி கவிதைகளை நீங்கள் அனுப்பவேண்டியதில்லை .தங்கள் நல்லெண்ணம் என்னை நெகிழ்த்தியது .
ராஜசுந்தரராஜனின் " உயிர் மீட்சி" யினில் மீண்டும் முக்குளித்தேன் . ஒவ்வொரு புத்தகமும் மீண்டும் புரட்டும்போது முன்பு புரட்டிய காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து தந்து விடுகிறது . இந்த உணர்வு இறுக்கம் கூட ரசிக்கத்தகுந்தது தான் .
சு.ரா முன்னுரையில் குறிப்பிடும் கவிதை
" வறட்சி "
வானுக்கு இல்லை இரக்கம் . பூமிக்கு
வெய்யில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடை சொல்லி த்துக்கித்து இருக்கிறது வீதி .
அடி உறைகளும் ,கிணற்றுக்குள்
வாய் வறண்டு சுருண்டு விட்டன .
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில் ?
கறங்கு வெள் அருவி
கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை .
..
என் நினைவில் நிழலாடிய அந்த ஒட்டடை தூரிகை கவிதை
பயன்பாடு
ஓவியம் எழுதவோ தூரிகை -
ஒட்டடை அடித்தால் என்ன ?
வீணையின் நரம்பைத்
துணியுலர்த்தும் வேலைக்கு எடுத்தால் என்ன ?
எழுத்துக்கள் சொல்லாகி ப்பொருள் குறித்தல் விடுத்துப்
பார்வையை நிறுத்து க்காட்டும்
படிக்கற்கள் ஆகிறதை கண்டேன்
கண் மருத்துவமனையில் .
இந்த கவிதை "சிதம்பரம் நடராஜன் கால் உயர்த்துவது கொசு கடித்ததால் கூட இருக்கும் !" என்று சொன்ன க. நா .சு வை ஞாபகப்படுத்துகிறது . கவிதை அதிர்ச்சி !! எழுத்துக்கள் பொருள் குறிக்காமல் படிக்கற்களாகும் கண்மருத்துவமனை யதார்த்தம் !


கீழ்க்கண்ட இரு கவிதைகள்(வீடு ,துண்டிப்பு ) அந்த காலத்தில் நான் கவி மனதை தரிசித்த அனுபவத்தை தந்தது என்பதை சொல்ல வேண்டும் . பாரதியின் பரந்த மனசு உண்மைக்கவிஞனிடம் இயல்பாய் நேர்த்தியாய் வெளிப்படும் . கவிஞன் ஓரு பொன்மனச்செம்மல் .தமிழ் கவி பாரதி சுந்தர தெலுங்கினில் பாட்டிசைக்க விரும்பினான் . தன்னுடைய வறுமை நிலையிலும் சிங்க மராட்டியர் தம் கவிதைகளுக்கு சேர நாட்டு தந்தங்களை பரிசளிக்க வேண்டி ஏங்கினான் ! பரந்த தாராள மனதுடன் " காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று குதூகலித்தான் !
ராஜ சுந்தர ராஜன் காக்கையையும் அடைக்கலாங்குருவியையும் தன்னுடைய குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார் .
வீடு
வீடொன்று வேண்டும்
வெயிலையோ மழையையோ
பகைப்பதற்கு அல்ல .
காக்கையும் கூடு கட்டும் முட்டையிட
..
துண்டிப்பு
மழை இல்ல தண்ணி இல்ல
ஓரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்ல
அடக்கலாங்குருவிக்கு
கூடு கட்ட என் வீடு சரிபடல
நான் ஒன்டியாத்தான் இருக்கேன் இன்னும் .


இந்த கவிதைகளை எழுதிய தங்க மனம் தன்னுடைய 'கட்டாய வேலை ஒய்வு 'சூழலிலும் ராஜநாயஹம் ப்ளாக் எழுதமுடியாமல் போன சூழலை எண்ணி வருந்தியது இயல்பான விஷயம் தானே !