Share

Showing posts with label நீலமணி. Show all posts
Showing posts with label நீலமணி. Show all posts

Mar 1, 2013

கவிஞர் நீலமணி



கவிஞர் நீலமணி 1936ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர்.
பாரதிக்கு தாசன் சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். சுப்புரத்தின தாசன் தான் சுரதா. கவிஞர் சுரதாவை ஆதர்சமாகக் கொண்டு கவிதை எழுதத் துவங்கிய நீலமணியை 1971ல் புதுக்கவிதைக்கு கொண்டு வந்தது ‘கசடதபற’ சிற்றிதழ்.
இவருடைய “தீர்க்கரேகைகள்” என்ற கவிதைத்தொகுப்பு கோமண சைசில் 3 ரூபாய்க்கு சிவகெங்கையிலிருந்து கவிஞர் மீராவின் அகரம் வெளியீடாக வெளி வந்தது.
“உங்கள் கவிதைகளில் நல்ல பஞ்ச் விழறது.ஹைக்கூவெல்லாம் படித்திருக்கிறீர்களா?”
-”இல்லை. என்னைப் பாதிக்கும் நிஜங்களையே கவிதையாக்குகிறேன்.”

”உங்கள் இசம் ?”

-    “ மாமிசம். மனிதனுக்கு எஜமானாகி விடும் எந்த இசமும் என் மரியாதையை இழக்கிறது.”
இப்படி சொன்னவர் நீலமணி.

இவர் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களாக அந்த ’கோமண சைசு’ தொகுப்பில் சில வரிகள் இடம்பெற்றிருந்தன.
‘டிராகுலாவின் இராக்காலச் சிந்தனைகள்’
‘மனிதாபிமானமற்ற ஒரு குரூரத்தன்மை கவிதைகளில் பதுங்கிக் கிடக்கிறது.’
‘இவை கவிதைகளே அல்ல.’
‘இவர் கவிதைகள் தனியாகத் தெரிகின்றன’
‘பொதுவாக இவர் அசிங்கங்களை அழகாக்கிப் பேசுகிறார்’
‘ a predominant element of irony, a stinging satire and a ‘hell with you’ nonchalant spirit’
இங்கனமெல்லாம் அபிப்பிராயம் கொண்ட விமர்சகர்கள் யாரென்ற குறிப்பு ஏதும் தொகுப்பில் இல்லை.
ஆனால் சுஜாதா அவருக்கேயுரித்தான தோரணையில் நீலமணி கவிதை பற்றி அன்று அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறார்.
வள்ளல் பாரி பற்றி ‘நடந்த மக்களின் தோள் மீதேறிய சிவிகைச் செல்வர் செலுத்திய வரியால் உருவான தேரை முல்லைக்கொடிக்கு நிறுத்தியன்’ என்கிறார்.
‘ காபரேக் காரியைக் கட்டிக்கொண்டேன்.
மியூசிக் இன்றி அவழ்க்க மறுக்கிறாள்’

‘பாதி மதித்-தலைப் பரமன் படைத்த உலகம்
வேறே எப்படி இருக்குமாம்?’

‘ வண்டோடு சம்போகம் செய்து விட்டுக்
குளிக்காமல் கடவுள் தோளேறும் மாலைப் பூ.’

’நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள் வற்புறுத்துகின்றன: வாயேன்.’

‘தட்டினால் திறப்பாராம் தாராளக் கடவுள்
சாத்தி வைப்பானேன்?’

‘உடைந்த வளைகளும் நசுங்கல் மலர்களும்
உன் காதல் கதையைச் சொல்லலாம்; ஆனால் –
உடையவே வளைகளா? நசுங்கவே மலர்களா?’

”ஒண்டுக் குடித்தனகூண்டுக் குடும்பி
கண்டு பிடித்தது
ரப்பர் வளையல்”

’கண்ணீரைப் படைத்தது கடவுளின் தவறா?
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல் அழுது வடிக்கும் மனிதனின் தவறா?’

‘செத்துப் படமாகுமுன்
சட்டத்துள் வாழ்வது
எளிதில்லை யார்க்கும்’

’கங்கா- உனது நீர் அமிழ்தென்றால்
உன் முதுகின் மேல்
பிணங்கள் மிதப்பதேன்?’

‘ என்ன வரம் வேண்டும் என்கிறார் கடவுள்.
அது தெரியாத நீர் என்ன கடவுள்?’
இந்தக்கவிதை அவன் – இவன் படத்தில் வசனத்தில் (நீலமணி கவிதையாக இல்லாமல்!) இடம் பெற்றது. என்னுடைய ‘சொர்க்கம் கைலாசம்’ 2008 நவம்பர் பதிவில் இக்கவிதையை நீலமணியின் கவிதையாக மேற்கோள் காட்டியிருக்கிறேன். அதே 2008ல் ‘கண்ணகி’ பதிவில் கீழ்க்கண்ட கவிதையை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
’பாதச்சிலம்பால் பதியை இழந்தவள்
பருவச்சிலம்பைத் திருகி எறிந்தனள்.’

‘அனைவரும் படிக்க விரும்பும் கவிதை:
ரிசர்வ் பாங்க் கவர்னரின் “ ஐ – ப்ராமிஸ் – டு – பே “

’பொய்களை எழுத நாங்கள் போடும் பிள்ளையார் சுழி:
சத்யமேவ ஜயதே.’

“உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம்..
அது சரி, யார் உழைத்தால் யார் உயரலாம்?”

”ஊழி வருக ஊழி வருக ஊழி வந்த பின் –
முண்டக்கடவுளே- அடுத்த உலகத்தையேனும்
ஒழுங்காய்ப் படையும்!”

’உலகக் கொடுமை தாள முடியலை.
அன்னையுன் வயிற்றுள் மீண்டும் வந்திடட்டுமா?’

காமம் – ’மிஞ்சுவது கரிதான் என்று தெரிந்தும்
எரியும் மத்தாப்பு.’

துஷ்ட நிக்ரகம் – ’யுகந்தொறும்  தேவன் வந்தவதெரிக்கத்
துஷ்டர்கள் நம்மைத் துன்புறுத்தட்டும்!’
இப்போது நீலமணி உயிரோடிருந்தால் அவருக்கு 77 வயதாயிருக்கும். இவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
கவிஞர் ராஜசுந்தர்ராஜனுக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.

.............................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_2305.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_31.html




Jan 31, 2013

ஏதோ கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கே!



பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ’எனக்கு இந்த பத்ம பூஷன் விருது வேண்டாம்’ என்று நிராகரித்ததை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர் கால தாமதமாக வந்த விருது என்பதால் நிராகரிக்கிறாராம். சரி.அதோடு அவர் நிறுத்தி விடவில்லை. ’பாரத் ரத்னா விருது என்றாலாவது பரவாயில்லை......வாங்கியிருப்பேன்.....’ என்று தொடர்ந்து சொல்கிறார்!

இந்திய அரசாங்க விருதுகள் தேவை தானா என்பது முக்கிய கேள்வி.
 
நிற்க.
 எஸ்.ஜானகி இப்படி பகீரங்கமாக ’பாரத் ரத்னா விருது என்றால் வாங்கியிருப்பேன்’ என்பதன் அபத்தம் பற்றி யாரும் கவனித்ததாக தெரியவில்லை.

கமல் ஹாசன் தவிர இன்று இந்திய திரையுலகைச் சார்ந்த வேறு எவருக்குமே பாரத் ரத்னாவுக்கு தகுதியிருப்பதாகத் தோன்றவில்லை.
பாராட்டியவர்கள் யாரும் Janaki Amma ! Please don’t think too much of yourself !” என்று சொல்லவே இல்லை.

இந்தியாவில் பாரத் ரத்னா விருது பெற்ற பெண்கள் நால்வர்.
இந்திரா காந்தி, மதர் தெரசா, எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகியோர். இவர்களோடு தோளோடு தோள் நிற்க ஜானகி ஆசைப்படுகிற அபத்தம் பற்றி யாருக்கும் உறைக்கவே இல்லை.


 இங்கே பத்மஸ்ரீ விருது கூட உன்னத கலைஞன் நாகேஷுக்கு கிடைத்ததில்லை.
எம்.எஸ்.விக்கு கூட பத்ம விருது கிடைத்ததில்லை.

    இசைக்கலைஞர்கள் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவிசங்கர், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லாகான், பண்டிட் பீம்ஸென் ஜோஷி ஆகியோர். இவர்களோடு ஜானகியை பாரத் ரத்னா வாகப் பொருத்திப் பார்க்கமுடியுமா!

இவர்களில் லதா மங்கேஷ்கர் மட்டும் திரை இசை பின்னனி பாடகி. இதனால் தான் ‘எனக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தால் வாங்கியிருப்பேன்’ என்று ஜானகி சொல்கிறார் போலும். பாவம் பி.சுசிலா! அந்த அம்மா எஸ்.ஜானகிக்கு சீனியர். அதோடு சுசிலா மெல்லிசை திரையிசைப் பாடகி என்ற அளவில் ஜானகிக்கு எந்த வகையிலும் கொஞ்சமும் குறைந்தவரே அல்ல!


தமிழ் நாட்டில் இருந்து பாரத் ரத்னா விருது பெற்றவர்கள் ராஜாஜி( பாரத ரத்னா விருது முதன் முதலில் உயிரோடு இருக்கும்போதே பெற்றவர்) சர். சி.வி.ராமன், திருத்தணிக்காரரை சேர்க்கலாம் என்றால் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், ( ஆந்திராக்காரர் என்று சொல்பவர்கள் சொல்வார்கள் ) காமராஜர், எம்.ஜி.ஆர் ( மலையாளி என்று சொல்லி விடாதீர்கள்.) எம்.எஸ். சுப்புலட்சுமி, அப்துல் கலாம். இந்த வரிசையில் நாம் வேற்று மொழி எஸ். ஜானகியையும் பெருந்தன்மையாக பொருத்திப் பார்க்க முடியுமா? CALIBER ஒத்துப் போகுமா?

இந்த பாரத் ரத்னா விருது வழங்கப்பட்ட ’வரிசை’ பார்த்தால் கூட வேடிக்கையாக இருக்கிறது. இன்று வரை 41 பேர் பாரத ரத்னா என தீர்மானிக்கப்பட்டிருக்கிறார்கள்.(?!) ஒருவர் வெளி நாட்டுக்காரர் நெல்சன் மண்டேலா. மதர் தெரசாவை வெளி நாட்டுக்காரர் என்று சொல்ல முடியுமா?
எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின் இரண்டு வருடம் கழித்து பி.ஆர்.அம்பேத்கரை விட்டு விட்டோமே என்று ஞாபகம் வந்து பாரத் ரத்னா விருதை சட்ட மேதைக்கு கொடுத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு கொடுத்து மூன்று வருடம் கழித்துத் தான் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லப் பாய் பட்டேலுக்கு சாவகாசமாக பாரத் ரத்னா விருது கொடுத்திருக்கிறார்கள்!  
………….

 பாலாவின் ’அவன் இவன்’ படத்தைப்பற்றி…
இந்தப் படத்தில் விஷால், ஆர்யா, ஜி.எம் குமார் நடிப்பு பற்றி சொல்ல வேண்டும். 

இந்த மூன்று பேரின் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா கண்ட முழுமையான கதாபாத்திரங்கள் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவை.
ஒரே வார்த்தை தான்.விஷாலுக்கு அந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும். விஷாலின் நடிப்பைப் பற்றி விவரிப்பது அவ்வளவு எளிதானதல்ல. ரொம்ப பிரமாதம்! ’தெய்வத்திருமகள்’ விக்ரம் ’அவன் இவன்’ விஷாலுக்கு ஈடாகவே முடியாது.

ஆர்யா ரொம்ப லூஸ் டாக் செய்வது பற்றி சில விமர்சனங்கள் சரியல்ல. அப்படிப் பட்ட நபர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு. ஆர்யா பாத்திரத்திற்கு நல்ல நியாயம் செய்திருக்கிறார். அட்டகாசமான நடிப்பு. இந்த கதாபாத்திரத்திற்கும் பாஸ் என்ற பாஸ்கரனுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு!

ஜி.எம்.குமார் பெர்ஃபாமன்ஸ் சூப்பர்ப். ரத்தமும் சதையுமாக அவருடைய கதாபாத்திரத்தை ரொம்ப அற்புதமாக செய்திருக்கிறார். வெள்ளந்தியான அந்த ஹைனஸ்!வாழ்ந்தவர் கெட்டால்! நெஞ்சை விட்டு அகலாத பாத்திரம்.




இந்தப் படத்தில் மிக பரிதாபமான பலிகடா ஆனந்த் வைத்திய நாதன்! இந்த இசையறிஞர் இப்படி ஈனத்தனமான பாத்திரத்தின் மூலம் அறிமுகமாகியிருக்க வேண்டுமா? ஈனமான கதாபாத்திரம் கூட சரியாக வார்க்கப்பட்டு இயக்கப்பட்டிருந்தால் இப்படி மட்டரகமாக ஊசிப்போய் ஊசலாடியிருக்காது. பாலா எப்போதும் பாத்திர வார்ப்பில் கவனமாயிருப்பார். ம்ம்.. Even Homer sometimes nods!
 

என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்.
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?

நீலமணி எழுதிய மேற்கண்ட கவிதை இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்யா தான் கேட்கிறார் “ அது தெரியாத நீ கடவுளா? “