Share

Showing posts with label எஸ்.வைத்தீஸ்வரன். Show all posts
Showing posts with label எஸ்.வைத்தீஸ்வரன். Show all posts

Feb 21, 2016

Not every friendship is meant to last a lifetime


’வால்மீகத்தில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்வார்கள், நட்பு கொண்டாடுவது லேசு – அதைப் பரிபாலனம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை’ என்று கி.ரா எங்கோ, எப்போதோ எழுதியிருந்தார்.

”புது சினேகம் என்பது சரியாக வேகாத சோறு போல” என்பார் தி.ஜானகிராமன்.

”நாய் கிட்ட கொஞ்சம் பழக ஆரம்பிச்சா மூஞ்சிய நக்குமாம்” – இது ’என் தங்கை’ படத்தில் வேலைக்காரியாக நடிக்கும் எம்.என்.ராஜம் பேசும் டயலாக். எம்.ஜி.ஆர், ஈ.வி.சரோஜா, நரசிம்ம பாரதி நடித்த படம் ’என் தங்கை’.

கூடா நட்பு என்பது கிடக்கட்டும்.
நல்ல நட்பு எல்லாம், நல்லவர்கள் நட்பு எல்லாம் கூட எப்படி எப்படியோ சிதைந்து போய் விடுகிறது.



கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் (’கசடதபற’ பத்திரிக்கைக் காலம்) ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமி, அசோகமித்திரன், எஸ்.வைத்தீஸ்வரன் ஆகிய ஜாம்பவான்கள், இன்னும் பலரும் கூடி பேசுவது வழக்கம்.
ஞானக்கூத்தனும் ந.முத்துசாமியும் மாயவரத்திலேயே வகுப்புத் தோழர்கள். அசோகமித்திரனின் ’தண்ணீர்’ நாவலுக்கு முத்துசாமி சார் முன்னுரை எழுதியிருக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் “ ஜெயகாந்தன், கே.பாலசந்தர் இருவருமே பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சு” என்று எழுதியிருந்தார்.

ஒரே ஒரு முறை ஞானக்கூத்தன் அறைக்கு வந்த ஜெயகாந்தன் சீற்றத்துடன்
 “ வெங்கட் சாமிநாதன் என்ன பெரிய சுன்னியா?” என்று கொந்தளித்து விட்டுப் போய் விட்டார். அப்போது ந.முத்துசாமி அங்கு இல்லை. மறு நாள் அங்கு வந்த முத்துசாமி “என்னய்யா? அந்தாளு இப்படி இங்க வந்து பேசிட்டுப்போயிருக்காரு. இத தட்டிக்கேக்காம விட்டிட்டீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
 முத்துசாமி சாரின் ஆதங்கம் - ‘ஒரு ஸ்டார் வந்தவுன்ன எல்லாரும் விழுந்துட்டாங்க.. சாஸ்டாங்க நமஸ்காரமே பண்ணிட்டாங்க!’

இதில் ஆரம்பித்த Polimics! சங்கிலியாய் தொடர்ந்த கடும் சர்ச்சையில் வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், ந.முத்துசாமிக்கு இடையிலான நல்ல நட்பு முற்றிலுமாக அன்று முறிந்து போய் விட்டது.

என்ன? ஏது என்பதெல்லாம் முத்துசாமி சாருக்கு இன்று ஞாபகம் இல்லை.



சில வருடங்களுக்கு முன் வெ.சா.வின் மனைவி இறந்த விஷயத்தைக்கூட தனக்குச் சொல்லவில்லை என்று முத்துசாமி வருத்தப்பட்டார்.
செல்லப்பாவின் ’எழுத்து’பத்திரிக்கையில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகள் மூலம் தான் ’நாடகம்’ பற்றிய தெளிவு தனக்கு ஏற்பட்டதாக  இப்போதும் சொல்பவர் முத்துசாமி.

 இப்போது சமீபத்தில் சென்ற நவம்பரில் வெங்கட் சாமிநாதன் மறைந்த போது கூத்துப்பட்டறையில் டிசம்பர் மாதம் ஒரு இரங்கல் கூட்டத்திற்கு முத்துசாமி சார் ஏற்பாடு செய்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணன் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் சென்னை வெள்ளத்தில் இந்த இரங்கல் கூட்டமும் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கூட்டம் நடத்தமுடியாமல் போனதில் முத்துசாமி சாருக்கு மிகவும் வருத்தம்.
Not every friendship is meant to last a lifetime. What does 
last forever is the pain when that person is gone.

’அசோகமித்திரனுடன் சமாதானமாகப்போக வழியில்லையா?’ என்று ஏக்கத்துடன் முத்துசாமி சாரிடம் கேட்டேன்.
முத்துசாமி சார் பதில் ’நாங்க இப்ப என்ன சண்டையா போட்டுகிட்டிருக்கோம்? நட்பு கெட்டுப்போச்சி… பேச்சு வார்த்தை கிடையாது.. அவ்வளவு தான்.’
………………………….



’நடை’ பத்திரிக்கை 1960களின் கடைசியில் சி.மணி செலவு செய்து நடத்தினார். மிக பிரமாதமான வடிவில் வெளி வந்தது. முத்துசாமி சாரின் ‘காலம் காலமாக’ நாடகம் 1969ல் நடையில் தான் பிரசுரமானது.
 எட்டு இதழ்கள் தான் வந்தது.
 நடை எட்டாவது இதழில் இதழின் வெற்றுத்தாள்களை நிரப்ப அந்த நேரத்தில் ஏதோ ஒரு content ஐ போட்டார் முத்துசாமி. வி.து.சீனிவாசன் எப்படி இந்த மாதிரி செய்யலாம் என்று பிரச்னையை கிளப்பி விட்டார்.
சி. மணி நடை பத்திரிக்கையையே நிறுத்தி விட்டார்.
சி.மணி இறக்கும் வரை முத்துசாமியுடன் நட்பு நீடித்திருக்கிறது.
.......................


27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தேன். சி.மணி தன்னுடைய ‘வரும் போகும்’ கவிதைத்தொகுப்பில் கையெழுத்திட்டு தந்தார்.

2003ல்திருச்சியில் இருந்து திருப்பூருக்கு போக நேர்ந்த போது ‘ பார்த்துப் பார்த்து சேர்த்திருந்ததெல்லாம் கழுதைப்பொதியாக சேர்ந்திருக்க, லக்கேஜை குறைக்க வீட்டின் கொல்லையில் பழைய கணையாழி, நடை, கசடதபற, ஞானரதம், ’மேலும்’ இதழ்களையெல்லாம் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் ஜாமான்கள் ஏற்றிய வேனில் குடும்பத்துடன் கிளம்பினேன். திரும்பிப்பார்த்தால் இலக்கிய இதழ்கள் எல்லாம் குழந்தைகள் போல ”எங்களை விட்டு விட்டுப்போகிறாயே” என்று கதறுவது போல காதில் கேட்குமே.
Sometimes you have to let go of what you can't live without.

சென்னைக்கு சென்ற செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் வர நேர்ந்த போது ஒரு ஆயிரம் புத்தகங்கள்,
காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸில் இருந்த நூற்றுக்கணக்கான கர்னாடக சங்கீத, இந்துஸ்தானி சங்கீத இசை கேசட்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு கிளம்ப நேர்ந்து விட்டது.( " தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர் ராஜநாயஹம்” என்று கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி’பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.)

You never really know a man until you stand in his shoes and walks around in them
- a popular quote of Atticus in " To kill a mocking Bird "
( 1962 movie)


க. நா.சு சொல்வது போல “எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.”

……………………………………………………………………

 http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_13.html

Feb 14, 2016

தோள்முனைத் தொங்கல்

சீமந்த புத்ரம் என்றால் என்ன? வளைகாப்பு சீமந்தம் பெறும் குழந்தை தான் சீமந்த புத்ரன். வளைகாப்பு என்பது தலைச்சன் குழந்தைக்குத் தான் நடக்கும். அதனால் பெற்றவர்க்கு முதல் குழந்தை சீமந்த புத்ரன் அல்லது சீமந்த புத்ரி!


 நான் ஒரு சீமந்த புத்ரன்!

......................................



”மனிதன் இழுக்கும் மாமிச வண்டியில் குதிரை கிடந்து ஹை .. ஹை என்றது” - இந்த கவிதை எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியது. வைத்தீஸ்வரனின் தாயார் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தங்கை.

...........................................


”வரும் போகும்” என்று நெடுங்கவிதை எழுதிய மேதை சி.மணி ஒரு தடவை ’லிக்கர்’ என்று நினைத்து டெட்டாலை எடுத்து குடித்து விட்டார்.


”பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எழுத.” -சி.மணி கவிதை.
”என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன் என்ன செய்வதென்றால்
என்றான் பெரியசாமி.கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னையில்லை;
மற்ற நேரம் நடக்கும்போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காத
உறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.
கையக் காலாக்கென்றான்.” இதுவும் சி.மணியின் கவிதையே தான். தலைப்பு “ தீர்வு”

.......................................

டாக்டர் ராஜா எம்.பி.பி.எஸ் எழுதிய கீழ்கண்ட கவிதையின் ஆன்ம விடுதலை, நிறைந்த அன்பு, முழுமையான வேதனைத்துயர்.


“ எண்ணெய் ப் பற்றி எரியும் தீயால்
பிடித்தவர்களையும் பிடித்தவற்றையும்
பற்றிக்கொண்டிருக்கிறேன்
தீவிரமாய்.
விடுபடும் வேட்கையில்
நெளிகிறது ஒரு நெருப்புச்சுடர்”

Sep 9, 2012

பின்னிய மேகச்சடை

Oct 29, 2009


பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!



எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !

.......

Oct 31, 2009


குழந்தையும் காலமும்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று . வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலச்சக்கரம் சுற்றியது.காலம் நகர்கிறது , காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம் ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................



பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????

சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய் "

...........................

Oct 20, 2009


கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே


புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும் " சிறுகதையில் கந்தசாமியிடம் கடவுள் எச்சரிக்கையுணர்வுடன் சொல்வார் :" உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம், உடன் இருந்து வாழ முடியாது "
கந்தசாமி இதற்கு கடவுள் முகத்தில் அடித்தாற்போல பதில் சொல்வார் ." உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு."

பிரபலமான தேவதேவன் கவிதை ஒன்று

"காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய்
எழுந்தார்
துயர் குழப்பமிக்க இவ்வுலகில்
தன் கடமை என்னவென்ற வெகு
யோசனைக்குப் பின் கடவுள் "


என்ன தான் எச்சரிக்கையாகவும் கௌரவ பிரக்ஞையுடனும் கடவுள் இருந்தாலும் அவரை டென்சன் ஆக்காமல் மானிட ஜன்மங்கள் இருப்பதில்லை . சமீபத்திய ஆனந்தவிகடன் ஒன்றில் 'யூத்து கூத்து' பகுதியில் ஒரு ஜோக் .
" கடவுள் எப்போ டென்சன் ஆவாரு "
" கல்யாணம் ஆகாத பொண்ணு கர்ப்பமாகி வயிறு ஊதிபோய் நிற்கும்போது அவங்க வீட்டிலே " ஐயோ கடவுளே ! இப்படி பண்ணிட்டியே !" ன்னு புலம்புறப்ப தான் "
....


ஊருக்கு சொல்லுமாம் பல்லி!கழனியில் விழுமாம் துள்ளி ! - இது சொலவடை .
பல்லி விழும் பலன் என்று சோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி உண்டு . " பல்லி தலையில் விழுந்தால் மரணம் " - இப்படி பீதி கிளப்பும் பலன்கள் !
வாலிழந்த பல்லியைப் பார்த்து பிரமிள் எது கவிதை எனக்கேட்டு எழுதிய கவிதை .
"கவிதை -
இறக்கத்துடிக்கும் வாலா?
உயிரோடு மீண்ட உடலா ?"

சுவரில் நிற்கும் பல்லி ஏன் அசையாமல் நிற்கிறது . சுவற்றையே தான் தான் தாங்கி சுமந்துகொண்டிருப்பதாய் பல்லி நினைக்குமாம் . தான் அசைந்தால் சுவர் விழுந்து வீட்டில் உள்ள மனிதர்கள் செத்து விடக்கூடாதே என்று ஆடாமல் அசையாமல் நிற்குமாம்!செருக்கு!நினைப்புக்கார பல்லி!


சுவற்றில் உள்ள பல்லியை பாப்லோ நெருடோ தன் கவிதையில் கூறுகிறார் :
“ A Drop of Crocodile on the wall”


மாம்பழத்தைப் பிழிந்தால் துளித்துளியாக மாம்பழச்சாறு தான் வரும் . திராட்சையைப் பிழிந்தால் துளித்துளியாக திராட்சைச்சாறு கிடைக்கும். ஆனால் கவிதைக்கனி பிழிகையில் வெளிவரும் சாறு அப்படியல்ல . -பல்லி A Drop of Crocodile ஆகிப் போகிறது.
.......

Sep 8, 2009


புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார் .

' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது . அல்லது புல்லுக்கு நகை தருகிறது .பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '. அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண் . என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள் . மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது . காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "

விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."

எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள் !"

மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை

'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'


மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder,lightning or in rain




....



Oct 29, 2009

பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!



எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !




..