Share

Showing posts with label கு.அழகிரிசாமி. Show all posts
Showing posts with label கு.அழகிரிசாமி. Show all posts

Aug 29, 2019

அறியாத குழந்தை இழுத்துச் சப்பும் நினைவில் இறவாத முலை


“பழகாத சொல்
ஒன்றுக்கு
பதறி
பாலிடால் குடித்து
செத்துப்போனாள்
பச்சைப் பிள்ளைக்காரி.
அறியாத குழந்தை
நினைவில்
இறவாத முலையை
இழுத்துச் சப்பும்
இன்னும்..”
- போகன் சங்கர்
லோர்க்கா நாடகக்காட்சியையும், கு.அழகிரிசாமி சிறுகதை நிகழ்வையும் இணைத்து இந்த வருடம் மே மாதம் நான் “ தாயின் பிணத்துடன் பாலகர்கள்” பதிவு எழுதினேன்.
லோர்க்காவின் ”தலைப்பில்லாத ஒரு நாடகம்”.
இதில் ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய சிறுகதை கு.அழகிரிசாமியின்
“ இருவர் கண்ட ஒரே கனவு.”
’அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா’ என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடிக்கும் பாலகர்களின் ஓலம்.
போகன் சங்கர் கவிதைக்கு கூட தாயின் பிணத்துடன் பாலகர்களுடன் ஒரு Relevance இருக்கிறதை காணலாம்.

May 11, 2019

தாயின் பிணத்துடன் பச்சை பாலகர்கள்


அழகான ஒரு பேரிளம் தாயும், வயது வந்த பதின்பருவ மகளும் எதிர்ப்பட்டால் ஒரு பரவசமான வாலிப உற்சாக கமெண்ட்
“தாயும் சேயும் நலம்.”
தாய போல பிள்ள, நூல போல சேல
Like mother, like daughter.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய கதை கு.அழகிரிசாமியின் “ இருவர் கண்ட ஒரே கனவு”

மாட்டு தொழுவில் ஐந்தாறு ஓலைகளை வைத்துக் கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய ஆறு வயதும் ஐந்து வயதும் ஆன இரு பாலகர்களும் வசிக்கிறார்கள்.
கூலி வேலைக்கு செல்லும் பெண் அவள்.
தொழுவில் குடியிருக்க வெள்ளையம்மாள் தொழுவின் சொந்தக்காரர் வீட்டில் இலவசமாக வேலை செய்து வர வேண்டியிருக்கிறது. அப்படி அவள் அழைக்கப்படும் தினத்தில் கூலி வேலைக்கும் போக முடியாது.
அவள் இப்போது கூலி வேலைக்கு போக முடியாததற்கு காரணம் குளிர் காய்ச்சல் மட்டுமல்ல. உடுத்திக்கொள்ளக்கூட துணி இல்லாமல் போனதும் தான்.
பசியில் துடிக்கும் குழந்தைகள். வேலப்பன் வீட்டில் கிடைத்த கஞ்சியையும் தரைக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது. பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருந்தாள்.
தொழுவை நோக்கி ஓடி வந்தார்கள். அம்மா கிழிந்து போன பழைய கோணியின் கந்தலைப் போர்த்திக்கொண்டு கிடந்தாள். கண்கள் பாதி மூடி உடம்பில் அசைவில்லாமல்.
அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை ஆடியிருக்கிறாள். அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடித்தார்கள். செத்துப்போகாதே என்று பாலகர்கள் ஓலம்.
லோர்க்காவின் நாடகம் “ Play without a title”.

In a small room, a woman died of hunger. Also,her two starving children were playing with the dead woman’s hands, tenderly, as if they were two loaves of yellow bread. When the night came, the children uncovered the dead woman’s breasts and went to sleep upon them while eating a can of shoe polish.
ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
இடைச்செவலாயிருந்தாலென்ன. ஸ்பெயினில் ஒரு ஊராய் இருந்தாலென்ன.

May 10, 2019

கு.அழகிரிசாமியின் தந்தை பற்றி கி.ரா


கு.அழகிரிசாமியின் அப்பா தன் காலத்தில் ஜோதிடம் தொழில் பார்த்தவர். 
என்னிடம் கி.ரா. அவருடைய விசித்திர ஜோதிடம் பற்றி நான் புதுவையில் இருந்த காலத்தில் வேடிக்கையாக விவரித்திருக்கிறார்.
கீழே கி.ரா எழுதியுள்ள விஷயம்
”வறுமை ஒழிக என்ற அவயம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ”பொற்காலம்”. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் குடும்பத்தார், இனி இடைச்செவலில் பிழைக்க முடியாது என்று வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். அந்தப் புறப்பாட்டைப் பார்க்க முடியாமல் என் வீட்டினுள் கிடந்தேன். அழகிரிசாமி சென்னையில் சிரமதிசையில் இருந்தான். வண்டியில் எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். அழகிரிசாமியின் அப்பா மட்டும் ஏறமுடியாது என்கிறார். செத்தாலும் நா இங்கே தான் சாவேன். கோயமுத்தூருக்கு வரமாட்டேம் என்கிறார்.
என்ன செய்ய. யார் சொன்னால்க் கேட்பார் இவர்.
ஒரு ஊரில் ஒவ்வொருவருக்கும், இன்னார் சொன்னாத்தாம் இவர் கேட்பார் என்று உண்டு. கு.அ.வின் மாமா ஒருவர். அவருக்குத் தெரியும் நான் சொன்னால் அவர் கேட்பார் என்று. என்னைத் தேடி வந்து விட்டார்.
எழுந்து போனேன். கிட்டே போய் அவருடைய கைப்பிடித்தேன். அவருக்குப் பார்வை போயிருந்தது. எனது தொடுதலிலிருந்தெ என்னைத் தெரிந்து கொண்டார். ஒரு குழந்தை போல் அழுது கொண்டே ’நா போக மாட்டேன் ராஜு போக மாட்டேன். நீயும் போகச் சொல்லுவியா. அய்யோ, ஏங்குடும்பம் இப்பிடி ஆயிட்டதே தேவுடா.’
எப்படி அவரைச் சமாதானம் செய்ய; தெரியவில்லை.
மாமா, நீங்க மட்டும் எப்பிடி இங்கே இருக்க முடியும்.
“ஏம் எனக்கு நீ கஞ்சி ஊத்தமாட்டியா? ஒரு வேளை மட்டும்; அரை வகுத்துக்குப் போதும்”
சீனி மாமா சொன்னார்: “ராஜூ உமக்குக் கஞ்சியும் ஊத்துவார்; பொடிப்பட்டை செலவுக்கும் தருவார், சரி விடிஞ்சதும் ”மந்தை”க்குப் போகக் கையெப் பிடிச்சிக் கூட்டிட்டுப் போவாரா, நாளைக்குச் சட்டடியா படுத்துட்டா ஒம்மோட பீத்துணியை அலசிப் போடுவாரா!”
இது நகைச்சுவை இல்லையென்றாலும், அவ்ர் சொன்னது அங்கிருந்த அனைவரையும் முகம் திருப்பி ஒரு வகைச் சிரிப்பைத் தந்தது.
வயசாகிப்போன ஒவ்வொருவருடைய இறுதி நாள் கவலை அது.
இது தான் நேரம் என்று, சீனி மாமா தனது மாமனாரான கு.அவின் அப்பாவின் கையிலிருந்த கைத்தடியை வாங்கிக்கொண்டு அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கி வண்டிக்குள் வைத்தார்.
என்னிடம் சொல்லிக்கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். அவர்களை நான் பார்த்தது அது தான் கடேசி என்று அன்று நினைக்கவில்லை. அதுவே கடேசிக் காட்சியாக அமைந்து விட்டது.”
- கி.ராஜநாராயணன் “ வேதபுரத்தார்க்கு நூல்
( குமுதத்தில் தொடராக வந்தது)
அன்னம் வெளியீடு

May 9, 2019

கு.அழகிரிசாமி


”கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை தனித்தனியாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது படித்துப் பார்த்தபோது அவை அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது, சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல் ‘ஐயோ!’வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது” என்று க.நா.சு 1959லேயே மலைத்துப் போயிருக்கிறார்.

நகுலன் “அழகிரிசாமியின் கதைகள் மனநிலைகளை நுணுக்கமாக விவரிப்பதிலும் சௌந்தரிய உணர்ச்சியின் பரிணாமத்தையும் உள் வளைவுகளையும் தாங்கியிருப்பதிலும் இவ்வளவு இருந்தும் பிரத்தியட்ச உலகின் தொடர்பு அறாமலிருப்பதிலும் நம்மைக் கவர்கின்றன, ஆனால் கு.அழகிரிசாமி கலையைப் புரிந்துகொண்டு அனுபவிப்பதற்கு வாசகனும் நுண்ணுணர்வு பெற்றவனாக இருக்கவேண்டும்.”
மேலும் நகுலன் 1961ல் சொன்னார் “ புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, இவர்களுடன் உடன் வைத்துப் பேசக்கூடிய தகுதி வாய்ந்தவர் கு.அழகிரிசாமி. சொல்லப்போனால் இக்குறிப்பிட்ட ஆசிரியர்களின் சாயை அழகிரிசாமியிடம் ஒரு நூதன ரூபமெடுத்திருக்கின்றன. இவர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து நிற்கும் ஒரு பண்பும் கலைத்திறனும் அவருடைய கதைகளுக்கு உண்டு. அவருடைய கதைகளை ஒருமுறைக்கு இரு முறையாக படிப்பவர்களுக்கு சௌந்தரிய உணர்ச்சி என்பதன் தனி அர்த்தம் தெளிவாக விளங்கும்.
கதைத்தொகுதிகளை இன்று மூன்றாவது முறையாகப்படிக்கும் போது வட்டமிடும் உணர்ச்சி என்னவென்றால் அவர் கதைகளில் காணப்படும் ஒரு நூதனமான ’நகைச்சுவை’. விளக்கமாகச் சொல்லப்போனால் அவருடைய கதைகளுக்கெல்லாம் அர்த்தம் கொடுப்பது ஒரு தனிவிதச் சிரிப்புத்தன்மை. ஆனால் அவரை நாம் ஒரு பொழுதும் ஒரு நகைச்சுவை ஆசிரியராகச் சாதாரணமான அர்த்தத்தில் கருத முடியாது. ஒரு மேல்நாட்டு ஆசிரியர் ஆனந்த பாஷ்பத்தின் அடித்தளத்தில் நாம் துக்கக் கண்ணீரின் உலர்ந்த சுவட்டைக் காணலாம் என்று சொன்னார். அந்த அர்த்தத்திலும் நாம் அழகிரிசாமியின் நகைச்சுவைக்கு வியாக்கியானம் அளிக்க முடியாது. இதைச் சற்று வார்த்தைகளில் விவரிப்பது கடினம் தான்.”
அழகிரிசாமி செய்த ஒரு சபதம் “குழந்தைகளை அடிக்க மாட்டேன். கம்ப ராமாயணத்தின் மீது சத்தியம்.”
அவருடைய பிள்ளைகள் அதிர்ஷ்டக்காரர்கள். சாரங்கன் தன் அப்பா கையால் அடிவாங்காத மகன். கம்பராமாயணத்தின் மீது சபதம்.

அழகிரிசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர். He was having some strong likes and dislikes. மௌனியையும் லா.ச.ராவையும் சுத்தமாக பிடிக்காது. இவர்கள் இருவரும் எழுதியவை கதைகளாகவே தனக்குத்தோன்றவில்லை என்று கடுமையாக பேசினார்.
அழகிரிசாமி சிறுகதைகள் முழு புத்தகமாக பதிப்பாசிரியர் பழ அதியமான் அவர்களின் சீரிய முயற்சியில் காலச்சுவடு வெளியீடாக எட்டு வருடங்களுக்கு முன் வந்திருக்கிறது.


அழகிரிசாமியின் சில கதைகள் படித்து எவ்வளவு காலம் ஆனாலும் கூட சட்டென்று சிரமமின்றி நினைவின் மேலெழும்பி வரக்கூடியவை.
திரிபுரம், அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், திரிவேணி, குமாரபுரம் ஸ்டேசன்,சுயரூபம் ஆகிய கதைகள். சில கதைகளை குறிப்பிடுவதால் கொஞ்சம் நல்ல கதைகள் தான் போல என்று யாருமே எண்ணி விட வேண்டாம்.
கி.ராவுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் காட்டும் உலகம்.

கு.அழகிரி சாமி இசையறிஞர் விளாத்திகுளம் சுவாமிகளைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார்!"
இதே போல கு.அழகிரி சாமி ரசிகமணி டி.கே.சி யைப் பார்த்தவுடன் உடனே,உடனே சொல்லியிருக்கிறார் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார்!"
 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இப்படி அழகிரிசாமி பற்றி கி.ரா. நினைவில் இருந்து அள்ளித் தெளிக்கும் விஷயங்களை கேட்கும்போது அவரை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் தான் ஏற்படும்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.
அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார்.ஆறு மாதமாக தரவேயில்லை.
அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.
நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். முகம் விளங்கவில்லை. புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. “நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்.” என்று சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு நன்றி சொல்லாமலே திரும்பிச் சென்று விட்டார்.

Aug 1, 2016

கு.அழகிரிசாமியின் யுக்தி


நிறை மாத கர்ப்பிணிகளை நிறைய பார்க்கிறேன்.

’பத்து மாசம் சுமந்திருந்து பெற்றாள்’ பாட்டு இருக்கிறது.
’ முன்னூறு நாள் சுமந்தாள்’ – இப்படியும் ஒரு டப்பா பாட்டு நான் சிறுவனாயிருக்கும் போது கேட்டிருக்கிறேன்.
அப்போது நினைத்திருக்கிறேன். அடுத்து ‘7200 மணி நேரம் வயிற்றில் அன்னை என்னை வைத்திருந்தாளே!’ பாட்டு அடுத்து வரப்போகிறது!

வில்லன் பிரகாஷ் ராஜ் வசனம் ஒரு படத்தில் இந்த மாதிரியிருந்தது. டி.வியில் ஓடிக்கொண்டிருந்ததை ஒரு நிமிஷம் கவனிக்க நேர்ந்த போது. – “என் அம்மா செத்துட்டா. அவ இப்ப உயிரோடு இருந்தா ஏண்டி என்ன பத்துமாசம் உள்ள வச்சிருந்தேன்னு கேட்டு அவள கொன்னுடுவேன்!”
………………………………………………..


கி.ரா வயது தொண்ணூற்று நான்கு. கடந்த ஆறு மாதங்களாக அவருடன் தொலைபேசுவது நடப்பதில்லை. மணிக்கணக்காக என்னுடன் எப்போதும் அளவளாவுவார். எனக்கு இது ஒரு இழப்பு. எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறது. அவரால் இப்போதெல்லாம் யாரையும் சந்திக்க இயலவில்லை. மணிக்கணக்காக என் போன்றவர்களுடன் பேச முடியவில்லை. முதுமையின் அயர்ச்சி.
சென்ற வாரம் என் ப்ளாக்கில் 2008ம் வருடம் நான் பதிந்திருக்கிற “ ஆன வயதிற்கு அளவில்லையெனினும் தெளிவே வடிவாம் கி.ரா.” மிக அதிக ஹிட் பெற்றிருந்தது. எனக்கு உடனே பதற்றம். திடீரென்று இது அதிக பேரால் படிக்கப்பட்டிருக்கிறது என்றால்………. இதை கி.ராவின் 85 வயதில் அவருக்காக வெளியிடப்பட்ட ’கி.ரா- 85’ நூலுக்காக எழுதியிருந்தேன். அதை நான் ப்ளாக் ஆரம்பித்த 2008ம் வருடம் பதிந்திருக்கிறேன்.
நல்ல வேளை கி.ராவுக்கு எதுவும் ஆகி விடவில்லை என்பது தெரிந்து கொண்டேன்.
………………………………………………….

ஞாயிற்றுக்கிழமை பெசண்ட் நகர் முத்தமிழ் பேரவை அரங்கத்தில் ஒரு பரத நாட்டிய அரங்கேற்றம். 

ந.முத்துசாமி சாருடன் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் உள்ளே நுழைந்தார். 
அவர் முகம் கு.அழகிரிசாமியை நினைவுறுத்தியது. புகைப்படத்தில் பார்த்திருக்கிற அழகிரிசாமியின் முகம். அவருடைய ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’, ’சுயரூபம்’ போன்ற அற்புத கதைகளெல்லாம் வரிசை கட்டி நினைவுக்கு வந்தன.
அழகிரிசாமிக்கு மௌனியைப் பிடிக்காது.
அவர் கருத்து - ’சும்மா பம்மாத்து செய்கிறார்’.
க.நா.சு சொன்னார்:”மூக்கறையர்களுக்கு மௌனியை புரியாது.”
ஆனால் மௌனியின் சிறுகதைகளுக்கான முன்னுரையிலேயே அன்று தமிழின் ஒன்பது எழுத்தாளர்களில் ஒருவராக கு.அழகிரிசாமியை கனப்படுத்தினார். ’கு.அழகிரிசாமி பாரதி வரிசையில் வைத்து போற்றப்படவேண்டியவர்.’- இதை சொன்னதும் க.நா.சு. தான்!
அழகிரிசாமியின் மகன் சாரங்கன் மௌனி பற்றி நல்ல டாகுமெண்டரி படம் எடுத்தார்! காலம் காலமாக தலைமுறை இடைவெளி!

நாற்பத்தைந்து ஆண்டுகள் முன் மறைந்து விட்ட கு.அழகிரிசாமி. தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் கு.ப.ரா வை நினைத்தால் ந.பிச்சமூர்த்தியை நினைக்காமல் இருக்க முடியாது. கு.அழகிரிசாமியை நினைத்தால் கி.ராஜநாராயணன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.

கொஞ்ச நேரத்தில் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு முத்தமிழ் பேரவை அரங்கத்திற்குள் ’கடலோடி’ நரசய்யா நுழைந்தார். மணிக்கொடி சிட்டியின் மருமகன்.முத்துசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

பரத நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அழகிரிசாமி தோற்றம் கொண்டவர் வந்து முத்துசாமியை சேவித்தார். அவர் அழகிரிசாமியின் மகனே தான்! மூத்தமகன் ராமச்சந்திரன்.
இளைய மகன் சாரங்கனை அந்தக்காலத்தில் திலகர் மருது (ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி) மூலமாக எனக்கு அறிமுகமுண்டு. 2007ம் ஆண்டு கோவையில் நடந்த ’காலச்சுவடு’ விழாவில் மீண்டும் சாரங்கனை சந்தித்திருக்கிறேன்.
ராமச்சந்திரனிடம் அவரைப் பார்த்தவுடன் எனக்கு கு.அழகிரிசாமி ஞாபகம் வந்ததைப் பற்றி சொன்னேன்.
கி.ரா பேசும்போது அழகிரிசாமி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார். 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இதை ராமச்சந்திரனிடம் நான் சொன்னபோது அவர் “அப்பா பற்றி இந்த செருப்பு விஷயம் எனக்கே இப்போது தான் தெரிய வருகிறது!”
எனக்கு சந்தோஷம் தான். என்னால் அழகிரிசாமி பற்றிய ஒரு சுவாரசியம் அவர் மகனுக்கு இவ்வளவு காலங்கழித்து இப்போது தெரிய வந்திருக்கிறது.
........................................................

Nov 6, 2009

விளாத்திகுளம் சுவாமிகள்

விளாத்திகுளம் சுவாமிகள் என்றதும் ஒரு காவி கட்டிய உருவம் என நினைத்துவிடாதீர்கள் . விளாத்திகுளம் சுவாமிகள் காவி உடுத்தியது கிடையாது.இவர் காடல்குடி ஜமின்தார். மேலும் இவருக்கு மூன்று மனைவிகள். கம்பள நாயக்கர் இனம். கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரும் ஞானி. நல்ல பாடகர் . ஆனால் கச்சேரி செய்பவர் கிடையாது . நல்ல சதஸில் இயல்பாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பல நாட்கள் தொடர்ந்து பாடுவார் .கீர்த்தனையாக பாடுவது என்று கிடையாது . எந்த ராகம் என்றாலும் ஆலாபனையாக பல நாட்கள் பாடுவார் .தன் ரசிகர்களுக்காக பாடியவர் . ஒரு ரசிகர் இருக்கிறார் . அவருக்காக ஒரு கூட்டத்திற்கே பாடுவார் .குறிப்பிட்ட அந்த ரசிகர் காணாமல் போகிறார் என்றால் தாயைப் பிரிந்த குழந்தை போல தவித்து விடுவார் . தாள ஞானம் இவருக்கு கிடையாது . ஸ்வர ஞானம் உண்டு . ஆனால் ஸ்வரம் பாடத்தெரியாது .
கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி சொல்லக் கேட்பது சுகம் ! கு . அழகிரி சாமி இவரைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார் !" இதே போல கு . அழகிரி சாமி ரசிகமணி டி கே சி யைப் பார்த்தவுடன் சொன்னாராம் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார் !"
விளாத்திகுளம் சுவாமிகள் நல்ல கருப்பு நிறத்தில் ரொம்ப கம்பீர அழகு கொண்டவர் . பெரிய மீசை உண்டு . ஆனால் சுவாமிகளுக்கு தாடி கிடையாது .
இசை பயிலும் ஆர்வத்தில் கிராவும், அழகிரிசாமியும் அந்த காலத்தில் நாகஸ்வர மேதை காருக்குரிச்சியின் சகளைபாடியான பொன்னுசாமி அவர்களை ஒரு வீடு அமர்த்தி அவரிடம் கர்நாடக இசை பயின்றார்கள் . அப்போது அங்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருகை தரும்போது பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிக்கும் போது, மெதுவாக ஆலாபனையை ஆரம்பிப்பார் .
விளாத்திகுளம் சுவாமிகள் பாட ஆரம்பிப்பது பற்றி கி ரா சுவாரசியாமாக சொல்வார் : சாமியாடுறவனுக்கு மேளம் அடிச்சவுடன் சாமி வருவது போல காருக்குரிச்சியின் ஷட்டகர் பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க வாசிக்க விளாத்திகுளம் சுவாமிகள் பாடத்தொடங்குவார் . நினைத்துப் பார்க்கவே சந்தோசமாயிருக்கிறது . ஒரே ராகம் - ஆலாபனை - பல நாட்களுக்கு தொடர்ந்து !
சங்கீத கலாசாலை ஒன்று துவங்கும் முயற்சியின் போது ஹரிஜன் களையும் சேர்க்க வேண்டும் என கிராவும் கு அழகிரிசாமியும் வற்புறுத்தியபோது அதனை விளாத்திகுளம் சுவாமிகள் விரும்பவில்லை . சுவாமிகளின் இன்னொரு முகத்தைப் பார்த்த கிராவும் , கு அழகிரிசாமியும் அதனால் சங்கீத கலாசாலை பற்றிய அவரது முயற்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் .


கர்நாடக சங்கீதம் இப்போது ( இப்போது என்றால் கடந்த எண்பது வருடங்களாக) 'அரியக்குடி பார்முலா' மேடைக் கச்சேரி என்ற சிறைக்குள் , ஆம் சிறை என்று தான் சொல்லவேண்டும். ஒரு இருபத்தைந்து கீர்த்தனைகளை கற்றுக்கொண்டு வர்ணத்தில் ஆரம்பித்து தில்லானாவுக்குப் பின் மங்களம் என திரும்ப திரும்ப அதனையே பாடிக்கொண்டு வெளிநாட்டில் எட்டு மாதம் ,டிசெம்பர் சீசனை ஒட்டி ஒரு மூணு நாலு மாதம் உள்நாட்டில் வித்வான்கள் வியாபாரம் செய்வது என்று மாறிவிட்டது. இது குறித்த அதிருப்தியை திஜா மோகமுள்ளில் சொல்லியிருக்கிறார் .
ராகங்களை தரிசனம் செய்வது இனி சாத்தியமில்லை . அதாவது தியாகய்யர் தேவகாந்தாரியை ஏழு நாள் பாடியது , தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியது போல , பட்ணம் சுப்ரமணிய அய்யர் பேகடா மூன்று நாட்கள் பாடியது போல இனி நடக்குமா ? நடத்திக்காட்ட முயற்சிகள் , இதற்கெனவே பிரத்யேகமான இசை விழாக்கள் நடத்தப்படவேண்டும் . கிராவும் இப்படி ஏங்கிசொல்வார் .
சங்கீதகலாசாரம் மாறுவது மிகவும் அவசியம் .ஒரு ராகம் பல நாட்கள் பாடப்படும்போது எப்படியெல்லாம் விஷ்வரூபம் எடுக்கும் !

'மிருதங்கம் ஒரு ஊமை வாத்யம் . கற்றுக்கொள்வதற்கு ஒரு கர்ப்ப வாசகாலம்
( அதாவது பத்து மாதம் ) போதும் தான் . ஆனால் என்ன வாசிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வதற்குள் ஆயுசு தீர்ந்து விடும் . ' என்று பாலக்காடு மணி அய்யர் சொல்வார் .
ஒரு ஊமை வாத்தியத்தின் உன்னதத்தன்மையே இத்தகையது என்றால் கந்தர்வ வேதம் எனப்படும் சாஸ்த்திரீய சங்கீதத்தை எப்படி பேணப் போகிறோம் ?