Share

Showing posts with label P.B.ஸ்ரீனிவாஸ். Show all posts
Showing posts with label P.B.ஸ்ரீனிவாஸ். Show all posts

May 1, 2013

P.B.ஸ்ரீனிவாஸ்

            https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq71ax95MuB9oSn0zLWOPSQbYX2zTHE3CYsXnS0ieWnjB29x3bn3MILoK-G1fPr2K1_tiXSVKxIGZ6GbsxAwPZd2eAGEetjtSEIWDSCXJC4QHDYQ7M1K3uA0Eif8R_Ye9si1RtinNoRts/s200/PB+Sreenivas.jpg


’பாடும் குரலில் உள்ளது பேச்சின் கவிதை’ எனும் பைரனின் உறுதிப்பாடு தான் இவர் பாடல்களில் வெளிப்பட்டது.
கர்னாடக சங்கீத அறிவு என்பதே கொஞ்சமும் இல்லாமல் அவர் குரல் வெளிப்படுத்திய சுநாதம், சுஸ்வரம் எல்லையற்ற ஆச்சரிய சாதனை.
 கனிவு, இனிமை, மென்மை, சுகம், சுத்தம், நேர்த்தி என்று நம் நெஞ்சில் தேன்மழையாய், பொழிந்த,தென்றலாய் வருடிய சுகிர்த கானம் P.B.ஸ்ரீனிவாஸின் பாடல்கள்.
PBS என்பதை விரித்தால் Play Back Singer.
பல மொழிகளில் பாடியவர். முன்பு எப்போதும் ஒரு எம்.ஜி.ஆர் பாணி தொப்பியுடன் இருந்தார். சென்ற பல ஆண்டுகளில் மைசூர் தலைப்பாகை. 
அப்போதும் இப்போதும் சட்டை பாக்கெட்டில் நிறைய பேனாக்கள். பாடல்கள் இயற்றக்கூடிய சாகித்ய கர்த்தா.

பாடிய எல்லாப்பாடல்களுமே பின்னனிப் பாடகருக்கு மாஸ்டர் பீஸ் என்று அமைந்து விடுவது பூர்வ ஜென்ம சுகிர்தம்!
 ஒரு கால கட்டத்தில் மார்க்கெட் இழந்து ஸ்டுயோக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தார் என்பது சினிமாவின் அபத்த சூழல்.
அவர் மகத்தான சாதனை நிகழ்த்திய 1960களில் கூட இவர் கொடி தான் முழுக்கப் பறந்தது என்று கிடையாது. ஆனால் பாடக்கிடைத்த வாய்ப்புகள் முழுக்க பசும்பொன்னாக பரிமளித்தது. இத்தனைக்கும் தமிழ் உச்சரிப்பு சுத்தம் என்று சொல்ல முடியாது. மழலையான அழகு!
’கண் படுமே கண் படுமே நீ வெளியே வரலாமா’ பாடல் ’Gun படுமே Gun படுமே’ என்று கூட காதில் விழுந்திருக்கிறது.

பல்லவிகளில் அவர் குரல் தெளிந்த நீரோடையாய் வெளிப்பட்டது. சில பாடல்களில்  சரணங்களில் அவர் குரல் நுழையும். அப்போது அந்தப் பாடல் உடனடியாக உச்ச மேன்மையை எய்தி விடும். An Angel’s Lyrical Call!
“ தன் கண்ணனைத் தேடுகிறாள்!
மனக்காதலைக் கூறுகிறாள்.
இந்த அண்ணனை மறந்து விட்டாள்……
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்!”

“ வான் பறக்கும் கொடியினிலே, மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணித் தென்றல்……”
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்”

“ நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி!
நாயகன் நானும் ஓலை வடிவில்……………..
ஆடையைத் திருத்தி, மாலைகள் தொடுத்து ……..
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்! ”

“ பட்டு வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா!....
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்..”

ஏ.எம்.ராஜா இவருக்கு சீனியர். இசையமைப்பாளராகவும் பல ஹிட் பாடல்கள் தந்தவர். ஆனால் குரலின் தரம் என்பதைப் பொறுத்தவரை, தங்கம் போல உரசிப்பார்த்தால் பி.பி.ஸ்ரீனிவாஸை விட மச்சம் கம்மியானவர்.
காதல் பாடல்கள், டூயட் பாடல்கள் ஸ்ரீனிவாஸ் குரலில் குழைவும் தண்மையும் இணைந்து ஜ்வலித்தன.
”காற்று வந்தால் தலை சாயும் நாணல்!
காதல் வந்தால் தலை சாயும் நாணம்.”
”பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா”

காதல் சோலா பாடல்கள்
“காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்”

”காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன்
கவலையில்லாமல் தூங்கு ”

“ நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறொ, நான் வேறோ ”

“உன்னழகைக் கண்டு கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்”


தத்துவப்பாடல் என்றால்
’புரியாது, புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
அறிந்தவர் வாழ்வில் துயரேது”

”சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ…
பூவிருக்கும் நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா!
பொல்லாத கண்களடா, புன்னகையும் வேஷமடா!
நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா!...”

’சுமை தாங்கி’ என்ற ஒரே படத்தில் இரண்டு தத்துவப்பாடல்கள்!
”மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்”

”மயக்கமா, கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா”

பல வருடங்களுக்கு முன் சென்னை அமெரிக்கன் சென்டெரில்  ஹாலிவுட் நடிகை கோல்டி ஹான் நடித்த  Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் என்னால்  இன்று வரை மறக்க முடியாது. ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர்  பி பி ஸ்ரீநிவாஸ்  தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்துThe Sugarland Express’படத்தை பார்த்தார் என்பதால்.

 "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு நூறு தடவையாவது பாடியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரி மரத்தடி, வைகையாற்று மணல், பூங்காக்கள் இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை சிலநூறு தடவை பாடியுள்ளேன். இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது  என நண்பர்களும் உறவினர்களும் இன்றும் கூட சொல்கிறார்கள்.

பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போது புன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார்.


ரொம்ப காலம் முன்னதாக பி.பி.ஸ்ரீனிவாஸின் மகன் ஒருவர் ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்ட ஒரு விஷயம்.
பி.பி.எஸ் மகன் கன்யாகுமரியில் அதிகாலை இருட்டில் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக  படகில் செல்கிறார். கடல் நடுவில் நல்ல இருட்டில், ஏகாந்த அமைதியான சூழலில் விவேகானந்தர் பாறையிலிருந்து பி.பி.எஸ் பாடிய பக்திப்பாடலொன்று அப்போது ஒலித்திருக்கிறது. இவருக்கு சிலிர்ப்பு. “ அந்த நேரத்தில் அவருக்கு மகனாகப் பிறந்தவன் நான் என்ற பெருமிதம் எனக்கு ஏற்பட்டது!”

அவருக்கு தமிழ்த் திரை வாய்ப்புகள் முடிந்து விட்ட பின்னும், ஃபீல்ட் அவுட் என்ற நிலையிலும் அவருடைய பாடல்கள்
இனிக்கும் இளமை படத்தில் “ மாலை மயங்கினால் இரவாகும்
இளம் மங்கை மயங்கினால் உறவாகும்”

”தென்றலே நீ பேசு” – கடவுள் அமைத்த மேடை

”தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?” – ஊமை விழிகள்

’நாளைய செய்தி’ என்ற பிரபு நடித்த படத்தில் ஒரு பாடலின் சரணத்தில்
“ உந்தன் கருங்கூந்தலை ஒரு பாய் போலவே
நீ விரித்தாலென்ன? சுகம் கொடுத்தாலென்ன?”

இயக்குனர் செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ”பெம்மானே”

விஜய் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் இவர் அரங்கில் நுழையும்போது ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடலின் பின்னனி இசை ஒலிக்கிறது. முதுமையின் தளர்ச்சி தெரிய நடந்து வருகிறார். அரங்கில் அமர்ந்திருக்கும் மற்றொரு முதியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் எழுந்து இவரை நோக்கிச் செல்கிறார். இருவரும் நேருக்கு நேர் நெருங்கிய நிலையில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் சாஸ்டாங்கமாக பின்னனி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸின் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறார்.
சத் குரு!
அந்த நிமிடத்தில் என் கன்னத்தில் இருபக்கமும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!
இந்த வார்த்தைகளை 'அரசியல்' துவங்கி எந்த துறையிலும் கலை,இலக்கியம், இசை, நடிப்பு என்று எந்த துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த பலரைப் பற்றி எண்ணி பார்க்கும்போது சொல்ல வேண்டியிருக்கும்.
இந்திய த்திரை  பின்னணி பாடகர்களில்
 
முழுமையான பி பி ஸ்ரீநிவாஸ்,கிஷோர்குமார் பாடல்கள் பற்றி மட்டுமே மேற்கண்ட மேற்கோளை பிரயோகிக்க முடியாது.

…………………………………………………………………………..
Prathivadi Bhayankara Sreenivas

(22 September 1930 – 14 April 2013)