Share

Showing posts with label ஏ.வி.எம்.ராஜன். Show all posts
Showing posts with label ஏ.வி.எம்.ராஜன். Show all posts

Aug 9, 2012

‘ஏசுவின் அடிமை’யின் ஜெபக்கூட்டம்

1993ல் திருச்சி அருண் ஹோட்டலில் ஏ.வி.எம்.ராஜன் செய்த கிறித்துவ பிரார்த்தனை.

  வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பாவுடன் சுத்தமாக ஏ.வி.எம் ராஜன். ஏசுவின் அடிமை என்ற புதிய பெயரில்.

“ஸ்திரியே உனக்கும் எனக்கும் என்ன?” புதிய ஏற்பாட்டில் ஜீசஸ் தன் தாயிடன் கூறிய இந்த வார்த்தைகளை எடுத்து  அதற்கு relevant ஆக பழைய ஏற்பாட்டில் இருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினார்.
இவர் கூட உதவியாக நின்ற பாஸ்டர் அவசரத்தில் வேறு வசனங்களை வாசித்த போது
 ‘ அன்பார்ந்த சகோதரரே! நான் உங்களை வாசிக்கச்சொன்னது எசக்கியேல் ஆகமத்தில் இரண்டாவது அதிகாரத்தில் இரண்டாவது மூன்றாவது மூன்றாவது நான்காவது வசனம். ஆனால் நீங்கள் வாசிப்பது ஜெரோமியாவில் நான்காவது அதிகாரத்தில் ஏழாவது,எட்டாவது வசனங்கள். ‘ என்று தவறை சுட்டிக்காட்டினார். பைபிளை கரைத்துக் குடித்து விட்டார் என்று தெளிவாகத்தெரிந்தது.
அடுத்தது ரூத் ஆகமம் முதல் அதிகாரம் பத்தாம்,பதினொன்றாம்,பன்னிரெண்டாவது வசனம். பிரார்த்தனைக்கு வந்திருந்த ஒரு சிறுமி உடனே அதை வாசிக்க ஆரம்பித்தாள்.ராஜன் முகத்தில் ஒரு டென்ஸனான புன்னகை. தொடர்ந்துபுதிய ஏற்பாட்டில் லூக் எழுதிய நற்செய்தியில் மூன்றாவது வசனம் என்று ராஜன் சொன்னவுடன் அதே சிறுமி
அந்த வசனத்தை(Unless you repent you will all perish) தமிழில் உடனே சத்தமாக வாசிக்க ஆரம்பித்தாள்.
 உடனே ராஜன் அந்த சிறுமியைப் பார்த்து சொன்னார்.”அன்பார்ந்த சகோதரி.உன் போன்றவர்களுக்குத் தான் ஏசப்பாவின் ராஜ்ஜியத்தில் இடம் நிச்சயம்.உன் மீது ஏசப்பா தன் கொடைகளைப் பொழிவார். என்றாலும் கூட இங்கே நமக்கு எல்லோருக்கும் கேட்கும்படி வாசிக்க ஒரு பாஸ்டர் மேடையில் என்னோடு நிற்கிறார்.எனவே நீ இனிமேல் அமைதியாக இருப்பாயா?வாசிக்காமல் நிறுத்திக்கொள்கிறாயா?’ என்று சொன்னவுடன் அந்த சிறுமி தன் தலையை சந்தோஷமாக ஆட்டினாள். அதன் பின் வாசிப்பதை நிறுத்திக்கொண்டாள்.

’ஏவிஎம் ராஜன் செத்துவிட்டான்.இங்கே உங்களோடு ஜெபிப்பது ஏசுவின் அடிமை! ஒருவன் செத்துவிட்டால் என்ன சொல்வீர்கள். பிணம் என்று தானே! என்னை மட்டும் எப்படி ஏவிஎம் ராஜன் என்று சொல்லமுடியும்?’

ஏசுவின் அடிமை சின்ன பையனாய் இருக்கும்போது சர்க்கஸ் சென்று அந்த வித்தை செய்யும் பெண்களைப் பார்த்து விட்டு அவர்கள் கூடாரத்திற்கு மறுநாள் காலையில் சென்று ஓவென்று அழுதேன். அதில் ஒரு பெண் ‘தம்பி ஏன் அழுகிறாய்/? அழாதே’ என்று என்னைத் தேற்றும்போது சிறுவனான நான் கேட்டேன்” அக்கா, நீ அந்தரத்தில் ஆடுகிறாயே! நீ கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும் என்று எனக்கு பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது” என்று மீண்டும் ஓவென்று அழ ஆரம்பித்தபோது அவள் சொன்னாள்” அழாதே தம்பி.நான் சிறப்பான பயிற்சி பெற்றவள்.எனவே உயரத்திலிருந்து ஆடினாலும் நான் விழவே மாட்டேன்’ என்று என் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்னாள். என் அன்பார்ந்த ச்கோதரர்களே!உங்களுக்கு இன்று நான் சொல்கிறேன். பக்தியும் ஒரு பயிற்சி தான். ஏசப்பாவின் மீது நாம் வைக்கும் பக்தியும் கூட ஒரு பயிற்சி தான். இந்தப் பயிற்சியின் மூலம் நாம் வீழ்ந்துவிடாமல் இருப்போம்.”

‘ அடிமை கும்பிடாத சாமி இல்ல. ஒரு முறை இந்த மைக் கை கூட கும்பிட்டிருக்கிறேன்.அடிமையிடம் ஒரு காலத்தில் நிறைய கார் இருந்தது.
என் வீட்டில் என் மனைவி கேட்டார். ‘ ஏங்க நிம்மதி கிடைத்ததா?’
‘இல்லை,இல்லை’
அடிமை அழுதுகொண்டே பல நாள் ஒரு அறையில். வெளியே வராமல் அந்த அறையிலேயே. பல நாள் கழிந்தவுடன் ஒரு நாள் அறை வாசலில் ஒரு தேவதை. என் மனைவி தான!அன்றைக்கு தான் தரிசனம் கிடைத்தது’
அதன் பிறகு ஒரு நாள் சிகரெட் பிடித்துக்கொண்டு நான்.
என் மனைவி கேட்டார்’ ஏங்க இது இன்னும் தேவையா?’
அடிமை மீண்டும் தேம்பி தேம்பி அழுது...'

ஏவிஎம் ராஜன் பேசிக்கொண்டிருக்கும்போதே சிலர் எழுந்தார்கள். சிறுநீர் கழிப்பதற்காக.

ஏவிஎம் ராஜன் அவர்களைப் பார்த்து ‘சைத்தான் யாரையெல்லாம் அழைக்கிறானோ அவர்களெல்லாம் தயவு செய்து சென்று விடுங்கள். அம்பத்தொன்பது வயசு கிழவன்யா நான். காலையிலிருந்து பச்சைத்தண்ணி குடிக்காமல் தொண்டத்தண்ணி வத்த கத்திக்கொண்டிருக்கிறேன். அம்பத்தொன்பது வயசு கிழவன்.‘ ஏசப்பாவுடன் உடன்படிக்கை’ இரவு பத்து மணிக்குத் தான்.  
  ( ராத்திரி தான் சாப்பாடு சாப்பிடுவாராம். உணவைத்தான் ‘ஏசப்பாவுடனான உடன்படிக்கை என்று சொல்கிறார்!) சைத்தான் அழைப்பு யாருக்கெல்லாமோ அவர்கள் எழுந்து செல்லலாம்.’
அவசரமாய் ஒன்னுக்கு முடுக்கி எழுந்தவர்கள் எல்லாம் One Toilet சாத்தானை மிகுந்த பிரயாசையுடன் அடக்கிக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள்.
’ஏசு அனந்தகோடி சூரியப் பிரகாசன்!அல்லேலுயா!அல்லேலுயா!’ ராஜன் அவ்வப்போது சொல்லும்போது  ’அல்லெலுயா’ என்று ஆர்ப்பரிக்கும் ஆண்களும்பெண்களுமான பக்தர் கூட்டம்.
பெரும்பாலோர் குளிக்கவில்லை என்பது பார்த்தபோதே தெரிந்தது..பலர் கண்களில் பூளை இருந்தது!
அங்கே அந்த ஜெபக்கூட்டத்தையும் ராஜனையும்
 ’ வேடிக்கை’ பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஏனோ திடீரென்று அதற்கு முந்திய வருடம் திருச்சிஃபெமினோ ஹோட்டலில் நல்ல போதையில் லிஃப்ட்டில் இருந்து இறங்கிய நடிகர் ஜெய் சங்கர் லாபியில் நின்று கொண்டிருந்த  House keeping Superviser ஒருவரைப் பார்த்து “ யோவ்! ரூம்ல ஏசியை போட்டு வைங்கய்யா.” என்று கத்தியது நினைவுக்கு வந்தது. ”ஏசி போட்டுத்தான் சார் இருக்குது” என்ற பதிலுக்கு ”ம்.. மண்ணாங்கட்டி” என்ற ஜெய்சங்கர்,திரும்பி ரிஸப்சனிஸ்ட் ஆக இருந்த என்னை அரை நிமிடம் வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அதன் பின் கூட வந்தவர்கள் தாங்கிப் பிடித்துக்கொள்ள தள்ளாடி நடந்து போய் காரில் ஏறினார்.
ஏவிஎம் ராஜன் -ஜெய் சங்கர் இருவரும் Contemporaries!
.....

1965ல்கே.எஸ்.ஜியின் ‘என்ன தான் முடிவு’ படத்தில் ஏசுவைப் பற்றி ஒரு டயலாக்கில் ராஜன் குறிப்பிடுவார். அப்போது அவர் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார். பின்னால் ‘ஏசுவின் அடிமை’ ஆகப்போவதைப் பற்றி!



http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/avm.html