Share

Showing posts with label கூத்துப்பட்டறை. Show all posts
Showing posts with label கூத்துப்பட்டறை. Show all posts

Dec 5, 2015

கூத்துப்பட்டறை ”பத்மஸ்ரீ” ந.முத்துசாமி



கூத்துப்பட்டறை ந.முத்துசாமி சிங்கப்பூர் சமீபத்தில் போயிருந்தார்.
ஒருவர் தன் குழந்தையைத் தோளில் வைத்துக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறார். உடனே இவருக்கு தன் அப்பா ஞாபகம் வருகிறது. தன் ஏழாவது வயதில் இழந்து விட்ட அப்பா…

 முத்துசாமி சார் மனதில் குழந்தையாய் இருந்த போது பார்த்த அப்பா இன்றும் பசுமையாக இருக்கிறார். இரவு தூங்கப்போகும்போது ‘ நற்றுணையப்பா!’ என்று வாய் விட்டு சொல்லும் அப்பா.
’நற்றுணையப்பன்’ இவர் பிறந்த ’புஞ்சை’யின் சிவபெருமான் பெயர். ஆதித்த கரிகாலன் கட்டிய கோயிலின் தெய்வம்.
 ’நற்றுணையப்பன்’ என்ற அருமையான நாடகமும் கூட முத்து சாமி எழுதியிருக்கிறார். அவருடைய மகன்
மு. நடேஷ் இந்த நாடகத்தை இயக்கியதுண்டு.

‘அப்பாவும் பிள்ளையும்’ என்ற அவருடைய பிரபலமான நாடகம். ‘எனக்கும் எங்கள் அப்பாவுக்கும் இடையிலான உறவை வைத்துக்கொண்டு எழுதப்பட்டது. ’என்னுடைய ஏழாவது வயதிலேயே எங்கள் அப்பா இறந்து விட்டார். அது வெகுவாக என்னை பாதித்தது.’ என்பார்.

”இன்னக்கி செத்தாப்பலே இருக்கு…இன்னும் கொஞ்சம் வயசு வந்த பின்னாலே மட்டும் செத்து இருந்தார்னா?...
இந்த அப்பாவாலே வந்த வினை. இன்னும் கொஞ்ச காலம் மட்டும் இருந்திருப்பார்னா?” – ‘அப்பாவும் பிள்ளையும்’ நாடகத்தின் கெட்டியான வசனம்!

இவர் பாலகனாய் இருக்கும்போதே முத்துசாமியின் அப்பா மறைந்திருக்கிறார்.
க.நா.சு., சுந்தர ராமசாமி இருவரையும் தகப்பனார் உறவு மிகவும் ஆக்கிரமித்திருக்கிறது.  இந்த இருவரின் நாற்பதையொட்டிய மத்திய வயது வரை தகப்பனார் உயிரோடிருந்திருக்கிறார்.
அசோகமித்திரன் இருபதையொட்டி தகப்பனாரை இழந்தவர். 'என் அப்பா செத்துப்போய் விட்டார்.....'
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டிருக்கிறார் அசோகமித்திரன்.



புதுவையில் ஒரு நாடக விழாவில் 1990ல் முத்துசாமியை நேரில் பார்த்தேன். அவரோடு அளவளாவிய விஷயங்கள் இன்றும் மறக்க முடியவில்லை.
இன்று இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் சென்னை ஸ்ரீ அய்யப்பா நகரில் மீண்டும் ’கூத்துப்பட்டறை’யில் சந்தித்தேன்.
தி.ஜானகிராமனின் மோகமுள்ளில் ரங்கண்ணா பற்றி பாபு சொல்லும் வார்த்தைகளை கடன் வாங்கி, நான் இப்போது முத்துசாமி சார் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
” சமுத்திரம் மாதிரி இருக்கிறது அவர் ஞானம்! அதை விடப் பெரிதாய் இருக்கிறது அவர் குணம்!”


சி.சு.செல்லப்பாவின் ’எழுத்து’ மூலம் தெரிய வந்தவர்.
சிறுகதை ஆசிரியராகத் தான் அசாதாரணமான சாதனை படைப்பாளியாக பரிமளித்தவர். ”நீர்மை” என்ற கனமான தொகுப்பு மறக்கவே முடியாதது. களம் மாறி நாடகம் மீது இவர் கவனம் முழுமையாக திசை திரும்பியது.
எது, என்ன என்பது எல்லாம் நெற்றியில் நற்றிணையப்பன் எழுதியிருக்கிறான்!

டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்று ராமானுஜம் போன்றவர்கள் தமிழ் நாடக இயக்கத்துக்கு வந்தார்கள் என்றால், அதற்கு முற்றிலும் மாறாக ’எழுத்து’ பத்திரிக்கையின் வழித்தோன்றல் ‘கூத்துப்பட்டறை’ என்ற பெருமிதம் முத்துசாமிக்கு உண்டு.


”சங்கீதத்தை நோக்கிய தயாரிப்புக்கான செறிவு நாடகத்திற்கு இருக்கிறது. நுணுக்கமான உணர்வுகள்,கருத்துப்பரிமாற்றங்கள்,தத்துவங்கள் எல்லாம் நாடகத்தில் இருக்கிறது. சங்கீதத்தின் சாகித்யம் தாங்கும் ராகபாவத்தில் இருக்கிறது. அந்த ராகத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தும் வார்த்தைச் சேர்க்கைகளும் ஒழுங்கும் அந்த சாகித்தியத்தில் இருக்கிறதா என்பது மட்டுமே அங்கு பார்க்கப்படுகிறது. நாடகத்தில் கருத்தும் முதலானது. சப்த ரூபங்கள், உணர்ச்சி பாவங்கள், அர்த்த பாவங்கள் அனைத்தையும் கொண்டது நாடகத்தின் சாகித்தியம். சங்கீதத்தின் அர்த்த பாவம் எளிமையானது. நாடகத்தின் அர்த்த பாவம் மிகவும் சிக்கலானது. இவை பிடிக்கப்படும்போது நாடகம் சங்கீதத்தை விட எந்த வகையிலும் இரண்டாந்தரமானது அல்ல என்பது பிடிபடும். மேடையில் நாடக நிகழ்வு மிகச்சிறந்த ஒரு கச்சேரியை ஒத்ததாக இருக்கும்!” என்பார் ந.முத்துசாமி.

சினிமாவில் கூத்துப்பட்டறை நடிகர்கள் விஜய் சேதுபதி, பசுபதி, விமல், விதார்த், கலைராணி, தேவி, மீனாட்சி, ஜார்ஜ்,ஜெயராவ்,ஜெயக்குமார்,
குரு சோமசுந்தரம், குபேரன், சஞ்சீவி, கவின் ஜெ.பாபு என்று பலர்.


‘ ந.முத்துசாமி நாடகங்கள் ‘ இப்போது வெகு சிறப்பாக வெளி வந்திருக்கிறது.

.................................................................

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html



Nov 24, 2015

’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார்






’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமாரிடம் இருந்து ஒரு கால்.

”சார்!கேரளா போயிருந்தேன். காரை நானே ஓட்டிக்கொண்டு 650 கிலோ மீட்டர் சுற்றி விட்டு வந்தேன். மாஹி போயிருந்தேன். ’உஸ்தாத் ஹோட்டல்’ மலையாள படம் எடுக்கப்பட்ட கடற்கரையைப் பார்த்தேன்.”

பத்து வருடங்களுக்கு முன் திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் க்ளப்பில் நான் ஹெமிங்வேயின் “ ஓல்ட் மேன் அன் த சீ ” நாவல் பற்றி, யான் மார்ட்டலின் “லைஃப் ஆஃப் பை” நாவல் பற்றி, ஜே.எம். கூட்ஸியின் “டிஸ்க்ரேஸ்” பற்றியெல்லாம் பேசிய போதும், “ போஸ்ட்மேன் “ “ஜூலியஸ் சீஸர்” ”காலிகூலா” திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது அவை பற்றி உரை நிகழ்த்திய போதெல்லாம் குழந்தை முகம் கொண்ட ஒரு பையன் ஆர்வமாக அதிலெல்லாம் கலந்து கொள்வார். எப்போதும் சிரித்த முகம். எனக்கென்னவோ அந்த கண்கள் கூட சிரிப்பதாகத் தோன்றும். அவ்வளவு உற்சாகம். ஆனால் அதிசயிக்கத் தக்க அடக்க சுபாவம். அறிவை ஒளித்து வைத்த இயல்பான சுபாவம். ’நீங்க ப்ராமினா?’ என்று நான் கேட்டிருக்கிறேன். ’இல்லீங்க.. நான் ப்ராமின் இல்ல.என் பெயர் ரவிக்குமார்.’


குறும்படங்கள் இயக்க ஆரம்பித்திருந்தார் ரவிக்குமார். அவருடைய படங்கள் கூட சென்ட்ரல் லயன்ஸ் க்ளப்பில் பார்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுண்டு. ஒரு குறும்படம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் எடிட்டிங் பற்றி ஒருவர் ஏதோ குறை சொன்ன போது, ’அது குறையே யல்ல. லாஜிக் இருக்கிறது’ என்று நான் விளக்கினேன்.

என் வீட்டிற்கு ரவிக்குமார் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்ததுண்டு.

திருப்பூர் பி.என்.ரோட்டில் ஹாலிவுட் படங்கள் பற்றி பேசிக்கொண்டு சில்லி சிக்கன் இருவரும் சாப்பிட்டிருக்கிறோம். எனக்கு நல்ல ஹாலிவுட் படங்கள் டி.வி.டி கிடைக்கும் என்று புது பஸ்டாண்ட் பக்கம் ஒரு கடையை ரவிக்குமார் காண்பித்தார்.

”என்ன புத்தகம் படிக்கிறீர்கள் இப்போது?’ என்று கேட்டபோது “மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள்” என்றார்.

நான் ”கூத்துப்பட்டறை ந.முத்துசாமி தெரியுமா?
அவருடைய நாடகங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, வண்ண நிலவன், விமலாதித்த மாமல்லன்,சாரு நிவேதிதா ஆகியோரை படிக்கச்சொன்னேன்.

எப்போதும் ஏதாவது நல்ல நூல் படித்தவுடன்,உலகப்படம் பார்த்தவுடன் எனக்கு போன் செய்து உடனே அது பற்றி ரொம்ப உற்சாகமாகப் பேசுவார்.
நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் என் பெரியமாமனார் இறந்த இழவு வீட்டில் இருந்த போது ரவிக்குமார் போன். ”சார்! நீங்க சொன்ன எழுத்தாளர்களையெல்லாம் தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.” நான் “ You have a flair and so you have a very promising future!”

என்னுடைய “Child is the father of the man” படித்து விட்டு “ சார்! இதை நான் குறும் படமாக எடுக்க ஆசைப்படுகிறேன்” என்று அடிக்கடி சொன்னதுண்டு. ப்ளாக்கில் நான் எழுதியவற்றையெல்லாம் ஆர்வமாய் படித்திருக்கிறார். ஹிட்ச்காக்கின் “The Birds” பற்றி நான் எழுதிய போது ரவிக்குமார் போட்ட கமெண்ட் இன்னும் இருக்கிறது.

வருடாவருடம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் உலகத்திரைப்படங்கள் திரையிடும் பகுதியில் மிகவும் பிஸியாக ரவிக்குமார் இயங்கிக்கொண்டிருப்பார்.

டி.வி.யில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒரு குறும்படம். ரவிக்குமாரை அந்த நிகழ்ச்சியில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் பிறகு அவர் சென்னையில் சினிமாவுலகில் போராடியதெல்லாம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ’சூது கவ்வும்’ உதவி இயக்குனர் என்பதும் தெரியாது. ‘இன்று நேற்று நாளை’ படம் இயக்கியது பற்றியும் எனக்குத் தெரியாது.

தற்செயலாக ஆனந்தவிகடன் பார்த்தபோது ரவிக்குமார் புகைப்படத்துடன் வெளியான பேட்டியைப் பார்த்தபோது தான் ’ஆஹா! நம்ம ரவிக்குமார் தான் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனரா!’ என்று ஆச்சரியப்பட்டேன்.



இதே போல ’முண்டாசு பட்டி’ ராம்குமார் புகைப்படம் முன்னர் ஆனந்த விகடனில் பார்த்த போது தான் ‘ ராமு தான் முண்டாசுபட்டி ராம்குமாரா!’ என்று வியந்திருக்கிறேன்.

ராமுவும் திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ்க்ளப் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். இவரும் எப்போதும் சிரித்தமுகமாகவே தான் இருப்பார். அப்போது குமுதம், ஆனந்தவிகடனில் வெளியாகும் தன் ஜோக்குகளை என்னிடம் காட்டியிருக்கிறார் பின்னாளில் ’முண்டாசுபட்டி’ இயக்கிய ராம்குமார்.


..........................................