Share

Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts

Feb 2, 2013

கிருஷ்ணன் நம்பி




ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை ’கிருஷ்ணன் நம்பியின் நினைவு’க்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

 சமர்ப்பணம் என்பது ஒரு பக்கத்தில் ஒரு வார்த்தையில் வருகிற விஷயம். ஆனால் இது உள்ளடக்கியுள்ள விஷயம் எப்போதும் பெருங்காவியம்.
கமலம் குறுநாவல் தொகுப்பை தி.ஜானகிராமன் சமர்ப்பணம் செய்திருந்த விதம் இப்படி “ இந்த தொகுப்பில் உள்ள கதையொன்றில் ஒரு பாத்திரமாக வருகிற என் இரண்டு சகோதரிகளின் கணவர் ராமச்சந்திரனுக்கு இந்நூல் சமர்ப்பணம். “
இந்த சமர்ப்பணம் சொல்லிவிடுகிற குடும்ப ரகசியம்! 




இரண்டு வருடம் முன் திருப்பூர் புத்தக கண்காட்சியில் 'உயிர்மை' ஸ்டாலில் சாரு நிவேதிதா எழுதிய ’சினிமா சினிமா’ என்ற நூலை தற்செயலாகப் புரட்டிய போது எதிர்பாராத ஆச்சரியம். சமர்ப்பணம் R.P.ராஜநாயஹத்துக்கு.


சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல்கள் எட்டு படித்திருக்கிறேன். க.நா.சு, ஜீவா, சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, பிரமிள், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கு. அழகிரிசாமி ஆகிய மகத்தான ஆளுமைகள் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைகள். அரவிந்தன் தொகுத்தவை.



கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை படித்த போது உடைந்து போய் அழுது விட்டேன். நம்பியும், சுராவும் பார்த்த ( ஜே.ஜே யில் கூட விவரிக்கப்பட்டிருக்கும் )அந்த சூரியோதயக்காட்சி! இதை சுந்தர ராமசாமியிடம் அப்போது தொலைபேசியில் தெரிவித்த போது இன்னும் சிலர் கூட நம்பி நினைவோடை படித்து விட்டு கலங்கிப் போனதாகத் தன்னிடம் தெரிவித்ததாக சொன்னார்.
“No tears in the writer, no tears in the reader. No surprise in the writer, no surprise in the reader.”-
-Robert Frost 



ஜே.ஜே சில குறிப்புகளில் எடுத்தவுடனே சு.ரா ஜே.ஜே வின் மரணம் பற்றி ஆல்பெர் காம்யு இறந்ததற்கு மறு நாள் ஜே.ஜே. இறந்ததாகக் குறிப்பிட்டு விட்டு தமிழிலும் நாற்பதை ஒட்டிய வயதில் புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு. அழகிரி சாமி, மு.தளைய சிங்கம் என்று எத்தனை இழப்புகள் என்பார்.
புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு.அழகிரி சாமியெல்லாம் படித்து முடித்திருந்த நேரம். சுந்தர ராமசாமி மூலம் தெரிய வந்த கிருஷ்ணன் நம்பி, பிரஞ்சு எழுத்தாளன் ஆல்பெர் காம்யூ, இலங்கை எழுத்தாளன் தளைய சிங்கம் இவர்களெல்லாம் யார்?


என் தேடலில் அன்று கிருஷ்ணன் நம்பி, ஆல்பர் காம்யூ, மு.தளைய சிங்கம் இடம் பெற்றது இங்கனம் தான். 


சில வருடங்களுக்கு முன்  எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார்: ”தளைய சிங்கத்தை நினைத்தால் இனி ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது!” 




கிருஷ்ணன் நம்பி கூட காலத்திற்கு முந்தியே நாற்பதையொட்டிய வயதில் தான் மரணமடைந்திருக்கிறார். அப்போது 44 வயதாம்.
தி.ஜானகிராமனின் எழுத்து மீது கிருஷ்ணன் நம்பிக்கு இருந்த ப்ரேமை!
சு.ரா சொல்வது : ’ஜானகிராமன் மீதான அவனது வியப்பு கடைசி வரை நீடித்திருந்தது. ஜானகிராமனை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய கனவு. நேரில் பார்த்தால் என்ன பேசுவாய் என்று கேட்டேன். ஒன்றுமே பேச மாட்டேன். அவரைப் பார்க்கப் போவதற்கு முன் ஒரு தங்க மோதிரத்தைச் செய்து ரெடியாக பாக்கெட்டில் வைத்திருப்பேன். அவரைப் பார்த்ததும் கையைக் கொஞ்சம் நீட்டுங்கள் என்று சொல்வேன். அவர் நீட்டுவார். நான் அந்த மோதிரத்தை அவர் கையில் போட்டு விட்டு எதுவும் பேசாமல் அப்படியே வந்து விடுவேன் என்பான். ஆனால் அப்படி தங்க மோதிரத்தைப் போடும் வாய்ப்பு அவனுக்கு வாழ்க்கையில் கிடைக்கவேயில்லை.’



கிருஷ்ணன் நம்பி, ஆதவன் இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் கூட தி.ஜானகிராமன் சாதனை எழுத்து பற்றி இந்தத் தலைமுறையினருக்கு எவ்வளவோ சொல்லியிருப்பார்களே!


ஜே.ஜே படித்த வேகத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தால் 1964ல்வெளியிடப்பட்டு பதினேழு வருடங்களாக அன்று 1981லும் கூட விற்பனையில் இருந்த 
(எவ்வளவு வருடமாக ஒரே பதிப்பு விற்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது!)கிருஷ்ணன் நம்பியின் ’நீலக்கடல்’ வாங்கிப் படித்து விட்டு நானும் என் நண்பன் M.சரவணனும் அசந்து போய் விட்டோம்.
குழந்தையுலகத்தை அழகாக கண் முன் விரித்துக்காட்டும் அதிசயக்கலைஞன்!  
அந்த சிறுகதைத் தொகுப்புக்கு அழகான சின்ன முகவுரை கிருஷ்ணன் நம்பி எழுதியிருக்கிறார். அந்த முகவுரையை மட்டுமே நாங்கள் எத்தனை முறை அப்போதெல்லாம் படித்திருக்கிறோம் !


கிருஷ்ணன் நம்பியின் முழுத்தொகுப்பு இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இலக்கியக்குறிப்புகள், கட்டுரைகள், கடிதங்கள், என்று எல்லா ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்ற குறிப்புடன் வெளி வந்துள்ள  இந்த நூலை வாங்கியவுடன் ’நானும் கடவுளும் அறிஞனும்’ தலைப்பிலான  அந்த நீலக்கடல் முகவுரையைத் தான் தேடினேன். 
அதனை இங்கே தந்துள்ளேன். 



 கிருஷ்ணன் நம்பி நீலக்கடல் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முகவுரை.

நானும் கடவுளும் அறிஞனும்


நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.


...............................................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_22.html

                    

Jan 26, 2013

யப்பா பைரவா !



’நவக்கிரகம்’ என்று ஒரு கே.பாலச்சந்தர் படம். அதில் மேஜர் சுந்தர்ராஜன் தன் தம்பியின் நண்பன் நாகேஷிடம்
“உன் பே..ப்பே..பேர் என்ன?” என்பார்.
நாகேஷ் : “ பா.. ப்பா.. பாலு “
’’என்ன கிண்டலா பண்றே?’’ என்று சுந்தர்ராஜன் கோபமாகி நாகேஷ் கன்னத்தில் அறைந்து விடுவார்.
வி.கோபால கிருஷ்ணன்: “ அண்ணே.. உங்கள போல இவனுக்கும் திக்குவாய் தான்”
மேஜர்: “ அடடே....   மன்னிச்சுக்கப்பா.. நீ என்ன imitate பண்றேன்னு உன்னை தெரியாம அடிச்சிட்டேன்..
நாகேஷ் : பெரியவங்கள imitate பண்ணலாம். ஆனா  counterfeit பண்ணக்கூடாது!

..............

கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா மூலமாக எனக்கு அறிமுகமான  நண்பர் இளையராஜா. இவரது  மூத்த சகோதரர் செந்தில் நாதன். இருவருமே திருப்பூரில் தனித்தனியே பிசினஸ் செய்பவர்கள். இருவருமே நல்ல வாசகர்கள்.சேலம் ஓமலூரைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு வருடம் முன் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் காரணமாக தொடர்ந்த சிக்கலால் சமீபத்தில் செந்தில் நாதனுக்கு ஒரு பெரிய ஆபரேசன். அவர்கள் வீட்டுக்கு போயிருந்த போது செந்தில் நாதன் சொன்ன விஷயம் இது.

சில வருடங்களுக்கு முன் திருப்பூரில் ஓமலூர் சகோதரர்கள் அங்கேரிப்பாளையத்தில் ஒரு அபார்ட்மெண்டில் குடியிருந்த போது அதே அபார்ட்மெண்டில் புலி சரவணன் – டெய்சி தம்பதியர் குடியிருந்திருக்கிறார்கள். புலி சரவணனுக்கு டையிங் பிசினஸ். Week-end சமயத்தில் செந்தில் நாதனும் புலி சரவணனும் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் ரிலாக்ஸ்டாக மதுவருந்திக் கொண்டிருந்த போது புலி சரவணன்
” நாளைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப்போகிறேன்.” என்று சொல்லியவர் மறு நாள் ஒரு 20 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவனை அழைத்து வந்து “ இவர் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்! சாட்சாத் எஸ்.ராமகிருஷ்ணன்! “ என்று சொல்லியிருக்கிறார். 
செந்திலுக்கு புல்லரித்து செடியரித்து மரம் அரித்து விட்டது!
அப்போது தான் ஆனந்த விகடனில் ராமகிருஷ்ணன் முதல் தொடர் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அந்தத் தொடர் முடிய மூன்று வாரங்கள் தான் இருந்தது. இவ்வளவு சின்ன பையனாக எஸ்.ராமகிருஷ்ணன் இருப்பார் என்று செந்தில் கற்பனை கூட செய்திருக்கவில்லை எனும்போது பரவசமாகி விட்டார்! பால் பருவத்தில் எவ்வளவு அதி அற்புதமாக எழுதுகிறார்.

எஸ்.ரா இப்போது திருப்பூரில் புலி கணேசனிடம் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. நான்காயிரம் சம்பளம். அந்தப் பையன் தான் ஆனந்த விகடனுக்கு நான்கு வாரம் முன்னதாகவே எப்போதும் எழுதி அனுப்பி விடுவதாகவும் பத்திரிக்கையிலிருந்து வாரம் ரூபாய் பத்தாயிரம் தனக்கு தருவார்கள் என்றும் சொல்லியிருக்கிறான். 

புலி கணேசன் புத்தகமோ, பத்திரிக்கையோ பார்ப்பவரல்ல.  பிரபல விகடனில் ’தன் பால் பருவத்தில்’ எழுதும் மிக இளம் எழுத்தாளர் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்கிறார் என்பதைப்பற்றி தெரிய வந்தவுடன் தன் நண்பர் செந்தில் நாதன்( வாசகர் என்பதால்) பூரிப்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்!

உடனே, உடனே செந்தில் நாதன் தன் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று தன் புத்தக கலெக்சனைக் காட்டியிருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பு நாவல் இளம் எழுத்தாளர் படிக்கவில்லை என்றதும் மனமுவந்து அதை இவர் பரிசளித்திருக்கிறார். 


செந்தில் நாதன் ரொம்ப வெள்ளை உள்ளத்துடன் புலி கணேசனிடம் எஸ்.ரா வின் பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை இன்னும் கௌரவமாக நடத்தச் சொல்லியிருக்கிறார். உடனே பால் மனம் கொண்ட புலி சரவணன் இந்த பையனின் சம்பளத்தை ஆறாயிரமாக உயர்த்தி விட்டார். வேலை இனி இந்த எஸ்.ரா வுக்கு கம்பெனிக்கு வரவேண்டிய செக், பணம் கலக்சன் மட்டும் பார்த்தால் போதும் என்று சலுகை.
பழம் நழுவி பாலில்!


செந்தில் நாதன் இந்தப் பையன் முதலாளி புலி கணேசனைப் பார்க்க வீட்டிற்கு வந்தால் உடனே எழுந்து நின்று விடுவார். ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தனாயிற்றே. 

புலியிடம் செந்தில் “ மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய எழுத்தாளன் பாருங்கள்! பால் பருவ சாதனையாளன். ஐய்யோ.புலி ! உங்களிடம் வேலை செய்வது உங்களுக்கு எவ்வளவு பெருமை! ” என்று மலைத்து மாய்ந்து….......

அந்தப்பையன் அடுத்த வாரம் “ நான்  விகடனில் ட்ரையினில் மானபங்கப்படுத்தப் பட்டு ரேப் செய்யப்பட்ட வட நாட்டுப் பெண் பற்றி எழுதியதைப் படித்து விட்டீர்களா? “ என்று கேட்டிருக்கிறான்.


“ ஒரு குறிப்பிட்ட வகை சிலந்தி பற்றி நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அந்த சிலந்தி  ஒரு மனிதனை கடித்தால் குறிப்பிட்ட சில வியாதிகள் குணமாகின்ற என் கண்டு பிடிப்பைப் பற்றி டிஸ்கஸ் செய்வதற்காக என்னை அமெரிக்காவில்’ நாசா’ விலிருந்து அழைத்திருக்கிறார்கள்!” என்று அவன் ஒரு நாள் முதலாளி வீட்டுக்கு வந்த போது அவர் முன்னிலையிலேயே தன்னைப் பார்த்தவுடன் மரியாதையுடன் எழுந்து நின்ற செந்தில் நாதனிடம் கேஷுவலாக சொல்லி விட்டான்.


ஆ! ஆ! ஆ! எஸ். ரா எழுத்தாளர் என்பது தெரிந்ததே. அவர் சின்ன பையன் என்பதும் தெரிந்ததே. எளிமையாக நம் நண்பர் புலியிடம் வேலை பார்க்கிறார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் இன்று ’நாசா’ போற்றும், 
 ( கோவை ஜி.டி.நாயுடு பாணியில் சுயம்புவான, மம்சாபுரம் ராமர்பிள்ளை போல பரபரப்பான ) விஞ்ஞானியும் கூட என்பது தான் தெரியாததே!!!


மூன்றே வாரத்தில் எஸ்.ரா வின் தொடர் ஆனந்த விகடனில் முடிவுக்கு வந்த போது எஸ்.ராமகிருஷ்ணனின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த செந்தில் நாதனுக்கு அதிர்ச்சி. 
புலி சரவணனிடம் வேலை பார்த்த ஆளுக்கு பதிலாக வேறொரு யாரோ ஒருவருடைய படம் வெளியிடப்பட்டிருந்தது.. சில நிமிடங்கள் குழப்பம். செந்தில் மூளையில் பனி மூட்டம். பனி விலகியதுமே அச்சில் வந்திருந்த அந்த யாரோ ஒருவர் தான்  உண்மையான எஸ். ராமகிருஷ்ணன் என்பது உறைத்தது! 

உடனே அந்த ஆனந்த விகடனுடன் புலியின் ஃபேக்டரிக்கு புயலாய் கிளம்பிப்போனால் பால் பருவ எழுத்தாளரை அங்கே வேலை பார்ப்பவர்கள் கும்மிக்கொண்டிருந்திருக்கிறார்கள். கலக்ஸனில் செக்குகளை மட்டும் ஒப்படைத்த அந்த எழுத்தாளன் கேஷ் எல்லாவற்றையும் அமுக்கிய விஷயம் வெளி வந்து விட்டதால் மண்டகப்படி. 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி விட்டார் செந்தில் நாதன். ஆனந்த விகடனை த் தூக்கிப்போட்டு விட்டார். எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றி விட்டாரேயம்மா.....

யப்பா பைரவா! நீ யாரு பெத்த பிள்ளயோ!
புலி கணேசன் கையாடல் தெரிய வந்தபோது எழுத்தாளர் இப்படி அயோக்கியத்தனம் செய்து விட்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்தவருக்கு கையாடல் செய்தவர் எழுத்தாளரே அல்ல, எஸ்.ராமகிருஷ்ணனும் அல்ல என்று தெரிந்த போது பேரதிர்ச்சி. இப்போது முதலாளியே அந்த ஃப்ராடை அடிக்க ஆரம்பித்து விட்டார். உடனே வேலை பார்ப்பவர்களின் தர்ம அடி பலமாகி விட்டது.

முதலாளியின் மனைவி திருமதி டெய்சி தான் அக்கவுண்ட் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர் தான் கையாடலை அறிய வந்தவர். 

வலி பொறுக்க முடியாமல் அந்த ஃப்ராடுப் பயல் “ மேடம். நானும் ஒரு கிறிஸ்டியன் தான். மேடம். அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்க மேடம்!” என்று கெஞ்சியிருக்கிறான்.

மூன்று வாரத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கையாடல் செய்த அந்த ஃப்ராடிடம் இருந்து ஒரு பைசா கூட ரிகவர் செய்ய முடியவில்லையா?
அவன் யார்? எந்த ஊர்?

அவனுக்கு புலி கொடுத்திருந்த பைக்கை மட்டும் ரிகவர் செய்து விட்டு விரட்டியிருக்கிறார்கள்.


.......................................................




இங்கே திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் தற்செயலாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன்.
 என்னை 'சேர்தளம்' திருப்பூர் வலைத்தள எழுத்தாளர்களுக்கு  அறிமுகப்படுத்தினார்(!)
அப்போது என்னைப்பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்  சொன்னார் : "  ராஜநாயஹம் - ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்! "


............................
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_25.html

http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_11.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/drbrodies-report.html