Share

Showing posts with label கே.பாக்யராஜ். Show all posts
Showing posts with label கே.பாக்யராஜ். Show all posts

May 9, 2017

கானல் ’பொய்’கை


1986ம் வருடம். என் அப்பா அழைப்பதாக அவருடைய ஆபிஸில் இருந்து போன் வந்தது. திருச்சி ராஜா காலனி வீட்டில் இருந்து கிளம்பி போனேன். அப்போது சைல்ட் ஜீசஸ் ஆஸ்பிட்டலுக்கு எதிரே இருந்த கஸ்டம்ஸ் ஆபிஸில் அப்பா சூப்ரிண்ட்.


அப்பாவின் கேபினில் நுழைந்தேன்.
அப்பா முன் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்பா “ இவர் யார் தெரியுமா? பாக்யராஜின் அண்ணன் தன்ராஜ்.”
அப்பா காரணத்தோடு தான் என்னை அழைத்திருக்கிறார்.

நான் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ‘அழைத்தால் வருவேன்’ படத்தில் உதவி இயக்குனராய் வேலை பார்த்ததை பாக்யராஜின் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார். ‘என் பையனை உங்க தம்பியிடம் சேர்த்து விடுங்கள்’ என்று சொன்ன பின்பு தான் என்னை ஆஃபிஸிற்கு வரச்சொல்லியிருக்கிறார்.
தன்ராஜ் உடனே “ இவர் தானா உங்கள் மகன் ராஜநாயஹம்! கவலைப்படாதீர்கள். நான் என் தம்பி கிட்ட சொல்லி இவரை அஸிஸ்டண்ட் டைரக்டரா சேத்து விட்டுடுறேன்.”

உடனே தன் தம்பிக்கு என்னை அவருடைய அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளச்சொல்லி பிரமாதமான கடிதம் அங்கேயே ஆங்கிலத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். Rajanayahem’s father is wellknown to me. He is very helpful to me…….. இப்படி..இப்படி.
”நீங்கள் இந்த கடிதத்தை கொடுங்கள். நான் பத்து நாளில் சென்னை வருவேன். அப்போது நேரடியாகவே நானும் தம்பியிடம் சொல்வேன். இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம்.”


தன்ராஜ் கோவையில் நடத்தி வந்த வீடியோ கேஸட் கடை மீது அப்போது ஒரு கஸ்டம்ஸ் கேஸ்.


தன்ராஜ் ரொம்ப உற்சாகமாக என்னிடம் பேசினார்.
நான் சென்னை போகவில்லை. பாக்யராஜிடம் சேரவுமில்லை.


அன்றைய மன நிலை. மீண்டும் சினிமாவுக்கு போக வேண்டுமா? Once bitten twice shy. வேண்டாம்.

....................


1992ம் வருடம் மார்ச் மாதம் பள்ளபட்டி பெரிய சேட்டு என்னை ஃபெமினா ஹோட்டலில் ரிஸப்சனிஸ்டாக பார்க்கிறார்.
“ Gabie! It’s a pleasant surprise.”
சென்னை போனவுடன் பெரிய சேட்டு போன் “ எனக்கு உன்னை ரிஸப்சனிஸ்டாக பார்த்தது பிடிக்கவில்லை.”
நான் வேலைக்கு சேர்ந்து அந்த ஐந்தாவது மாதம் ரிஸைன் செய்து விட்டேன்.
அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘ There is always trial and error.’

அந்த கடிதத்தை அவருடைய நண்பர் போலீஸ் டெபுடி கமிஷனர் பாஸ்கர் படித்திருக்கிறார். திரும்ப திரும்ப அந்த கடிதத்தை ரசித்து படித்திருக்கிறார்.

மே மாதம் முதல் வாரம் மீண்டும் பெரிய சேட்டு போன்.
“ நீ உடனே கிளம்பி சென்னை வா. பாக்யராஜ் உன்னை சந்திக்க விரும்புகிறார்.”
டெபுடி கமிஷனருக்கும், பெரிய சேட்டு ஃப்ரூக் இருவருக்குமே பாக்யராஜ் நண்பர். மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்யராஜ் “ பாக்யா பத்திரிக்கையிலிருந்து சஞ்சீவி விலகி விட்டார். எம்.ஜி.வல்லபனை எடிட்டோரியலில் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல ஆள் பத்திரிக்கைக்கு தேவை.”
உடனே ஃபரூக் ” என் தம்பியுடைய க்ளாஸ்மேட் ஒருவன் இருக்கிறான். ராஜநாயஹம். இலக்கியமெல்லாம் கரைத்து குடித்தவன்.”
உடனே பாஸ்கர் “யாரை சொல்றீங்க?”
ஃபரூக் “ அந்த ட்ரையல் அண்ட் எர்ரர் கடிதம் எழுதியிருந்தானே!”
“ ஓ அந்த பையனா? பாக்யராஜ்! நானே ரெகமண்ட் செய்கிறேன். அவன் எழுதிய கடிதம் நான் படித்து அசந்து போனேன். அப்படி ஆள் தான் பாக்யாவுக்கு தேவை.”
பாக்யராஜ் “ உடனே ராஜநாயஹத்தை அழைத்து வாருங்கள். பத்திரிக்கை எடிட்டிங் லைனில் சேர்த்துக்கொள்கிறேன்.”

பாக்யா பத்திரிக்கை பார்த்திருக்கிறேன். கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் போன்ற பத்திரிக்கைகளின் வாசகன் நான். பாக்யா பத்திரிக்கையில் சேர்வதா?
முடியாது. மறுத்து விட்டேன். அவரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக வேண்டுமானால் சேர்கிறேன். பெரிய சேட்டு விடவில்லை. “ வாப்பா நீ மொதல்ல.”

மே 19ம் தேதி சென்னை போய் விட்டேன். பெரிய சேட்டு என்னிடம் சொன்னார் “ பாக்யராஜ் ‘அம்மா வந்தாச்சு’ ஷூட்டிங்குக்காக பாம்பே போயிருக்கிறார். எப்ப வருவாரோ? பொறுமையா இரு. ஒரு வேளை அவரை நீ சந்திக்க ஒரு மாசம் கூட ஆகலாம்.”

மறு நாள் பரபரப்பான திருப்பம். பாக்யராஜ் சென்னை வந்து விட்டார். அது கூட திருப்பம் என்று சொல்ல முடியாது. அன்று மாலை அவர் அண்ணன் தன்ராஜை கோவையில் வீடியோ கேஸில் அரஸ்ட் செய்து விட்ட செய்தி பாக்யராஜுக்கு வந்தது. உடனே சென்னையில் தன் நண்பர் டெபுடி கமிஷனருக்கு போன் போட்டு சொல்கிறார். பாக்யராஜ் ரொம்ப மன உளைச்சலில். காரணம் அரெஸ்ட் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தான் பாக்யராஜின் அண்ணன் என்பதை தனராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டர்
 “ நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்று சொல்லி விட்டார்.
பாக்யராஜ் புலம்பல் – “ இந்த வீடியோ கடை பிஸினஸ் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். என் அண்ணன் கேட்கவில்லை. இப்போது இப்படியாகி விட்டதே.”

இங்கிருந்து பாஸ்கர் கோவைக்கு போன் செய்து ஒரு வழியாக தன்ராஜ் லாக் அப்பில் இருந்து வெளிவர நள்ளிரவு தாண்டி விட்டது.
பாஸ்கரும் ஃபரூக்கும் பாக்யராஜை தேற்ற விரும்பியிருக்கிறார்கள். பாஸ்கர் தன் ஆஃபிஸிற்கே வரச்சொல்லியிருக்கிறார்.
நள்ளிரவில் பாக்யராஜ் பாஸ்கரையும் ஃபரூக்கையும் சந்தித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பாஸ்கரே சொல்லியிருக்கிறார்.“ ராஜநாயஹம் வந்தாச்சு. “
பாக்யராஜ் என்ன சொல்ல முடியும்! ”நாளை காலை பத்து மணிக்கு பாக்யா ஆஃபிஸ்க்கு அழைத்து வாருங்கள்.”

ஃபரூக் பைக்கில் தி. நகர் கிளம்பிப் போனோம். அங்கே உடனே வள்ளுவர் கோட்டத்தையொட்டியிருக்கும் லேக் ஏரியா வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
“ உங்களை பாக்யா பத்திரிக்கைக்காகத்தான் அழைத்தேன்.”
நான் “ இல்ல சார். நான் மூவி மீடியாவிற்குத் தான் வர விரும்புகிறேன்.”
”நிறைய அஸிஸ்டண்ட்ஸ் இருக்காங்க.”
”பால்ல சக்கரை மாதிரி கரைஞ்சிடுறேன்.”
இரண்டு மணி நேரத்திற்கு மேல் என்னை பரிசோதித்தார்.
பின் அவருடைய பிரபல டயலாக்கில் சொன்னார் – “ சரி. ஜோதியில ஐக்கியமாகிடுங்க”


மீண்டும் 21ம் தேதி மாலை ஐந்து மணி முதல் பதினொரு மணி வரை என்னை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
வேறு யாரையும் அப்போது சந்திக்க மறுத்தார். கவிஞர் வாலி வந்திருப்பதாக தகவல் சொல்லப்பட்ட போது அவரை மறு நாள் சந்திப்பதாக சொல்ல சொன்னார். அப்போது ஆஃபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ( பழைய ’முந்தானை முடிச்சு’ அசோசியேட் டைரக்டர் )  இளமுருகு, தன் மனைவி, மாமனாருடன் சந்திக்க முயன்றார். “ம்ஹூம்.” மறுத்து விட்டார்.
பாக்யா ஆஃபிஸில் எல்லோரும் இதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். இளமுருகு கமெண்ட்
“ராஜநாயஹத்தை நம்ம டைரக்டர் பம்ப் செட் போட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்!”

பிறகு பாக்யா ஆஃபிஸில் ஒரு நாள் தன்ராஜை சந்தித்தேன். அவர் கொடுத்த கடிதம் பற்றி ஞாபகப்படுத்தினேன். ஆர்வமாக கேட்டார். ”அப்பா எப்படியிருக்காங்க!”
இப்போது டெபுடி கமிஷனர் பாஸ்கர் மூலமாக பாக்யராஜிடம் சேர்ந்திருக்கிற விஷயத்தை சொன்னேன்.
தன்ராஜ் “ எல்லாத்துக்குமே ஒரு நேரம் வர வேண்டியிருக்குதுல்லங்க!”
அப்போது பாக்யராஜின் கார் ஆஃபீஸில் நுழைந்தது.
பாக்யராஜ் காரில் இருந்து மனைவி பூர்ணிமாவுடன் இறங்கியதும் என்னுடன் நின்ற தன் அண்ணனைப் பார்த்து விட்டு கேட்ட கேள்வி
“ தனம்! நீ எப்ப வந்த?”
ஓ! தன்ராஜ் சென்னை வந்தால் பாக்யராஜ் பங்களாவிற்கு வருவதில்லை போலிருக்கிறது. ஹோட்டலில் தான் தங்குகிறாரா?


ஐந்து மாதம் ’ராசுக்குட்டி’யில் குப்பை கொட்டி விட்டு நான் கிளம்பும்படியானது. சினிமாவில் என்னுடைய இரண்டாவது எண்ட்ரி பிரமாதமான தோல்வி. A successful failure!
ஆறு வருடங்களுக்கு முன் தன்ராஜ் கொடுத்த கடிதத்தை ராசுக்குட்டி தீபாவளி ரிலீஸுக்குப் பின் டிசம்பர் மாதம் ’கடைசியாக’ பாக்யராஜை அவர் வீட்டில் சந்தித்த போது தான் கொடுத்தேன். படித்துப் பார்த்து விட்டு சிந்தனையில் சில நிமிடம் கழித்த பின் திருவாய் மலர்ந்தார் “ அது தான் வந்துட்டிங்களே!”
திரும்ப பாக்யராஜை சந்தித்ததேயில்லை.

........................

2006ல் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மதியம் சாப்பிட்டு விட்டு ஆஃபிஸ் திரும்பும்போது ராக்கியாபாளையம் பிரிவில் பாக்யராஜ் வேனில் நின்றவாறு மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்தார். தி.மு.க தேர்தல் பிரச்சாரம். திருப்பூர் மாநகராட்சி தேர்தல்! பிரச்சார வேனை சுற்றி சின்ன கும்பல்.ஒரு பத்து பேர் தான்.
நான் ஸ்கூட்டரில் சென்றவாறே மிக அருகில் அவரைப் பார்த்துக்கொண்டே சினி பார்க் ரோட்டில் திரும்பினேன். அந்த ரோட்டில் ஸ்கூட்டர் திரும்புவதற்கு பாக்யராஜ் வேனையொட்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.


........................................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

 http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_16.html 

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_05.html

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2012/11/never-explain.html




Oct 20, 2014

அசிஸ்டண்ட் டைரக்டர்



அசிஸ்டண்ட் டைரக்டர்! கேட்க எவ்வளவு பந்தாவாக இருக்கிறது. சொல்லொணாத் துயரங்கள் அனுபவிக்கும் இனம் இந்த உதவி இயக்குனர்கள்.

சக்கையாகப் பிழிந்து விட்டு குரு நாதர் என்று பக்தியோடு இவர்களால் அண்ணாந்து பார்க்கப்படும் டைரக்டர் இவர்களுக்கு செய்யும் அநீதி,கொடுமை.

இயக்குனர்கள் இவர்களை துடிக்க துடிக்க அவமானப்படுத்துவார்கள்.

வசதி வாய்ப்புள்ள உதவி இயக்குனர் பாடு வேடிக்கையானது.
அவ்வளவு பிரபலமோ,வசதியோ இல்லாத டைரக்டர் அந்த நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிற படம் சில்வர் ஜூபிலி போகும் என்று வாய்ப் பந்தல் போடுவதை நம்பியேயாக வேண்டும்.




 1.அழைத்தால் வருவேன்

டைரக்டர் இந்த பசையுள்ள உதவி இயக்குனரை படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தன் கூட அழைத்துக் கொண்டு போனால் ஆட்டோ செலவு, தியேட்டர் டிக்கட், வெற்றிலை பாக்கு செலவு எல்லாம் ஏற்றே ஆக வேண்டும்.


மத்திய அரசாங்க உத்தியோகத்தை சினிமாவுக்காக “ Nature of work doesn’t suit my temperament” என்று ராஜினாமா செய்த உதவி இயக்குனர் தான் ஸ்வாகத் ஓட்டலில் டிஸ்கசன் போது வெற்றிலை பாக்கு வாங்க மூன்றாவது மாடியிலிருந்து கீழே வந்து வாங்க வேண்டும். அசோசியேட் டைரக்டரிடம்
 “ டேய்! நான் எங்க டைரக்டருக்கு போண்டா வாங்க அஞ்சி மைல் நடந்து போயிருக்கேன்டா!” என்று டைரக்டரின் டயலாக் வரும்.

சினிமாப்பத்திரிகை சப் எடிட்டரிடம் கெஞ்சிக் கேட்டு அந்த பிரபலமாகாத டைரக்டரின் பேட்டி எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேட்டியை பதிவு செய்ய தன் டேப் ரிக்கார்டரைத் தான் தரவேண்டியிருக்கும்.

பேட்டி எடுக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் செலவு போக டைரக்டரை ஆட்டோ பிடித்து அனுப்பி விட்டு சினிமாப் பத்திரிக்கை சப் எடிட்டரை பாண்டி பஜார் அழைத்துப் போய் இரவு உணவு வாங்கித் தரவேண்டும்.

உதவி இயக்குனரின் தகப்பனார் கஸ்டம்ஸ் அதிகாரி எனத் தெரிய வந்தால் 555 சிகரெட் காட்டன் காட்டனாக வாங்கித்தந்தாக வேண்டும். டைரக்டர் “ நான் குடிகாரன் கிடையாதுப்பா! ஆனால் ஃபாரின் சரக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க அப்பா கிட்ட சொல்லி வாங்கி தாப்பா! போன தடவை நீ கொடுத்த செண்ட் பாட்டில் தீந்து போச்சுப்பா. செண்ட் பாட்டில் வேணும்ப்பா!”

குடிப் பழக்கம்,சிகரெட் பழக்கமே இல்லாத உதவி இயக்குனர் சென்னை பாரீஸ் கார்னர் போய்த்தான் இதையெல்லாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை.
உதவி இயக்குனரின் தகப்பனார் திருச்சியில் கஸ்டம்ஸ் சூப்ரிண்ட். இது டைரக்டருக்கும் தெரியும்.

இதையெல்லாம் கொண்டு போய் குருதட்சினையாக் கொடுக்கும் போது ‘அவங்கப்பா கஸ்டம்ஸ் ஆஃபீசர்ப்பா!’ என்று அசோசியேட் டைரக்டரிடம் டயலாக். “பாவம்ப்பா! சினிமாவுக்காக சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையை ராஜினாமா பண்ணிட்டு வந்திருக்கான்யா! என்ன வசதி வாய்ப்பு அதிகம்.அதனால வந்துட்டான்.” என்று கரிசனமான வார்த்தைகள்!

இந்த வசதியான உதவி இயக்குனர் அந்தப்படத்து அசோசியேட் டைரக்டரையும் ரட்சிக்க வேண்டும். 12 வருடமாக சினிமாவில் இணை இயக்குனராக இருந்தவன் “ அரிசி வாங்க பணம் வேணும்யா!” என்று கெஞ்சுவான். அவனுடைய வீட்டுக்கு ஒரு தடவை அழைத்துக் கொண்டு போவான். அண்டர் கிரவுண்டில் அவன் தர்ம பத்தினி இருட்டில் சுருண்டு போய்க்கிடப்பாள். இவன் அன்றைய அவர்களின் பசிக்கு சாப்பாடு வாங்கித் தருவான்.

ஒரு கட்டத்தில் இந்த பஞ்சையான அசோசியேட் டைரக்டரிடம் “உன்னைப் பார்த்தவுடன் நான் கையில் ஐம்பது ரூபாய் எடுத்து வைத்திருப்பேன். அப்படி என் திறந்த கையில் ரூபாய் இல்லையென்றால் உடனே நீ திரும்பிப் போய் விடு. என்னிடம் தயவு செய்து கேட்காதே!” என்று இவன் கெஞ்சியிருக்கிறான்.

அந்தப்படத்துக் கதாநாயகியிடம் அந்த அசோசியேட் டைரக்டர் ஒரு கதை சொல்லி டைரக்டராக ஆசைப் பட்டு அவள் வீட்டுக்குப் போய் ஒரு மணி நேரம் கதை சொல்லிவிட்டு “ ஒரு ஐம்பது ரூபாய் தாருங்கள் “ என்று கேட்டுத் தொலைத்து விட்டான். பாவம் அரிசி வாங்கவே அவனுக்கு எப்போதும் பணம் தேவை.

அந்த நடிகையும் அவளுடைய அம்மாவும் உடனே ‘கதை பிடிக்கவில்லை’ என்று சொல்லி அவமானப்படுத்தி, பணமும் தர மறுத்து அனுப்பி விட்டார்கள்.

அதோடு பிரச் னை முடியவில்லை. டைரக்டரிடமும் “ உங்க அசோசியேட் எங்க வீட்டுக்கு வந்து கதை சொல்லி விட்டு ஐம்பது ரூபாய் பணம் கேட்கிறான்” என்று போட்டுக் கொடுத்து விட்டார்கள். டைரக்டருக்கு தன் அசோசியேட் உடனே டைரக்டராக முயற்சித்திருக்கிறான் என்கிற கோபம் தான் அதிகம். தனக்கே அடுத்த பட வாய்ப்புக்கு வழியில்லாத போது இவன் போட்டிக்கு வருகிறானே என்ற ஆத்திரம். ‘ஏன்டா! என் பேரைக் கெடுக்கிற! பிச்சைக்காரப்பயலே!’ என்று சொல்லி கேவலப்படுத்தி விட்டு அதோடு விடவில்லை. நாலு பேர் முன் பத்து பேர் முன் “ இவன் டைரக்டராக ஆசைப்படுறாய்யா! என்னை ஓவர் டேக் பண்ணப் பாக்குறான்!” என்று அவமானப்படுத்திக்கொண்டே இருப்பார்.

இவரிடமே பதினைந்து வருடம் அசோசியேட் ஆக இருக்கும் மொட்ட செவுடனைப் பார்த்துத் தான் மற்றவர்கள் மீதான தன் கோபத்தை வெளிப்படுத்துவார். “ அதாண்டா நீ இப்படி பதினஞ்சு  வருடமா அசோசியேட்டாவே இருக்க! டே! என் ஒத்த மயிரைப் புடுங்கிப்போட்டா அது நின்னு டைரக்ட் பண்ணும்டா!”
அந்த மொட்ட செவுடனும் சொல்வான் “ டைரக்டருக்கு உடம்பு பூரா மூளைப்பா!”

அன்று அரசாங்க வேலையை விட்டு விட்டு அவரிடம் ‘வசதியான அஸிஸ்டண்ட் டைரக்டராக’ இருந்தவனுக்கு இலக்கிய ஈடுபாடு அதிகம். தி.ஜாவின் மோகமுள், அம்மா வந்தாள்,இ.பாவின் தந்திர பூமி, சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ வண்ண நிலவனின் ‘கடல் புரத்தில்’ போன்ற நாவல்களை படமாக்கும் கனவில் இருந்தவன்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் ரகளை போதையில் வந்து, ஆட்டோவை விட்டு கீழே இறங்க மறுக்கும் அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமைக் காட்டி “ நீயும் இப்படி ஆயிடாதப்பா. அவார்டு வாங்கின டைரக்டரை பாத்தியா!” என்று சிரிப்பார் அந்த டைரக்டர்.

எங்கேயாவது பத்து மாசம் சம்பளம் வாங்காமல் டைரக்டருக்கு தண்டம் அழுத ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் இருப்பானா? அது இவன் தான்!

................

2. ராசுக்குட்டி


அப்புறம் ஒரு மிகப் பிரபலமான பணக்கார டைரக்டரிடம் வேலை பார்க்கும் போது சந்தித்த சிறுமைகள்?


இந்தமிகப் பிரபல பணக்கார கதாநாயக டைரக்டர் இன்னொரு ‘மைல்கல்’ இயக்குனரிடம் அஸிஸ்டண்டாக வேலை பார்த்த போது அவரிடம் பாடல் காட்சியின் போது “ இந்த பாட்டுல ‘ ஒரே ஃப்ரேம்மில சார் ஹீரோயினி ஃபிகர் மட்டும் வேற வேற இடத்தில வருமே! அப்படி செஞ்சா நல்லாருக்குமே!” என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த மைல்கல் இயக்குனர் “ யோவ்! அது ‘ஸ்டாப் ப்ளாக்’ டெக்னிக்.யோவ்! இதெல்லாம் நீ புரிஞ்சிக்க அஞ்சு வருஷமாகும்யா!” என்று முகத்தில் அடித்தார். ஆனால் இந்த அஸிஸ்டண்ட் அடுத்த இரண்டு வருடத்தில் தமிழில் மிகப் பிரபலமான இயக்குனராகிவிட்டார்!


இந்த பிரபல டைரக்டரிடம் இவன் அஸிஸ்டண்ட் வேலை பார்த்த போது ஒரு சொற்ப சம்பளம் கிடைத்தது. பட த்தில் அஸிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்த்தும் டைட்டிலில் அஸிஸ்டண்ட் டைரக்டராக இவன் பெயர் வரவில்லை.

 நடிகர்களில் கடைசியில் இவன் பெயர் போடப்பட்டு படத்தில் அந்தக் காட்சியும் இல்லை என்றாகிப் போனது!



படத்தில் இவன் நடித்த சீன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பின் இவன் தலை விதி பாருங்கள். அந்த டைரக்டருக்கு ஸ்காட்ச் விஸ்கியும்,மார்ல்பரோ மெந்தால் சிகரட் ஒரு கார்ட்டனும் வாங்கிப்போய் கொடுத்தான்.
அதை சந்தோஷமாகப் பார்த்து அந்த டைரக்டர் “ இதையெல்லாம் எங்க புடிச்சீங்க!” (ஒரு நாளைக்கு நூறு சிகரெட் பிடிப்பார் அந்த கதாநாயக இயக்குனர்!)
 திருச்சி கஸ்டம்ஸ் ஆஃபீஸ் ஸ்டோரில் நியாய விலையில் வாங்கியதை இவன் சொல்கிறான். உடனே அங்கிருந்த தயாரிப்பு நிர்வாக உதவியாளன் சொல்கிறான். “அவங்கப்பா கஸ்டம்ஸ் ஆஃபீஸர் சார்!” ஆனால் உண்மை என்னவென்றால் அப்போது இவனுடைய தகப்பனார் ரிட்டயராகி நான்கு வருடமாகி இருந்தது!



இந்த கதாநாயக இயக்குனர் எப்போதும் இவனைப் பார்த்து மலைத்துச் சொல்வது " நீங்க ரொம்பப் படிச்சிருக்கீங்க!ரொம்பப் படிச்சிருக்கீங்க!

மேட்டூரில் ஷூட்டிங்  நடந்தபோது அலுத்து தூங்கிக் கொண்டிருந்தவனை நடு நிசியில் எழுப்பி " டைரக்டர் கூப்பிடுகிறார்" என்று கூப்பிட்டு இவன் போன போது டைரக்டர்
" இந்த இங்கிலிஷ் மேகசினில் இப்ப என்னை பேட்டியெடுத்திருக்காங்க. அவுங்க என்ன எழுதியிருக்காங்கன்னு செக் பண்ணி சொல்லுங்க.. இங்க உங்களுக்குத்தான் இங்கிலிஷ் தெரியும்! நான் சொன்னத சரியா எழுதியிருக்காங்களான்னு பாக்கனுமே! "
ஆங்கிலப்பத்திரிக்கை நிருபரிடன்"சார் நீங்க எழுதினத என் அஸிஸ்டண்ட் டைரக்டர் கிட்ட கொடுங்க."

இன்னொரு நாள் நடுநிசிக்குப்பின் எழுப்பி டைரக்டர் கூப்பிடுகிறார் என்று சொல்கிறார்கள்.
டைரக்டர் " திரௌபதியோட அண்ணன் பேரு என்னங்க?"

 இவன் " த்ருஷ்டத்யும்னன்! அவன் தான் துரோணரைக் கொல்கிறவன்."

இந்த கதாநாயக இயக்குனர் ஒரு Night Bird!
காலையில் 11 மணிக்குத் தான் எழுந்திருப்பார்!

..........................................................

Jan 6, 2013

பனசை மணியன்




பனசை மணியன் ஒரு திரைப்படம் இயக்கியவர். ’நான் நன்றி சொல்வேன்’ என்ற படம். 1979ல் வெளிவந்த, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன் நடித்த படம்.டப்பாவுக்குள் போய்விட்டது என்று சொல்லத்தேவையில்லை.

பனசை மணியன் காதல் படுத்தும் பாடு(1966) படத்தில் துவங்கி கலைஞானத்துடன் இணைந்து படங்களுக்கு வசனம் எழுதியுள்ளவர்.
கலை ஞானம் தயாரிப்பாளராக பரிணமித்த போதும் அவருடன் வசனம் எழுதி இயங்கியவர் பனசை மணியன்.

கலை ஞானம் வசதி படைத்தவரானார். ஆனால் பனசை மணியனைப் பற்றி அப்படி சொல்வதற்கில்லை. ரஜினிக்கு முதன் முதலாக பைரவி படத்தில் வாய்ப்பு தந்தவர் தயாரிப்பாளர் கலைஞானம். இது நம்ம ஆளு படத்தில் ஃப்ராடு கிருஷ்ணய்யராக நடித்தவர்.
பாக்யராஜுடன் பல படங்களுக்கு  கதை இலாகாவில் டிஸ்கசனின் கலைஞானம்,பனசை மணியன் இருவருமே பங்கேற்றவர்கள். 
அதிர்ஷ்டக்காரர் கலைஞானம் ’இது நம்ம ஆளு’ படத்தில் அட்டகாசமான ரோல் செய்தவர். பனசை மணியனுக்கும் இப்படி ஒரு படத்தில் ஒரு நல்ல ரோல் செய்து விட வேண்டுமென்று ஆசை தான். ஆனால் வாய்க்கவே இல்லை.

பனசை மணியன் ஒரு Compulsive talker. பத்து பேராக இருந்தாலும், ஒரே ஒருவர் இருந்தாலும் அடைமழை போல் பேசிக்கொண்டே இருப்பார். பேச்சில் உற்சாகம் கரை புரண்டோடும்.
ஒரு காலத்தில் தன்னிடம் வேலை கேட்டு வந்த பாக்யராஜ் இன்று எட்டு கண்ணும் விட்டு எரிய திரையுலகை கலக்கும்போது அவரிடம் அடக்கமாக குழையும் கலைஞானம் பற்றி ’சினிமா ஷாட்’ பாணியில் பனசை மணியன் சொல்வார். ”வருடம் 1975. கலைஞானம் வீடு. கலைஞானத்துக்கு பாக்யராஜ் காய்கறி வாங்கிக்கொண்டு வருகிறார். அப்படியே கட் பண்றோம். வருடம் 1985. பாக்யராஜ் வீடு. பாக்யராஜுக்கு கலைஞானம் காய்கறி வாங்கிக்கொண்டு வருகிறார். “

எப்போதும் ஏதாவது ஒரு சின்ன ஹைக்கு பாணி கவிதை சொல்வார்.
”பெண்ணே ! எப்போதும் நெருப்பாயிரு.
கரியாகி விட்டால்
கண்டவெனல்லாம் எடுத்து கிறுக்கி விடுவான். ”
சொல்லி விட்டு அவரே தன் மேதைமையை ரசித்து சிரிப்பார்.
20 வருடங்களுக்கு முன்  வீட்டில் உள்ள டி.விகளுக்கு மாடியில் ஆன்ட்டெனா இருக்கும். இதைப் பற்றி பனசை மணியன் கவிதை.

”வானத்தில் வேர் விட்டு
கூடத்தில் பூக்கும் பூ!”


டி.ஆர்.ராமண்ணா, கே.எஸ்.ஜி, சாண்டோ சின்னப்பா தேவர், என்று பெரிய ஜாம்பவான்களிடமெல்லாம் வேலை பார்த்தவர் என்பதால் பல சுவாரசியமான விஷயங்கள் இவரிடமிருந்து கிடைக்கும்.

ஒரு பெரிய டைரக்டரிடம் வேலை பார்த்த போது தற்செயலாக ஒரு அறைக் கதவை திறந்து விட்டார். அந்த டைரக்டரோ அந்த நேரத்தில் அவர் அறிமுகப்படுத்தி பின்னர் வெகு பிரபலமான ஒரு நடிகையுடன் நிர்வாணமாக படுக்கையில் இருந்திருக்கிறார்.
’இப்படின்னு தெரியாம கதவ தெறந்துட்டமே. தெரிஞ்சா உண்டு இல்லைன்னு பண்ணிடுவானே’ன்னு பனசை மணியன் அவசரமாக எஸ்கேப் ஆனாராம். அதே பழம்பெரும் டைரக்டர் குமுதத்தில் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தன்னுடைய ’ஒழுக்கம்’ தான் காரணம் என்று கூறியிருந்தார்.
பனசை மணியனிடம் இதை கவனப்படுத்திய போது பனசை மணியனின்  பதில் “அப்படின்னா அந்த நடிகையோட அன்னக்கி முண்டக்கட்டையா அம்மணமா படுத்துக்கிடந்தது யாரு?!”


டி.ஆர்.ராமண்ணா எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் பதறவே மாட்டார். ’காத்தவராயன்’ படத்திற்காக போடப்பட்ட பிரமாண்டமான செட் மழையில் சின்னாபின்னமான போது ”அண்ணா! செட் மொத்தமா வீணாப்போச்சுண்ணா!” என்று பதறிச் சொன்ன போது கொஞ்சங்கூட பதறாமல் நிதானமாக ராமண்ணா “ சரி.விடுறா போவுது. ”
இப்படி ஏதாவது எப்போதும் பல விஷயங்கள் பேசிக்கொண்டே தான் பனசை மணியன் இருப்பார்.

பனசை மணியன் கதை டிஸ்கசனில் சொன்ன ஒரு சீன் டைரக்டருக்கு ரொம்ப பிடித்து விட்டது. இந்த சீனை படத்தில் சேர்த்துக்கொள்ளலாம். பனசை மணியனே அந்த குறிப்பிட்ட காட்சியில் வருகிற இன்ஸ்பெக்டர் ரோல் செய்யட்டும் என முடிவு செய்தார் டைரக்டர்.
ஏற்கனவே ’அம்மா வந்தாச்சு’ படத்தில் பாக்யராஜின் எரிந்து விழுகிற முதலாளியாக பனசை மணியன் நடித்தவர் தான்.
உற்சாகமாக அவர் நடிப்பதற்காக அதிகாலையில் ஷூட்டிங்காக சென்னையிலிருந்து லொக்கேசன் வந்து சேர்ந்தார்.
வந்தவுடனே காலை சாப்பாடு சாப்பிடும்போதே கலகல என்று பேச ஆரம்பித்தார்.”சென்னையில் நேத்து பக்கத்து வீட்டுக்காரர் இறந்து விட்டார்.சாவுக்கு நான் போனா அவர் சம்சாரம் சொல்லுது “ஏங்க.. இங்க பாருங்க. பக்கத்து வீட்டுல இருந்து மணியன் வந்துருக்காரு”ன்னு.எனக்குன்னா சிரிப்பு.. அவருக்கு உயிரோட இருக்கும்போதே சுத்தமா காது கேட்காது. டமார செவுடு. செத்ததுக்கப்புறம் அவருக்கு கேட்குமா?”
மீண்டும் அந்த பக்கத்து வீட்டம்மா கணவன் பிணத்திடம் எப்படி சொன்னார் என்று இரண்டு முறை பேசிக்காட்டினார்.

அன்று நெரிஞ்சிப்பேட்டை அருகில் சில காட்சிகள் ஷூட் செய்து கொண்டிருந்த போது உச்சி வெய்யிலில் பக்கத்தில் பம்பு செட்டில் குளித்து உற்சாகமாக படக்குழுவினரைப் பார்த்து கை காட்டினார். பிசியாய் இருந்த என்னிடம் வந்து சில கதைகள் பேசினார்.
இரவில் 9 மணிக்கு மேல் பனசை மணியன் நடிக்கும் காட்சிக்காக காவேரி க்ராஸில் ஷுட்டிங். 12 போலீஸ். அவருடன் பேசி நடிக்கவேண்டிய போலீஸ் ஆக நான் நடிக்கவேண்டியிருந்தது. என்னைப்பார்த்து ராஜநாயஹம் என்றே பெயர் சொல்லி அழைத்து ஆர்டர் போடவேண்டும்.
ரிகர்சல் போது ”ராஜநாயஹம் ராஜநாயஹம்” என்று பலமுறை வசனத்துடன் சத்தமாக சொல்லிப்பார்த்துக்கொண்டார். ஷாட் இடைவெளியிலும் ராஜநாயஹம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி ’’ராஜநாயஹம் அழகான பெயர்” என்று குஷியாக சொல்லிக்கொண்டார்.
நான் அவரிடம் ஒரு குறிப்பிட்ட ஷாட்டில் “ நானும் இப்ப உங்க கூட வரனுமா” என்ற போது நாடகபாணியில் மேலே விரலைக்காட்டி “என்ன கேட்காதீங்க..டைரக்டர கேளுங்க” என்றார்.
ஸ்டார்ட் கேமரா..ஆக்‌ஷன்,,
”அய்யய்யோ மணி..சரியில்லீங்களே..நீங்க நடிக்கறது திருப்தி்யாயில்லியே…” டைரெக்டர் நொந்துபோய்விட்டார்.மணியன் சொதப்பி விட்டார்.
நள்ளிரவில் ஷூட்டிங் பேக் அப்.

ஷூட்டிங் முடிந்தவுடன் படக்குழுவினர் பெரும்பாலானோர் குடித்து விட்டு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு சீட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள். சீட்டு விளையாட்டு விடிய விடிய நடக்கும்.
 நான் மட்டும் இரவு உணவு முடித்து விட்டு சீக்கிரம் படுத்து தூங்கி விடுவேன்.
அன்று பின் இரவில் இரண்டு மணிக்கு மேல் சாப்பிட்டு விட்டு படுக்கப்போகும்போது என் அறைக்கு பிராந்தி சாப்பிட்டுக்கொண்டே டம்ளருடன் வந்து பனசை மணியன் தொன தொன என்று பேச ஆரம்பித்தார். “போய் படுங்க சார்” என்று அவரை அனுப்பி விட்டேன்.
அதிகாலை ஆறு மணிக்கு முன் குளித்து விட்டு ட்ரஸ் செய்யும்போது மீண்டும் பனசை மணியன் வந்தார். ”ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் “ என்றார்.
 “இருக்கட்டும் சார்.ஷூட்டிங் கிளம்புற நேரம். அப்புறம் ரிலாக்ஸ்டாக பார்க்கலாமே”
“ ராஜநாயஹம்! நீங்க இலக்கியவாதி என்பதால் தான் உங்களிடம் காட்ட வந்தேன்.”

ஷூட்டிங் ஸ்பாட்டில் காலை உணவின் போது என்னிடம் சாண்டோ சின்னப்பா தேவர் ரத்னகிரி கோவிலில் ஒரு மகானைப் பார்த்த கதையை சுவாரசியமாக சொன்னார். 
அந்தப் படத்தில் ஐஸ்வர்யாவின் அப்பாவாக நடிக்க வந்திருந்த சேலம்  டாக்டர் சங்கரனிடம் பேச ஆரம்பித்தார். ’உடம்பு சரியில்லை’ என்று பனசை மணியன் சொல்ல டாக்டர் அவருடைய பல்ஸ் பிடித்துப்பார்த்தவர் பதறி விட்டார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கச்சொன்னார். 

ஈரோட்டில் அவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்த போதும் “ஒன்னும் இல்லை. சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகி வந்து நானே அந்த இன்ஸ்பெக்டர் ரோல் செய்கிறேன்.டைரக்டர் கிட்ட சொல்லுங்க. நானே நடிக்கிறேன்.” அவர் இயல்புப்படி இதை ஒரு இருபது தடவை திரும்ப திரும்ப புரொடக்சன் மேனேஜரிடம் சொல்லியிருக்கிறார்.

மறுநாள் ஷூட்டிங் போது மதிய உணவு முடிந்த போது தகவல் வந்தது.

பனசை மணியன் இறந்து விட்டார்!
எனக்கு உடனே ஷுட்டிங்கில் ‘நானும் இப்ப உங்க கூட வரணுமா?’ என்று கேட்ட என்னிடம் பனசை மணியன் விரலை மேலே உயர்த்தி “ என்ன கேட்காதீங்க..டைரக்டர கேளுங்க..” என்று சொன்னது தான் உடனே ஞாபகம் வந்தது. மேல ஒரு டைரக்டர் இருக்கான். கடவுள். அவன் கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அவன் கூப்பிடும்போது தான் வரமுடியும் !

மீண்டும் சென்னை திரும்பிய போது பனசை மணியன் நடிக்க இருந்த பாத்திரத்தில் ராஜநாயஹம் நடிக்கட்டும் என்று டைரக்டர் திடீரென்று முடிவு செய்தார். நான் செய்த போலீஸ் ரோல் இப்போது மணவை பொன் மாணிக்கத்திற்கு.

நான் அந்த இன்ஸ்பெக்டர் ரோல் செய்யும்போது பல தடவை ஷூட்டிங் தடைப் பட்டது. பனசை மணியன் ஆவி தான் ஷூட்டிங் நடக்கவிடாமல் தடுக்கிறது என்று பேசும்படியானது. 
ஒரு வழியாக காட்சி ஷூட் பண்ணி முடித்தபின் எடிட்டிங் டேபிளில் ராஜநாயஹம் சீன் போட்டுப்பார்க்கும்போது மூவியாலா ரிப்பேராகி விட்டது. பனசை மணியன் ஆவி! அவருடைய கடைசி ஆசை இந்த இன்ஸ்பெக்டர் ரோல். ஆவி தான் தடுக்கிறது. 
அப்புறம் சரி செய்து எடிட் செய்த பின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் ராஜநாயஹம் சீன் லூப்ஸ் போடப்பட்ட போது ப்ரொஜக்டர் அவுட் ஆஃப் ஆர்டர். இப்போது எல்லோருக்கும் புல்லரித்து விட்டது.அப்புறம் ப்ரொஜக்டர் சரி பார்க்கப்பட்டு டப்பிங் நடந்தது.

நடிகர் சிவராமன் உரக்கச் சொன்னார்: ’பனசை மணியன் கடைசியா அன்னிக்கு ஷூட்டிங்ல அதிகமா சொன்ன வார்த்த “ராஜநாயஹம் ராஜநாயஹம்” தான். அவரு இப்ப மேல இருந்தாலும் ராஜநாயஹத்த நினைச்சிக்கிட்டே தான் இருப்பார்!’ இப்படி சொன்ன சிவராமன் அடுத்த மாதமே இறந்து போய் விட்டார் என்பதும் இன்னொரு Irony!

preview பார்த்து பலரும் பாராட்டிய அந்த காட்சி ஃபுட்டேஜ் காரணமாக படத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது. தீபாவளி ரிலீஸ் ஆன அந்தப்படத்தில் ராஜநாயஹம் சீன் நீக்கப்பட்டிருந்தது.

”ஸாரிங்க ராஜநாயஹம். ஃபுட்டேஜ் ப்ராப்ளத்தில அந்த சீன எடுக்க வேண்டியதாப் போச்சி. ” என்று டைரக்டர் சொன்ன போது சுற்றியிருந்தவர்கள் டைரக்டரிடம் “சார்! பனசை மணியன் ஆவி பண்ண வேலை தான் இது!” என்று சொன்னார்கள்.

........................


சாது

பனசை மணியன் தான் இறப்பதற்கு முந்தைய நாள் இந்த சம்பவத்தை என்னிடம் கூறினார் .
அப்போது சாண்டோ சின்னப்பா தேவரின் 'தேவர் பிலிம்ஸ் ' சில் பனசை மணியன் வேலை பார்த்திருக்கிறார் . ஒரு ஷூட்டிங் வெளியே அவுட் டோர் போயிருந்திருக்கிறார்கள் . அங்கே பக்கத்து மலையில் ஒரு முருகன் கோவில் . படப்பிடிப்பு குழுவினருடன் தேவர் அங்கே போயிருக்கிறார் . மலைஏறும் போது அங்கே ஒரு மௌன சாமியார் குடில் . பனசை மணியன் உள்பட பலரும் அந்த சாதுவை தரிசித்து அங்கேயே அமர்ந்து விட்டார்கள் . தேவர் அந்த மஹானை பார்த்தவாறே மேலே போயிருக்கிறார் ." எனக்கு முருகன் தான் . வேறு யாரையும் நான் தொழமாட்டேன் " என்று அர்த்தம் .
மேலே தரிசனம் செய்துவிட்டு தேவர் சாவகாசமாய் இறங்கியவர் தன் குழுவினர் இருந்த மௌன சுவாமி குடிலில் வந்து உட்கார்ந்திருக்கிறார் . புன்னகையோடு சாமி இவரை பார்த்திருக்கிறது . சாண்டோ சின்னப்பா தேவரும் புன்னகையோடு அவர் கண்ணை உற்று பார்த்திருக்கிறார் . கண்ணையே உற்று ,உற்று .. திடீரென்று தேவர் நா தழுதழுக்க " நான் ஒரு மடையன் !" என்று கண்ணில் நீர் பெருக விம்மினாராம் . மௌன சாமி அருகில் இருந்த சிலேட்டில் ஏதோ எழுதி தேவரிடம் காட்டினாராம் .
"உன்னிலும் நான் ஒரு அடிமடையன் !"
சாண்டோ சின்னப்பா தேவர் உடனே எழுந்து சாஷ்டாங்கமாக மஹானின் காலில் விழுந்து விட்டார் !
..
A Greatman is always willing to be little.

- Emerson


 .........................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

Jul 29, 2012

கலைந்த ஒப்பனை

மீள் பதிவு     30-11-2008



அந்த படத்தில் ஏற்கனவே இரண்டு முறை எனக்கு கதாபாத்திரம் இயக்குனரால் ஒதுக்கப்பட்டு நான் மேக்கப் முடித்து ஷூட்டிங் ஸ்பாட் போனபின் கடைசி நிமிடத்தில் வேறு நிர்பந்தங்களால் வேறு யாராவது ஒருவர் அதற்கு நடிக்கும்படி யானது .
அப்போதே அந்த யூனிட்டில் R P ராஜநாயஹம் நடிப்பதற்கு ஏன் இப்படி ஏதாவது தடை வருகிறது என பலரும் பேசும் நிலை ஆனது.
அதன் பின் ஒரு இன்ஸ்பெக்டர் ரோல் கொஞ்சம் வித்தியாசமான ரோல் . நான்இன்ஸ்பெக்டர் ஆக வந்து கதாநாயக இயக்குனர் , கதாநாயகி , காமெடியன் ஆகியோரிடம் சும்மா சரம் பட்டாசு போல வெடிக்கும் படியாக காட்சி படமாக்கப்பட்டது.


ஷூட்டிங் ஆறு முறை ஒத்திபோடப்பட்டது.
ஒரு முறை கிளம்பும்போதே ஒரு அசோசியட் டைரெக்டர்
  இயக்குனர் கதாநாயகனிடம் " சார்ஒரு நல்ல நடிகர் செய்ய வேண்டிய ரோல் !ராஜநாயஹம் இதை செய்வது கடினம் . ஷூட்டிங் இன்னொரு நாள் ஒரு நல்ல நடிகரை வைத்து செய்தால் என்ன ?" என்று கதாநாயக இயக்குனர் காரில் ஏறும்போது காதை கடித்தான் ."ராஜநாயஹம் செய்வாரு யா ." இயக்குனர் இப்படி சொல்லி காரில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட் போன பின் கூட அன்று நான் காக்கி டிரஸ் போட்டு நடித்து ஒரு ஷாட் எடுத்த பின் கேமரா மேனுக்கு உடம்பு சரியில்லை என்று பேக் அப் ஆனது . அடுத்து ஆறு முறை ஷூட்டிங் கான்செல் ஆனது . ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தால் தடங்கல் ! தடை !

ஒரு வழியா அருணாசலம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் செய்யப்பட்டு நான் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்டது . அன்று ஷூட்டிங் பார்க்க வந்த ஒரு கதாநாயக நடிகரின் தம்பி ( இவர் சினிமாவில் ஸ்ரீதர் ,பாலச்சந்தர் படங்களில் வில்லனாக நடித்தவர் ) என்னிடம் " பிரமாதம் சார் ! நீங்க இப்படி நடிப்பதை மற்றவர் செய்ய முடியாது .ரொம்ப கஷ்டம் .என்னாலே செய்ய முடியாது " என்றார் .

ராஜநாயஹம் சீன் என்றே அதற்கு பெயர் . இன்ஸ்பெக்டர் பேட்ஜ் கூட R.P.Rajanayahemஎன்றே எழுதி காக்கி டிரஸ் இல் குத்தப்பட்டு வசனத்தில் கூட நான்
”இந்த இன்ஸ்பெக்டர் R P ராஜநாயஹம் ”என்று என்னை குறிப்பிட்டு கதாநாயகனிடம் மிரட்டுவேன் . இரண்டு ஜீப்பில் பன்னிரண்டு கான்ஸ்டேபிள் இரண்டு சப் இன்ஸ்பெக்டர் சகிதம் வந்து நான் செய்யும் ரைட் தான் அந்த காட்சி !

எடிட்டிங் செய்ய போனபோது
'ராஜநாயஹம் சீன் 'மூவியாலாவில் போட்டவுடன் மூவியாலா Out of order!
தடை தடங்கல்!R P ராஜநாயஹம் நடிப்பது தான் தடைபட்டது . எடிட்டிங் கில் கூட தடை வருகிறதே ! எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள் .

எடிட்டிங் முடிந்து டப்பிங் பேச டப்பிங் தியேட்டர் வந்து 'ராஜநாயஹம் சீன் ' புரஜக்டரில் மாட்டப்பட்டவுடன் புரஜெக்டர் Out of order!
எல்லோருக்கும் புல்லரித்து விட்டது ! இது தற்செயல் கிடையாது .
 எனக்கு மனம் சோர்ந்து போனது .
 ஒரு வழியாக புரஜெக்டர் சரி செய்து ராஜநாயஹம் சீன் ' ஓடிய போது அசோசியட் இயக்குனர் ரிகார்டிங் அறையிலிருந்து இண்டெர்காமில் தியேட்டரில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படியாக சொன்னான் "ராஜநாயஹம்! நம்ம கதாநாயக இயக்குனருக்கு கூட நேச்சுரல் ஸ்கின் கலர் கிடைக்காது .உங்களுக்கு தான் கிடைச்சிருக்கு . க்ளோஸ் அப் எல்லாம் லட்டு மாதிரி வந்திருக்கு "

அந்த படத்தில் கதாநாயகியின் தந்தை ரோல் பண்ணியவருக்காக டப்பிங் பேச வந்தவர் சொன்னார்." நான் நாற்பத்தைந்து படங்கள் உதவி இயக்குனராய் வேலை பார்த்தவன் . நானூறு தமிழ் படம் பார்த்திருக்கிறேன் . தமிழ்த்திரையில் இன்னைக்கு தான்Young Smart ஆ ஒரு இன்ஸ்பெக்டர் ஐ நான் பார்க்கிறேன். இவர் யாரோ எனக்கு தெரியாது .இவரை முகஸ்துதி செய்ய எனக்கு அவசியமும் இல்லே . ஆனா நான் உணர்ந்ததை சொல்றேன் "

டப்பிங் தியேட்டரில் லஞ்ச் சாப்பிடும் போது என்னிடம் சௌன்ட் எஞ்சினியர் சொன்னார் " சார் . நான் சாதரணமா சீன்ஸ் ரசிப்பதில்லை . லூப் மாற்றி வாய்ஸ் பதிவது மெக்கானிகல் வொர்க் பாருங்க . ஆனா உங்க ரோலையும் சீனையும் ரொம்ப ரசிச்சேன் . நீங்க நடிகர் முரளி மாதிரி Soft romantic rolesசெய்யலாம் சார் "

ஒருபோலீஸ் டெபுடி கமிசனர்(அப்போது சட்டம் ஒழுங்கு )பெயர் பாஸ்கர் (இவர் மூன்று வருடம் முன் இறந்து விட்டார் )கதாநாயக இயக்குநரிடமே சொன்னார் " 'ராஜநாயஹம் இன்ஸ்பெக்டர் ரோல் தான் நல்லாருக்கு . இன்னொரு ரெண்டு இன்ஸ்பெக்டர் சகிக்கலே . மூணு இன்ஸ்பெக்டர் ரோலும் ராஜநாயஹம் செய்திருக்கணும் .ஒரு ஊர்லே மூணு இன்ஸ்பெக்டர் ஆ ? அது எப்படி ?"

ப்ரிவியூவின் போது பலரும் படத்தில் என் காட்சியை பார்த்து விட்டு பாராட்டினார்கள் .கை கொடுத்தார்கள் . அந்த யூனிட்டில் இருந்த ஒரு ஆள் ' இந்த மாதிரி ஒரு ரோல் எனக்கு கொடுக்கமாட்டாரா டைரக்டர் என்று தான் பன்னிரண்டு வருடமாக இவர் கிட்டே வேலை செய்யறேன் " என்றார் .

இயக்குனரே சொன்னார் ' 'ராஜநாயஹம் மாதிரி ஒரு சீன்லே வந்தாலும் நிக்கணும்யா ! படம் பூரா நிறைய பிரேமுலே சிவராமன்,செல்லத்துரை மாதிரி வந்து என்ன புரயோஜனம் ?"

கதாநாயக இயக்குனர் ஏனோ கொஞ்சநாளில்என்னிடம் என் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ' ராஜநாயஹம் ! ரோல் (எதிர்பார்த்த அளவு )நல்லா செய்யலையே ' என்றார் !

கடைசியில் படத்தில் நீளம்-Footage காரணமாக அந்த 'ராஜநாயஹம் சீன் ' நீக்கப்பட்டது .

இந்த விஷயம் தீபாவளி ரிலீஸ் போது பலரும் பார்த்துவிட்டு வந்து என்னிடம் நான் நடித்த காட்சி படத்தில் இல்லை என்று சொன்ன போது தான் எனக்கு தெரிந்தது .

இன்றைக்கு பதினாறு வருடம் ஓடி விட்டது !

படத்தின் பெயர் ராசுக்குட்டி ! அந்த கதாநாயக இயக்குனர் கே .பாக்ய ராஜ் .

இப்போதும் படத்தில் டைட்டில் ஓடும்போது 'ராஜநாயஹம்' என்று பெயர் வரும்!
ஆனால் சீன் இருக்காது !!


நான் எவ்வளவோ வாழ்க்கையில் இழந்திருக்கிறேன் . ஆனால் இப்போதும் ஏதேனும் ஓர் சேனலில் அந்த படம் ஓடும்போது மனத்தில் ஒரு வேதனையும் தன்னிரக்கமும் வர தான் செய்கிறது !

Everything for me becomes Allegory .

- Baudelaire


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html



Dec 5, 2008

கல்யாண்குமார் சொந்தகுரல்

ராசுக்குட்டி படத்தில் மறைந்த கல்யாண்குமார் கதாநாயகனின் தந்தை . அவர் கன்னடபடங்கள் நூறுக்கு மேல் நடித்தவர் என்றாலும் தமிழில் அவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் , நெஞ்சம் மறைப்பதில்லை , மணி ஓசை , தாயில்லாபிள்ளை,யாருக்கு சொந்தம் ஆகிய படங்களில் சொந்த குரலில் தான் பேசியிருக்கிறார் .
அவர் ராசுக்குட்டி படத்தில் நடித்தபோது அவருக்கு அந்த காலத்தில் ஏற்படாத சிக்கல் ஒன்று ஏற்பட்டது .
கதாநாயக இயக்குனரின் உதவி இயக்குனர் கூட்டம் ' அவருக்கு டப்பிங் பேச வேறு ஆள் போட வேண்டும் . அவர் பேச்சில் கன்னட வாடை அடிக்கிறது ' என்று பேச ஆரம்பித்தது . அவர்கதாநாயகனாய் தமிழ் பேசி நடித்த போது பிறந்திருக்காத ஜென்மங்கள் . " தாயில்லா பிள்ளை " படத்தில் இன்றைய முதல்வர் வசனத்தை பேசி நடித்தவருக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு . அதோடு கன்னடத்துக்காரர் தான் என்றாலும் நாற்பது வருடங்களாக சென்னையில் வாழ்ந்து வந்தவர்.
நான் இப்படி பேச்சு அடிபடுவதை கல்யாண்குமார் அவர்களிடம் வேதனையுடன் தெரிவித்தேன் . அவருக்கு அதிர்ச்சி ! நான் கேட்டேன் “Who will break the ice?” கல்யாண்குமார் சற்று நம்பிக்கையுடன் சொன்னார் “I will break the ice! டைரக்டர் இடம் நான் பேசி அவரை சம்மதிக்க வைத்து விடுவேன் . நான் கருணாநிதி எழுதிய தமிழ் வசனங்களையே உச்சரிப்பு சுத்தமாக பேசியவன் ." அப்படி அவர் பேசிவிட்டு என்னிடம் சந்தோசமாக " டைரக்டர் என் ரோலுக்கு நானே குரல் கொடுக்க சம்மதித்து விட்டார் "
டப்பிங் தியேட்டரில் கல்யாண்குமார் ரோலுக்கு தீனரட்சகன் என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் தான் குரல் கொடுத்தார் .
பாவம் கல்யாண்குமார் ! படத்தில் அவருக்கு டப்பிங் குரல் தான் !

Oct 3, 2008

ஒரு எழுத்து வியாபாரி - ஒரு சினிமா வியாபாரி

வர்த்தக எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி பாக்யராஜ் அடிக்கடி ராசுகுட்டி பட வேலைகளில் இருந்த காலங்களில் சொன்ன ஒரு விஷயம் .
' பாலகுமாரனாலே ஒரு சீக்வேன்சி கூட ஸ்டோரி டிஸ்கசன் லே சொல்ல முடியலே.'
( Sequence என்பதை சினிமாக்காரர்கள் சீக்வேன்சி என்பார்கள் - சீன் என்று அர்த்தம் )
'இது நம்ம ஆளு 'படத்தில் இயக்கம் பாலகுமாரன் என எழுத்து போடுவார்கள் . அந்த படத்தில் பாலகுமாரனால் ஒரு காட்சி கூட சொல்ல முடியவில்லை .
வண்டி ,வண்டியாநாவல்களை எழுதி தள்ளுன ஆள் கதை எவ்வளவு விசித்திரம் பாருங்கள் .

சரி .பாக்யராஜ் க்கு பிடித்த எழுத்தாளர் என்று அப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் .
அகில இந்தியாவிலும் 'திரைக்கதை Specialist’ என மட்டை கட்டப்பட்ட நடிகர் பாக்ய ராஜுக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் தெரியுமா ?

தாமரை மணாளன் !
“He who makes a Beast of himself gets rid of the pain of being a Man”

-Samuel Johnson