Share

Oct 2, 2008

ப .சிங்காரம்

ப . சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன் . நானும் என் நண்பர் M .சரவணனும் . 'புயலிலே ஒரு தோணி ' 'கடலுக்கு அப்பால் 'நாவல்களை படித்து மலைத்து போய்விட்டோம் . மதுரை Y.M.C.A யில் அப்போது அவர் தங்கியிருந்தார் . ஆப்பிள் , ஆரஞ்சு , திராட்சை என பழங்கள் வாங்கி அவருக்கு கொண்டு போனேன் . அவருடன் அவர் அறையில் வேறு இரு இளைஞர்கள் தங்கியிருந்தனர் . ப . சிங்காரம் எங்களை சந்தித்த நிலையில் மிகவும் நெகில்ந்திருந்தார் . அவர் கண்ணில் தெறித்த அன்பு விஷேசமானது . அவர் தன் நாவல்கள் பற்றி சாதாரணமாக தான் பேசினார் . மணிக்கொடி சிட்டி , சி . மோகன் இருவரையும் நன்றியோடு குறிப்பிட்டார் .அவர்கள் தான் புயலிலே ஒரு தோணியை பரவலாக தமிழ் வாசகர்களுக்கு கவனபடுத்தியவர்கள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் . நவீன தமிழ் இலக்கியம் , எழுத்தாளர்கள் , பத்திரிகைகள் தனக்கு அன்னியம் என்றே சொன்னார் . ஆச்சரியமாயிருந்தது .
'நான் தினத்தந்தியில் வேலை பார்த்தவன் . எனக்கெப்படி உங்கள் இலக்கிய உலகம் பற்றி தெரியும் .'

அவருடன் Y.M.C.A வால் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் அலட்சியமாக இருந்தனர் . சிநேக பாவமே அவர்களின் நடவடிக்கைகளில் இல்லை . பொதுவாக ஹாஸ்டல் அறைகளில் உடனிருப்போர் இணக்கமாக அமைவது சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை . அதிலும் இவர் மகத்தான படைப்பாளி . கேட்க வேண்டுமா . வயதிலும் அந்த ரூம் மேட் களுக்கு மிகவும் மூத்தவர் .
பின்னால் Y.M.C.A நிறுவனம் அவரை வயதை காரணம் காட்டி வெளியேற்றியதையும் இப்போது எண்ணி பார்க்க வேண்டியுள்ளது .



காலச்சுவடு கண்ணன் சென்ற வருடம் ப .சிங்காரத்தின் வாசகர் கடிதம் சி.சு . செல்லப்பாவின் 'எழுத்து ' இதழ் ஒன்றில் வெளியாகியிருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது ஆச்சரியமாக இருந்தது . அப்போது நான் அதற்கு எதிர்வினையாக எழுதியிருந்த கடிதம் காலச்சுவடில் பிரசுரமானது .

பொதுவாக நான் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியதே இல்லை .இது கூட விஷய முக்கியத்துவம் கருதி தான் .

புயலிலே ஒரு தோணி நாவல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் .
அவரை சந்திப்பதற்கு முன் அந்த நாவலில் உள்ள விஷயங்கள் பற்றி , (அதோடு வேறு பல குறிப்புக்களுமாக )ஒரு நோட் புத்தகத்தில் நான் எழுதியிருந்த குறிப்புகளை பார்த்து விட்டு கோணங்கி ' இதை அப்படியே புத்தகமாக போடலாம் ' என சிலாகித்தான் . அந்த நோட் புத்தகம் தொலைந்து விட்டது .

1 comment:

  1. சார் மதுரை டவுனுக்குள் நீங்கள் விவரிக்கும் இத்தனை சம்பவங்கள் நான் வாழ்ந்த திண்டுக்கல் ரோட்டருகே அமைந்திருப்பதை எண்ணி சிலிர்க்கிறேன்,சிறுவனாயிருக்கையில் எது எதுவும் தெரியாமல் ஓடித்திரிந்த இடங்களை உங்கள் எழுத்தில் படிக்க முடிகிறதில் இன்பம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.