Share

Oct 31, 2017

சல சல சல


கருணாநிதி கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித். மனு? சோழர் பரம்பரை என்பதால் மனு நீதி சோழன் என்று பதில் வரும்.

மு.க.முத்துவின் மகள் பெற்ற மகனுக்கும் நடிகர் விக்ரம் மகளுக்கும் கல்யாணம். சரி.. ஒரே மணவாடு. ஒன்னுக்குள்ள ஒன்னு. ஜாதிக்குள்ள கல்யாணம்.
மு.க.ஸ்டாலின் தன் அண்ணன் பேரன் கல்யாணத்தை ஒதுக்கி விட்டு முத்துராமலிங்கத் தேவர் சமாதிக்கு போயிருக்கிறார்.
என்னய்யா? கல்யாணத்திற்கு வந்து விட்டு தேவருக்கு அஞ்சலி செலுத்தப்போவது சிரமமா? தமிழக அரசியல் முக்கியத்துவம் பெற ’வீட்டு அரசியல்’ காரணமாகியிருக்கிறது.
மு.க.முத்துவின் பிரியமான தம்பி மு.க.அழகிரியும் துரை தயாநிதியும் வருகை தந்து கௌரவித்திருக்கிறார்கள்.
பேரன் கல்யாணத்திற்கு மு.க. முத்து வந்திருந்தாரா? என் சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக ’இந்து’ தமிழ்பத்திரிக்கையில் கல்யாணத்திற்கு வந்தவர்கள் லிஸ்ட்டில் முத்து பெயர் இல்லை. டி.வி. செய்திகளிலும் அவர் தலை தென்படவில்லை. யாராவது இந்த என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்களேன். வந்திருந்தால் அவரை விட முக்கியமானவர் வேறு யார்? முத்துவை முக்கியத்துவம் கொடுத்து டிவி சானல்கள் காட்டியிருக்க வேண்டும்.

மு.க.முத்துவுக்கு உடல் நலக்குறைவு என்றெல்லாம் காதில் பூ சுற்றலாகாது பாப்பா! கருணாநிதியை வீல் சேரில் கொண்டு வந்து விட்டு இப்படி சொல்லக்கூடாது. இன்னொரு வீல் சேரில் முத்துவை கொண்டு வந்து மீடியாவுக்கு காட்டி விட்டு போயிருக்கலாமே.
முத்துவின் ஆரோக்கியம் மோசமாயிருப்பது இன்றைய செய்தியல்ல. 2011 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில்கூட மு.க சொன்னார்
“ என் மூத்த மகன் முத்துவின் உடல் நிலை மிகவும் மோசமாய் இருக்கிற சூழலில் நான் இந்த திருப்பூர் மேடையில் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன்.”

………………………………………….
ஜெ.தீபாவ கொஞ்ச நாள் காணோம்னு தமிழகம் தவிச்சு தக்காளி வித்ததாமே. ’என் சொந்த விஷயம். தலையிட யாருக்கும் உரிமையில்ல’ன்னு தீபா பொங்கிடுச்சாம். தன்னோட டிரைவர் ராஜாவை டிரைவர் ராஜான்னு சொல்றது அம்மாவுக்கு பிடிக்கல.

இந்த ராஜாமார் தொல்ல தாங்கல. 
ராஜான்றது comman name.

டி.ராஜா கம்யூனிஸ்ட், 

ஹெச்.ராஜா பி.ஜே.பி., 

’2ஜி’ ராஜா தி.மு.க.
ராஜான்னு மொட்டயா சொன்னா யாருக்குப் புரியும்.

ஆனா இளையராஜாவ ராஜான்னு தான் பலரும் இப்ப இங்க குறிப்பிடுறாங்க. ராஜான்னா அது இளையராஜா தான்.
இந்த தீபா ராஜாவ யாரும் இனிமே டிரைவர் ராஜான்னு சொல்லாதீங்களேன்.
தீபா ராஜா கொஞ்ச நாள் முன்னால தீபா புருஷன் மாதவன போயஸ் கார்டன் வீட்டு முன்னால கிழிச்ச கிழி ”நாடு மறக்குமா?”
………………………………………
வெள்ள பயம் நேரத்தில மந்திரி வேலுமணி அமெரிக்காவ விட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொன்னார். நல்ல விஷயம். நம்பத்தான் வேண்டும். ஆனா.. ? டிரம்ப் எல்லாம் எங்களுக்கு ஜுஜூபின்னு சொல்றாரா?…அது மரியாதயில்ல… அது மரியாதயில்ல…
வேலுமணி உத்திரவாதத்தால் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்ட நேரத்தில் சென்னை அடுத்துள்ள ஓட்டேரி கால்வாய் உடைந்து குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் புகுந்தது’ன்னு செய்தி வருதே… ஐயய்யோ…
..................................................................




Oct 30, 2017

Carnal Thoughts – 43


கிளர்ந்தெழும் தாபம் - 43
When a woman gives a man the whole of herself because of lust, and if he refuses and throws her away, something inside of her breaks.
A man should never reject the lust, sex and romance demands of a woman.
சூர்ப்பனகை ராமன் உடல் உறவை வேண்டினாள்.. ஆனால் கருப்பு ராமன் மறுத்தான். ஏகபத்தினி விரதன். தன் சிவப்பு தம்பி லட்சுமணனிடம் போகச் சொன்னான். தம்பி அவள் மூக்கறுத்தான்.



 ராவணன் அடிமடியிலேயே கை வைத்தான். ராமனோட பொஞ்சாதியை தூக்கிட்டுப் போயிட்டான். சூர்ப்பனகைய ராமன் ஒரு டொக்கு போட்டிருந்தா இப்படி ஆயிருக்காதே.
சூர்ப்பனகை அழகானவள் என்று சில பிரதிகளில் எழுதப்பட்டுள்ளதாம். வால்மீகி ஏனோ அவளை கறுப்பாக அழகற்றவளாக வர்ணித்திருக்கிறார்.

சூர்ப்பனகை இல்லாவிட்டால் ராமாயணக்கதையின் முகமே மாறிப்போய் இருக்கும்.

ஒரு பெண் ஆணிடம் காம வசப்பட்டு தன்னுடன் படுக்கச் சொல்லி யாசித்தால் மறுக்கக்கூடாது. தர்ம சிந்தனையுடன் அவளுக்கு இணங்கி சுகம் தர வேண்டும். நிராகரிப்பது அதர்மம்.
ஊர்வசியின் தாபத்தை அலட்சியப்படுத்து நிராகரித்ததால் அர்ச்சுனன் வனவாசத்தின் போது விராட நாட்டில் அரவானி பிரஹன்னளையாக இருந்தான்.


’பிரஹன்னளை’ நாடகத்தில் ந.முத்துசாமி

”அர்ச்சுனன் தபசு பண்ணி பாசுபதாஸ்திரம் வாங்கினான்லே.. அதுக்குப்பின்னாலே இந்திரன் ரதத்தோட மாதலியே அனுப்பிச்சாரு. போய் கூட்டிக்கிட்டு வான்னு.
அர்ச்சுனன் இந்திரலோகத்துக்குப் போனானா.. இந்திரனோட பிள்ளை தானே அவன். அவனுக்கு தன் ஆசனத்தை கொடுத்து அதுலே ஒக்காரச் சொன்னாரு. அவனும் ஒக்காந்தான். ஊர்வசி நடனம் ஆடினா. அதையே பாத்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன்.
ஊர்வசியையே பார்த்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன். 
அதை இந்திரன் பாத்துட்டாராம். பாத்தவரு ஆகா… அர்ச்சுனன் ஊர்வசி மேலே ஆசைப்பட்டுட்டான்னு.. சித்திர சேனனைக் கூப்பிட்டு ‘ ஏ கந்தர்வ ராஜனே, ஒடனே ஊர்வசி கிட்டே போ…. அவ அர்ச்சுனனெ அடையனும். கந்தர்வ ராஜாவே, உன்னால் காந்தர்வ வித்தையில் அர்ச்சுனன் சமர்த்தனாக்கப்பட்டது போல அவன் ஸ்திரிகளை அடைவதிலும் சமர்த்தனாக்கப்பட வேண்டும்னான். சித்திரசேனன் அப்சரஸான ஊர்வசி கிட்டே போனான். தான் இந்திரனால் அனுப்பப் பட்டதாகவும், இந்திரனால் அனுமதி கொடுக்கப்பட்டதென்றும் அர்ச்சுனன் அவளுடைய பாதங்களில் சரணடைய வேண்டும்னும் சொன்னான்.

சித்திரசேனன் சொன்ன ஒடனே ஊர்வசி புறப்பட்டா…
அர்ச்சுனன் மேல் ஆசை கொண்டவளாகி மன்மத பாணங்களால் அடிக்கப்பட்டு.. அழகிய இடை உடையவளான ஊர்வசி.

பிரதோஷகாலம் கடந்து சந்திரன் உதயமாவதைக்கண்டு, அர்ச்சுனனுடைய பெரிய வீட்டை நோக்கி, மகிழ்விக்கும் தன்மை உடையவளான ஊர்வசி, மெல்லியதும், சுருண்டதும், நீண்டதும், சிறந்த மலர்கள் அணிந்ததுமான கூந்தலுடன், புருவத்தை அசைத்தலாலும், பேசாலும், சிருங்கார சேஷ்டைகளாலும், காந்தியாலும், அழகான முக சந்திரன் சந்திரனை சண்டைக்கு அழைப்பது போலவும் போனான்.

அவ நடந்து போறதாலே அந்த ஸ்தனங்கள் அசைஞ்சதாம்.
அந்த ஸ்தனங்களை சுமக்கும் கஷ்டத்தால் அடிதோறும் துவளுகிற அவளோட இடை மூன்று மடிப்புகளோடு அழகாக இருந்துச்சாம்.

(Bosom – The dual wonders with nipples! Inviting Cleavage!
A breast is the most restless thing in the world.)

 மலையின் தாழ்வரை போல அகன்றதும் உயர்ந்தும் பருத்துமுள்ள நிதம்பத்தையுடையதும், சுத்தமானதும், மேகலையால் அலங்கரிக்கப்பட்டதும், தேவலோகத்திலுள்ள ரிஷிகளின் மனத்தையும் கூட கெடுப்பதற்குக் காரணமாவதும், மெல்லிய உடை தரித்ததும், குற்றமற்றதும், மன்மதனுடைய வீடுமான ஜனகமும் பிரகாசித்ததாம்.

அவ கொஞ்சம் மது மயக்கத்துலெ இருந்தா.. 

அர்ச்சுனன் அவளெ ஏத்துக்கலே. அதனாலே அவ அவனெ நீ பேடி போல திரியக்கடவது என்று சாபம் கொடுத்துட்டா… 

மறுநாள் இது நம்ம தேவேந்திர மகாராஜாவுக்கு தெரிய வந்து இந்த சாபத்துக்கு விமோசனம் கொடுத்தாரு.. அர்ச்சுனன் அஞ்ஞாத வாச காலத்தில் இதை பயன்படுத்திக்கட்டும்னு.”



..........................................








Oct 26, 2017

அங்க இருந்து.... இங்க வரை


”இந்தம்மா தான் நீ பிறக்கும்போது பிரசவம் பாத்தவங்க”
சொந்த ஊருக்கு போயிருந்த போது இப்படி ஒரு மலையாள அம்மாளை காட்டி சிறுவனாய் இருந்த என்னிடம் சொல்லியிருக்கிறாள் என் அம்மா. அந்த நர்ஸம்மா என்னை கன்னத்தை தடவி தாடையை பிடித்து கொஞ்சினாள்.
அந்த நர்ஸம்மாவை பற்றி இன்னொன்றும் கேள்விப்பட்டேன். என் பிறப்பிற்காக அம்மாவின் தலைப்பிரசவத்தை கவனிக்கும்போது அவரும் கர்ப்பமாயிருந்தார். ஒரு வாரத்தில் அந்த நர்ஸம்மாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாம்.
அப்பாவின் உத்தியோகம் காரணமாக நாங்கள் சொந்த ஊரை விட திருச்சி, நாகப்பட்டினம், மதுரை போன்ற ஊர்களில் தான் அதிகமாக வாழ்ந்திருந்தோம். என் பெரியப்பா குடும்பமும் இதே மாதிரி தான். அப்பா,பெரியப்பா இருவருமே கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ்.
ஒரு கால கட்டத்தில் சிறு வயதில் எங்கள் தாத்தாவிடம் வேலை பார்த்த லட்சுமணத்தேவரிடமே என் பெரியப்பா தன் பங்கையெல்லாம் விற்று விட்டார். இனியெதற்கு சொந்த ஊர் என்பதில் அவர் உறுதியாய் இருந்தவர்.
என் அப்பாவின் பட்டிப்பத்து வயலை குத்தகை எடுத்த ஒருவன் அதை அடமானம் வைத்து விட்டு ஓடி விட்டான். பஸ் ஸ்டாப்பை ஒட்டியிருந்த வீட்டில் ஓட்டல் நடத்திக்கொண்டு குடும்பத்தோடு குடியிருந்த ஐயர் வாடகை வருடக்கணக்காக கொடுக்காமலே இருந்து கொண்டிருந்தார். கருங்குளம் வயல் விவசாயத்தை கவனித்துக்கொண்டிருந்த மாரியப்பன் செத்துப்போய் விட்டான்.
என் அப்பாவும் தன் பங்கையெல்லாம் விற்க முடிவெடுத்து விட்டார்.
நானும் அப்பாவும் பெரியப்பாவும் அது விஷயமாக சொந்த ஊருக்கு போனோம். லட்சுமண தேவரிடம் மிக ஈனக்கிரையத்திற்கு எங்கள் பங்கு வீடுகள், நிலங்களையெல்லாம் தாரை வார்த்தோம். லாட்டரி சீட்டில் அவருக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் மாதிரி தான்.
ஐயர் ஓட்டலை ஒட்டி அந்த நர்ஸம்மாவின் மகள்  வீடு. அவள் எங்கள் பங்கு நிலத்தை கொஞ்சம் ஆக்கிரமித்திருந்தாள். நான் பிறந்த ஒரு வாரத்தில் பிறந்தவள். அவளும் நர்ஸம்மாவும் அப்போது தாதா போல ஊரில் பேர் வாங்கியிருந்தார்கள். நர்ஸம்மா மகள் புருஷன் ஒரு கேனப்பொச்சு. அப்புறம் என்ன? அவளுக்கு ஒரு சண்டியர் தொடுப்பு. அவன் எந்த நேரமும் வீட்டில் படுத்திருப்பான்.
சர்வேயர், வி.ஏ.ஒ, ஊர் பெரியவர்கள் எல்லோரும் இது ஆக்கிரமிப்பு தான் என்று உறுதியாக சொன்னார்கள். நல்ல முதியவர்கள் சிலர் அவள் வீட்டுக்கே வந்து நின்று நியாயத்தை கேட்டார்கள்.
என் அப்பாவுக்கு இளமையிலேயே மறைந்து விட்ட தோனி டாக்டர் உயிர் நண்பன். முசல்மான். இவருடைய உறவினர் ஒரு முதியவர் அங்கிருந்தார். பல தலைமுறை நட்பு.
சர்வேயர் அந்த வீட்டின் பின் பகுதியில் இருந்து கூப்பிட்டார்
“ அம்மா! அம்மா!”
அந்த அம்மாள் வந்தாள். என் பெரியப்பாவையும், அப்பாவையும் ஏறெடுத்து பார்த்து விடவே கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தினாள். கூடவே மகள் வந்தாள். நல்ல அழகாயிருந்தாள். பின்னால் தொடுப்பு விறைப்பாக வந்து நின்றான். கொஞ்சம் மறைந்தாற் போல் மகளுடைய கணவன் எட்டிப்பார்த்தான்.
என்ன நடக்கிறது என்பதை அந்த குடும்பம் தெளிவாக அறிந்திருந்தது. என் அப்பா, பெரியப்பா, நான் மூவரும் வந்ததிலிருந்து ஊர் பரபரப்பாக ஆகியிருந்ததை அறிந்தே இருந்திருக்கிறார்கள்.
நர்ஸம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

”உங்க இடம் எங்க இருந்து எது வரை இருக்குதும்மா”
நர்ஸம்மா கையை தூர ரயில்வே ஸ்டேசன் ஒட்டியிருந்த எங்கள் இடத்தைக் காட்டி உரத்த குரலில்“ அங்க இருந்து” என்று இழுத்து தன் இரு தொடைகளுக்கும் இடையில் அவள் சேலை மூடிய யோனிக்குள் தன் நடு விரலை விறைப்பாக விட்டு கிசுகிசுப்பாக “இங்க வரை” என்றாள். அப்போது அவள் விரலை நன்கு சுழற்றினாள்.
அந்த முஸல்மான் பெரியவரை பார்த்து மகள் கத்தினாள் “ நீரு என்ன மயித்துக்கு இங்க வந்தீரு. புண்டய பொத்திக்கிட்டு போயிரும்” அவரோடு ஏற்கனவே கடும் மனஸ்தாபத்தில் இருந்திருக்கிறாள்.
நர்ஸம்மாவின் மறைந்து விட்ட கணவரும், மகளுடைய தொடுப்பும் கூட தேவர் இனம்.
”டேய் லட்சுமணா, நீ செத்தா மறவன் தான்டா தூக்கிப்போட வரணும். ஜாதிய விட சொத்தாடா பெரிசு.” நர்ஸம்மா வார்னிங்.
திருச்சியில் சூப்பராக செட்டில் ஆகி விட்ட பெரியப்பா என்னிடம்  சொன்னார்
 “ டேய் துரை, இந்த ஊர்ல நம்மாள இருக்க முடியுமாடா?”





Oct 25, 2017

Day to day issues


நெல்லையில் கந்துவட்டிக்கு கருகிய பாவப்பட்ட ஜீவன்கள்
”இன்னும் என்ன நம்பிக்கையில் பூக்களையும் குழந்தைகளையும் பூமிக்கு அனுப்புகிறாய்” என்று ஆண்டவனைப் பார்த்து கோபத்துடன் கேட்ட அப்துல் ரகுமானின் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.


மிகுந்த வலியை ஏற்படுத்தி நெஞ்சை ரணமாக்கும் வலிமையுடையவை 
பெண்களின் கண்ணீரும், குழந்தைகளின் கண்ணீரும்
......................
டி.வி ப்ரோக்ராம் ஒன்றில் ஓவியா ஒரு முதியோர் இல்லத்தில்.
ஓவியாவுடன் பழைய நடிகர் ஒருவர் நடிப்பதாயிருந்தால் யாரை சொல்வீர்கள்? யார் நடித்தால் பொருத்தமாயிருக்கும்? என்ற கேள்வி.
முதிய பெண்மணி சொல்கிறார் “ ஜெமினி கணேசன்.”
’காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியா’

...........................................
”உலகத்தில் உள்ள அனைத்து பிராண்டுகளும் மிகக்குறைந்த விலையில்” வசந்த் அன் கோ முதலாளிக்கு ’டார்லிங் டார்லிங்’ கல்லாப்பெட்டிசிங்காரம் பாடிலாங்க்வேஜ்.
...........................................
பாலு மகேந்திராவின் சீடர் பசுபதி.
வெற்றி மாறனின் ‘பொல்லாதவன்’, ’ஆடுகளம்படங்களில் உதவி இயக்குனர்.
நான் திருப்பூரில் இருக்கும் போதே என்னை சந்திக்க ஆர்வமாக வந்தும் சந்திக்க முடியாமல் போயிருந்திருக்கிறது.நான் சென்னை வந்த பின் என்னை சந்தித்த வியாசன் சொன்ன தகவல்இங்கே பக்கத்தில் தான் கூத்துப்பட்டறைஎன் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியது. உடனே நான் கூத்துப்பட்டறையை கண்டு பிடித்து .முத்துசாமியை சந்தித்தேன். இன்று நான் கூத்துப்பட்டறையில் இருப்பதற்கு அந்த சந்திப்பு தான் வழி வகுத்தது.
வியாசனின் வாழ்க்கை துணைவி யாமினி.வியாசனின் நண்பர்கள் டாக்டர் ராஜா(கவிஞர்), டாக்டர் வசந்த் போன்ற அற்புதமான மனிதர்கள். என்னுடைய எழுத்தின் great admirers.
.........................




chevron-right





Oct 22, 2017

சோழா ஷெரட்டான் சலூன்


சோழா ஷெரட்டான் ஹோட்டல் பகுதியெல்லாம் அப்போது இவ்வளவு பிசியாக இருக்காது. இன்று சோழாவின் சுற்றுப்புறம் பார்க்கக்கிடைக்கும் போதே மூச்சு திணறுகிறது. மெட்ராஸ் முகமே சென்னையாக மாறி விட்டதே.
முடிவெட்டுவதற்கு எப்போதும் மாதாமாதம் சோழா தான் போவது என்று ஒரு காலம் எனக்கு இருந்திருக்கிறது.

சோழாவில் நுழைவதற்கு முன் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. காம்பவுண்டின் முனையில் ரிக்ஷா ஒன்று. ரிக்ஷாக்காரர் கையில் முரசொலி. கருணாநிதியின் கார் கோபாலபுரத்திலிருந்து திரும்புகிறது. நான் கருணாநிதியின் காரைப் பார்க்கிறேன். கருணாநிதி அமர்ந்திருக்க மு.க.தமிழ் காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். ரிக்ஷாக்காரர் கருணாநிதி காரில் வருவதை கவனித்து விடுகிறார். நானும் அந்தக்காட்சியை கவனிப்பதை பார்த்து விட்டு என்னிடம் சொல்கிறார் : ’தலைவர் போறாரு.’
கொஞ்சம் நிறுத்தி பின் என்னிடம் ரகசியம் ஒன்றை உரக்கச் சொல்வது போல ஒரு கையை உயர்த்தி சொல்கிறார் “ வருவாரு”
பின் மீண்டும் சிலேடையை உடைத்து “ கோட்டைக்கு வருவாரு.”
மீண்டும் கருணாநிதி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை. இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம் அது.

இன்று முதுமை நோய் மூடியுள்ள நிலையில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் செல்வது ‘செய்தி’யாகிறது. அன்றும் கூட 
அவர் முரசொலி அலுவலகத்துக்கு தான் சென்று கொண்டிருந்திருப்பார்.



சோழாவில் சலூன் பார்பர் சொல்வார் : 'இப்ப தான் வைஜயந்திமாலா அவர் பையனுக்கு முடி வெட்ட வந்திருந்தார்.'
சோழாவில் அந்த பில் முதலில் நீட்டுவார். மெனு போல நிறைய அழகு சம்பந்தமாக வரிசை கட்டி ஏதேதோ இருக்கும். நான் ஹேர்கட் மட்டும் டிக் செய்வேன். ஷேவிங், ஃபேஷியல் என்று டிக் செய்தால் அவ்வளவு தான். பில் எகிறி விடும்.
ஹேர் கட் செய்யும்போதே பார்பர் நிறைய பேசுவார்.
ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், மாதத்தில் பத்து நாட்களாவது சென்னை ஷூட்டிங். சோழாவில் தான் தங்குவார்கள்.
ராஜேஷ் கன்னா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பெரும்பாலும் பாரில் குடித்துக்கொண்டிருப்பார்.
Introvert. யாரிடமும் பேசக்கூட மாட்டார்.
யாருக்கும் டிப்ஸ் தரமாட்டார். முடி வெட்டிக்கொண்ட போதும் டிப்ஸ் தந்ததேயில்லை.
அமிதாப் எல்லோருக்கும் அப்போதே நூறு ரூபாய் டிப்ஸ் தருவார். ரொம்ப கலகலப்பாக இருப்பார். அவர் குளித்தவுடன் ஹேர் செட்டிங்க்காக அறைக்கு அழைப்பார். அதற்கே கூட பார்பருக்கு நூறு ரூபாய் தருவார்.
எனக்கு முடிவெட்டியதும் பார்பருக்கு நான் ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுப்பேன். ராஜேஷ் கன்னா அளவுக்கு என்னை அவர் நினைக்கத் தேவையில்லை.

Oct 21, 2017

காதலிக்க நேரமில்லை பிரபாகர்


காதலிக்க நேரமில்லை பிரபாகர் அந்த படத்தில் நாகேஷுக்கு சரியான கம்பானியன். சச்சுவின் அப்பா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது முப்பதுக்குள் தான்.
'தம்பி! நான் காரு வாங்கணும் எஸ்டேட் வாங்கணும்.' ஏக்கமாய் நாகேஷிடம் சொல்வார். நாகேஷ் “விட்டா எங்கப்பனையே வாங்கிடுவே போலருக்கு.”

நாகேஷ் அவர் படத்தில் இவர் மகள் கதாநாயகியாய் நடித்தால்' எங்கப்பா (பாலையா ) முன்னாலே நீ கால் மேலே கால் போட்டு ..'என்று சொல்லும்போது பிரபாகர் குறுக்கிட்டு பதறி ' அது மரியாதை இல்ல .. அது மரியாதை இல்ல.." என்பது சுவையான காட்சி.
எஸ் வி சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடக நடிகர் . தி ஜா வின் 'நாலுவேலி நிலம் ' நாடகம் சேவா ஸ்டேஜ் போட்ட போது அதில் 'கேப்ரியல்'என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
காதலிக்க நேரமில்லை படத்தில் அவருக்கு கிடைத்தது போல நல்ல காமெடி ரோல் அவருக்கு அதற்கு பின் கிடைக்கவில்லை. அவர் பிரபலம் ஆகவும் இல்லை.
ராமண்ணா இயக்கிய “குலக்கொழுந்து” பட ஷீட்டிங் விஜயா வாகினியில் நடந்து கொண்டிருந்த போது இவரை பார்த்தேன். இவருக்கு அதில் ஒரு ரோல். ஆனால் நாகேஷுக்கு படத்தில் வேலை இல்லை. அங்கே ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருந்தார்.
ரயிலில் வரும் கனவான் அரியலூர் ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சௌகரிய குறை ஒன்றை பற்றி ஸ்டேசன் மாஸ்டரிடம் அவர் அறைக்கு வந்து கம்ப்ளைன்ட் செய்கிறார் .
பிரபாகர் வேகமாக ஓடி வந்து கிட்டத்தட்ட நாகேஷ் மேலே விழுந்து கோபத்துடன் கேட்கிறார் “ Who is the Station Master”

நாகேஷ் பதறி போய் கூப்பாடு “I is the Station Master ”

பிரபாகர் இந்த ஓட்டை இங்கலிஷ் கேட்டு எரிச்சலாகி “Are you the Station Master?”

நாகேஷ் அதே பதட்டத்துடன் “Yes Sir! Ariyalur Station Master!”

பிரபாகர் டென்சன் ஆகி “Stupid Station Master”

நாகேஷ் நீங்கா பதட்டத்துடன் சத்தமாக “ No sir , Ariyalur Station Master”

இந்த நகைச்சுவை காட்சி அங்கு இருவராலும் பலமுறை நடித்து காட்டப்பட்டது .பிரபாகர் கேள்வி , நாகேஷ் பதில் எல்லாம் மின்னல் வேகத்தில் !
நான் அவர் பெயரை கேட்டு அவர் 'பிரபாகர் 'என்று சங்கடப்படாமல் சொன்னார்.
அதோடு அப்போது நான் வாய்த்துடுக்காக
" இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பாத்தீங்களா. இவ்வளவு காலம் கழித்து உங்க பேரை நான் கேட்டு தான் தெரிஞ்சிக்கவேண்டியிருக்கு! " என காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இவரை பார்த்து சொன்ன வசனத்தையே சொன்னபோது பிரபாகர் தன்னிரக்கத்துக்கு ஆளாகாமல் உற்சாகமாகி நாகேஷிடம் என்னை அறிமுகப்படுத்தியது கூட சினிமாவுலகில் அரிதான விஷயம்.

பாலச்சந்தரின் 'மன்மத லீலை 'படத்தில் இவர் Y.விஜயாவின் கணவராக வருவார்.வக்கீலாக நல்ல காமெடி செய்வார்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினி காம்பிநேசனில் ஒரு காட்சி.
ரஜினி வேகமாக சொல்லும் ஆங்கில வாக்கியத்தை சிரமப்பட்டு சொல்லும் குடிகாரராக!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் நாவல் படமாக்க ஸ்ரீதர் விரும்பி சிவாஜியை ஜோசெப் ரோலுக்கு புக் செய்தார். ஸ்ரீதருக்கும் ஜெயகாந்தனுக்கும் சண்டையாகி ஜோசெப் ரோலில் சிவாஜி நடிக்க முடியாமல் போயிற்று. அப்புறம் சந்திர பாபு அந்த ரோலை செய்ய ரொம்ப ஆசைப்பட்டார். ஜெயகாந்தனோடு ரொம்ப டிஸ்கசன் செய்து பார்த்தார். நடக்கவில்லை.
அதன் பின் ஒரு வழியாக கே விஜயன் இயக்கி நாகேஷ் தான்
"யாருக்காக அழுதான் "படத்தில் நடித்தார்.
(ஆனால் தனிப்பட்ட முறையில் படைப்பாளி ஜெயகாந்தன் எந்த நடிகர் யாருக்காக அழுதான் ஜோசெப் ரோல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தெரியுமா? வீரப்பன்!

 ஜெயகாந்தனின் நண்பர் இவர்.பணத்தோட்டம்,பொண்ணுமாப்பிள்ளே படத்தில் நாகேஷுடன் நடித்தவர் வீரப்பன்.கவுண்டமணிக்கு காமெடி சீன்ஸ் எழுதியவர்.)


ஜெயகாந்தன் இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன் 'படத்தில் வரும் சிறுவனின் தாயாருக்கு ஒருவனோடு affair இருக்கும் . அது தானே அந்த கதையின் முக்கிய முடிச்சு.

அந்த குருவி ஜோஷியக்காரனாக நடித்தவர் பிரபாகர் தான். கதாநாயகி காந்திமதிக்கு ஜோடி. ஆம் உன்னைப்போல் ஒருவன் கதாநாயகி பின்னால் சிரிப்பு நடிகையாக கலக்கிய காந்திமதி தான்.
தமிழ் திரை கண்ட மிக சிறந்த நடிகர்களில் பிரபாகர் ஒருவர். ஆனால் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.
இப்போது இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை.
Cecil B. Demille இயக்கிய Samson and Delilah படத்தில் கதாநாயகனாக நடித்த Victor Matureவேடிக்கையாக சொல்வார் :“I am not an actor. I have got 67 movies to prove it.” 67படங்களில் நடித்தவர் இவர்.

பிரபாகருக்கு 'காதலிக்க நேரமில்லை' படம் ஒன்றே அவர் சிறந்த நடிகர் என்பதற்கு போதுமான சாட்சி.
ஒரு படம் கூட ஒழுங்காக நடிக்காத பல நடிகர்களை தமிழ் திரை கண்டு சீராட்டி போஷித்திருக்கிறது என்பது விசித்திர அபத்தம்.
...........................................................................................
http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_16.html


புகைப்படங்கள்

1.’அழைத்தால் வருவேன்’ படத்தில் ராஜநாயஹம்

2. ’காதலிக்க நேரமில்லை’ பிரபாகர், நாகேஷ் சச்சுவுடன்

Oct 20, 2017

கிருஷ்ணன் நம்பி – சு.ரா- கி.ரா – சூரியோதயம்


சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் படித்தவர்கள் அதில் வருகிற சூரியோதய காட்சியை மறந்திருக்க முடியாது.
”அப்போது கிழக்கே சூரியனின் விளிம்பு தெரிந்தது. நகத்தைப் பிய்த்துக்கொண்ட விரலிலிருந்து ரத்தம் கசிவதைப்போல் சூரியன் வருகிறது. ரத்த வெள்ளம்….”
“காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, பாதை விளிம்பில் நின்று கொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன்…….அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும்………….
”ஒவ்வொரு நாளும் இந்த விசுவரூப தரிசனத்திலிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலான ஞானம் லகுவாகவும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு எதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும்…..”
ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் 1981ல் க்ரியா வெளியீடாக வந்த போது ஏற்படுத்திய பரபரப்பு…..
அசோகமித்திரன் ஜே.ஜே. பற்றி “ அண்ணாந்துன்னா பாக்க வேண்டியிருக்கு.”
மிக பிரமாதமாக 1985ல் அசோகமித்திரன் “ஒற்றன்” நாவல் மூலம் படைப்பாளியாக எதிர்வினையாற்றினார். ஜே.ஜேக்கு பதில் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஜே.ஜேக்கு சரியான சவாலான நாவல்.
இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்” கூட ஜே.ஜே சில குறிப்புகளுக்கு குறைந்த ஒன்று அல்ல.
பின்னாளில் பிரமிள் குறுநாவல் ‘ப்ரசன்னம்’ சு.ரா.வின் ஜே.ஜேவுக்கு எதிர்வினை என்று வெளிப்படையாக சொன்னார்.
ந.முத்துசாமி தன்னுடைய ‘உந்திச்சுழி’ நாடகத்தை ஜே.ஜே என்ற கதாபாத்திரத்திற்கே சமர்ப்பணம் செய்தார்.
ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் ஏராளமாய் விமர்சனத்தை எதிர்கொண்ட நாவல். சாரு நிவேதிதாவின் விமர்சனம் ரொம்ப பிரபலம்.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார்.


2002ல் ஜூலை 16ந்தேதி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பினார். அதில் அவர் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.
My dear R.P.Rajanayahem,

I totally rejected nearly sixty criticisms on J.J. 
Criticisms is a matter of opinion and opinions of writers always tend to vary, assuming they are recording their real voice, which is not often the case, especially in our milieu. 
Difference in opinions are understandable. But if anybody distorts FACTS that are standing in my favour, surely I will try to expose the deliberate falsifications of writers who ever they are.

- Sundara Ramaswamy 

ஜே.ஜே நாவலை கிருஷ்ணன் நம்பியின் நினைவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பியின் நினைவோடை (2003)யில் பிரசுரமானது. அதில் நம்பியும் சுராவும் பார்த்த சூரியோதயத்தைத் தான் ஜே.ஜேயில் விவரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
1976ல் நம்பி பிழைக்கவே இனி வழியில்லை என்ற மருத்துவ உண்மை தெரிந்த பின் நடந்த ஒரு நிகழ்வு.
“ அதிகாலையில் அவன் (கிருஷ்ணன் நம்பி) முதலில் எழுந்தான்.
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்படுவோமே என்று சொன்னேன். புறப்பட்டோம்.
 கார் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் போயிருக்கும். 
அப்போது தான் அந்த அருமையான சூரியோதயத்தை நாங்கள் பார்த்தோம். ஜே.ஜேயில் நான் விவரித்திருந்தது கூட அந்த சூரியோதயத்தைத்தான்.
 தென்னை மரங்களின் மேலாக சூரியன் மெல்ல மேலெலத்தொடங்கியிருந்தது. 
அந்தக் காட்சியை நன்றாக பார்ப்பதற்குத் தோதான இடத்தில் காரை நிறுத்தும்படிச் சொன்னான். இறங்கினோம். அங்கு ஒரு பாலம் இருந்தது. கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றோம். அங்கிருந்த திண்டில் அமர்ந்து கொண்டான். 
கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத்தொடங்கியது. அந்த சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகத் தான் அவன் அதிகாலையில் புறப்பட வேண்டும் என்று சொன்னானா? இனி இது போன்ற காட்சிகளை பார்க்க முடியாதே என்ற விஷயத்தை, மரணத்தை அந்தக் காட்சி அவனுக்கு நினைவு படுத்தியதா…….?”
.............................

கி.ராஜநாராயணன் தன் தொண்ணூறாவது வயதில் குமுதத்தில் “வேதபுரத்தார்க்கு” என்ற சுயசரிதைத் தொடர் ஒன்றை 2012ல் ஆரம்பித்து எழுதி அது புத்தகமாக 2014 வந்திருக்கிறது.

அந்த வேதபுரத்தார்க்கு நூலில் கிருஷ்ணன் நம்பி நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கும்போது கி.ராவுடன் ரயில் பயணத்தின் போது பார்த்த சூரியோதயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.ரா அதை விவரிக்கிறார் : “ மதுரையிலிருந்து கிருஷ்ணன் நம்பியுடன் நான். அதிகாலை நேரத்தில் ரயிலில் வந்து கொண்டிருந்தோம். கோவில் பட்டியைப் பார்த்து. வானம் வெளுக்க ஆரம்பித்தது.
இப்பொ ஒரு அதிசயம் நிகழப்போகிறது என்று கிருஷ்ணன் நம்பிக்குத் தெரியாது. காரணம் அவர் மேற்கே பார்த்துக்கொண்டிருந்தார், என்னிடம் பேசிக்கொண்டு.
மனசுக்குள் நான் அவரை திடீரென்று ‘அதெப் பாருங்க’ என்று கிழக்கே பார்க்க வைக்க வேண்டும்.
சில காட்சிகளை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது கடல் அலைகளைப் பார்ப்பது போலெ. கடல் விளிம்பில், மலை முகட்டில் சூரியப் பிறப்பையும் மறைவதையும் பார்த்திருப்பார்கள். தரையில் அவை நிகழ்வதைப் பெரும்பாலோர் பார்க்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்காது.
ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை உதிப்பது போல சூரியனின் தலை தெரிய ஆரம்பித்தது.
எதை இப்படி வாய்பிளந்து கவனிக்கிறார் என்று நம்பியும் திருப்பிக் கிழக்கே பார்த்தார். அவரையும் அந்தக் குழந்தைச்சந்தோசம் பற்றிக்கொண்டது.

“ஓ” என்று குரல் கொடுத்துக் கத்திக்கொண்டு ரயிலும் ஓடிக்கொண்டிருந்தது தாளத்துடன்.
ரயிலுடன் நம்பியும் சேர்ந்து ஆனந்தக்குரல் கொடுத்தார்.

கண்கூசாத ஒரு பிரம்மாண்டமான பவள உருண்டையாகக் காட்சி தந்தான் சூரியத்தேவன்.
இப்படி ஒரு வாய்ப்பு ஒருவருக்கு எப்போதாவது தான் வாய்க்கும்.”

……………………............

ஃப்ரஞ்ச் கவிஞன் ஆர்தர் ரைம்போவின் Eternity கவிதையில்
"It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!"


It has been found again. What? – Eternity. It is the sea gone with the sun.

it (the sun) will rise (again).

…………………………….