Share

Nov 28, 2017

Carnal Thoughts - 44



“ஏய்யா… தொர.. ஏய்யா உங்க மாமா இப்படி செய்றாரு..? நூறு பவுனோட வந்தேன். எனக்கப்பறம் ரெண்டு கல்யாணம் பண்றாரு..ஏங்கிட்ட என்னய்யா இல்ல…..அறிவில்லயா..?அழகில்லய்யா..? சொல்லுங்கய்யா…அத்த கிட்ட என்னய்யா இல்ல..? அறிவில்லயா…?அழகில்லயா..? ஆனா..உங்க மாமா சொல்லிட்டாருய்யா… தெளிவா சொல்லிட்டாரு…அவரு ஒடம்புல ஓடுற ஒவ்வொரு துளி ரத்தமும் ‘பொம்பள..பொம்பள’ன்னு தான் ஏங்குதாம்.” என்று பொழம்பிய ஒரு தூரத்து அத்தக்கி காதலர்கள் அதிகம். முக அழகும் கிடையாது. ஊதிப்பெருத்த யாளி. அறிவிலும் சிலாக்கியமாக சொல்ல ஏதும் கிடையாது.

தரமேயில்லாத ஒரு சல்லியிடம் படுத்திருந்த போது மகனிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். அப்புறமும் கூட கணவன் துரோகம் பற்றி புலம்பிக்கொண்டே தான் இருந்தார்.

முக அழகில்லாத பொம்பளைக்கு தான் பெரிய அழகின்னு நெனப்பு வந்துடுச்சின்னா…ஐயோ பாவம்.

அறிவில்லாத பலருக்கும் தான் அறிவாளி என்று நினைப்பு வருவது இயற்கை. இயல்பு. இதைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.
.......................

https://rprajanayahem.blogspot.in/…/08/carnal-thoughts-39.h…

Nov 26, 2017

ஆச்சார்ய தேவோ பவ


பழனியில் ரைஸ் ஆயில் ஏஜன்சி எடுத்திருந்த போது ரயில்வே ஃபீடர் ரோட்டில் இருந்த மாடர்ன் ஹோம் ஹோட்டலுக்கு நான் எண்ணெய் சப்ளை செய்த வகையில் மறு வாரம் கலெக்சன் விஷயமாக போய் இருந்தேன்.

மாடர்ன் ஹோம் உணவகத்திற்கு மேல் தளத்தில் அந்த மலையாள பிராமண முதலாளி அப்போது லாட்ஜ் வைத்து இருந்தார்.

பணம் கலெக்சன் செய்து கொண்டிருந்த போது என்னை தாண்டி ஒரு ஜோடி மாடியேறியது. நான் திரும்பி அவர்களை கவனித்த போது என் ப்ரொஃப்சர் ஒருவர் தான் மாடியேறியவர் என்பது தெரிய வந்தது.

சரி தான். பழனி மலைக்கு தரிசனத்துக்கு மனைவியுடன் வந்திருக்கிறார் போல என்று நினைத்து நான் மேலே போனேன். அங்கு ரிசப்சனில் இருந்தவர் அவரிடம் சாதகமாக பேசவில்லை. ரூம் இல்லை என முகத்தில் அடிப்பது போல சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் முதலில் அவருக்கு நமஸ்காரம் சொன்னேன். அவர் என்னைப் பார்த்து
 “ ஹாய் கேபி” என்றார். அந்த வார்த்தைகள் மெக்கானிக்கலாக இருந்தது என்பதை அப்போது நான் கவனிக்கவில்லை.
அவருடன் வந்த பெண் சற்று தள்ளி முகம் தெரியாதவாறு நின்று கொண்டிருந்தார். மனைவி வெட்கப்படுகிற டைப் போல…

நான் ரிஸப்சனிஸ்ட்டிடம் “ எங்க ப்ரொஃபசர். ரூம் கொடுங்க” என்றேன்.
உடனே அவர் அதற்கு செவி சாய்த்தார்.

நான் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். ’கோவில் தரிசனம் முடிந்த பின் என் வீட்டிற்கு வாருங்கள் சார்!’

மாலையில் ரயில்வே ஃபீடர் ரோட்டுக்கு போக வாய்த்த போது மாடர்ன் ஹோம் லாட்ஜுக்கு போனேன்.

லாட்ஜ் ரிசப்சனிஸ்ட்டிடம் கேட்டேன் – ’ப்ரொபசர் தரிசனம் முடித்து வந்து விட்டாரா?’

ரிசப்சனிஸ்ட் ‘ சார் உங்க ப்ரொபசர் மனைவியோடு வந்தார்னா நினைக்கிறீங்க. நாங்க எப்பவும் ஒரு ஜோடி வந்தா உடனே உண்மையிலேயே கணவன் மனைவி தானா? இல்லையான்னு உடனே தெரிஞ்சிக்க சிரமப்பட்டதே கிடையாது. அவர்கள் நடவடிக்கையே காட்டிக்கொடுத்து விடும். அதனால் தான் ரூம் இல்லன்னு சொன்னேன். நீங்க வந்து ரெகமண்ட் செஞ்சதால உடனே கொடுத்துட்டேன். உங்களுக்கு தெரியுமா? அவங்க ரெண்டு மணி நேரத்தில் காலி செஞ்சுட்டுப்போயிட்டாங்க. அந்த பொண்ணு காலேஜ் ஸ்டூடண்ட் போல தெரிஞ்சது. நீங்க அவர பாத்ததும் பதறிட்டார். அதனாலயும் தான் ரெண்டு மணி நேரத்தில காலி பண்ணிட்டு போயிட்டார்.”
.............................................

http://rprajanayahem.blogspot.in/2017/10/to.html


https://rprajanayahem.blogspot.in/2017/10/blog-post_18.html

https://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_09.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_6727.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_29.html


Nov 25, 2017

Is it really possible to write what one feels?



Is it really possible to write what one feels?

ந.முத்துசாமி இது பற்றி அழகாக சொல்வார்: "எழுதி என் மனதில் தோன்றுகிறவைகளை அபிநயித்துக்காட்டி வெளிப்படுத்தப் பார்க்கிற சிரமங்களே என் சொற்கள்."


‘சொற்களை மேகமாக்கி
வானில் வைத்து விட்டு
மழைக்காக
வானம் பார்த்து நிற்கிறான்
கவிஞன்’
இப்படி சொல்வது கலாப்ரியா.



இன்குலாப் : ’எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத் தான்
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்
போராடுவோரின்
நெற்றிச்சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!’

....................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_26.html


Nov 22, 2017

திருச்சி ஆல் இண்டியா ரேடியோ


இந்திரா பார்த்தசாரதியின் ’ராமானுஜர்’ நாடகத்திற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுக்கப்பட்ட போது திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் நான் அந்த நாடகம் பற்றி ஒரு உரை (இருபது நிமிடத்திற்கு) நிகழ்த்தினேன்.

அப்போது ரவிசுப்ரமண்யன் இ.பா பற்றி ஒரு டாகுமெண்ட்ரி மூவி செய்ய இருந்த நேரம். இந்திரா பார்த்தசாரதி அவரிடம் என்னிடம் பேசச்சொல்லி ரவி போனில் பேசினதுண்டு. நான் வாசித்த கட்டுரையை அனுப்பி வைத்தேன்.


மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா பற்றி ஒரு இலக்கிய பேருரை ( அரை மணி நேரம் ) நான் திருச்சி ரேடியோவில் செய்திருக்கிறேன். வாசித்த அந்த நீண்ட கட்டுரையை நான் அந்த ரிக்கார்டிங் ரூமிலேயே விட்டு விட்டு வந்தேன்.

இந்தி கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து வாசித்திருக்கிறேன். அந்த கவிதைகளை ஆல் இண்டியா ரேடியோவில் அவர்களே தந்து மொழிபெயர்க்க சொல்லியிருந்தார்கள்.
ஒரு கவிதையை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பதில் சிரமம் இருந்த போது என் தகப்பனார் எனக்கு உதவியிருக்கிறார்.
மொழிபெயர்த்த கவிதைகளையும் கூட ரிக்கார்டிங் முடிந்ததும் அங்கேயே வைத்து விட்டு வந்தேன்.


நான் திருப்பூர் வந்த பிறகு கூட இவை ரேடியோவில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டதாக திருச்சி நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
………………………………………………..


Nov 16, 2017

Memory is my fate


கருத்தழிவின் கழிவு காதலன் பிதற்றல்
- பிரமிள்

Gabie Dear, Nothing to dance with the pen?
என்று குறிப்பு எழுதிய காதலிக்கு உடனே, உடனே
”என் இதய கீதமே!
இதோ என் பேனா தா, தை, தக்க தை போட ஆரம்பித்து விட்டது” என கடிதம் எழுதினேன்.
மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ கவிதைத்தொகுப்பில் இருந்து கவிதையெடுத்து கடிதத்தில் திணித்தேன்.
“ நீ முதல் முறையாக தலை சாய்த்து கடைக்கண்ணால் பார்த்த பார்வை என் நெஞ்சில் முள்ளாய் தைத்து விட்டது. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும். இன்னொரு முறை பார்”

"Te quiero"
அப்போது நான் படித்துக்கொண்டிருந்த டெனிஸ் ராபின்ஸ் நாவல் 'Brief Ecstasy'ல் படித்த
"Te quiero".
 ஸ்பானிஷ் மொழியில் "Te quiero" என்பது “I love you”.
இந்த ஸ்பானிஷ் "Te quiero" வை கடிதத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் தெளித்தேன். குழம்பட்டுமே. தவிக்கட்டுமே. இது என்ன வார்த்தை, என்ன அர்த்தம்…

ஒரு பாட்டு எழுதி பாடி பாட்டு போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறேன்.
”மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய் வாழிய மாதவளே
வாழ்வினில் புதுமை வளமே காண வருகை தந்தோய் வாழி
சிரிக்கவைத்தேன் அது தவறென்றால்
உன்னை அழுக வைத்தேன் அது சரிதானா?
நீ இல்லை என்றால் காலமெல்லாம்
உன் நினைவு வந்து மொழி சொல்லுமே
நினைவு வந்து மொழி சொல்லுமே
இருக்கின்ற நீ எனக்கில்லையென்றால்
அந்த இல்லாத இறைவனும் இருக்கட்டுமே
உன் மனம் புண்பட இறைஞ்சுகிறேன்
என் அகமே நெகிழ மறந்து விடு
அகமே நெகிழ மறந்து விடு”



Benchmark Love.

Love is a resurrection.



Memory is a heavy iron ball chained in my leg. Get me an axe to cut it.

..................


Like the corners of my mind
Misty watercolor memories 
Of the way we were

Scattered pictures
Of the smiles we left behind
Smiles we gave to one another

For the way we were 

Doris day’s song 'Memories'
.......................................................





Nov 14, 2017

என்னவோ ஏதோ


முப்பத்துரெண்டு வயசு வர தான் பூமியில இருந்த சிவப்பிரகாசருக்கு என்ன துயர அனுபவமோ தெரியவில்லை. சரியான Misogynist. போற போக்கில ஒரு புழுக்கய போட்டிருக்கிறார்.
”நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தளவிருந்து
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ளல் ஆகாதே.”

’ஏன் இப்படி ஒண்டியா இருக்கீங்க. நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டா வசதி தானே’ என்று ஒருவர் அவரிடம் கேட்டதற்கு இந்த பதில்
“நோய் கண்டாலும் கொள்ளலாம் நூறு வயது அளவு
பேய் கொண்டாலும் கொள்ளலாம் நூறு வயது அளவு
பெண் கொள்ளல் ஆகாது”
பெண்ணியவாதி குசும்பன் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.

பட்டினத்தார் என்ன ஔவை பாட்டியே கூட இப்படி வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.

சிவப்பிரகாசரின் தம்பி பேரன் சுவாமிநாத தேசிகர் கிறிஸ்தவராகி சூசை என்று பெயர் மாற்றிக்கொண்டார். கிறிஸ்தவ மதம் ஊடுறுவாத இடமே இல்லை. புகை நுழையாத இடத்தில் கூட வேதம் பாய்ந்திருக்கிறதே. சிவ அனுபூதி செல்வர் குடும்பத்தையும் ஆட்டி வைத்திருக்கிறது. 

சிவப்பிரகாசர் எழுதிய ’யேசு மத நிராகரணம்’ என்ற கிறித்தவ எதிர்ப்பு நூலை முன் வைத்து சுவாமிநாத தேசிகர் கதாகாலட்சேபமெல்லாம் செய்தவர் என்ன கஷ்டமோ கிறித்துவ மதத்தை தழுவியிருக்கிறார்.
When you refuse to accept anything but the best, often you will get it.

………………
மகன் செத்தாலும் பரவால்ல. மருமக வெள்ளச்சேல கட்டனும் - மாமியார் மனநிலை பற்றிய சொலவடை
ஒரு ஐரிஷ் பழமொழி
What is the world to a man when his wife is a widow?
நான் திருப்பூரில் மூன்று பள்ளிகளில் Spoken English Teacher ஆக வேலை பார்த்திருக்கிறேன்.
ஒரு பள்ளியில் Faculty roomல் என்னைத் தவிர எல்லோருமே பெண்கள். எல்லோரும் தங்கள் சொந்த விஷயங்களை என் காது பட பேசுவார்கள். வெளிப்படையாக.
எல்லோருக்குமே அவரவர் மாமியார் பற்றி கடும் அதிருப்தி.
………………………………………………
A Khushwant Joke
An Englishman met a Sardarji in a toilet
English : How do you do?
Sardarji : We open the zip and do.
..........................................

Nov 4, 2017

ஒச்சு


ஒச்சு மதுரை கம்மாக்கரையில் செய்த சாகஸத்தில் ஒன்று. பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு எழுபது வயது பெரியவரிடம் ‘ அப்பு, உனக்கு நச்னு ஒரு செம தாட்டிய பொண்டாட்டியா நான் கொண்டு வர்றேன்’ன்னு சொல்லி கணிசமான ஒரு தொகையை கறந்த விஷயம்.
அந்த கிழவர் இதை சொல்லி அழுத போது கம்மாக்கரையில் மட்டுமல்லாது அரசரடி ஆரப்பாளையம் ரோட்டிலேயே ’ஸ்கூப் நியூஸ்’ ஒச்சுவின் இந்த நளின சாகசம் தான். அவனுக்கே அறிமுகமில்லாத ஒரு பெண்ணையே காட்டியிருக்கிறான் பாவி. அவள் அந்தக்கால பிரபல நடிகை கலர் காஞ்சனா மாதிரியேயிருந்திருக்கிறாள். அவளிடம் பேசி இவரை சுட்டிக்காட்டிக்காட்டிய போது அந்த ’கலர் காஞ்சனா எதிரொலி’ கிழவரை பார்த்து சிரித்திருக்கிறாள். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என்று எண்ண வேண்டும் என இறும்பூதெய்தி விட்டார்.
ஏனோ ஒச்சு இது போன்ற ஒரே சீரான ஃப்ராடு வேலைகள் தான் செய்திருக்கிறான். எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் ஒருவர் புதிதாய் கல்யாணமானவர். அவருடன் உடல் உறவு செய்ய புத்தம்புதிய மனைவி அனுமதிக்கவில்லையாம். அதை இவர் ஒச்சுவிடம் சொல்லியிருக்கிறார்.
“உனக்கு பொம்பிளைய கையாளத்தெரியலை. நான் சூப்பர் தாட்டி கொண்டு வருகிறேன். கொஞ்சம் பழகி விட்டால் அப்புறம் பொண்டாட்டிய ஈசியா தட்டி படுக்கப்போட்டுடுவ”
– ஒச்சு கவுன்சலிங்!
”ஆனா ஒன்னு.. நீ தாட்டிய அணையும் போது நான் கூடவே நிப்பேன். உனக்கு நெம்புகோலின் தத்துவத்த எப்படி விளக்குறதுன்னு நானே விளக்கு புடிச்சு சொல்லித்தருவேன். கூச்சப்படக்கூடாது..சரியா..?”
கிறுக்கு வாத்தியார் வெள்ளந்தியாக : ’இது தான் விளக்கு பிடிக்கிறதுங்கறதா?’
சபலப்படுத்த வழக்கம் போல ஒரு பெண்ணையும் காட்டி விட்டான். பெரிய தொகை கைமாறியிருக்கிறது. அவள் லட்டு போல இருந்ததாக அந்த கிறுக்கு வாத்தியார் சொல்லி, சொல்லி புலம்பினார்.வேறு வழியேயில்லாமல்  கத்தோலிக்க கிறிஸ்தவரான அவர்   ’எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை, எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை’ என்று மனந்திருந்தி, ஏமாற்றத்தை தாங்கி சகித்துக்கொண்டார்.
……….......
ஒச்சு தத்தனேரி டூரிங் டாக்கிஸில் எல்லாம் பழைய படம் பார்க்க எங்களோடு வருவான். ’தொர, வாங்க தொர, சூப்பர் படம் தொர’ என்று கூடவே வருவான். ரொம்ப மரியாதையும் பிரியமுமாக என்னிடம் இருப்பான். தரை டிக்கட்டில் கூட்டம் நெருக்கியடிக்கும். கொட்டாயில் ‘திரள்மணி கதிர்கள் வீசி திசையாளும் ஆதவன்’ சீர்காழி பாட்டு போட்டு விட்டால் பாதி பாட்டில் நிறுத்தி விட்டு படம் போட்டு விடுவான். ஒச்சு முண்டியடித்து டிக்கட் வாங்கி கொடுத்து விட்டு உள்ளே போனவுடன் மணலில் படுத்து உடனே,உடனே தூங்கி விடுவான். இண்டர்வெலில் வாய் பிளந்து தூங்குபவனைப் பார்த்து கம்மாக்கரை கண்ணன் பொங்கி அழும் குரலில் தேம்புவான் ” இடம் பாத்து செத்தியாடா ஒச்சு, தத்தனேரி சுடுகாடு பக்கத்தில தானன்னு இடம் பாத்து செத்தியா.. பச்ச மூங்கில் என் செலவுடா ஒச்சு”
………...............................
அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் மு.க மன்றம் ஒன்று உண்டு. அங்கே நின்று கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.
பின்னால் என் மாமனாராய் ஆகப்போகிறவரின் அண்ணன் அங்கு வந்து விட்டார். ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து அந்த தெருவில் இருந்த அவருடைய உடன் பிறந்த தங்கையை பார்த்து விட்டு திரும்பும் போது என்னை பார்த்து விட்டார். உடனே நான் அவரை பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்துப்போய் ஒரு கோல்ட் ஸ்பாட் வாங்கிக் கொடுக்கிறேன். ஒச்சு நல்ல போதையில் வந்து விட்டான். தள்ளாடியவாறு “ தொர” சொல்லி எனக்கு சல்யூட் அடித்தான். கோல்ட் ஸ்பாட் குடித்துக் கொண்டிருந்த மாமா கவனிக்கும்படியாக திரும்ப திரும்ப ‘தொர’ சொல்லி என்னைப் பார்த்து தள்ளாடி தள்ளாடி சல்யூட் செய்து கொண்டே இருந்தான்.
எனக்கு பகீர் என்றது. மாமா என்னைப் பற்றி என்ன நினைப்பார்.
’ச்சீ ... சுத்த ரௌடிப்பய பிள்ள சாவகாசம்’

நான் அவனை ஏறெடுத்தும் பாராமல் “ வீட்டுக்கு வாங்க, மாமா” என்றேன். ”இன்னொரு தடவ வர்றேன். அவசரமா ஊருக்கு போகவேண்டியிருக்கு. நகைக்கடைய வச்சிக்கிட்டு…. பெரிய பொறுப்புல்லையா? என்ன நான் சொல்றது.”
அங்கிருந்த கழக நண்பர்கள் எனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டு ஒச்சுவை அப்புறப்படுத்த முனையும்போது அவன் “ எங்க தொரடா.. விடுங்கடா என்னை”ன்னு திமுறுவதையும் காண நேர்ந்தது.
ஒரு வழியாக மாமாவை ஆட்டோவ அனுப்பி விட்டு நான் ரௌத்திரம் பழகினேன்.
“ எங்கடா ஒச்சு… தாயோளி.. அவன செருப்பால அடிக்காம என் ஆத்திரம் தீராது. கேவலப்படுத்திட்டானே”
அப்போதெல்லாம் என்னிடம் fiery signs அதிகம்.

’தோழரே… விடுங்க தோழரெ… ஒங்க கிட்ட ஆரஞ்சு மிட்டாய் கேக்கத்தான் வந்திருக்கான். போதையில ’நாக்கு உலருது. தொர ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுங்க’ன்னு உங்களப் பாத்து புலம்பிக்கிட்டே இருந்தான். நாங்க வாங்கி கொடுத்து மன்றத்தில படுக்க வச்சிருக்கோம். ஆளு ஃப்ளாட் ஆகிட்டான்.’

நான் கோபத்தோடு அவன ரெண்டு மிதி மிதிக்காட்டா என் ஆத்திரம் தீராது என்று மன்றத்தை நோக்கி போனேன்.
கழக கண்மணிகள் ’தோழரே, வேண்டாம்’
என்னை சமாதானப்படுத்தினார்கள்.

என்னை  அந்த ஏரியாவில் ’தோழர்’ என்றே விளிப்பார்கள். ’தோழர்’ என்றால் அது நான் தான்.

 முதலில் அங்கிருந்து கிளம்பினால் தான் என் கோபம் மறைய வாய்ப்பு. நான் உடனே வீட்டுக்கு கிளம்பினேன்.


மறு நாள் மாலை தி.மு.க மன்றத்துப் பக்கம் வருகிறேன். செய்தி அதிர்ச்சி.
’தோழரே, ஒச்சு செத்துட்டான் தோழரே’
போத தெளுஞ்சி இங்க இருந்து ராவு வீட்டுக்கு போய் படுத்திருக்கிறான். ஆளு எழுந்திருக்கல. மத்தியானத்துக்கு மேல தத்தனேரி சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போயிட்டாங்கே.


எனக்கு உயிரே இல்ல. உடம்பே ஆடி விட்டது. ஒரு வேளை நான் எல்லோரும் பார்க்க அவனை நேற்று ரெண்டு மிதி மிதிச்சிருந்தா இன்று என் மேல கொலக்கேஸ் தான்.
எப்படியோ கோபத்தை அடக்கிக்கொண்டு வீட்டுப்போய் விட்டதால் தப்பித்தேன்.
இந்த விஷயத்தை என் திருமணத்திற்கு பின்னால் என் பெரிய மாமனாரிடமே சொல்லியிருக்கிறேன்.
இப்போது நினைத்தாலும் முதுகில் ஒரு சொடுக்கு சொடுக்கும்.
…………………………………………………………………















................................................................................