Share

Oct 22, 2008

கநாசு நினைவோடை

கநாசு தவிர அவருடைய சமகாலத்தவர்களான மணிகொடி எழுத்தாளர்களுக்கு சினிமா நாட்டம் இருந்தது .
கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன . கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும் . நான் எழுத்தையும் ஆராதனை பண்ணுவேன் . இன்னொரு கலையையும் ஆராதனை பண்ணுவேன் என்று சொல்லக்கூடாது என்று நினைப்பவர் க நா சு . Jealous Mistress ! ஒரு கலை இன்னொரு கலைக்கு சக்களத்தி !!
கநாசு எதையும் தொழ மறுத்தவர் . புனிதம் என புல்லரிப்பு எதுவும் அவருக்கு கிடையாது . நடராஜர் சிலை பற்றி அவர் சொன்ன ஒரு கமெண்ட் . ' ஒற்றை காலை அவர் தூக்கி நிற்பதற்கு கொசுகடி கூட காரணமாயிருக்கலாம் .'
நான் இங்கே குறிப்பிட வந்த விஷயம் சுந்தர ராமசாமி ' கநாசு நினைவோடை ' நூலில் செய்துள்ள தகவல் பிழை பற்றி .
கநாசு வின் தகப்பனார் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண சப் போஸ்ட் மாஸ்டர் தான் . ஆனால் சுராவின் முதுமை மறதி காரணமாக ' கநாசு' வின் தகப்பனார் தென் ஆப்பிரிக்காவிலே 'போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' பதவி வகித்தவர் என்று ரொம்ப விசித்திரமாக குறிப்பிட்டுள்ளார் .
தபால் துறை யில் போஸ்ட் மாஸ்டர் என்பது பொதுவான வார்த்தை . பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் , சப் போஸ்ட் மாஸ்டர் , ஹெட் போஸ்ட் மாஸ்டர் என்று பல பிரிவு தபால் துறை யின் உள்வட்டத்தில் உண்டு . ஒரு மாவட்டத்துக்கு அந்த காலத்தில் ஒரு ஹெட் போஸ்ட் மாஸ்டர் தான் . பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் Extra department எனப்படும் கீழ்நிலை ஊழியர் . அதாவது தபால்துறையின் உள் ஊழியர்களான Postman , Class 4 இவர்களுக்கும் கீழ் .ஜனங்கள் எல்லோரையுமே போஸ்ட் மாஸ்டர் என்று தான் நினைப்பார்கள் .
' போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' என்பது தபால் துறை யில் மாநிலத்திலேயே உயர் அதிகாரி .
நான் இந்த நினைவோடையை படித்தவுடன் சுந்தர ராமசாமிக்கே தொலைபேசியில் தெரிவித்தேன் . அதிர்ந்து விட்டார் .அவருக்கு தான் எழுதியுள்ளபடி தான் ஞாபகமாம் . காலச்சுவடு கண்ணனுக்கும் ,நினைவோடை தொகுப்பாளர் அரவிந்தனுக்கும் தொலை பேசியில் தவறை சுட்டி காட்டினேன் . அதோடு திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்த காலச்சுவடு நிகழ்வில் கனிமொழி கருணாநிதி கவிதை வாசிக்க வந்திருந்தார் . அந்த இலக்கிய கூட்டத்தில் நான் தான் அதிக நேரம் பேசினேன். அந்த கூட்டத்தில் பகீரங்கமாக 'இந்த தவறை அடுத்த பதிப்பில் திருத்த வேண்டும்'என நான் பேசினேன் .

2 comments:

  1. நீங்கள் சொல்வது தான் சரி. க.நா.சு.வின் தந்தை சிதம்பரத்தில் போஸ்ட் மாஸ்டராகத்தான் இருந்தார். அதே தெருவில் வசித்த தன் நண்பர் வக்கீலின் மகளை தன் மகன் க.நா.சு.வுக்கு மணமுடித்துவைத்தார்.

    சுராவின் ‘கநாசு நினைவோடை’யில் பல தகவல் பிழைகளுண்டு. ஆனால் நான் திருத்த விழையவில்லை.

    அவருக்கு கடவுள் நம்பிக்கையிருந்ததேயொழிய சடங்குகளில் விருப்பமில்லை. அதனால் தான் புரோகிதர், மந்திரம் தீச்சட்டியில்லாமல் அவர் உடலை நிகம்போத் மின்சார மயானத்தில் எரித்தேன்.இதை ஓர் உயிர்மை கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன்.

    பாரதி மணி

    ReplyDelete
  2. ஒரு வேளை நீங்கள் எழுதாவிட்டல் இந்த மாதிரித் இலக்கியத் தகவல்கள் எல்லாம் சாதாரண வாசகர்களுக்கு கிட்டும் பாக்கியம் இல்லை.

    அன்புடன்

    சூர்யா

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.