Share

Mar 8, 2009

அறியப்படாத சினிமா பிரபல ஜோடி

சினிமாவில் பல பிரபல ஜோடிகள் பற்றி மக்கள் அறிவார்கள் .
ஜெமினி -சாவித்திரி
எஸ் எஸ் ஆர் - விஜயகுமாரி
ரவிச்சந்திரன் -ஷீலா
பிரபலமான இந்த ஜோடிகள் இணைந்ததும் பிரிந்ததும் தெரியும் . ஆனால் அதற்கும் பல ஆண்டுகள் முன் இவர்களுக்கு முன் இதே போல இணைந்து பிரிந்த ஜோடி ஒன்று பற்றி பலருக்கு தெரியாது .
டி.ஆர் . மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி !
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ யல்லவா ,இந்த பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூவை கட்டிலில் கட்டிவைத்தேன் போன்ற பாடல்களை பாடிய எஸ் வரலக்ஷ்மி தான் மகாலிங்கத்துடன் பல காலம் முன் வாழ்ந்தார் . இருவரும் அப்போது திரையுலக பிரபல ஜோடி என அறியப்பட்டிருந்தார்கள் . பாடல்சத்தமாக ஒலிக்கும் நடிகர் மகாலிங்கம் காரில் வரலக்ஷ்மி யும் சேர்ந்து ஸ்டூடியோவுக்கு போவதை ரசிகபெருமக்கள் சாலையோரங்களில் நின்றபடி பார்த்து கையசைத்து வாழ்த்துவது தினம் பார்க்க கிடைக்கும் காட்சியாம்.
அப்போது மகாலிங்கத்திடம் 'பிலிம்ரெப்ரசெண்டேடிவ்' வேலை பார்த்தவர் ஏ எல் சீனிவாசன் . கண்ணதாசனின் அண்ணன் . பின்னாளில் சாரதா ஸ்டூடியோ , ஏ எல் எஸ் புரடக்சன் என முதலாளியானவர் .
வாழ்க்கை விந்தையானது . பல வினோத திருப்பங்கள் நிறைந்தது .
1 .டி ஆர் மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி நட்சத்திர ஜோடி பிரிந்தது .மகாலிங்கம் தயாரித்த இருவரும் இணைந்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததும் அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் மன வேறுபாடுக்கு காரணமாக இருந்திருக்கும் .
2 . சில காலத்திற்கு பின் எஸ் வரலக்ஷ்மி நடிகர் மகாலிங்கத்திடம்முன்பு பிலிம் ரெப் வேலைபார்த்த ஏ எல் சீனிவாசனின் மனைவியானார் . அவருடனேயே வாழ்ந்தார் .
கண்ணதாசன்  " மாலையிட்ட மங்கை "(1958)படத்தை டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கி தயாரித்தார் .
வரலக்ஷ்மி சிவாஜியின் ஜோடியாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்தார் .
கே எஸ் ஜி யின் பணமா பாசமா (1968)படம் எஸ் வரலக்ஷ்மியை மீண்டும் 'அம்மா' நடிகையாக பிரபலமாக்கிவிட்டது .
நட்சத்திர ஜோடி டி ஆர் மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி பிரிந்து
தலைமுறை காலங்களுக்கு பின்
ஏ பி நாகராஜன் இயக்கத்தில்
ராஜ ராஜ சோழன் படத்தில் டி ஆர் மகாலிங்கமும் எஸ் வரலக்ஷ்மியும் ஒன்றாக பாடி நடித்தார்கள் .
" நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க " சீர்காழி பாடுவது
" நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க " டி ஆர் மகாலிங்கம்
" தஞ்சமென வந்தோர்க்கு தஞ்சம் வழங்கும் தஞ்சை பெருவுடைய சோழனே நீ வாழ்க " எஸ் வரலக்ஷ்மி தொடர்ந்து பாடுவது
பின் சீர்காழி ,மகாலிங்கம் ,எஸ் வரலக்ஷ்மி மூவரும் சேர்ந்து " வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கு விண்ணுயர் பெரிய கோவில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க !"
"தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே !"
ஆனால் இந்த படம் வந்த காலங்களில் ஏ எல் எஸ் மனைவியாகவே எஸ் வரலக்ஷ்மி அறியப்பட்டிருந்தார் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.