ஜி சகுந்தலா சிவாஜி கணேசனின் ஜோடியாக வியட்நாம் வீடு நாடகத்தில் நடித்தவர் . நடிகை பத்மினியின் உறவினர் . உருக்கமாக உடைந்த குரலில் சோகமாக பல படங்களில் நடித்த இவர் 'உயர்ந்த மனிதன் 'படத்தில் அருமையாக காமெடி செய்திருக்கிறார் .
எஸ் எஸ் சிவசூரியன் பற்றி நினைக்கும்போது என் நினைவிற்கு வருகிற விஷயம் ஒன்று அவர் தன் முதிய வயதில் தன் மகனை விபத்தில் பறிகொடுத்தவர் . புத்திர சோகம் இவரை முதுமையில் பீடித்தது வேதனையான விஷயம் . சிவசூரியன் நாடகங்களில் நடித்துகொண்டே இருந்தார் . எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதிமுக வில் உடனே சேர்ந்தவர் . நான்கு வருடங்களில் ஆட்சியை அதிமுக பிடித்தது .அப்படியும் அதன் பின்னும் கூட இவர் வாழ்வு செழிக்கவே இல்லை என்று தான் சொல்லவேண்டும் . ஒரு கூடுதல் தகவல் இந்த சிவசூரியன் என் மாமனாரின் நண்பர் .
மாதுரி தேவி கிறித்துவ பெண் . க்ளாரா என்று பெயர் . இவர் அண்ணன் ஒரு ரவுடி . தியாகராஜபாகவதர் , என் எஸ் கிருஷ்ணன் தண்டனை அனுபவித்த 'இந்து நேசன் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில்' க்ளாராவின் அண்ணன் சம்பந்தப்பட்டிருந்தார் என கேள்விப்பட்டிருக்கிறேன் .பின்னால் க்ளாரா 'மாதுரி தேவியாக' பிரபலமானார் .
மந்திரி குமாரி படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்.ஏ.நடராஜன். கள்ளபார்ட் நடராஜன் அல்ல. கள்ளபார்ட் நடராஜனையும் எஸ் ஏ நடராஜனையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் .இந்த எஸ் ஏ நடராஜன் சிவாஜியின் மனோகராவிலும் வில்லனாக வந்து கலக்கியவர். எம்ஜியாரின் மந்திரி குமாரி , சிவாஜியின் மனோகரா இரண்டு படங்களை நினைத்தால் எஸ் .ஏ .நடராஜனை நினைக்காமல் இருக்க முடியாது . தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன் இந்த எஸ் ஏ நடராஜன் .
கள்ளபார்ட் நடராஜன் ' சித்தாடை கட்டிக்கிட்டு' பாட்டிற்கு நடனம் ஆடியவர் . டப்பாங்குத்து டான்ஸ் அருமையாக ஆடுவார் . சிவாஜியின் பராசக்தியிலே கூட ஒரு காட்சியில் நடித்தவர் ."தெய்வப்பிறவி " படத்தில் சிவாஜிக்கு தம்பியாக கள்ளபார்ட் நடராஜன் நடித்திருக்கிறார் .மதராஸ் டு பாண்டிச்சேரி ,கண்காட்சி ஆகிய படங்களின் வில்லன் . இவர் " 'ஊதாப்பு கண் சிமிட்டுகிறது 'படத்தில் படகு ஒன்றில் " ஆண்டவன் இல்லா உலகமிது, ஆசைகள் இல்லா உலகமிது " பாட்டிற்கு நடித்த பின் அதன் பிறகு சினிமா வாய்ப்பே சுத்தமாக இல்லாமல் இருந்து நீண்ட காலத்திற்கு பின் " தேவர் மகன் " படம் தான் அடுத்து வாய்ப்பு கிடைத்து இவர் நடித்த படம் !


My post on Mandiri kumari here
http://awardakodukkaranga.wordpress.com/2009/03/05/மந்திரி-குமாரி/