எழுத்தாளர்எம் ஜி சுரேஷ் நான்கு வருடங்களுக்கு முன் சொன்ன சம்பவம் இது .
எம் ஜி சுரேஷ் தன் அலுவலக பணியில் ஒரு ஊருக்கு இன்ஸ்பெக்சன் போயிருந்த போது நடந்தது .
அந்த ஊரில் ஒரு விஷேசமான சாமியார் என நம்பப்பட்ட ஒருவர் இருந்திருக்கிறார் . அவரை போய் பார்த்தால் என்ன என சுரேஷ் எண்ணியிருக்கிறார். எழுத்தாளருக்கு உள்ள ஆவல் தான் .அலுவலக ஊழியர்கள் சிலருடன் அந்த சாமியாரை பார்க்க கிளம்பியிருக்கிறார் .அப்போது கூடவே வந்த உள்ளூர் அலுவலக பியூன், வழியெல்லாம் அந்த சாமியாரை மிக கடுமையாக விமர்சித்துக்கொண்டு வந்திருக்கிறார்.
" தேவிடியா பய சார் இந்த சாமியார் . ஒண்ணாம் நம்பர் அயோக்கியன் . இவனை போய் நீங்க பார்க்கனுமா ?"
'சரியான பொம்பளை பொருக்கி . எத்தனை பொம்பளையை அசிங்கம் பண்ணியிருக்கான் தெரியுமா ? தேவிடியா பய இந்த சாமியார் "
" பிராடு பய சார் . ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கான் . இவனையும் சாமின்னு இந்த ஜனங்க நம்பிகிட்டு இருக்கு . தூ .சாக்கடை பன்னி.ஏன் சார் இந்த பன்னியை போய் நீங்க பார்க்க வர்றீங்களே "
''பணக்காரங்களை தான் இந்த சாமியார் மதிப்பான் .காசுலே தான் குறி . என்னைக்குனாலும் இவன் போலிஸ் கிட்ட கட்டாயம் ஒரு நாள் மாட்டுவான் . எவ்வளவு நாள் தான் இவன் மோசடி நடக்கும் . பேமானி சிக்குவான் பாருங்க ஒரு நாள் .ரொம்ப நாள் எல்லாரையும் ஏமாத்த முடியாது சார்.''
ஆசிரமம் வந்தவுடன் இந்த பியூன் 'குடு ,குடு ' என்று வேகமாக ,அவசரமாக ஓடி,பய பக்தியோடு நடுங்கி தோப்பு காரணம் போட்டு ''சாமி ! ஒங்க ஆசீர்வாதம் வேணும் சாமி '' என்று கூப்பாடு போட்டுசாஸ்டாங்கமாக சாமியார் காலில் விழுந்து விட்டாராம் !


மனிதர்களின் அக புற வினோதங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை