நேற்று அந்த கர்னல் ரூபன், லெப்டினன்ட் கர்னல் சிரித்திரன் இருவரும் சிரித்தவாறு பிரபாகரனோடு நிற்கும் அந்த புகைப்படம் ஏற்படுத்தி விட்ட மன வியாகுலம் சொல்லும் தரமன்று.
சென்ற வெள்ளியன்று இருவரும் ஜெட் விமானத்தில் கொழும்பு கிளம்பு முன் தங்கள் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உலகம் மறக்க முடியாத புகைப்படங்களுள் ஒன்று.
ரூபனின் அகன்ற புன்னகை, சிரித்திரனின் கண்கள்,மூக்கு, மீசை, வாய் அனைத்திலும் வியாபித்து விட்ட அந்த சிரிப்பு ..
எங்ஙனம் இது சாத்தியம் .. மரணத்தை தழுவ கிளம்பு முன் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலுமா?
அந்த இரு இளைஞர்கள் நீர்க்குமிழி வாழ்வு பற்றி அந்த புகைப்படம் சொல்லும் கவிதையை யாராலும்,எப்பேர்ப்பட்ட கொம்பாதி கொம்பனான மகா கவியாலும் வடித்துவிடமுடியுமா?
படைப்பு, படைப்பாளி, காவியம், திரைக்காவியம்,ஓவியம், இசை, அனைத்தையுமே கேலி செய்யும் அந்த இளைஞர்களின் ஆனந்த சிரிப்பு கண்டு வாய் விட்டு அழுதேன். விம்மி,விம்மி அழுதேன்.
ரூபன், சிரித்திரன் இருவரும் மரணமடையும்போது துயரம் அவர்களை கவ்வியிருக்கும். ஏனெனில் இருவரின் நோக்கமும் நிறைவடையாமலே வானத்திலேயே அவர்களின் ஊர்தி வீழ்த்தப்பட்டிருக்கிறது.



சில நாட்களாக இணையத்தில் வரும் படங்களை பார்த்து பார்த்து புத்தியும் மனமும் பேதலித்து விட்டது. மனநல மருத்துவரிடம் செல்லாத குறை ஒன்றுதான் மீதி. ஈழம் அன்றும் இன்றும் ல் வரும் அந்த "தாயே என்னை தவறு செய்தோம்" ஐ கூட பார்க்க மனதில் தெம்பும் உறுதியும் இல்லை. எங்கே இருந்தோ பார்க்கும் நமக்கே இப்படி என்றால் அவர்களுக்கு? தங்களுடைய முந்தைய பதிவில் வஞ்சபுகழ்ச்சியாக இணைப்பு கொடுத்தவர்க்கு நான் சொல்ல விரும்புவது எல்லாம் எங்களுக்கு அந்த படங்களை பார்க்கும் துணிவு இல்லை ஐயா. எங்களை விட்டு விடுங்கள். எங்களால் முடிந்தது எங்கள் இறைவனிடம் பிரார்த்தனைகள். வாய் விட்டு அழுவது. கண்டனம் தெரிவிப்பது, blog ல் எழுதுவது, பின்னூட்டம் அடிப்பது, "ஸ்டாப் genocide இன் ஸ்ரீ லங்கா" என்று icon போடுவது, மெயில் அனுப்புவது, ஒபாமா மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு எழுதுவது இவ்வளவுதான். சில பேர் மனித சங்கிலி நடத்துகிறார்கள், உண்ணா நோன்பு இருக்கிறார்கள், தீ குளிக்கிறார்கள் (கண்டிக்க தக்க ஒன்று அதற்கு பதில் தாரளமாக ச்சே குவேரா போல் ஈழம் சென்று போராடுங்கள், சாவதற்கே துணிந்தவர்கள் போராட துணிய மாட்டீர்களா என்ன?), பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், சிறைக்கு போகிறார்கள். அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள் கோடி. எங்களுக்கு எதற்கும் துணிவு இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள். எங்களால் முடிந்தது எல்லாம் வாய் விட்டு அழுவது...............
ஆதாமின் பிள்ளைகளுள் ஒருவன் தன் சகோதரனை கொன்றான். அன்று ஆரம்பித்த வண்முறை இன்று வரை தொடர்கிறது. வண்முறையின் பாதமும் சுவடும் எச்சமும் இல்லாத இடம் உலகத்தில் எதாவது மிச்சம் மீதி இருக்கிறதா?
மனிதன் தாயின் கருவறையில் குருதியில் நனைந்து பத்து மாதங்கள் அதிலேயே நீச்சல் அடித்து, இரத்தமும் சதையுமாக வெளியே வந்து வீழ்கின்றான் அதனால் அவன் எப்போதுமே இரத்த பசியோடே அலைகிறான். மனிதனாவது திருந்துவதாவது..........எனக்கு எல்லா நம்பிக்கையுமே பொய்த்து போய்விட்டது.