Share

Dec 11, 2009

புண் உமிழ் குருதி

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்



நானும் என் நண்பர் ஒருவரும் இலக்கியம் ,சங்கீதம் , சினிமா என்று ஒத்த ரசனையுடையவர்கள் . நண்பர் பெயர் ரகோத்தமன் என வைத்துக் கொள்வோம் . இவரிடம் தற்செயலாகவோ , அல்லது இவரே தேடியோ " சாருலதா " கரே -பைரே'' என்ற இரண்டு படங்கள் வீடியோ கேசட் கிடைத்தன . சத்யஜித் ரே படங்கள். ஏற்கனவே பலதடவை பார்த்த படங்கள் தான் . நல்ல படங்களை எத்தனை முறை பார்த்தால் தான் என்ன ! இன்னொரு நண்பர் - இவர் பெயர் பரத்வாஜ் என வைத்துக் கொள்வோம் . அவருடைய வீடு கலந்து பேசி படம் பார்க்க வசதியானது என முடிவு செய்தோம் .

பரத்வாஜ் வீட்டிற்கு சென்றோம் . வீட்டில் அவர் எங்களை களி துலங்கும் புன்னகையுடன் வரவேற்றார் . நாங்கள் உற்சாகமாக சத்யஜித் ரே படங்கள் கிடைத்த விஷயத்தை சொன்னோம் . அவருக்கும் ரே படங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும் தான் . அவரை மிகவும் சந்தோசப் படுத்தி விட்டதாகவே நானும் ரகோத்தமனும் கூட நினைத்தோம் . அவருக்கு இரண்டு மகன்கள் . இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் . பள்ளி + 2 வில் ஒரு பையனும் + 1ல் ஒரு பையனும் அப்போது வாசித்துக் கொண்டிருந்தார்கள் . ராமர் லக்ஷ்மணர் போல களையான பிள்ளைகள் .
அவர் டெக்கில் கேசட் போட்டபோது ஏதோ சிக்கல் தெரிந்தது. முல்லை பூத்த புன்முறுவலுடன் பையன்கள் இருவரும் சுறு சுறுப்பாக டெக்கை கலட்டி கோளாறை சரி செய்ய முயன்றார்கள் . அவர் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என யூகித்தோம் . ஏனென்றால் அவர் மாமியார் தான் பட்சணம் , காபி கொடுத்தார் . வழக்கமாக அவர் மனைவி தான் வந்து வந்தனம் சொல்லி உபசரிப்பார் .

"உங்களுக்கு அருமையான குழந்தைகள் . உங்கள் அதிர்ஷ்டம் " என நான் பரத்வாஜிடம் சொன்னேன் . அவர் கொஞ்ச நேரத்தில்
All relationships are pathological என்பது பற்றி விரிவாக பேசி விளக்கம் சொல்வதில் முனைப்பாகி விட்டார் .

டெக் என்ன முயன்றும் ஒத்துழைப்பு தரவில்லை . பரவாயில்லை . நண்பரிடம் அளவளாவிய சந்தோசம். விடை பெற்றோம் நானும் ரகோத்தமனும் . மறு நாள் பதட்டத்துடன் ரகோத்தமன் போன் செய்தார் .
" ராஜநாயஹம்.. நண்பர் பரத்வாஜ் நேற்று சொல்லொணா துயரத்தில் இருந்திருக்கிறார். நாம் சூழல் தெரியாமல் படம் பார்க்க அவர் வீட்டுக்கு போயிருக்கிறோம் ."
நான் " என்ன சார் சொல்றீங்க ?"

"
Bharadwaj’s wife has eloped with a fellow. ஓடிப் போய் விட்ட அவர் மனைவியை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரும் அவர் பிள்ளைகளும் அந்த கவலையில்,வேதனையில் இருக்கின்ற நேரத்தில் நாம் இருவரும் அவர்களின் சோகம் அறியாததால் விவஸ்தை கெட்ட தனமாக நடந்து கொண்டு விட்டோம் . "

இடி வானத்தொளி மின்னல் என் நெஞ்சை கீறியது .நேற்றைய நிகழ்வை திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை . அப்படி திரும்ப எண்ணிப் பார்த்த போது அபத்தமாய் உறைத்தது.

அன்று நாங்கள் துவங்கிய பிலிம் சொசைட்டியின் படம் ஒன்று ஒரு பள்ளியில் திரையிடப்பட இருந்தது . அதோடு அந்தப் பள்ளியில் கலை நிகச்சிகள் கூட .

அலையென கொந்தளிக்கும் மனதுடன் அந்த பள்ளிக்கு மதியம் கிளம்பிப் போன போது அங்கே ரகோத்தமனும் வந்திருந்தார் . இருவர் நெஞ்சும் காயப்பட்ட நிலை . ஆறப் போவதில்லை .புண் உமிழ் குருதியாய் காலகாலத்திற்கும் உறுத்தும். கொஞ்ச நேரத்தில் அங்கே பரத்வாஜும் வந்தார் . அவர் உறுதியான மனநிலையில் இருந்தார் என்பது எங்களுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது.
கொஞ்ச நேரத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பலரும் கைகோர்த்து ஆடியபோது பரத்வாஜும் கூட ஏற்படுத்திக்கொண்ட உற்சாகத்துடன் ஆடினார் .

சில நாட்களில் அவர் மனைவி மீண்டும் பரத்வாஜுக்கு கிடைத்து விட்டார் .

ஆனாலும் புண் உமிழ் குருதி ?

(புண் உமிழ் குருதி என்பது அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றின் தலைப்பு.வேறொரு அசந்தர்ப்பமான விகார சூழ்நிலை பற்றிய அபூர்வமான கதை.)

"Fidelity is splendid,but no more than infidelity."
- in Pier Paolo Pasolini 's 'Arabian Nights'



1 comment:

  1. இதே மாதிரி நிகழ்வு தான் என்றில்லை, வேறு ஏதோ ஒரு வகையில்,"புண் உமிழ் குருதி" கொப்பளிக்கும் வாழ்க்கையைத் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.