இந்த சசி தரூர் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனவுடன் நட்சத்திர ஓட்டலில் பகட்டாக தங்கி இந்திய நாட்டுக்கு உழைத்தவர். மத்திய அரசு எடுத்துள்ள சிக்கன நடவடிக்கைக்கு எதிராக அருளிப் போந்துள்ளதாக பத்திரிகைகள் பிரசுரித்திருப்பது 'சாதாரண வகுப்பில் விமானத்தில் பயணிப்பது , மாட்டு தொழுவத்தில் பயணம் செய்வதற்கு சமம் .விமான சாதாரண வகுப்பு கால்நடைகளுக்கானது .'
சசி தரூரின் தலை இப்போது உருட்டப்படுகிறது .
பொல்லாத நேரம் வந்தா பூழலும் பாம்பாகும்.
சசி தரூர் 'ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடலாமே ' என்று சொன்ன பிரஞ்சு மகாராணி வகையை சேர்ந்தவர் . இன்னொன்று இந்த சசி தரூர் கேரக்டரை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே ரத்தக் கண்ணீர் படத்திலும் , பாகப்பிரிவினை படத்திலும் எம் ஆர் ராதா மிக அருமையாக நடித்துக்காட்டியுள்ளார் . வெளி நாட்டில் வாழ்ந்து இருந்து விட்டு இந்தியா திரும்பி விட்டால் இந்த இந்தியர்களின் 'பப்பள பளபளபள பந்தா' சகிக்க முடியாத அளவுக்கு போய்விடுகிறது . முகம் சுளித்து “Bloody Indians!” என்று தவித்துப்போகிறார்கள்.
Kanchan Gupta asked Shashi Tharoor, “Tell us Minister, next time you travel to Kerala, will it be cattle class?” on twitter.
Tharoor replied, “Absolutely, in cattle class out of solidarity with all our holy cows.”
இந்தியாவின் ஏனைய அரசியல் அசகாய சூரர்களின் சாகசங்களின் முன் சசிதரூரின் இந்த ஜோக் மிக சாதாரணம் தான் . ஆனால் ஒரு காபினெட் அந்தஸ்து இல்லாத இணை அமைச்சரின் ஆரம்ப சூரத்தனம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஆரம்பித்துள்ளது என்பது மிகவும் நெருடுகிறதே! Cattle class என்ற கஞ்சன் குப்தாவின் வார்த்தையை சசி தரூர் ஏன் ஆட்சேபித்திருக்கக்கூடாது?என்று கேட்பவர்கள் கேட்பார்கள்!தன் கட்சித்தலைவியும் தான் அங்கம் வகிக்கும் மந்திரி சபையின் பிரதமரும் முன்மாதிரியாக இருந்து அவர்களே சாதாரண வகுப்பில் விமானத்தில் பயணித்து எடுத்துள்ள சிக்கன நடவடிக்கை பற்றி இப்படி விட்டேற்றியாக ஜோக் அடிக்கலாமா? என்று தானே கேட்பவர்கள் கேட்பார்கள்! லக்சுரி விஷயங்களை குறைக்கவேண்டும் என்ற முடிவு சரத் பவாருக்கும், சசி தரூரின் சுப்பீரியர் கிருஷ்ணாவுக்கும் , சசி தரூருக்கும் அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மத்திய அரசின் சிக்கன நடவடிக்கைக்கெதிராக இவர்களின் முணுமுணுப்பு ஊரறிய தெரிகிறதே!
ராயல் பெர்சன் சசி தரூர் பற்றி விவாதித்து விட்டு அவர் ரேஞ்சுக்கு ராயல் விஷயம் ஏதாவது எழுதுவது தான் சசி தரூருக்கு கெளரவம் . அதனால் இங்கிலாந்து ராஜ குடும்ப செய்திகள் .
பிரின்ஸ் வில்லியம் தன் காதலி கேட் மிடில்டன் உடன் எட்டு வருட ரொமான்ஸ் வாழ்வு நடத்துபவர் . 2011ல் மிடில்டன் தான் இவருடன் திருமண பந்தத்தில் இணையப்போகிறார் . ஆமாம் எதிர்கால இங்கிலாந்து இளவரசி. வில்லியம் முடிவு செய்து விட்டார் .சில தினங்களுக்கு முன் ஹிந்து பத்திரிகையில் படித்தேன் .
இந்த வார குமுதம் நியூஸ் மிக்சர் : டயானாவின் மற்றொரு மகன் ஹாரி பற்றியது .ஹாரி நீண்ட நாட்களாக பிரிந்திருந்த காதலி செல்சி டாவி யுடன் மீண்டும் சேர்ந்து சுற்றத்தொடங்கியுள்ளார் . சிகரட் பழக்கத்தை நிறுத்த மனோதத்துவ வைத்தியம் ஏற்றுகொள்ளவுள்ளார் .
நாளைய செய்தி ஒன்று : நாளைய தினமலர் சண்டே ஸ்பெஷலில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்
" ஆபாசத்துக்கு எதிராக நமீதா போர்க்கொடி ."
கூந்தலை விரிச்சிப்போட்டு, சிலம்பை உடைச்சி, ஒத்தமுலையை பிச்சி வீசி எறியப்போகும் நமீதா. நாளைக்கு ரத்தக்களறி தான். பத்திக்கிட்டு எரியப் போவுது.
இந்த பாட்டாளி மக்கள் கட்சி ஸ்தாபகர் ராமதாஸ் சமீபத்தில் ஷங்கர் படம் " முதல்வன் " பார்த்திருப்பார் போல . அந்த தாக்கம் அதிகமாகி " எங்களிடம் ஓர் ஆண்டு ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் . இந்தியாவிலேயே தமிழ் நாட்டை வழிகாட்டியாகவும் , சிறந்த மாநிலமாகவும் , முன் மாதிரியாகவும் மாற்றிக்காட்டுகிறோம் " என்று தும்பிக்கையை தரையில் ஊன்றி நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமாக சுற்ற ஆரம்பித்து விட்டார் .


sir spelling mistake in 2 nd para? -):