க.நா.சு மொழிப் பெயர்த்த நார்வே நாவல் " பசி"- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதியது . இந்த நாவலை நான் மீண்டும் பலவருடங்களுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன் ரிவைஸ் செய்துகொண்டிருந்தேன் . அப்போது அதே நேரத்தில் தினமலர் வாரமலரில் நார்வே நாட்டைப் பற்றி அந்துமணி எழுதிய குறிப்புகள் படிக்க கிடைத்தது சுவாரசியமாய் இருந்தது .
சென்ற இரண்டு வார இதழ்களை ஒரு சேர நான் நேற்று தான் படிக்க வாய்த்தது .
13.09.09வாரமலரில் அந்துமணி கட்டுரையில் பெரியசாமி அண்ணாச்சி சொல்லும் ஒரு தகவல் தவறானது .
ஒரு கவிஞர் எழுதியதை வேறொருவர் எழுதியதாக புரிந்துகொள்ள நேர்வது அடிக்கடி நிகழ்கிற விஷயம் தான் . " அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை " என்ற பழைய சினிமாப் பாடல் கவி கா.மு . ஷெரிப் எழுதிய பாடல் என தவறுதலாக கட்டுரையில் அந்துமணியின் நண்பர் பெரியசாமி அண்ணாச்சி குறிப்பிட்டது பதிவாகியுள்ளது . ஆனால் " யானைப் பாகன் " படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் கவிஞர் குமாரதேவன் அவர்கள் எழுதியது .
கவி கா.மு.ஷெரிப் மிகப் பிரபலமான " பாட்டும் நானே ! பாவமும் நானே !'' திருவிளையாடல் பாடலை எழுதியவர்.(ஆனால் கண்ணதாசன் எழுதியதாக படத்தில் இடம்பெற்றது) மிகுந்த பண்பாளர்.
கடந்த சிலவாரங்களுக்கு முன் ரசவடைக்கு பிரபலமான ஓட்டல் வள்ளியூர் சரஸ்வதிபவனை அந்துமணி சரஸ்வதி கபே என்று குறிப்பிட்டு இருந்ததை தவறு என்று சொல்லமுடியாது . ஆனால் கவிஞர் குமார தேவன் எழுதிய பாடலைப் பற்றி சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது .ஏனென்றால் இந்த குமாரதேவனுக்கு அடையாளமே இந்த பழைய பாடல் தான் . பாவம் பேர் சொல்ல ஒரு பாட்டு!இவர் எழுதிய மற்றொரு சினிமா பாட்டு " கண்ணிரெண்டும் வெல்லக்கட்டி , உன் கன்னம் மின்னும் தங்கக்கட்டி "
இந்த 'பதினாறும் நிறையாத பருவமங்கை 'பாடலின் சரணங்கள் ஒன்றின் மூன்றாவது வரி எனக்கு நினைவிலிருந்து நழுவி விட்டது .
" மின்னுகிற பல்வரிசை நட்சத்திரமோ
அது வாவென்று அழைப்பெதென்ன விசித்திரமோ
........ .......... ............... .............. .................
யாரும் மெச்சுகின்ற குணங்களே தான் சொத்து சுகமோ
அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை
காதல் மொழிபேசி வசமாக்கும் ரதியின் தங்கை !
பாரதியின் ' வயது பதினாறிருக்கும் இளவயது நங்கை ' வரியை குமாரதேவன் சுட்டு கொஞ்சம் மாற்றி விட்டார் என்பதும் உண்மை தான். பாரதியை பலர் இப்படி ஆட்டையை போட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே.
திண்டுக்கல் சர்தார் சார் அவர்கள் குமாரதேவன் பாடலின் சரியான சரணவரிகளை பின்னூட்டமிட்டுள்ளார் !
"வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ=அது
வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ
மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ-
யாரும் மெச்சுகின்ற குணங்களேதான் சொத்து சுகமோ"
.......
இந்த கவிஞர் குமாரதேவன் பின்னால் ரொம்ப பல காலம் கழித்து சினிமாப் படம் எடுப்பதாக சொல்லி தேங்காமூடி கம்பெனி ஆரம்பித்து எழுத்தாளர் ராஜேந்திரகுமார் அவர்களின் " நான் ஒரு A"நாவலை படமாக்குவதாக சொல்லி என் நண்பன் ஒருவனை கதாநாயகனாக்கி பூஜை போட்டவர் . ' இந்த படம் வராது . ஷூட்டிங் கூட நடக்காது .எச்சரிக்கையாக இரு . பணம் எதுவும் கொடுத்து விடாதே ' என்று பூஜைக்கு சந்தோசமாய் அந்த நண்பன் போய் விட்டு வந்தவுடனே நான் எச்சரித்தேன் . ஆனால் அந்த நண்பனுக்கு நான் அப்படி சொன்னது தான் அபசகுனமாகப் பட்டுவிட்டது . நான் சொன்னபடி தான் கடைசியில் ஆனது !


அந்துமணி பெரிய அறிவாளி:
தமிழனை காட்டிக்கொடுத்து உடலை வளர்க்கும் தினமலர் கும்பளின் கய்யாள்