சரம ஸ்லோகம்

( இந்த பதிவு இந்த ப்ளாகில் நானூறாவது பதிவு )


"ஊரெல்லாம் கூடி,ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூரையங்காட்டிடைக் கொண்டு போய்ச்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்
பொழிந்தார்களே"
-திருமூலர்

எதிர்பாராத எதிர் பார்த்த மரணங்கள் குறித்து நிறைய அஞ்சலி செலுத்தப்படுகிறது. எழுதப்படுகின்றன .இழவு வீடுகளில் அழுபவர்கள் சிரஞ்சீவிகள் அல்ல . இன்றைய பிணத்திற்கு எதிர்கால பிணங்கள் வேதனையையும்,அழுகையையும் , மாலைகளையும் ,அஞ்சலியையும் செலுத்துகின்றன. எழுதுகின்றன.
குபராவுக்கு அற்புதமான அஞ்சலி எழுதிய திஜானகிராமனுக்கு அவர் மறைந்த போது , மறைந்த ஆதவனும் ,சமீபத்தில் மறைந்த சுஜாதாவும் அஞ்சலி எழுதினர் .
ஏன் இன்று நம்மிடையே வாழும் அசோகமித்திரனும் கூடதிஜாவுக்கு அருமையான அஞ்சலி எழுதினார் .அசோகமித்திரன் எழுதிய அஞ்சலிகளையே கூட ஒரு நூலாக கொண்டுவரலாம் . ஆத்மாநாமுக்கு இரங்கல் எழுதியுள்ளார் .சுந்தர ராமசாமிக்கு கூட அஞ்சலி 'இந்தியா டுடே 'பத்திரிகையில் எழுதவேண்டியிருந்தது . டி ஆர் ராஜகுமாரிக்கு.அந்த காலத்தில் கணையாழியில் டிஎஸ் பாலையாவுக்கு எழுதியிருக்கிறார். சமீபத்தில் நாகேஷுக்கு அஞ்சலி.

ஒரு முறை டெல்லியிலிருந்து அப்போது சென்னை வந்திருந்த
தி ஜானகிராமனும் , அசோகமித்திரனும் சேர்ந்து மணிக்கொடி எழுத்தாளர் ந .சிதம்பர சுப்ரமணியனை பார்க்க அவர் வீட்டை தேடி போகிறார்கள். அன்றே டெல்லி திரும்ப வேண்டிய தி.ஜா அவரை சந்திக்க முடியாமல் போய் விடுகிறது . அவர்கள் தேடிய தெருவிற்கு அடுத்த தெருவிலிருந்த சிதம்பர சுப்பிரமணியம் அடுத்த வாரம் மறைந்து விடுகிறார் .

நகுலன் மறைந்தபோது எவ்வளவு அஞ்சலிக்கட்டுரைகள் ! அசோகமித்திரன் எழுதியது உட்பட .


துயரங்கள் பலவகை. தொடர்ந்து அஞ்சலிக்கட்டுரைகளுக்காக நிர்ப்பந்திக்கப்பட்டால் , அதுவும் அந்திமக்காலத்தில் அஞ்சலி எழுதும் அபத்தம் சலிப்பும் ,அலுப்பும் தராமலா இருக்கும் ?

இந்த செப்டம்பர் மாத 'அம்ருதா ' இதழில் அசோகமித்திரன் 'சரம ஸ்லோகம்'எனும் அஞ்சலிக்கட்டுரை பற்றி எழுதியுள்ளார்:
"எந்தப் பெரிய பிரமுகர் காலமானாலும் என் அந்தரங்கத் துக்கத்துடன் ஒரு பயமும் வந்து விடுகிறது .உடனே,மிக நெருங்கிய பத்திரிகை ஆசிரியர்கள் அஞ்சலிக் கட்டுரைகள் கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் வந்து விடுகிறது. எங்கோ யாரோ இறுதி மூச்சை விட்டால், இறுதிநாட்களில் இருக்கும் நான் சொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?"

6 comments:

  1. D.R.Ashok said...:

    வாழ்த்துக்கள்
    நான்காவது சதத்திற்கு.

  1. அன்புள்ள ராஜநாயகம்,
    “சர்ம” ஸ்லோகம் என்பது தவறு என்று நினைக்கிறேன். “சரம” ஸ்லோகம் என்று இருக்கவேண்டும்.
    2. வாழ்த்துக்கள். நீங்கள் “பதிவு நாயகம்”.
    மந்திரச்சொல் வேண்டும் என்று பாடினான் பாரதி.
    உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரவார்த்தை.
    கிருஷ்ணமூர்த்தி

  1. RP RAJANAYAHEM said...:

    Thank you Krishnamoorthy Sir!

  1. வாழ்த்துக்கள் சார் 400-ற்றுக்கு...

    திருமூலர் வரிகளையும், அசோகமித்திரன் வரிகளையும் படித்தவுடன், கண்கள் குளமாகிவிட்டன சார்.. அற்புதமான write-up sir... இணையத்தில் எளிதில் கிடைக்க இயலாத எழுத்துக்கான கரு மற்றும் எழுத்து நடை உங்களை போன்றவர்களுடையது...

    அன்புடன்,
    ஒவ்வாக்காசு.

  1. arumugam said...:

    congratulations...
    400 blog entries...
    and all of them gems..

    great writings on varied subjects....
    many an eye opener...

    wish you should write many more
    such outstanding blogs in the coming days..

  1. amas said...:

    அருமையான பதிவு!

    amas32

Post a Comment

Followers