Share

Jan 29, 2019

Significant other


தி.ஜானகிராமன் சாஸ்த்ரிய சங்கீத பாடகர்களை ஆக்ரமிக்கும் Eroticism பற்றி கவனப்படுத்துகிறார் : ''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும் எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."
ஏதாவது ஒன்று கெட்டுப்போகும் என்றால் அது கட்டாயம் கெட்டுப்போகும்.

பரதநாட்டியம் பயின்றவர் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு சிலாக்கியமில்லையாம் .
பரதநாட்டியம் பற்றி திஜாவின் 'மலர் மஞ்சம் ' நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம் ,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும் ...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும் , இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும் . நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''
திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips.
ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே
ஜி என் பி : ஜீவனமுனதன்பே
எம் எஸ் : என் அன்பே
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.

There is an optical illusion about every celebrity.
நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.
அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?
மதுரை மணி ஐயர்.
தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர். இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு ரொம்ப பிடிக்கும். அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.

மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார். ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.
பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி ஒரு தகவலை சொன்னார்.அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார். அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.
அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு மதுரை வாசி அவர்.
 கல்லூரி முதல்வர்  சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.
ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு “ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.
நான் கேட்டேன். “  ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”
காலேஜ் பிரின்சிபால்  சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other. அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”
இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன. ’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. ரொம்ப நன்னாயிருப்பா. எவ்வளவு பெரிய தியாகம்”


தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது ஏனோ நினைவுக்கு வந்தது.

மதுரை மணி ஐயரின் அபிமான ராதையின் அன்பில் திளைத்த ஒரு பரிசுத்த குழந்தையாகவே அந்த கல்லூரி முதல்வரை அப்போது நான் பார்த்தேன்.

https://rprajanayahem.blogspot.com/2018/01/blog-post_29.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.