Share

Dec 4, 2016

அருள் வாக்கு



எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் பிராந்திகடை காண்ட்ராக்ட் எடுத்திருந்த என் மாமனாருடன் நானும் பார்ட்னர்.
விருதுநகர் டாஸ்மாக்கில் மாதம் இருமுறை மதுவகைகள் பர்ச்சேஸ் செய்ய வேண்டியிருக்கும்.
அங்கே போய் பணத்தை கட்டி, பில் போட்டவுடன் பிராந்தி,விஸ்கி,ரம்,பீர் அட்டைப்பெட்டிகளை வேனில் எப்போதும் லோட்மேன் ஒரு நான்கைந்து பேர் கவனமாக எடுத்து வைப்பார்கள். அவர்களில் ஒரு லோட்மேனை எல்லோரும் ’சாமி’ என்றழைப்பார்கள். பெரிய குங்குமப்பொட்டு வைத்திருப்பான். எல்லோரும் என்னிடம் கலகலப்பாக பேசுவார்கள்.
ஒரு முறை பிராண்டி பர்ச்சேஸுக்காக விருதுநகர் டாஸ்மாக் போயிருந்த போது வேனில் சரக்கு ஏற்றப்பட்ட போது லோட்மேன் சாமி ஆப்சென்ட். விசாரித்த போது கிடைத்த தகவல் விசித்திரமாய் இருந்தது. சாமி வெள்ளிக்கிழமையன்று ஒரு கோயிலில் ’குறி’ ’அருள்வாக்கு’ சொல்வது வழக்கம். சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், கோவில் பட்டியிலிருந்தெல்லாம் பக்தர்கள் சாமிக்கு கஸ்டமர்கள்!
அதனால் வெள்ளிக்கிழமை டாஸ்மாக்கில் பிராண்டி,விஸ்கி கேஸ் தூக்க வரமாட்டா(ன்)ர்.
அடுத்த முறை டாஸ்மாக் போயிருந்த போது சாமியைப் பார்த்தவுடன் நான் “ என்னா சாமி! உன்னைப்பாத்தா சூடத்த கொளுத்தறாய்ங்களாம், தேங்காய ஒடைக்கிறானுங்களாம், துண்ட போட்டு தாண்டறானுங்களாம். வெள்ளிக்கிழம சாமியை கையில பிடிக்க முடியாதுன்னு கேள்விப்பட்டேன்.... 
நீ தும்பிக்கைய தரையிலே ஊனி, நாலு காலையும் தூக்கி சங்கு சக்கரமா சுத்துறியாம்! மரத்தில வால தொங்கப்போட்டு ஊஞ்சல் ஆடுறியாம்! ”
சாமிக்கு வெட்கம். “ சார்! வெள்ளிக்கிழம அம்மன் கோயில்ல அருள் வாக்கு சொல்வேன். ஒங்க கிட்ட சொல்றதுக்கென்ன. ஆள பார்ப்பேன். வசதியான, நல்ல பசையான ஆளுங்க கிட்ட, ‘ என்ன மூகாம்பிக கோவிலுக்கு கூட்டிப்போ’, ‘ என்ன திருப்பதிக்கு கூட்டிட்டு போ’, ’சுசீந்திரம் கோவிலுக்கு கூட்டிட்டுப் போன்னு சொல்வேன். அவங்க செலவுல எல்லா கோவிலுக்கும் போயிடுவேன். ஒருத்தன் என்ன ஒரிஸ்ஸா புவனேஸ்வர் கோவிலுக்கு கூட்டிட்டுப் போனான்னா பாத்துக்குங்க. என்னய மாதிரி கோவில பாத்தவன் யாரும் இருக்க மாட்டான்!”
”அப்படி கோவில்களுக்கு பிக்னிக் போகும்போதெல்லாம் கூட தாஸ்மாக்கில நான் ஆப்சென்ட் தான்! வண்டி ஓடிட்டு இருக்கு..”

………………………………………..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.