Share

Feb 20, 2024

அதி மதுர மதுர பற்றி ராஜா ஹஸன்


RM096
அதிமதுர மதுர - கட்டுரைகள்(18+)
எழுதியவர் R.P. ராஜநாயஹம்
பக்கங்கள் 67
விலை ரூ 100/
முதற்பதிப்பு ஜனவரி 2024
R.P. ராஜநாயஹம் வெளியீடு
தொடர்புக்கு ஜெய்ரிகி பப்ளிகேஷன்ஸ்.
அலைபேசி -86438 42772
-----------------------------------------------------------------------
எழுத்தாளர், கூத்துப்பட்டறை நிகழ்த்துக் கலை ஆசிரியர், மேடை நாடக இயக்குநர், இலக்கிய ஆர்வலர், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர் என பன்முக ஆளுமைத் திறன் மிக்க R.P.ராஜநாயஹம் அவர்களின் சமீபத்திய வரவு இந்த ,'அதிமதுர மதுர' வயது வந்தோருக்கான கட்டுரைத் தொகுப்பு.
1980 களில் மதுரை, குறிப்பாக ஆரப்பாளையம் பகுதிகளில் வேலை வெட்டிக்கு செல்லாமல், சண்டியர்த் தனம் செய்து கொண்டு வெட்டியாய் சுற்றும் நபர்களின் சேட்டைகள், சேர்க்கைகள் குறித்த நகைச்சுவை மிளிரும் கதைகளை Carnal Thoughts என்ற தலைப்பில் தனது வலைப் பூவில் எழுதியவற்றின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

ஒரு பக்கக் கதை அளவே ஆன நறுக்குத் தெரித்தாற் போன்ற கட்டுரைகளில் தெறிக்கும் நகைச்சுவைகள். வட்டார வழக்குடன் கூடிய வார்த்தைப் பிரயோகங்கள்... எவரையும் எடுத்தெறிந்து பேசிவிட்டு பின்னர் பம்மிக் கொள்ளும் நபர்களின் ஃப்ராடுத்தன  அங்கத சிரிப்புகள் , என இத் தொகுப்பு ஒரு நகைச்சுவை ரைடு எனலாம்.

இதில் வரும் நபர்களின் பட்டப் பெயர்களே செம்ம ரகளையாக இருக்கிறது ஆட்டு மூக்கன் ,ஒத்த காதன், தொல்லை, ஆலமரத்தான், குருவி மண்டையன், ஒச்சு, சொரிக்காம்பட்டியான், கொலாப்புட்டன்,செவத்தியான், ரிக்சாக்காரன் ,லெட்சுமனன்,கோழி குணா,கண்ணுச்சாமி சண்டியர்,தங்காத்து, சுள்ளான் , மொட்டையன், சப்பக்காலன், கம்புக்கூட்டன், சட்டி மண்டையன், சோலை, கொழந்தை, மண்ட மூக்கன், லூயிஸ், மொட்டையன், உருண்டை விழியன் அவர்களின் செயல்களும் மட்ட ரகமாக இருந்தாலும் நம்மை சிரிக்க வைக்கிறது.

வார்னிஷ் எனும் கலக்கி முட்டியைக் குடித்துவிட்டு ஆலமரத்தான் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் போடும் கூப்பாடுகள் அதிரிபுதிரி 'A' ரகம்.
அந்த சமயத்தில்தான் டார்க் ப்ளூ கலரில் இருந்த போலீஸ் வேனின் நிறம் வெள்ளை நிறமாக மாறி இருக்கிறது.
 ஆலமரத்தானுக்கு பொது அறிவு கொஞ்சம் கம்மி. போலீஸ் வண்டியை ஆம்புலன்ஸ் என்று எண்ணிக் கொண்டு "நிறுத்துடா.. வண்டியை நிறுத்துடா.." என சலம்பி கத்தியால் வேனின் பேனட் மீது குத்துகிறான் .

சிங்கத்தின் குகையில் வாலாட்டினால்.. இறங்கிய போலீசாருக்கு ஏக குஷி!! ஆலமரத்தானுக்கு அடி விழுந்ததுமே புரிந்து விட்டது" ஏட்டையா.. சத்தியமா நான் ஆம்புலன்ஸுனு நினைச்சு தான் தெரியாம கத்தியை சொருகினேன்.. போலீஸ் வேன்னு தெரியாதுங்க தெரியாம பண்ணிட்டேன் அடிக்காதீங்க அடிக்காதீங்க" என அலற பொறித்து எடுத்து  வேனுக்குள் ஆலமரத்தான் வீசப்படுகிறான்.

எப்போதுமே கையில் 'கல்கண்டு' வார பத்திரிகை கர்ணன் கவச குண்டலம் போல லூயிசுக்கு
" பொது அறிவு வளரும் டா "

லூயிஸ் ரயில் பயணம் செய்யும்போது கதவருகில் நின்று கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் வருவான்.
 அப்படி நிற்கும் போது ஒரு சலவை தொழிலாளி கழுதையை மேய்த்துக் கொண்டு போனவனைப் பார்த்துக் கூவி,"ஏய் உன்னைத்தாண்டா" எனக்கூப்பிட்டு சாட்டையுடன் திரும்பிய தொழிலாளிடம் தன் வேட்டியை தூக்கி காட்டினான்.

 அந்த கழுதைக்காரன் கோபத்துடன் வஞ்சான். ரயிலில் போகிறவனை என்ன செய்ய முடியும்? கழுதையை சாட்டையால் இரண்டு அடி கொடுத்துவிட்டு மீண்டும் நடந்தவனை மீண்டும் லூயிஸ்,
" உன்னைத்தாண்டா" என கூப்பிட்டு தன் வேட்டியைத்  தூக்கி மீண்டும் இப்பொழுது  காட்டினான்..

 அந்த நேரம் பார்த்து ரயில் நின்றே விட்டது ..எதிர்பாராத இந்த திருப்பம்..

 விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?

 கழுதைக்காரன் வெறியுடன் சாட்டையோடு  ரயிலை நோக்கி ஓடிவந்து லூயிசை செம மாத்து மாத்துகிறான்." இப்ப காட்றா... உன்னத இப்ப காட்றா" என அவன் கூப்பாடு போட்டது தான் லூயிஸ் காதுகளில் விழுந்தது..

குருவி மண்டையன் தீவிர தி மு க தொண்டன் கடந்த 1977 தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு கேட்க புது டெக்னிக்கை கையாளுகிறான்.
 தன் நண்பர்கள் கேங்குடன் தெருக்களில் நுழைந்து, அலப்பறையாக " டேய் ...டேஷ் மகன்களா எம்ஜிஆருக்கு ஓட்டு போடுங்கடா... திமுகவுக்கு ஓட்டு போட்டீங்கன்னா ஒருத்தன் கூட உயிரோடு இருக்க மாட்டீங்கடா ...டேய் ஆரிய நாய்களா ஒழுங்கு மயிரா அண்ணா திமுகவுக்கு ஓட்டு போடலைன்னா அழிஞ்சே போவீங்கடா..."  அதோட இல்லாமல் தாய் தமக்கைகள் குறித்த செந்தமிழ் வார்த்தைகளில் எம்ஜிஆருக்கு ஓட்டு கேட்டு சவுண்ட கொடுக்கிறான். இந்த ரகளையில்  ஏரியா வாசிகள் கதவைப் பூட்டிக் கொண்டு லைட்டை ஆப் செய்து வீட்டினுள் பதுங்கிக் கொள்கிறார்கள்.
அந்தத் தொகுதியில் திமுக வெல்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமனாருடன் பிராந்திக் கடையில்  ராஜநாயஹம் பங்குதாரராக இருந்தபோது, குடிகாரர்களுடன் அவர்களின் சலம்பல்கள்  அனுபவங்களைக் குறிப்பாக," இப்பவும் நான் வீட்டுக்குப் போனா!!" என்ற தலைப்பிலான கட்டுரையை வாசிக்கும் போது கண்ணில் நீர்வர சிரிக்கத் தூண்டுகிறது.

" அப்பு டேய், குழாக்கார காவாலிங்க டேஞ்சர் டயாபாலிக்கு டா. ஒன்னாம் நம்பர் பிக்காலிக.. சூதானமா பழகணும்...நம்மள வில்லங்கத்துல மாட்டி விட்டுடுவான்க" எச்சரிக்கை  மணியடிப்பான் ஆட்டு மூக்கன். 

குழாகாரங்க என்பது மதுரையில் பேண்ட் அணிந்தவர்களைப் பற்றிய இவர்களின் கோட் வேர்ட்.

ஒவ்வொருவரிடமும் லந்தைக் கொடுத்து அவர்களிடம் ஒரண்டை இழுத்து சச்சரவு செய்து கிடைப்பதை அப்பிக் கொண்டு சல்லித்தனமாக இருப்போரின் பின்புலம் வாழ்க்கை முறை அவர்களின் உரையாடல்கள் எனப் புதிய வாசிப்பனுபவத்தை இந்த அதிமதுர மதுர தருகிறது.

இதில் வரும் கதை மாந்தர்கள் யார் யாரோவாக வெவ்வேறு பாத்திரங்களாக நமது வாழ்க்கையிலும் வந்து போயிருக்கலாம் என எண்ண வைக்கிறது ராஜநாயஹத்தின் இந்த உள்ளதை உள்ளபடி சொல்லும் 'ராவா'ன எழுத்து.
அன்பன்,
ராஜா ஹஸன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.