Share

Sep 30, 2017

’டேய்’ ’வாடா போடா’

என் மூத்தமகன் கீர்த்தி  என்னை ’டேய்’ சொல்வான்.  என்னை ’டேய்’ விளிப்பில் தான் பேசுவான். வாடா, போடா..

என் தகப்பனாரையும் ’டேய்’ என்று கூப்பிட்டிருக்கிறான். அவர் அதிர்ந்து போய் விட்டார்.

என்னிடம் தன் தர்மசங்கடத்தையும், கடும் அதிருப்தியையும் கூட கீர்த்தியின் தாத்தா வெளிப்படுத்தினார்.
“ என்னடா உன் மகன் என்னை ’டேய்’ னு கூப்பிடுறான்”
’எல்லோரையுமே ”டேய்”னு தான் சொல்றான். இது என்ன பழக்கம்’
சித்தப்பா, பெரியப்பா, மாமா, வீட்டிற்கு வருகிற விருந்தாளிகள் என்று எல்லோருக்கும் “ டேய்” சொன்னா ’வாடா, போடா’ன்னா நல்லாவா இருக்கு. குழந்தைய வளக்கத்தெரியல.

கீர்த்திக்கு புத்திமதி சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானேன்.
அவனை கண்டிக்க வேண்டிய நிலை. அப்பாவாக நான் செய்ய வேண்டிய கடமை என்று பல பக்கமிருந்தும் அறிவுறுத்தப்பட்டேன்.
பாவிப்பய. பிரமிளை கூட ’டேய்’னானே.
அவனிடம் நான் புரியும்படியாக சொன்னேன். “ இனி அப்பாவை தவிர வேறு யாரையும் “ டேய்” சொல்லக்கூடாது. சரியா?”
 ” அப்பாவை மட்டும் ‘டேய்’ ’வாடா, போடா’ சொல்லு..தாத்தாவ ’டேய்’னு கூப்பிடாதடா” கெஞ்சிக்கேட்டேன்.
எல்.கே.ஜி படித்துக்கொண்டிருந்த கீர்த்தி யோசித்து தலையை ஆட்டினான்.
 மழலை வாய் மலர்ந்தான். “சரிடா”
அப்பாடா என்று நான் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டேன்.


என் அப்பா திருச்சி கஸ்டம்ஸில் Airport preventive Supdt of customs.

மறு நாள் அவர் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு ஜீப்பில் ஏறும்போது வெராண்டாவில் நின்று கொண்டிருந்த கீர்த்தி அவரைப்பார்த்து சொன்னான்
“ டேய், என் பர்த்டே ட்ரஸ் பாரு”.



……………………………………………………..

புகைப்படங்கள்
1. நான் நிற்கிறேன். என் அப்பா மடியில் கீர்த்தி
2. என் அப்பாவுடன் கீர்த்தி
3. பிரமிளுடன் விளையாடும் கீர்த்தி
4. என் அப்பா
5. கீர்த்தி மடியில் அஷ்வத்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.