இரண்டு நடிகர்கள்

Nov 22, 2008
டவுன் பஸ் கண்ணப்பா

பட்டபடிப்பு முடித்திருந்த நேரம். கோரிபாளையம் அமெரிக்கன் கல்லூரி முன் உள்ள கடைகளுக்கு முன் எப்போதும் கலகலப்பாக கூடி பேசிகொண்டிருப்போம். என் க்ளாஸ் மேட் அருண் தான் ஒரு புது நண்பன் ஒருவனை காட்டினான்.

"மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் " என்ற பாடலை அந்த புது நண்பன் அழகாக பாடினான்.

அருண் சொன்னான்." மாப்பிள்ளை ! இவனோட அப்பா சினிமா நடிகராம்டா " என்றான். அந்த நண்பனிடம் "யார் உங்க அப்பா ?" -கேட்டேன்.

'என் என் கண்ணப்பா !' - புது நண்பன் பதில் .

"அடடே 'டவுன் பஸ்'கதா நாயகன். கே சோமு படம். பி என் வசனம் எழுதினார் .அஞ்சலி தேவி தான் அதில் உங்க அப்பா கண்ணப்பா வுக்கு ஜோடி. இருவருக்கும் பாட்டு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே. உலகம் இது தானா துயரம் நிலை தானா' "

அந்த நண்பன் முகம் பிரகாசமாகியது.

நான் தொடர்ந்தேன்." ''தேவகி ' படத்தில் எம் ஜி யார் மனைவி வி என் ஜானகியோடு கதாநாயகனாக கண்ணப்பா நடித்தவர் " என்று ஏனைய நண்பர்களிடமும் சொன்னேன்.

'எஸ் எஸ் ஆர் நடித்த 'தெய்வத்தின் தெய்வம் ' படத்தில் இரண்டாவது கதாநாயகன். சிவாஜி படம் கப்பலோட்டிய தமிழனில் சிதம்பரனாருக்கு தேசாந்திர தண்டனை கொடுத்தவுடன் பைத்தியமாகி விடும் சிதம்பரனார் தம்பி. ரத்ததிலகத்தில் சாவித்திரி கணவனாக வரும் சீனாக்கார ராணுவ அதிகாரி ' இப்படி நான் அடுக்கி கொண்டே போகும்போது அந்த புது நண்பன் ( பெயர் இப்போது மறந்து விட்டது.) கண்கள் கலங்கி விட்டது.

" இவ்வளவு நாளும் நான் எங்கப்பா சினிமா நடிகர் என்று சொன்னால் யாருக்குமே புரியவில்லை. என்னை ஏளனமாக பார்த்தவர்கள் உண்டு. ' என்னமோ சொல்றான். யாருன்னே புரியலே ' என்பார்கள். நீங்கள் தான் சார் எங்க அப்பா பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிறீர்கள் . இப்படி நான் சொன்னவுடன் இவ்வளவு விவரமாக எங்க அப்பா பற்றி நீங்கள் தான் பேசியிருக்கிறீர்கள் ! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.நம் வயதில் யாருக்குமே என் அப்பா பற்றி எதுவுமே தெரியவில்லை."

கமல், ரஜினி காலம்.கண்ணப்பா பற்றி யாருக்கு தெரியும்!

அன்று வீட்டில் அவர் அப்பா என் என் கண்ணப்பா விடம் என்னை பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்லியிருக்கிறார்.
கண்ணப்பா தன் வீட்டுக்கு என்னை விருந்து சாப்பிட அழைத்திருக்கிறார். மதுரை கே கே நகரில் வீடு. அதற்கு மறுநாள் மதியம் கண்ணப்பா மகனுடன் அவர் வீட்டுக்கு போனேன். கண்ணப்பா வுக்கு ஒரு ஆண், ஒரு பெண் இரண்டு பிள்ளைகள். பெண் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார். கண்ணப்பா, அவர் மனைவி இருவரும் என்னை அன்போடு உபசரித்தார்கள்.

பழைய ஆல்பங்களை கண்ணப்பா எடுத்து காட்டினார். எனக்கு பழைய போட்டோ ஆல்பங்கள் பார்ப்பது என்றால் கொள்ளை விருப்பம்.

ஒரு போட்டோ வில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் கண்ணப்பா, சிவாஜி கணேசனும் பன்னிரண்டு வயது சிறுவர்களாக, அதே புகைப்படத்தில் வேட்டி கட்டிய இளைஞனாக எம் என் நம்பியார். இன்னும் "சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா "சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன். பல நடிகர்களை பார்த்து அவர்கள் பெயரை குறிப்பிட்டு நானே அடையாளம் காட்டியது கண்ணப்பா வுக்கு திகைப்பு !

கண்ணப்பா அப்போது ஸ்பெஷல் நாடகங்கள் போட்டுகொண்டிருந்தார்.

 .............................................
 

Nov 24, 2008


ரஞ்சன்

ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .



ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார் .பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார்.
ஏரோப்ளேன் ஓட்டுவார் !



ஏரோப்ளேன் ஓட்டுவது போல நடிக்கும் நடிகர்களை தான் பார்த்திருக்கிறோம்.
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில் வைஜயந்தி மாலாவின் தாயார் வசுந்திரா தேவி யுடன்.
சந்திரலேகா(1948) வில் வில்லன்.
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார்.
அந்த காலத்தில் தமிழ் நவீன இலக்கிய வாசகர் .
ஹிந்தி படங்களில் நடித்தார்.

பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார்.அஞ்சலி தேவி ஜோடி .
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா !தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா " டி எம் எஸ் பாட்டு குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.

இன்றைக்கு அறுபது வயதுடையவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சன் னுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்' இது பற்றி எப்போதும் சூடான விவாதம். ஒரு அறுபது வயதுக்காரர் சொன்னார் இதை !

நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-
" நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"
காதல் வசனம் !!

11 comments:

  1. karthik said...:

    Superb reading your blog continuously now only iam commenting . No words simply superb

  1. karthik said...:

    Simply superb , no words to explain

  1. ராஜநாயகம் சார்,

    ரஞ்சன் ---
    எம்ஜிஆர், சிவாஜிகணேசன் போல குட்டையாக இல்லாமல் உயரமானவர். திரைப்படத்தில் தமிழை கொஞ்சம் ஹிந்திகாரர்கள் பேசுவதுபோல பேசுவார். 'ராஜா மலையசிம்மன்' அவர் நடித்தது தானே?

    "வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே" என்ற பாடலைப் பாடிக்கொண்டு சாரங்கபாணி, குலதெய்வம் ராஜகோபால் ஆகியோருடன் குதிரையில் வருவார்.
    ஒரு காட்சியில் பின்னாடி ஸ்க்ரீனில் படம் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள் குதிரை ஓட்டுவது போன்று ஆடிக்கொண்டிருப்பார்கள். அக்காட்சியில் குலதெய்வம் ராஜகோபால் குதிரை ஓட்டும்போது கண்ணில் தூசு விழுந்தது போல நடிப்பார். நான் இதை என் தந்தையிடம் சொல்லி சிரிப்பதுண்டு.

  1. Anonymous said...:

    SUPER

  1. Vijay said...:

    சில நுட்பமான தகவல்களை வித்தியாசமா தரும் உங்க வலைப்பூ எனக்கு மிக பிடிக்கும், ஒரு சிறிய விண்ணப்பம்
    தங்கள் வலைப்பூவில் குறிப்பிடும் நபர்களில் (அரிய) புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டால் நிறைவாக இருக்கும்

    துவிட்டரில் வேண்டுகோளுக்கேற்ப பதிவு தலைப்பையும் சேர்த்து எழுதுவதற்கு நன்றி

  1. Anonymous said...:

    how long will it take for the comments to publish. none of my comments gets published.
    is kannapa and OAK thevar areone and the same??
    -surya

  1. RP RAJANAYAHEM said...:

    சூரியா!
    கண்ணப்பா வேறு! ஓ.ஏ.கே தேவர் வேறு. ரத்தத்திலகத்தில் சாவித்திரிக்கு சீனாக்காரக் கணவனாக நடிப்பவர் க்ண்ணப்பா என்று பதிவில் தெளிவாக எழுதியிருக்கிறேன்.

  1. venaktraman said...:

    அன்புள்ள ராஜநாயகம் அவர்களுக்கு

    மறைந்த நடிகர் கண்ணப்பா அவர்களின்
    மகள், என்னுடைய மனைவியின் கூட
    படித்தவர். நடிகர் கண்ணப்பா அவர்களின்
    மகனை தாங்கள் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி.
    அவருடைய செல் நம்பர் அல்லது விலாசம்
    தங்களிடம் இருந்தால் தயவு செய்து தெரிவித்தால்.
    மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்

    அன்புடன்

    வெங்கட்ராமன்

  1. RP RAJANAYAHEM said...:

    வெங்கட்ரமணன் சார்!
    கண்ணப்பாவின் மகனுடைய பெயர் கூட எனக்கு மறந்து விட்டது. கண்ணப்பாவின் குடும்பம் பற்றி இந்தப் பதிவை படித்தவர் யாராவது தெரிவித்தால் நல்லது.

Post a Comment

Followers