Share

Aug 17, 2019

வல்லிக்கண்ணனும், தி.க.சிவசங்கரனும், போஸ்ட் கார்டும்


”செய்துங்கநல்லூரை பார்க்கும் போதெல்லாம் ’ராஜநாயஹம் ஊர் இது’ என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன்.பஸ்ஸில் போகும்போது, ரயிலில் போகும்போது” வல்லிக்கண்ணன் போஸ்ட் கார்டில் இது போல இன்னும் எவ்வளவோ அடிக்கடி அன்றெல்லாம் நிறைய எழுதியிருக்கிறார்.

 ”உங்கள் உறவினர் திருநெல்வேலி உட்லண்ட்ஸ் ஓட்டல் முதலாளி ’நெல்லைத் தமிழர்’
இல. ராமகிருஷ்ணன் எனக்கு நண்பர் தான்” என்று ஒரு போஸ்ட் கார்டில் எழுதியிருந்தார்.

தி.க.சியின் கடிதங்கள். 

”தி.ஜாவின் நளபாகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒரு இரண்டு பக்கம் எழுதி எனக்கு அனுப்புங்கள்”
’ராஜநாயஹம்,இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டு எழுதுவார்
வண்ணதாசனின் ’சின்னு முதல் சின்னு வரை’ படித்து விட்டு பரவசமாக தி.க.சிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
’என் மகன் எழுத்து பற்றி நான் எதுவும் அபிப்ராயமாகக் கூட சொல்வதில்லை.’ என பதில் எழுதியவர் அடுத்தவர்கள் எழுத்து பற்றி கிட்டத் தட்ட மூக்கை நுழைப்பது போல அவ்வளவு வேகத்துடன் அக்கறை எடுத்து செயல்படும் வேகம்.

வல்லிக்கண்ணன், தி.க.சி இருவருமே எனக்கு எத்தனை கடிதங்கள் தான் எழுதியிருப்பார்கள்.
எவ்வளவு உற்சாகமான கடிதங்கள் அவை. எப்பேர்ப்பட்ட உன்னத உள்ளங்கள்.
எந்தரோ மஹானுபாவலு. இப்படி உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் காணக்கிடைக்கவே மாட்டார்கள்.
’உங்களிடமிருந்து கடிதம் வரவில்லையே? உடம்பு சரியில்லையா? வேலைப்பளு அதிகமா?’ என்று கூட வினவி ஒரு போஸ்ட் கார்ட் எழுதுவார்க்ள்
இளைய இலக்கியவாதிகளுக்கு இந்த இரண்டு ரிஷிகளும் எவ்வளவு கடிதங்கள் எழுதியிருப்பார்கள்.
பிரதிபலன் எதுவுமே இருவருமே எதிர் பார்த்ததில்லை என்பதை மறக்க முடியுமா?
போஸ்ட் கார்டில் அழகான கையெழுத்தில் எவ்வளவு நம்பிக்கையோடு, நம்பிக்கையை ஊட்டும் எண்ணங்கள்.
ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒரு சிறு பத்திரிக்கை என்றாலும் அதற்கும் ஒவ்வொரு இதழுக்குமே கடிதம் எழுதும் மேலான ஆத்மாக்கள்.
அரசாங்கம் ஒரு வேளை ‘இனி போஸ்ட் கார்டு கிடையாது’ என்று தடை போட்டிருந்தால் தி.க.சியும் வல்லிக்கண்ணனும் விக்கித்து, திகைத்துப் போயிருப்பார்கள்.
கோணங்கியிடம் எனக்கு வல்லிக்கண்ணனுடனும் திகசியுடனும் உள்ள கடிதத்தொடர்பு பற்றி சொன்ன போது, நிறைய கடிதங்கள் எனக்கு எழுதிக்கொண்டிருப்பது பற்றி நான் சொல்ல நேர்ந்த போது சிறுவனின் பலூனை உடைப்பது போல பதில் : “யோவ், வல்லிக்கண்ணனும், தி.க.சியும் கடிதம் எழுதுவது என்பது பல் விளக்குவது போல, குளிப்பது போல, சாப்பிடுவது போல நித்திய செயல். போஸ்ட் கார்டில் எழுதுவது அனிச்சை செயல். வல்லிக்கண்ணன் காலையில் எழுந்தார், பல் விளக்கினார், குளித்தார், சாப்பிட்டார், கடிதம் போஸ்ட் கார்டில் எழுதினார். அவ்வளவு தான். இதிலென்ன அதிசயம் இருக்கு”

கோணங்கியின் இயல்பு அது. குழந்தையின் பலூனை உடைப்பது போல தான் அவன் பேச்சு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.