Share

Jul 4, 2019

ந.முத்துசாமியின் ஆப்த நண்பர் சி.மணி


”முக்காலம் தொடர்பில்லா முக்கூடு” என்பவரும் 
“போனது வராது, வருவது தெரியாது,
நடப்பதைக் கவனி” என்பவரும் அறிவிலிகள்;
நினைவும் நம்பிக்கையும் உள்ள மட்டும்
போவது எதுவுமில்லை, வருவது ஒன்றுமில்லை.
எல்லாம் இருப்பதுவே, நடப்பதுவே.
முற்றிய வித்து
பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்.
மின்னும் விண்மீன்
சென்றதன் தன்னொளி; வருவதன் சின்னம்.
பிறந்த குழந்தை
முன்னோரின் வாரிசு; புதுமனிதனின் மூலம்.
முக்காலம் மூன்றல்ல
ஒன்று – ஒரே முக்கோணம்;
மனித இனத்தைச் சுற்றி வளைத்திருக்கும்
முக்கோணம்.
- சி.மணி

சி.சு செல்லப்ப்பாவின் ’எழுத்து’ சிற்றிதழில் 1959ம் ஆண்டில் வெளிவந்த கவிதை இது.
ந.முத்துசாமிக்கு ஒரு தோழமை மிகுந்த இணக்கமாக இருந்ததென்றால் கவிஞர் சி.மணியுடனானது தான்.அசோகமித்திரன், பிரமிள், வெங்கட் சாமிநாதன் ஆகியோருடனான நட்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கால தோழர் ஞானக்கூத்தனுடன் கூட அவ்வப்போது உரசல் இருந்ததுண்டு.


(ஞானக்கூத்தன் : ’தூக்கிக்காட்டுறேன்..தெரியுதா பாரு’

ந.முத்துசாமி: ’இவருக்கென்ன தங்கத்திலா தொங்குது?’)

முத்துசாமியின் குர்ஜீஃப் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு கூட சி.மணி தான் காரணம்.
சி.மணி மீது அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரமிப்பு கலந்த மயக்கம் இருந்தது.
முத்துசாமி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படிக்க சேர்ந்த போது அவருடைய நண்பர் தாமோதரன் சொல்லியிருக்கிறார். “ மூன்று பைத்தியங்கள் இங்கே வந்திருக்கின்றன.”
அந்த மூவரும் சி.மணி, வி.து.சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோர்.
இந்த மூவரிலும் சி.மணி தான் முத்துசாமியின் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரியவரானார்.
சி.மணியின் அறிவுத்திறன் கண்டு மெய் சிலிர்த்திருக்கிறார். அவருடைய ஆங்கிலப்புலமை முத்துசாமியை மிகவும் கவர்ந்திருக்கிறது.

உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதி பெயர் பெறுவார், நோபல் பரிசு பெறுவார்  என முத்துசாமி உறுதியாக நம்பியிருக்கிறார். 
இதனால் சி.மணியின் ஒரு சட்டையை கேட்டு வாங்கிப்பெற்று பத்திரப்படுத்திக்கொண்டார்.
முத்துசாமி இளைஞராக சென்னை நகரில் பவனி வந்ததெல்லாம் சி.மணி கொடுத்த சைக்கிளில் தான். அந்த சைக்கிளின் பயன்பாடு சொல்லி முடியாது என்பார்.
சி.மணியின் பணத்தில் நடத்தப்பட்ட நடை பத்திரிக்கையில் தான் முத்துசாமியின் முதல் நாடகம் “காலம் காலமாக” வெளி வந்தது.
……………..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.