Share

Feb 11, 2017

Venkatesh Chakravarthy with R.p. Rajanayahem.


சில நாட்களுக்கு முன் என்னை அலுவலத்தில் சந்தித்த நண்பர், எழுத்தாளர் கூத்துப்பட்டறை R.P. ராஜநாயஹம், என் நெஞ்சில் உறங்கி கொண்டிருந்த பல நினவுகளை எழுப்பிவிட்டார். காரணம், இறக்கும் நிலையில் இருந்த எனது தாய்வழி பாட்டியை அவர் அடிக்கடி மதுரை ஜி.எச்சில் சந்தித்திருக்கிறார். 


எனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை. எத்தைனையோ ஆண்டுகள் கழித்து மதுரைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டிய போது, நண்பர்கள் சுந்தர் காளி, பாபு போன்றவர்களுடன் மதியம் மூன்று மணி அளவில் ஹார்வே மில்ஸ்க்கு பக்கத்திலுள்ள கல்லரை தோட்டத்திற்கு சென்று என் பாட்டி, தாத்தா மற்றும் பதினெட்டு வயதிலேயே எல்லோரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி மறைந்து போன எங்கள் இளைய சித்தி மேரி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெழுகுவத்திகளை ஏற்றி வணங்கிவிட்டு திரும்பினேன். மறுபடியும் அதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.
என் தாத்தா எக்மூரிலுள்ள கலைகல்லூரியில் படித்தவர். ஆனால் அவர் காலத்தில் அது கவர்மெண்ட் ஸ்கூல் அஃப் இண்டஸ்டிரியல் ஆர்ட்ஸ் என்றே அழைக்கப்பட்டது. இயந்திரங்களின் மீது அவருக்கு அதிக ஈர்ப்பு இருந்ததால் அங்கு மெக்கானிக்கல் டிராப்ஃட்ஸ்மென் துறையில் டிப்லோமோ பெற்று மதுரைக்கு அவர் திரும்பியதும் அவருக்கும் அவருடய தந்தைக்கும் பிரச்சனைகள் வலுத்ததால் பிரிட்டிஷ் இராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்துவிட்டார். அது, முதல் உலக மகாயுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்த காலம் என்பதால் அவருடய குழு மத்திய கிழக்கில் போரிட இன்று இராக்கிலுள்ள பாஸ்ரா என்ற நகரத்துக்கு அனுப்பபட்டது. ஆனால் அங்கு அவர்கள் கப்பலிலிருந்து இறங்கிய சில நாட்களில் அந்த யுத்தம் முற்று பெற்றது. இதனால் அந்த குழு இந்தியாவிற்கு உடனே திரும்பி செல்லவேண்டுமென்று கட்டளை பிரப்பிக்கப்பட்டது. ஊர் திரும்ப விரும்பாத என் தாத்தா தனது ஆங்கிலேயே காப்டனை சந்தித்து நிலமையை விவரித்து அங்கு எதாவது ஒரு வேலையில் சேர்த்துவிடும்படி அவரிடம் மன்றாடினார். ஒரு சிப்பாய்க்கு இங்கு யார் வேலை குடுப்பார்கள் வேறு எதாவது தகுதி இருந்தால் பரிந்துரைக்க முடியும் என்று அவர் சொன்னவுடன் தனது டிப்லமோவை அவரிடம் காட்டினார். அதை கண்ட அந்த ஆங்கிலேயர் அங்கிருக்கும் எண்ணை கம்பெணிக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதி குடுக்க என் தாத்தாவிற்கு அங்கு வேலை கிடைத்தது.
பிறகு அங்கு அவருக்கு கிடைத்த நண்பர்களின் மூலம் வெகு விரைவில் திரைப்பட ப்ரொஜெக்டரை இயக்கும் முறையையும் அவர் அறிந்து கொண்டதால் அலுவலக பணிகளுக்கு பிறகு அங்கிருக்கும் ஒரு தியேட்டரில் மாலை நேரங்களில் ஒரு ஆப்பரேட்டாராகவும் பணிபுரிந்தார்.
அதே சமயத்தில் அவர் ஒரு தீவிர கிறுத்தவர். அவரிடமிருந்து எண்ணற்ற பைபில் கதைகளை கேட்டிருந்தாலும் அந்த தீவிரம் ஏற்படுத்திய விபரீத விளைவுகளும் அதன் மேல் என் அன்னைக்கு ஏற்பட்ட கோபமும் மறக்கமுடியாத ஒன்று. இதை பற்றி வேறொரு தருணத்தில் எழுதுவதே சரி.
இப்படி அந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டவருக்கு ஒரு பாதிரியாரின் நட்பு ஏற்பட அங்கேயே ஒரு பெண்ணை மணமுடித்து நிரந்திரமாக தங்கிவிடுவதே தனது விருப்பம் என்று அவரிடம் கூற அங்கு சிறுபான்மை இனத்தை சார்ந்த ஒரு கால்டியன் கிறுத்துவ குடும்பத்து பெண்ணான எனது பாட்டியை சந்திக்கும் வாய்ப்பை அந்த பாதிரியார் ஏற்படுத்தி குடுத்தார். அந்த சந்திப்பு திருமணத்தில் முடிய எனது அன்னையும் அதற்கு பிறகு நான்கு சித்திகளும் ஒரு மாமனும் அங்கு பிறந்தனர்.
எனது பாட்டிக்கு இரண்டே மொழிகள் மட்டுமே தெரியும். ஓன்று பாரசீகம், மற்றொன்று ஒரளவுக்கு ஆங்கிலம். இறுதிவரை அவர் புடவை உடுத்தியது கிடையாது. மதுரை ஆங்கிலோ இந்தியர்களை போல் ப்ஃராக் அணிவதே அவருக்கு பிடிக்கும். ஏதோ ஒரு கட்டத்தில் என் தாத்தாவிற்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் தான் இறந்தால் மதுரையில் தான் இறப்பேன் என்று பிடிவாதத்துடன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். பிறகு ஒரு சண்டையில் எல்லோருடய இராக்கிய பாஸ்போர்ட்டுகளையும் எரித்துவிட்டார்.
இப்படி முன்பின் தெரியாத ஊருக்கு புலம் பெயர்ந்துவிட்ட எனது பாட்டிக்கு இரண்டு விதமான நண்பர்கள் மட்டுமே இருந்தனர். ஒன்று மதுரை இரயில்வே காலனியில் இருந்த ஆங்கிலோ இந்தியர்கள், மற்றொன்று அன்று மதுரையில் இருந்த ஒரு சீன பல் மருத்துவரின் குடும்பம். எப்படியோ அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தின் மூலம் இந்த நண்பர்கள் அவருக்கு கிடைத்தனர். ஆனால் கோபம் வந்தாலோ அல்லது பேர குழைந்தகளான நாங்கள் மிகவும் சேட்டை செய்தாலோ அவர் பாரசீக மொழியில் திட்டுவது வழக்கம். குறிப்பாக எங்களை அப்போது பர்பூகா என்று அழைப்பார். அதன் பொருள் பிள்ளைப்பூச்சி.
அவருடய சமையலில் மிகவும் பேர்போனது அவருடய பன்றிகறி ரெசிப்பியே. எங்கள் எல்லோருடய பேஃவரெட். ஒரு முறை கேரளாவில் அதே ரெசிப்பியில் தயாரித்த கறியை ஒரு சிரியன் கிறிஸ்டியன் நண்பர் எனக்கு குடுத்ததும் அதிர்ந்து போனேன். பிறகு சில தரவுகளை தேடிய பிறகே கால்டியன் கிறிஸ்டியனுக்கும் சிரியன் கிறிஸ்டியனுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் புரிந்தன.
கீழே என் பாட்டியை பற்றி நண்பர் ராஜநாயஹம் அவர் ப்ளாகில் எழுதிய குறிப்பு:
வெங்கடேஷ் சக்ரவர்த்தி
- R.P.ராஜநாயஹம்

மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் என் மாமா அட்மிட் ஆகியிருந்தார். அதே வார்டில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் பாட்டி பேஷண்ட். வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சகோதரி குட்டி பத்மினி. இவர்களின் தாயார் ராதாபாய் (ரூத்) அவர்களின் தாயார் தான் ஹாஸ்பிடலில்.
குட்டி பத்மினியின் பாட்டி என்பதால் அங்கே அவருடைய பிரபலம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மாமா என் அத்தை கணவர் என்பதால் தினமும் நான் ஜி.ஹெச். போய் விடுவேன்.
.ஒரு நாள் கூட குட்டி பத்மினியின் பாட்டியை பார்க்காமல் இருக்க மாட்டேன்.” You are a very kind boy!”என்பார். புன்னகையுடன் கூடிய முகம்.
முதுமைத்துயரமும், பிணியும் அவர் முகத்திலிருந்த மலர்ச்சியையும், புன்னகையும் கொஞ்சமும் குறைக்கவே முடிந்ததில்லை.
அவர் கால் விரல்கள் வெட்டப்பட்டன. அவருடைய கால் கூட வெட்டப்பட்டது. அப்போதும் அவர் புன்னகைத்துக்கொண்டே இருந்தார்.
மதுரையில் ஆரப்பாளையம் க்ராஸில் ஜிம்மி ஸ்டோர் மிகவும் பிரபலம். வெங்கடேஷ் சக்ரவர்த்தி, குட்டி பத்மினியின் தாய் மாமாக்கள் கடை அது.
நெஞ்சில் ஓர் ஆலயம், குழந்தையும் தெய்வமும் போன்ற படங்கள் குட்டி பத்மினியை மிகவும் பிரபலப்படுத்தியவை.
கமால் ஜேம்ஸ் அவர்களை என் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தி
“ குட்டி பத்மினியின் தாய் மாமா இவர்” என்று சொன்னது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.
நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியை சந்தித்தேன்.
இதையெல்லாம் வெங்கடேஷ் சக்ரவர்த்தியிடம் சொன்னேன்.
அவரும் தன் பாட்டி, தாய்மாமாக்கள் நினைவில் மூழ்கி சொன்னார்.
“ நீங்கள் பேசும் இது போன்ற விஷயங்களை என்னிடம் நடிகர் ராஜேஷும் பேசியிருக்கிறார்.”
பாட்டியின் பெயர் மெட்டில்டா. பதினொரு குழந்தைகளின் தாயார். இவருடைய கருப்பை எஃதால் ஆனது? எஃகாலா?!
’ திருதராஷ்ட்ரன் மனைவி காந்தாரி, குசேலன் மனைவி இருவரின் கருப்பையும் எஃதால் ஆனது? எஃகாலா?’ என ’காமரூபம்’ கவிதைத்தொகுப்பில் தமிழ் நாடன் கேட்டார்.
மூத்த மகள் ரூத்! திரையுலகில் நடிகை ராதாபாய். சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, கே.ஆர் விஜயா ஆகிய பிரபலங்களுக்கு அன்று வெவ்வேறு கால கட்டங்களில் ஹேர் ட்ரஸ்ஸர் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் தாயார் தான்!
அடுத்தவர் முன் முன். சிம்புவின் பாட்டி. ஸ்வர்ணமுகி, உஷா ராஜேந்தர் இருவரின் தாய்!
பாட்டியின் ஏனைய பிள்ளைச்செல்வங்கள் ஐரின், லீனா, டெர்ரி, ஆல்பர்ட், ஜமால், ஜான், நேசமணி, கமால், மேரி ஆகியோர்.
பாட்டியின் தாய் நாடு ஈராக். கணவர் ஜேம்ஸ் தமிழர்.

.................................
 

1 comment:

Note: Only a member of this blog may post a comment.