மதுரை மேலச்சித்திரை வீதியில் ஒரு ரெடிமேட் ஷோ ரூம் இருந்தது. அந்த கடைக்குப்போயிருந்தேன். அந்த முஸ்லீம் சகோதரர்கள் என் நண்பர்கள் தான்.
நான் போன நேரத்தில் ஒரு அஜரத் அங்கு வந்தார். அவர் துவா செய்து விட்டு அக்பரைப் பார்த்து சொன்னார்.” இங்க நெறைய கெட்ட ஆவிகள்.” மீனாட்சியம்மன் கோவிலைக்காட்டி சொன்னார். ”நம்மவங்க கடைகள் இதனால் பாதிக்கப்படக்கூடாது.இதுக்காக நாங்க தினமும் பள்ளிவாசலில் துவா பண்ணுறோம்.”
அவர் என்னையும் முஸ்லீம் என்றே நினைத்து பேச ஆரம்பித்தார். நான் திருநீறு குங்குமம் பூசாமல் இருந்ததால் என்னையும் பாய் என்று நினைத்து விட்டார். அருவருப்பாக மீண்டும் கோபுரத்தை பார்த்து விட்டு ”குடியானப்பயல்கள்’’ என்றார்.
காபிர் என்றே நம்மைப்பற்றி குறிப்பிட்டுப் பேசுவார்கள் என்பது தெரிந்ததே. குடியானப்பயல் என்ற வார்த்தையும் இந்துக்களை குறிக்கும் என்பது தான் தெரியாததே!
அக்பர்,நிஜாம்,முபாரக்கின் மாப்பிள்ளை பிச்சையப்பா எல்லோருக்கும் தர்மசங்கடம். அஜரத் அவர்களைப் பார்த்து கேட்டார்.” நம்ம மாதிரி அசல் மொசல்மானுக்கும் இந்த குடியானப்பயல்களுக்கும் என்ன வித்தியாசம்?”
அவர்கள் என் இருப்பு காரணமாக பதில் சொல்லத்தயங்க, அஜரத் திரும்பி என்னைப் பார்த்து ‘’ சொல்லுங்கத்தா. நீங்க சொல்லுங்க. நம்ம மாதிரி அசல் முசல்மானுக்கும் இந்த குடியானப்பயல்களுக்கும் என்னத்தா வித்தியாசம்?”
ஒரு வழியா நிஜாம் சிரமப்பட்டு’அஜரத்து,அஜரத்து’ என்று வாய் விட்டுக் கூப்பிட்டு ஜாடை செய்து நான் ஒரு குடியானப்பயல் என்பதை விளக்கும் படியானது. அஜரத் முகம் வெளிறி பின் சற்று இறுகி, அவர்களை கோபமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு(‘சீ நீங்கள்ளாம் முசல்மான் தானா? குடியானப்பயலோடெல்லாம் பழகும் பச்சைத்துரோகிகள்.’) வெளியேறினார்.
அக்பர் அவர் பின்னாலேயே “ அஜரத்து,அஜரத்து’’ என்று சமாதானப்படுத்த ஓடினான்.
நிஜாம் என்னைப் பார்த்து நெளிந்து சிரித்தான்.
பிச்சையப்பா ‘மனசுல வச்சுக்காதீங்க’ என்றான்.
எனக்கு முன்னர் ஒரு தடவை ஒரு முஸ்லீம் பார்பர் அவர்களுக்கு மாடியில்முடி வெட்டும்போது ’எனக்கும் முடி வெட்டிக்கொள்ளட்டுமா’என நான் சகஜமாய் கேட்டபோது
‘ இவர் முசல்மானுக்கு மட்டும் தான் முடிவெட்டி சேவ் பண்ணுவார்’’ என்று பிச்சையப்பா சொன்னது ஞாபகம் வந்தது. ரொம்ப ஆச்சாரமாய் நாவித தொழில் பார்க்கும் அந்த பாயைஆச்சரியமாய் பார்த்தேன்!
‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’
’அணையா விளக்கு’ படத்தில் முகமுத்து சொந்தக்குரலில் பாடிய இந்தப் பாடலை
நான் என் முஸ்லிம் நண்பர்களை சந்திக்கும்போது பலமுறை பாடியிருக்கிறேன்.
‘ ராஜநாயஹம்!நீங்க எங்க மார்க்கத்தில் பிறந்திருக்க வேண்டிய ஆள்!’ என்று நெகிழ்வார்கள்.
http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post.html
http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_26.html
http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_03.html


குடியானவன் = மிக நல்ல தமிழ் வார்த்தை. பொதுவாக வேளாண் தொழில் செய்வோரைக் குறிக்கும்.
ஆனம் = நட்பு, குழம்பு (சோற்றுக்கு நட்பு ஆகையால்)
மற்ற எல்லா குடியினருக்கும் நண்பன் ஆகியமையால், "குடியானவன்"