Share

Sep 2, 2012

புண் உமிழ் குருதி


மீள் பதிவு - 11-12-2009 ல் எழுதப்பட்டது
சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

நானும் என் நண்பர் ஒருவரும் இலக்கியம் ,சங்கீதம், சினிமா என்று ஒத்த ரசனையுடையவர்கள். நண்பர் பெயர் ரகோத்தமன் என வைத்துக் கொள்வோம். இவரிடம் தற்செயலாகவோ, அல்லது இவரே தேடியோ
" சாருலதா " கரே -பைரே'' என்ற இரண்டு படங்கள் வீடியோ கேசட் கிடைத்தன . சத்யஜித் ரே படங்கள். ஏற்கனவே பலதடவை பார்த்த படங்கள் தான். நல்ல படங்களை எத்தனை முறை பார்த்தால் தான் என்ன ! இன்னொரு நண்பர் - இவர் பெயர் பரத்வாஜ் என வைத்துக் கொள்வோம். அவருடைய வீடு கலந்து பேசி படம் பார்க்க வசதியானது என முடிவு செய்தோம.

பரத்வாஜ் வீட்டிற்கு சென்றோம். வீட்டில் அவர் எங்களை களி துலங்கும் புன்னகையுடன் வரவேற்றார். நாங்கள் உற்சாகமாக சத்யஜித் ரே படங்கள் கிடைத்த விஷயத்தை சொன்னோம் . அவருக்கும் ரே படங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும் தான் . அவரை மிகவும் சந்தோசப் படுத்தி விட்டதாகவே நானும் ரகோத்தமனும் கூட நினைத்தோம் . அவருக்கு இரண்டு மகன்கள் . இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் . பள்ளி + 2 வில் ஒரு பையனும் + 1ல் ஒரு பையனும் அப்போது வாசித்துக் கொண்டிருந்தார்கள் . ராமர் லக்ஷ்மணர் போல களையான பிள்ளைகள் .

அவர் டெக்கில் கேசட் போட்டபோது ஏதோ சிக்கல் தெரிந்தது. முல்லை பூத்த புன்முறுவலுடன் பையன்கள் இருவரும் சுறு சுறுப்பாக டெக்கை கலற்றி கோளாறை சரி செய்ய முயன்றார்கள். அவர் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என யூகித்தோம். ஏனென்றால் அவர் மாமியார் தான் பட்சணம், காபி கொடுத்தார். வழக்கமாக அவர் மனைவி தான் வந்து வந்தனம் சொல்லி உபசரிப்பார் .

"உங்களுக்கு அருமையான குழந்தைகள். உங்கள் அதிர்ஷ்டம் " என நான் பரத்வாஜிடம் சொன்னேன். அவர் கொஞ்ச நேரத்தில்
--> All relationships are pathological என்பது பற்றி விரிவாக பேசி விளக்கம் சொல்வதில் முனைப்பாகி விட்டார்.
டெக் என்ன முயன்றும் ஒத்துழைப்பு தரவில்லை. பரவாயில்லை. நண்பரிடம் அளவளாவிய சந்தோசம். விடை பெற்றோம் நானும் ரகோத்தமனும் . மறு நாள் பதட்டத்துடன் ரகோத்தமன் போன் செய்தார் .
" ராஜநாயஹம்.. நண்பர் பரத்வாஜ் நேற்று சொல்லொணா துயரத்தில் இருந்திருக்கிறார். நாம் சூழல் தெரியாமல் படம் பார்க்க அவர் வீட்டுக்கு போயிருக்கிறோம் ."
நான் " என்ன சார் சொல்றீங்க ?"

"
--> Bharadwaj’s wife has eloped with a fellow. ஓடிப் போய் விட்ட அவர் மனைவியை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரும் அவர் பிள்ளைகளும் அந்த கவலையில்,வேதனையில் இருக்கின்ற நேரத்தில் நாம் இருவரும் அவர்களின் சோகம் அறியாததால் விவஸ்தை கெட்ட தனமாக நடந்து கொண்டு விட்டோம் ."
இடி வானத்தொளி மின்னல் என் நெஞ்சை கீறியது.நேற்றைய நிகழ்வை திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை . அப்படி திரும்ப எண்ணிப் பார்த்த போது அபத்தமாய் உறைத்தது.

அன்று நாங்கள் துவங்கிய பிலிம் சொசைட்டியின் படம் ஒன்று ஒரு பள்ளியில் திரையிடப்பட இருந்தது . அதோடு அந்தப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் கூட.

 துக்கம் கொப்பளிக்கும் மனதுடன் அந்த பள்ளிக்கு மதியம் கிளம்பிப் போன போது அங்கே ரகோத்தமனும் வந்திருந்தார். இருவர் நெஞ்சும் காயப்பட்ட நிலை். ஆறப் போவதில்ல.புண் உமிழ் குருதியாய் காலகாலத்திற்கும் உறுத்தும். கொஞ்ச நேரத்தில் அங்கே பரத்வாஜும் வந்தார். அவர் உறுதியான மனநிலையில் இருந்தார் என்பது எங்களுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது.
கொஞ்ச நேரத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பலரும் கைகோர்த்து ஆடியபோது பரத்வாஜும் கூட ஏற்படுத்திக்கொண்ட உற்சாகத்துடன் ஆடினார்.

சில நாட்களில் அவர் மனைவி மீண்டும் பரத்வாஜுக்கு கிடைத்து விட்டார்.

ஆனாலும் புண் உமிழ் குருதி ?

(புண் உமிழ் குருதி என்பது அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றின் தலைப்பு.வேறொரு அசந்தர்ப்பமான விகார சூழ்நிலை பற்றிய அபூர்வமான கதை.)

"Fidelity is splendid,but not more than infidelity."
- in Pier Paolo Pasolini 's 'Arabian Nights' movie


http://rprajanayahem.blogspot.in/2009/03/carnal-thoughts-18.html






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.