Share

Oct 21, 2009

இடைவெளி சம்பத்


இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில் மூளை ரத்தநாளச்சேதத்துக்கு ஆளாகி 1984 ல் மறைந்து விட்டார் . தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ' இடைவெளி ' நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் மறைந்து விட்டார்.


தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கும் இருந்தது . 'அம்மாவுக்கு ' நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள். இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர.
சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில் 45வயதில் 1987ல் ஆதவன் மறைந்தார். தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான். சாகிற வயசா ?

இடைவெளி - சாவு பற்றிய சம்பத்தின் ஆழ்ந்த தவம். ' சாவு என்னை ஈர்த்தவிதம் -' கடைசியாக எல்லாம் போய்விடுகிறது . இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது. இடைவெளி நாவல் - ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை. விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில், மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. '

சம்பத் அவரே சொல்வது போல அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி . வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.
எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை . இது நாள் வரை தன்னுடைய தன்மையை மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதற்கு ' போர் ' அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார் . காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா ? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை !

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன் .

இப்படி இடைவெளி நாவலில் படித்த விஷயங்கள் இன்றும்
மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :' மவுண்ட் ரோடு - மதராசின் கனாட் ப்ளேஸ்.இதுவும் இதனுடைய மூஞ்சிகளும் ! எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் . வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது .

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது ." எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கு ஒரு பூ மணப்பின் குணம் உண்டு . அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது ."

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல் நூறு பக்கங்கள் தான் . நாவலில் வாமன அவதாரம்! க்ரியா வெளியிட்ட இந்த நாவல் (August,1984) அதன் பிறகு இன்னும் மறுபிரசுரம் செய்யப்படவே இல்லை.

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இ . பா.விடம் படிக்க கொடுத்திருக்கிறார் . சில நாளில் இ .பா படித்தவுடன் அவர் வீட்டிற்கு போகிறார் . இ .பா நாவல் பற்றி " Rambling ஆ இருக்குடா . நல்லா எடிட் பண்ணனும் ." என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார் . சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!" டே டே .. ஏண்டா " இபா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார். " குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?" என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

இன்று சம்பத் எழுதி வாசகர்களுக்கு இந்த இடைவெளி நாவல் தான் மிஞ்சியிருக்கிறது. கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். '' சாமியார் ஜூவிற்கு போகிறார் '' அடுத்து " பணம் பத்தும் செய்யும் " என்ற குறுநாவல் .
கசடதபற வில் 'கோடுகள் ' என்ற சிறுகதை . ' இடைவெளி ' என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

ஜி . நாகராஜனின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டது போல சம்பத்தின் படைப்புகளும் தொகுக்கப்பட்டால் நல்லது .ரொம்ப சொற்பமாகத்தான் எழுதினார் . அவர் மொத்தப்படைப்புகளும் கூட ஒரு சிறு நூல் அளவுக்குத்தான் வரும் .

4 comments:

  1. "ஜி . நாகராஜனின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டது போல சம்பத்தின் படைப்புகளும் தொகுக்கப்பட்டால் நல்லது .ரொம்ப சொற்பமாகத்தான் எழுதினார் . அவர் மொத்தப்படைப்புகளும் கூட ஒரு சிறு நூல் அளவுக்குத்தான் வரும்" - Eagerly looking forward to it.

    ReplyDelete
  2. beautiful...where can i get this book RP sir?
    Kannan
    Johannesburg

    ReplyDelete
  3. I think Navina virutcham Azhagiyasingar is about to bring a collection of Sampath's works, i remember seeing an adverteisement in navinavirutcham in this regard

    G.Tamilmani

    ReplyDelete
  4. Sampathai idhuvarai padikkamal poivittomey endra aavalai thoondivittir.VIZZY.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.