Share

Oct 3, 2019

எஸ்.வி.சுப்பையா


நள்ளிரவு.
"சுப்பையா " - காஞ்சி பரமாச்சாரியாள் திரும்ப திரும்ப அழைப்பதாக தூங்கிக் கொண்டிருந்த
எஸ். வி. சுப்பையாவுக்கு உறுதியாக தோன்றுகிறது.
ரெட்ஹில்ஸ் பண்ணை வீட்டில் இருந்து உடனடியாக கிளம்பி இருட்டில் விடிய, விடிய நடந்தே போய் காஞ்சிபுரம் அடைந்து, காலையில் பரமாச்சாரியாள் முன் கண்ணீர் வடித்தவாறு நிற்கிறார்.
இப்படிப்பட்ட ஆன்மீக தேடல் கொண்ட வித்தியாசமான அபூர்வ நடிகர்.
செங்கோட்டை வி. சுப்பையா
சுப்பையாவின் பணிவு மிகவும் குழைவாக இருக்கும்.
" முதலாளி" என்று துண்டை இடுப்பில் கட்டும் பணிவு,
அதே முதலாளியிடம் கோபத்தைக்காட்டும் போது நெஞ்சை நிமிர்த்தி அவர் கோபப்பார்வை பார்க்கும் போது மற்றொரு எதிர்மறை சுப்பையாவாகி விடுவார்.
கனிவாய் சாந்தமாய் பார்க்கும் சுப்பையா ஒரு எல்லை என்றால் அருவருத்து எரிமலையாய் மாறி அரிவாளைத்தூக்கிவிடும்போது மற்றொரு எல்லையில் நிற்பார்.
அவர் மூக்கை துறுத்தி புன்னகைக்கும் அழகு.
வாய் திறந்து அழாமல் கண் கலங்கி கண்ணை மூடித் திறந்து கண்ணீரை சிந்தும் உருக்கம்.
பாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்கு தம்பியாக வாயில் துண்டை வைத்து அழுகையை அடக்கும் சுப்பையா
"வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று மறைவது தான் வாழ்வில் பாதி!
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்"
- களத்தூர் கண்ணம்மாவில் சாவித்திரியின் அப்பாவாக கண்ணீர் வடிக்கும் சுப்பையா. சிதம்பரம் ஜெயராமன் பாடல்
கண் கண்ட தெய்வம் படத்தில் ரெங்காராவுக்கு தம்பியாக, தான் சாவதற்கு கொஞ்சம் முன் அண்ணன் ரெங்காராவிடம் வந்து சுப்பையா
" உன்னை பார்க்கனும்னு தோணுச்சி. பாத்துட்டேன். வர்றேன்."
கப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி பாரதியாக கோர்ட்டில் " எமக்குத் தொழில் எழுத்து, இமைப் பொழுதும் சோராதிருத்தல்!"

பாரதி பாடல் காட்சிகளில் சுப்பையா கண்ணை இமைக்கவே மாட்டார்.
"ராமு" படத்தில் மன நிலை பிறழ்ந்த தமிழாசிரியராக -
சிறுவன் ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
"தெய்வத்துக்கு ஆயிரம் கையிருக்குன்னு சொல்வாங்க. அதில் ஒரு கை கூட என் கண்ணீரைத் துடைத்ததில்லை. எனக்கு ஒரு வாய் சோறு கொடுத்ததில்லை. "
'சொல்லத்தான் நினைக்கிறேன்'
- 'மன நோயாளி' எஸ்.வி.சுப்பையாவிற்கு மூன்று பெண் மக்கள்.
பெண் பார்க்க வருபவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொன்ன மகளை நோக்கி சைகையில் (ரெண்டே வார்த்தை பேசிக்கிறேன்...ரெண்டே வார்த்தை..) கெஞ்சும் சுப்பையா, பேச அனுமதி கிடைத்ததும் செய்யும் கர்ஜனை " எழுந்திருச்சி வெளியே போங்கடா முண்டங்களா"
அடுத்த முறை பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் வேதனையுடன் கண்ணை மூடி அமைதியாக சொல்வார்
" பொண்ணாப் பிறக்கறதே பாவம்.. பொண்ணாப் பிறக்கறதே பாவம்.."
"அரங்கேற்றம்" - எம்.என்.ராஜன்'ஆம்பளைங்கறது மரத்துப் போச்சின்னு சொல்றா..' சுப்பையா ' இன்னொருக்கச் சொல்லு..இன்னொருக்கச் சொல்லு..'
'ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சின்னு சொல்றா'
சுப்பையா முகம் பிரகாசமாகி ' ஆம்பளைன்றது மறந்து போச்சின்னு சொல்றாடி.. அவ அம்பாள்டி!'
'தாலியா சலங்கையா?' படத்தில் தன்னுடைய illegitimate daughter வாணிஸ்ரீயை சந்திக்கிற காட்சியில் சுப்பையாவின் கனிவான நடிப்பு.
நடிகர் ஆக இல்லாமல் சுப்பையா என்ற மனிதரின் சொந்த வாழ்வு பற்றி நடிகர் சிவகுமார் " இது ராஜ பாட்டையல்ல" நூலில்
சில மிக அபூர்வத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.அவற்றைப் படித்தால் சித்தர் போன்றவர் சுப்பையா என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.
சுப்பையாவிற்கு மறையும்போது ஐம்பத்தேழு வயது தான். அவருக்கு பாலகனாக ஒரு மகன் அப்போது இருந்தான்.
................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.