Share

Jun 26, 2019

ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை “ மனஸுலோனி”


தி.ஜானகிராமனுடைய நாவல்கள் அனைத்துமே பிரமாதமானவை. முதல் நாவல் அமிர்தம் மட்டுமே தோல்வியடைந்ததென்று சொல்வேன். தொடராக எழுதப்பட்டதில் சற்றே, மிக சற்றே குறைப்பட்டதென்றால் ‘அன்பே ஆரமுதே’ நாவல்.
மோகமுள், மலர்மஞ்சம், செம்பருத்தி, உயிர்த்தேன், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம் ஆகியவை எல்லாமே மாஸ்டர் பீஸ். தி.ஜானகிராமன் எழுத்தின் விஷேசத்துவத்தை மிஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வரவேண்டும். அவர் எழுத்தின் உன்னத தரம் தனித்துவமானது.

என்னிடம் உள்ள அன்பே ஆரமுதே பிரதி 1965ல் மீனாக்ஷி புத்தக நிலையத்தால் பிரசுரிக்கப்பட்டது. அதை நான் மதுரையில் 1980ல் வாங்கினேன். எத்தனை பிரதிகள் அச்சிட்டார்களோ? கவனியுங்கள். பதினைந்து வருடங்கள் கழித்து நான் வாங்கியிருக்கிறேன்.
ரொம்ப வருடங்கள் கழித்து “அன்பே ஆரமுதே” நாவலை எடுத்தேன்.
இன்று அதை எடுத்தவுடன் அதன் உள்ளே 1994ல் வெளிவந்த தினமலர் கதை மலரில் இருந்து நான் கத்தரித்து எடுத்து பத்திரப்படுத்தியிருந்த ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை கண்ணில் பட்டது. சிலிர்ப்பு ஏற்பட்டது. 

அந்த கதை ’மனஸுலோனி’ தியாகப்ரும்மத்தையே கதாபாத்திரமாக கொண்ட திருவையாற்று உற்சவத்தை பின்புலமாக கொண்ட கதை. இந்த கதையை ஸ்வாமிநாத ஆத்ரேயன் 1944ல் எழுதியிருந்திருக்கிறார். தி.ஜா, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போலவே ஸ்வாமிநாத ஆத்ரேயனும் கூட கு.ப.ராஜகோபாலனின் சிஷ்ய பரம்பரை தான். தி.ஜாவின் நண்பர் ஆத்ரேயன்.
திருவையாறு ஐந்தாம் நாள் உற்சவம். ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் தியாகப்ரும்மத்தின் நவரச கானடா ராக கீர்த்தனையை பாடும் பெண்மணிகள் பாட பரதநாட்டியம் தொடர்கிறது. அந்த சின்னராகம் என்ன ரசமாக பிழியப்படுகிறது. பிழியப்பிழிய இனிப்பு அதிகமாகிறது. 
‘பலுகு கண்ட சக்கரனு நேருரே’
The sweetness of words spoken by Lord Rama would deride the sweetness of sugar candy. 
ஆடும் கணிகையானவள், கல்கண்டை ருசி பார்க்கும் சொகுசை முப்பது விதமாக அபிநயிக்கிறாள்! முப்பது விதமான அபிநயம்.
தியாகராஜஸ்வாமிகள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அனுபல்லவி தாண்டி சரணம் ’சுருல காமினி வருல கானமா?’
மங்கை வார்த்தெடுத்த விக்கிரகம் போல நின்றாள்.
அடுத்த அடி “ச்ருங்கார ரஸ புக்த வார வனிதுலார” மேலும் கீழும் விசிறி பாடப்படுகிறது.
’சுவர்க்கத்திலிருந்து குதித்த தேவ மாது மின்னலைப் போல மறைந்து மறைந்து தோன்றுவது போல ஒரு பிரமையை உண்டாக்கினாள். நடனத்தில் அவ்வளவு வேகம். ச்ருங்கார ரஸ என்ற சொல்லுக்கு அபிநயம். என்ன குலுக்கல்? என்ன மினுக்கல்? என்ன கண் வெட்டு? என்ன கழுத்து நெளிவு? உடல் வளைவு? நிமிர்வு?”
கண்டு கொண்டிருந்த மக்கள் அனைவரும் வெறி பிடித்தவர்கள் போல் ஆகி.. இளைஞர்கள் முகங்களெல்லாம் ரத்தம் பொங்கியது. மாதர்கள் முகமெல்லாம் வெளிரி தலை குனிந்து விட்டனர். திரும்ப திரும்ப பாடப்பட்டு, இப்படியெல்லாம் அபிநயம் வேணுமா?
தியாகப்ரும்மம் வீடு திரும்பிய பின் கனபாடிகளிடம்” ‘ச்ருங்கார ரஸயுக்த வார வனிதுவார’ என்று தானே பாவி பாடினேன். அதற்கு சரியாகத்தானே அவள் அபிநயம் பிடித்தாள். ராமன் தர்பாரில் கேவலச்ருங்கார ரஸமிகுந்த நாட்டியம் நடந்தது என்று சொல்ல நான் துணிந்தேனே. அப்படி ஒரு நாட்டியத்தை என் ராமன் ஆமோதித்து கல்கண்டு போல இனிக்கப் பேசினான் என்று சொல்ல என் நாக்கு கூசவில்லையே! என்ன அபசாரம்?”
தியாகராஜ சுவாமிகள் தன் ஹிந்தோளம் கீர்த்தனை பல்லவியை இயற்றுகிறார்.
”மனசுலோனி மர்முல தெலுசுகோ
மான ரக்ஷகா மரகதாங்க – நா
மனஸுலோனி”
"என் மனதிலுள்ள மர்மத்தை ராகவன் தான் அறிய வேண்டும். இப்படி ஒரு அபசாரத்தை நான் நினைக்கவில்லை. என் மானத்தை அவன் தான் காக்க வேணும்."

இந்த மனஸுலோனி ஹிந்தோள கீர்த்தனையை சுதாரகுநாதன் இப்போது பாடும் நேர்த்தி. பாடலின் புதிர்ப்பாதைகளில் சுதாவின் சஞ்சார அழகு. ( சுதாரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கும், மகளின் காதல் கணவர் மைக்கல் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். திருமண வரவேற்பில் சுதாவின் கணவர் ரகுநாதனுக்கு பிடித்த நாட்டக்குறிஞ்சியும் இடம் பெறட்டும்.)
தியாகப்ரும்மத்தின் நவரஸ கானடா ‘பலுகு கண்ட சக்கரனு நேருரே’ நெடுனேரி கிருஷ்ணமூர்த்தி பாடியது இன்று யூட்யூபில் கேட்க கிடைக்கிறது.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.