Share

Jun 30, 2019

குஞ்சலி மாமி


திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன்முதலாக மகளிர் அணி அமைக்கப்பட்ட போது தி.மு.க நிறுவன தலைவரின் மனைவி ராணி அண்ணாத்துரை, பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையின் மனைவி ஆகியோருடன் ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் என்ற குஞ்சலி மாமியும் உறுப்பினர்.
திராவிட நாடு பத்திரிக்கையின் தீவிர வாசகராய் இருந்தவர் குஞ்சலி மாமி.
முத்துசாமியின் திராவிட கொள்கைப்பற்று எல்லோருக்கும் தெரிந்தது தான்.

முத்துசாமி சாரும், குஞ்சலி மாமியும் பள்ளி மாணவப்பருவத்திலேயே காதலர்கள்.
மாமி பிரமாதமான பாடகி. தேவாரப்பண் அற்புதமாக பாடுவார்.
பள்ளியிலேயே பாட்டுப்போட்டிகளில் பரிசு வாங்கியவர்.

ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.
பாரதி தாசன் புதுவையில் உள்ள தன்னுடைய பிராமண நண்பர் ஒருவரின் மகளை முத்துசாமிக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். 
முத்துசாமி சின்னவயதில் இருந்தே தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தப்பெண்ணை நான் பார்க்கவேண்டுமே என்று பாரதி தாசன் சொன்னாராம். பாரதி தாசன் தங்கியிருந்த வீட்டின் அருகே தான் அந்தப்பெண்ணின் வீடு. முத்துசாமி அந்தப்பெண்ணை அழைத்து வந்து காட்டியிருக்கிறார். கறுப்பு சேலையில் சிவப்பு பார்டர் போட்ட சேலையில் வந்தார் அந்தப்பெண்.
அந்தப்பெண் தான் குஞ்சலி என்ற அவயாம்பாள் மாமி.

முத்துசாமி திருமணத்தில் கலந்து கொண்ட ஒரே எழுத்தாளர் லா. ச. ராமாமிர்தம். 'இது என்ன கல்யாணம்?' என்று கேட்டாராம்.

மாநில அரசு அதிகாரியாக பணியாற்றிவர்.
திருமணத்திற்கு பின்னரும் வேலையில்லாமல் இருந்த ந.முத்துசாமிக்கு TAFEயில் வேலை வாங்கிக்கொடுத்தவரே மாமி தான்.
தன் சங்கீதம் பாடும் திறமையை குடும்பத்திற்காக தியாகம் செய்தவர்.
முத்துசாமியின் சிறுகதைகளுக்கும், நாடகங்களுக்கும் முதல் வாசகர் மாமி தான்.
கூத்துப்பட்டறை ஆரம்பித்த போது மாமி தான் ஸ்பான்ஸர்.
41 ஆண்டுகளாக மாமி தான் கூத்துப்பட்டறையில் கணவரின் செயல்பாடுகள் அனைத்திலும் பெரும்பங்கு ஆற்றியவர்.

தன் தந்தையுடன் தோளோடு தோள் நின்று கூத்துப்பட்டறையை வளர்த்தெடுத்த நடேஷின் பணிக்கு மாமியும் துணை நின்றவர்.

குஞ்சலி மாமியின் ஞாபக சக்தி கடைசி வரை மிகவும் அபாரம். அறுபது, எழுபது வருஷ சங்கதிகளை புள்ளி சுத்தமாக சொல்வார்.
அந்த காலத்தில் முத்துசாமியை பார்க்க அசோகமித்திரன் வரும்போதெல்லாம் தன் வீட்டிலிருந்து ஒரு மாங்காய் கொண்டு வருவார். அதனால் அவரைப்பற்றி அடையாளமிட “மாங்காய் பிராமணன்” என்றே சொல்வார்.
முதுமையின் பாதிப்பால் முத்துசாமி சாருக்கு ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்ட போது மாமி தான் அவரை ஒரு குழந்தையாகவே போஷித்தவர். அவருடைய மருத்துவம் மருந்து மாத்திரை எல்லா விபரமும் மாமிக்கு தான் தெரியும்.
ஒரு நாளில் முத்துசாமி குஞ்சலி, குஞ்சலி என்று கூப்பிட்டுக்கொண்டு தான் இருப்பார்.
”குஞ்சலி, ரசம் பிரமாதம்”


தள்ளாமையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மாமி சலிக்காமல் வீட்டு வேலைகளை சமையல் உட்பட தானே தான் கவனிப்பார்.
சின்ன சின்ன உதவி கூட யாரும் செய்ய விடமாட்டார்.
Workaholic.
அவருடைய உலகமே முத்துசாமி சாரும், பிள்ளைகள் நடேஷும் ரவியும் தான்.
மகன்களை ”கொழந்தே” என்றே இருவரும் பாசத்துடன் அழைப்பார்கள்.
நடேஷ் சாரை பார்க்க போனால் மாமி சொல்வார் “ கொழந்த இப்ப தான் சாப்பிட்டுண்டு படுத்தான். அவன் எழுந்தவுடன் நான் சொல்றேன்”
எல்லா முதிய தம்பதிகளைப் போல மாமியும் சாரும் குழந்தைகளாகவே மாறி விட்டார்கள். இருவருக்கும் செல்ல சண்டை எப்போதும் உண்டு. மறு நிமிடமே முகமலர்ந்து முத்துசாமி “ குஞ்சலி” என்று பரவசமாக கூப்பிடுவார்.
மாபெரும் கலைஞனான முத்துசாமிக்கு முதுமையில் வீட்டில் இருக்கும்போது வேறு வழியில்லாமல் பெரும்பாலும் டி.வியின் முன் உட்கார வேண்டிய நிர்ப்பந்தம் தான்.
குழந்தையாகவே மாறி விட்ட முத்துசாமி சீரியல்களை வேடிக்கை பார்ப்பார்.
மாமி டி.வி.சீரியல்கள் சம்பந்தமாக நிறைய விளக்கம் சொல்வார்.
சீரியல் கதாபாத்திரங்கள் பற்றி தினமும் விரிவாக சொல்வார்.
இரண்டு குழந்தைகள் பேசுவது போலவே இருக்கும்.
”இவ ரொம்ப கெட்டவ. இவளால தான் அவ்வளவு பிரச்னையும். நல்லவ தான்னு அவ நம்பிண்டு இருக்கா. பாவம்.”
”இவன் ஒரு அயோக்கியன். இவன இன்னும் போலீஸ் ஜெயில்ல போடாம இருக்காங்களே” இப்படி மாமி சலிக்கும்போது முத்துசாமி சார் அந்த கதா பாத்திரத்தை கெட்ட வார்த்தையால் உரக்க திட்டுவார்.
ஒரு நாள் நான் கூத்துப்பட்டறைக்குள் நுழைகிறேன்.
முத்துசாமி “ அய்யய்யோ” என்று கத்தினார். நான் பதற்றத்துடன் அவரை நெருங்கினேன். சீரியல் சோகம் என்று உடனே தெரிந்தது.
“குஞ்சலி, எதுக்கு குஞ்சலி இந்த அயோக்கிய பயலுக அந்த ரெண்டு பொண்ணுங்களயும் வேனுல வலுக்கட்டாயமா ஏத்துறானுங்க. அய்யய்யோ..“
சமையல் வேலை பாத்துக்கொண்டிருந்த மாமி ஹாலுக்கு வந்து டி.வியை பார்த்து விட்டு சாரிடம் சொன்னார்.” இப்படி நடக்கும்னு நேக்கு நேத்தே தெரியும். இவ பாவம் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிண்டு ஏமாந்து போறா. இவ மன்னி தான் இவ்வளவுக்கும் காரணம். நேருல பாக்கும்போது நல்லவ மாதிரி நடிப்பா. வழிச்சிண்டு சிரிப்பா. நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நுழப்பா. இப்ப என்னாச்சி பாத்தேளா.."

எங்க குஞ்சலி மாமி இப்ப முத்துசாமி சாரிடம் சென்று விட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.