Share

Jan 30, 2017

’காலத்தைக் கடந்த கதாநாயகி’ தேவிகா



கமல் ரஜினி காலம் ஆரம்பித்து பிரமாதமாக இருவரும் கொடி கட்டிவிட்ட காலம். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, எங்கேயோ கேட்ட குரல்,
மூன்று முகம்......
மதுரை தேவி தியேட்டரில் பழைய படம் “பாவ மன்னிப்பு” பார்க்க என் நண்பன் சரவணனுடன் போயிருந்தேன்.
தேவிகா படத்தில் வந்தவுடன் கை தட்டல். பால்கனியில் கூட கை தட்டி ரசிக சுள்ளான்கள் ஆர்ப்பரித்தார்கள்.தேவிகா வருகிற காட்சிகளிலெல்லாம் பலமான வரவேற்பு. இப்படிதத்தனேரி,விளாங்குடிடூரிங் டாக்கீஸ்களிலும் பார்த்ததுண்டு.
கமல் ”இந்தியன்” ரஜினி ”படையப்பா” காலத்திலும் இளைஞர்கள் தேவிகாவை திரையில் பார்த்து விட்டு பரவசமாகி பிரமாதமான நடிகை என்று சொன்னதைக்கேட்டிருக்கிறேன்.


அவர் காலத்துக்கு சம்பந்தமேயில்லாத புதிய இளைய தலைமுறை அடுத்தடுத்த பத்தாண்டு காலங்களில் அவருக்கு தீவிர ரசிகர்கள் எப்போதும் தொடந்து இருந்து கொண்டே இருக்கிறார்கள் எனும்போது தேவிகா ’காலத்தைக் கடந்த கதாநாயகி’ தானே!

தேவிகா யாரோ ஒரு ரொம்ப பழைய மெட்ராஸ் மேயர்- பாசுதேவ் நாயுடு வின் நெருங்கிய உறவுக்காரப்பெண் என்று புதுமுகமாக அறிமுகமான காலத்தில் அடையாளம். ஊமைப்படக்காலத்து சினிமாக்காரர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் பேத்தியாம். ரொம்பப்பாரம்பரியமான குடும்பம்.
இயற்பெயர் பிரமீளா!

சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரின் பங்களிப்பு தமிழ்ப்பட கறுப்பு வெள்ளை காலத்துக்கு அதிகம்.
அழகு நளினம் என்று தேவிகாவை சொல்லவேண்டும்.

பானுமதி, அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா, சௌகார் ஜானகி, ஜெயந்தி ஆகியோர் தமிழ் சினிமா சூழல், கதையம்சம், பாத்திர வார்ப்பு இவற்றிலிருந்த அபத்தங்களையும் மீறி தங்கள் நடிப்பில் ஒரு கண்ணியத்தை நேர்த்தியான நளினத்துடன் வெளிப்படுத்தினார்கள். இவர்களுடைய கதாநாயகர்களிடம் கூடக் காணக்கிடைக்காத மனமுதிர்ச்சியை திரையில் நிறுவியவர்கள்!


“நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா உயிரே விலகத்தெரியாதா” மாஸ்டர் பீஸ்!

“சொன்னது நீ தானா? சொல்,சொல் என்னுயிரே”

“பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது”

“உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்.”

“ராமனுக்கே சீதை என்று வாழ்வது தான் பெண்மை, சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை”

“ஆயிரம் பெண்மை மலரட்டுமே, ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே”

சுசிலாவின் இந்தப்பாடல்களெல்லாம் தேவிகாவால் காட்சியாகின.


ஆண்டவன் கட்டளை படத்தில் தேவிகா நீராடிக்கொண்டே பாடும் பாடல் ”அழகே வா அருகே வா”
” ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே” என்றவாறு தன் ’முலைகள்’ மீது சட்டென்று பெருமிதமாக பார்வையை ஓட்டுவார்.
என்னா பெருமை!

பின்னால் பிரபலமான கே.ஆர்.விஜயா நாடகத்தனமான நடிகை.
“தூக்கணாங்குருவிக்கூடு, தூங்கக்கண்டா” என்ற தேவிகாவின் பாடலைப்பார்த்து விட்டு கே.ஆர்.விஜயாவின் “ தமிழுக்கும் அமுதென்று பேர்” பாட்டைப் பார்த்தால் தேவிகாவின் அருமைபுரியும். கே.ஆர்.விஜயா பாரதி தாசனின் பாடலில் செய்யும் கொனஸ்டைகள் சகிக்காது.

கதாநாயகியாக இவருடைய முதல் படம் எஸ்.எஸ்.ஆருடன் நடித்த ’முதலாளி’
ஸ்ரீதர் இயக்கத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை கல்யாண் குமாருடன் இணைந்து நடித்தார். இரண்டும் மாஸ்டர் பீஸ்!

பாவ மன்னிப்பு, பந்த பாசம், கர்ணன், அன்னை இல்லம், அன்புக்கரங்கள், சாந்தி, நீலவானம் என சிவாஜியுடன் தேவிகாவுக்கு முக்கிய படங்கள்.
தேவிகா சிவாஜியுடன் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட் ஆகியிருந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.

பந்த பாசத்தில் சிவாஜியை காதலோடு ஒரு பார்வை பார்ப்பார். ஆஹா.. ஒரு பெண்ணின் காதல் பார்வை என்றால் அதற்கு ஈடு தேவிகாவின் கனிவான அந்த பார்வை தான். ஒரு பெண் எப்படி ’சைட்’ அடிப்பாள் என்பதற்கு அது தான் கால காலத்திற்கும் உதாரணம்.

களத்தூர் கண்ணம்மா, ஆடி பெருக்கு முதலிய படங்களில் தேவிகா நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனுக்கு கதாநாயகியாக இதயத்தில் நீ, சுமைதாங்கி, வாழ்க்கைப் படகு.

எம்.ஜி.ஆரோடு ஒரே படம்.’ஆனந்த ஜோதி’!

ஜெய்சங்கருடன் “ தெய்வீக உறவு”

தேவிகாவுக்கு மார்க்கெட் சரியில்லாத நேரம்.
ஜெய்சஙகர் ஒரு நாளில் மூன்று கால்ஷீட் நடித்த பிஸியான கதாநாயகன். தேவிகாவுடன் ஜோடி சேர்ந்த போது ரொம்ப பரவசப்பட்டார் : “ நான் சைக்கிளில் போகிற காலத்தில் என் எதிரில் காரில் வரும் நடிகை தேவிகாவை எப்போதும் பார்த்திருக்கிறேன். அப்போது இவருடன் ஜோடியாக நடிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை.”


ராணி பத்திரிக்கையில் அந்த 1960களின் பின்பகுதியில் ஒரு சுவாரசியமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு அழகி தனக்குப்பிடித்த மற்றொரு அழகி பற்றி சொல்லவேண்டும்! அந்த அழகிமறுவாரம் தனக்குப்பிடித்த மற்றொரு அழகியைக்குறிப்பிடவேண்டும். இதில் சுலபமாக தேவிகா இடம்பிடித்தபோது தனக்குப்பிடித்த அழகியாக திருவிளையாடலில் முருகனாக நடித்தசிறுமியைக்குறிப்பிட்டார். அந்த சிறுமி சினிமாவில் பிரபலமாகவேயில்லை.

சினிமா பார்க்க தேவிகா தியேட்டருக்குப் போனால் முந்திரிப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பார்.

சௌராஷ்ட்ராவான தேவதாஸ் அப்போது பீம்சிங்கிடம் உதவி இயக்குனர். அவரை தேவிகா திருமணம் செய்துகொண்டார்.
கண்ணதாசன் மதித்த நடிகைகளில் தேவிகா முக்கியமானவர். வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் தேவிகா பெரிய தவறு செய்து விட்டதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.கண்ணதாசன் ஆனந்த ஜோதியில் தேவிகாவுக்காக எழுதிய பாடல் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”. கண்ணதாசனை கிண்டல் செய்து இந்தப்பாடலை அவரை பார்க்கும்போதெல்லாம் தேவிகா பாடுவாராம்.

தேவதாஸ் இயக்கிய “வெகுளிப்பெண்” தேவிகா,வெண்ணிற ஆடை நிர்மலா நடித்து வெளி வந்தது.

பாலாஜிக்கு ஜோடியாக (எங்கிருந்தோ வந்தாள்), சுந்தர்ராஜனுக்கு ஜோடியாக (அன்புச்சகோதரர்கள்), இப்படி திரையில் கதாநாயகனுக்கு அண்ணியாக நடிக்க வேண்டி நேர்ந்திருக்கிறது.

கமல்ஹாசனுக்கு அம்மாவாக ஸ்ரீதரின் ’நானும் ஒரு தொழிலாளி’யில்.

தேவிகா தேவதாஸ் பிரிந்த பின்னால் ஒரு குடியரசு தினத்தில் தேவதாஸ் வாழ்ந்த வீட்டிற்கு அப்துல்லாவோடு போயிருந்தேன்.அப்துல்லாவின்
உறவினர் சுல்தானும் தேவதாஸோடு பீம்சிங்கிடம் இருந்தவர்.
நான் பங்களாவிற்குள் நுழைந்தபோது தேவதாஸ் அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்தார். சுல்தான் கத்திரிக்காயில் காம்பு கிள்ளியெடுத்துக்
கொண்டிருந்தார்.

டிரான்ஸிஸ்டர் சைசில் ஒரு போர்ட்டபிள் டி.வி.யில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நேரடியாய் ஒளிபரப்பு. குத்துச்சண்டை வீரர் முகமது அலி அந்த குடியரசு தினத்தில் முக்கியவிருந்தினர்.

தேவிகாவிற்கு காலங்கடந்தும் நிறைய ரசிகர்கள் இருப்பதை நான் குறிப்பிட்ட போது தேவதாஸ் அது பற்றி மிகுந்த பெருமைப்பட்டார்.


கனகா நடிகையானவுடன் தேவிகா ரொம்ப ஜபர்தஸ்து. அம்மாவை சமாளிக்க முடியாமல் சினிமாவுலகம் திணறியதாகச் சொல்வார்கள்.
தலைசிறந்த கதாநாயகியாக தேவிகாவை அறிந்தவர்களுக்கு கனகாவின் அம்மாவாக வித்தியாசமாக ஒரு பிம்பம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் என் மாமனாரின் அண்ணன் வீட்டில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதிசயப்பிறவி படம் டி.வியில்.
"மருமகனே! இவ யாரு!"
"கனகா. தேவிகா மக!"
உடனே என் பெரிய மாமனார் எங்களுடன் அமர்ந்திருந்த அவருடைய அக்கா மாப்பிள்ளையிடம் பதறிப்போய் சொன்னார்.
" அத்தான்! தேவிகா மக நடிக்க வந்துட்டான்னா நமக்கெல்லாம் வயசாயிடுச்சின்னுல்ல அர்த்தம்!?"
......................

தேவிகாவின் குடும்ப நண்பர் ஒருவரிடம் நடிகையாக அவரின் விஷேச அம்சங்கள் பற்றி விலாவரியாக பேசிவிட்டு “ தேவிகாவின் ரசிகன் நான்.” என்றேன். அவர் “இதையெல்லாம் நான்தேவிகாவிடம் சொன்னால் அவர் பதில் என்ன தெரியுமா! ‘அவன் எந்த பய. காட்டுப்பய’ என்பது தான்!”
தேவிகாவை மென்மையும் பெண்மையுமாக திரையில் கண்டிருந்த எனக்கு இந்த உண்மை பெரும் முரணாகத் தெரிந்தது!

...............

சென்ற வருடம் தினமணி.காம் வெளியிட்ட தேவிகா பற்றிய கட்டுரையொன்றில் என்  புகைப்படத்தைப் போட்டு தேவிகாவின் புருஷன் தேவதாஸ் ஆக காட்டியிருந்தார்கள். பெரும் அபத்தம்!
Confusion's Masterpiece!
.............................................................

http://rprajanayahem.blogspot.in/…/10/untoward-incident.html

http://rprajanayahem.blogspot.in/…/11/gossip-and-rumors.html

http://rprajanayahem.blogspot.in/2008/…/carnal-thoughts.html

http://rprajanayahem.blogspot.in/2014/03/blog-post_18.html




1 comment:

  1. //சென்ற வருடம் தினமணி.காம் வெளியிட்ட தேவிகா பற்றிய கட்டுரையொன்றில் என் புகைப்படத்தைப் போட்டு தேவிகாவின் புருஷன் தேவதாஸ் ஆக காட்டியிருந்தார்கள். பெரும் அபத்தம்!
    //
    சிரிச்சி முடியல.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.