Share

Apr 3, 2020

தஞ்சை ப்ரகாஷ்

'பொறா ஷோக்கு' தஞ்சை ப்ரகாஷ் சிறுகதை.
ஷம்ஷாத் பேகம் தன் மகள் 17 வயசு ஜைத்தூனை காசீம் மொகைதீன் ராவுத்தரோட கோர்த்து விடுறா.

ப்ரகாஷூடைய இன்னொரு கதை 'அங்கிள்'.
மிஷன் தெரு எலிசு தன் மகள் லிடியாவை சாமி பிள்ளையோட சேத்து விடுறா.

காலம் தான் என்னமாக ப்ரகாஷ் கைவண்ணத்தில் ஓவியமாக தீற்றப்பட்டு விடுகிறது.

பல பிள்ளைகளை பெற்று விட்ட ஷம்ஷாத்தும், எலிசும் பருவ வயது மகள்களின் வாழ்வை எத்தகைய வசதியான பெரிசுகளான காசீமோடும், சாளியோடும் இணைத்து இயல்பாய் தீர்வு காண்கிறார்கள்.

'மிஷன் தெரு ' குறுநாவல் காட்டும் சரித்திர காலம்.
எஸ்தர் இதில் லாசரஸை மணமுடிக்கும் நிர்ப்பந்தம்.

எஸ்தர் தன் பருவத்தில் காணும் வெள்ளைக்காரன் ஸ்டோன் துரை, மற்றும் காதலன் வில்லி,

மஸ்தானோடு ஓடிப்போகும் ஜைத்தூன்,

பாண்டிப்பயலோடு கல்லறைத் தோட்டத்தில் படுக்கும் லிடியா.

காசீம், சாளி, சேடிஸ்ட் லாசரஸ் மூவரும் அந்த குமருகளின் அந்தரங்கத்தை அறிந்த பின்னரே பெண்டாள்கிறார்கள்.

தஞ்சை ப்ரகாஷ் என்ற அதி மானிடனை நான் முதன் முதலாக கி. ரா மூலமே அறிந்தேன்.
சந்தித்த உடனேயே நான் தி. ஜானகிராமனுக்கு வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலுக்காக பாராட்டினார். "சரியான நேரத்தில செஞ்சீங்க"

கி. ரா. வுடைய கன்னிமை, அம்பையின் 'சிறகுகள் முறியும்',  க. நா. சு. வோட 'பித்தப்பூ' எல்லாத்துக்கும் ப்ரகாஷ் தான் பப்ளிஷர்.
அந்த புத்தகங்கள் என்னிடம் இருந்ததால் அவரை பல காலமாக அறிந்திருந்தேன்.

அப்புறம் கி. ரா வருகை தரு பேராசிரியராக புதுவை பல்கலை கழகத்தில் நடத்திய' நாட்டுப் புறக்கதைகள் ' பற்றிய கருத்தரங்கத்தில்.
ப்ரகாஷ் அதில் ஒரு கட்டுரை வாசித்தார்.
அங்கே கி. ரா. பற்றி என்னிடம் ப்ரகாஷ் கரிசனத்துடன் சொன்னார் :" நைனா மெலிஞ்சிட்டார். சுகர் அவர படுத்துது. "

மூன்றாவதாக அவரை
டாக்டர் ச.வீரப்பிள்ளை வீட்டில்
அசோகமித்திரன் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில்.

அவரைப் பற்றி ஒரு தெளிவான நினைவு என்னில் இன்றும் உண்டு. எப்பேர்ப்பட்ட ஆளுமை.

இன்னும் அதிகமாக அவரோடு பழகி நட்பு பாராட்ட முடியாம‌ல் போனது துரதிருஷ்டம்.

அதனாலென்ன. அவருடைய படைப்புகள் இருக்கின்றன. எஞ்சிய என் காலத்தில் அவரோடு உரையாட அவை போதும்.

"தஞ்சை பிரகாஷ் பற்றி  நான் நினைத்து வியக்காத நாளே கிடையாது. நிஷ்காம்ய கர்மம் என்று ஒன்று சொல்வார்கள். அப்பதத்துக்கு எனக்கு அவரைத்தான் நினைக்கத் தோன்றுகிறது" - அசோகமித்திரன் கணையாழியில் 2000 ஆண்டு ஜனவரியில் இப்படி எழுதினார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.