Share

Apr 25, 2020

பூவை செங்குட்டுவன்


நான்கு வருடங்களுக்கு முன்பு குமுதத்தில்
 பூவை செங்குட்டுவன் பேட்டி பார்த்து விட்டு அந்த பேட்டியெடுத்த அருண் சுவாமிநாதன் மூலம் கவிஞரிடம் பேசினேன்.

அந்த நேரம் குமுதம் ஸ்பெஷலில் நான் எழுதியிருந்த 'நடிகை சாவித்திரி'யை அவரும் படித்திருந்தார்.
"ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க " என்றார்.
(அருண் சுவாமிநாதன் மூலம் தான்
எனக்கு கிடைத்த வாய்ப்பும்)

பூவை செங்குட்டுவன் பேட்டி
மனதை பாதிக்கும்படி இருந்தது.

அவருக்கு அடிமைப்பெண் பட த்திற்காக
  எம். ஜி.ஆர் மூலம் வந்த அபூர்வமான வாய்ப்பை ஒருவரின் கவனக்குறைவால் இழந்திருக்கிறார்.

இவர் எழுதி கொடுத்த பாடலை தொலைத்து விட்டு 'செங்குட்டுவன் பாடலே எழுதி தரவில்லை' என்று சின்னவரிடமே இவர் பெயரை கெடுத்து விட்டிருக்கிறார்.

A slip between the cup and lip.

'  நான் உங்கள் வீட்டு பிள்ளை ' பாடல் முன்னதாக
 புதிய பூமிக்காக பூவை செங்குட்டுவன் எழுதி
   எம். ஜி.ஆர் பேரியக்கத்திற்கு எப்படி பயன்பட்டது
 என்பது சரித்திரம்.

' திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மேலே எதிரொலிக்கும். '

கேட்க திகட்டாத சத்தான பாடல்.

அதிமதுர மதுரயிலே குருவி மண்டையன் மாற்றி பாடுவான் ' திருத்தணி மல மேல எலி கொறிக்கும் '
மதுர வக்ரம்.

' திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் ' பகுத்தறிவு வாதிகளின் கிண்டலுக்கும், கவுண்டமணி ஜோக்குக்கும் பயன்பட்டது.

' தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ' டி. கே. கலாவுக்கு முதல் பாடல்.

கண்ணதாசன் தான் கந்தன் கருணை படத்தில்
' திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடல் இடம்
பெற செய்திருக்கிறார்.

ஏ. பி. நாகராஜன் பல வாய்ப்பு தந்திருக்கிறார்.
'ஆடுகின்றானடி தில்லையிலே '

' ஏடு தந்தானடி தில்லையிலே' எஸ். வரலட்சுமி பாடினார். பாடல் கடைசியில் சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து முடிப்பார்.

குன்னக்குடி இவருக்காக இசைந்திருக்கிறார்.

இங்கே அவர் பாடல்களை பட்டியலிட தேவையில்லை.

கணக்கற்ற பக்திப் பாடல்கள் எழுதியவர்.
'முத்தமிழை பாட வந்தேன்
 முருகனையே வணங்கி நின்றேன். '

' முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே'

'தண்ணீரில் மீன் அழுதா
கண்ணீரை கண்டது யாரு'
இது பூவையாரின் பல்லவி.
 இதை ஒரு ஆல்ரவுண்டர்
தான் எழுதிய பாடலாக
எடுத்துக்கொண்டார். அறிவு திருட்டு.

திருக்குறள் வரிகளை பாடல்களாக மாற்றிய பெரும் பணியில் பூவை செங்குட்டுவன்
 பங்கு உண்டு.

 இவருக்கு 84 வயது.
இயற் பெயர் முருக வேல் என்பது
அவருடைய personal legend பற்றி
 தெளிவாக சுட்டுகிறது.

'வணங்கிடும் கைகளின் வடிவத்தைப்
பார்த்தால் வேல் போல் இருக்குதடி '
கருத்தாழமிக்க வரிகளை எழுதியவர் இளமைக்காலத்தில் பகுத்தறிவு வாதி.

தன் வாய்ப்புகளை தட்டிப் பறித்த ஒருவர் பற்றி           பூவை செங்குட்டுவன் என்னிடம் நயமாக சொன்னார்.
'நல்ல கவிஞர் தான். ஆனால்
போற்றத் தக்க மனிதர் அல்ல '

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.