Share

Nov 7, 2014

ஒ.ஏ.கே தேவர்




ஒ ஏ கே தேவர்  ஒரு வில்லன் நடிகர்.
உசிலம்பட்டி அருகிலுள்ள ஒத்தப்பட்டி அய்யத்தேவர் மகன் கருப்ப தேவர்.



குரல் 'கணீர்' என இருக்கும்.

’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வீரப்பாவுடன் திருடனாக.

மதுரை வீரனில் மன்னர் திருமலை நாயக்கராக.

" வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை " என்ற அவர் வசனம் 'மஹாதேவி ' யில் பிரபலம்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஊமைத்துரை.


'சாது மிரண்டால்' படத்தில் நாகேஷுடைய டாக்ஸியில் டி.ஆர்.ராமச்சந்திரனால் சுடப்பட்டு இடைவேளைக்கு பின் பிணமாகவே டாக்ஸியில் கலக்குவார்.

மதறாஸ் டு பாண்டிச்சேரி - ஓட்டல் நடத்தும் ஐயராக வந்து பிராமண பாஷை பேசுவார்.

'நான் யார் தெரியுமா' ஜெய்சங்கர் படத்தில் வில்லன்.
அதில் ஒ.ஏ.கே தேவர் வசனம் 'ஒரே கல்லு! நாலு மாங்காய்!'

சோ பெண் வேடமிட்டு " கை படாத ரோஜா பூ நானே தான்! காத்திருக்கும் கருவண்டு நீயே தான்!" பாட்டு பாடும்போது தேவர் 'சைட்' நொறுக்குவார்.

பந்தயம் படத்தில் மதுரை சல்லியாக வந்து தோரணையாக கேட்பார்
“ அழகரடி மூக்கன தெரியுமா? கரிமேடு சிவங்காளய தெரியுமா?”
மூன்றெழுத்தில் மாடிப்படியேறும் ஓ.ஏ.கே தேவரின் பின்னால் வசந்தா ராணி போய்க்கொண்டு
“ மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ” பாடும்போது
தேவர் நின்று திரும்பி ’உன்னை போய் பெத்தனே’ என அர்த்தப்படும் படி
தன் வயிற்றில் இரண்டு அடி அடித்துக்கொள்வார். திரும்பி மீண்டும் அவர் படியில் நடக்கும்போது
“ ஆக மெல்ல நட மெல்ல நட” பாடுவார் கிறுக்குப்பெண்.

'தங்கச்சுரங்கம்' சிவாஜி படத்தில் வில்லன்.
1971 தேர்தலில்
சிவாஜி கணேசன் “ நடிப்பில் சந்திப்போமா? வீரத்தில் சந்திப்போமா?” என்று எம்.ஜி.ஆருக்கு பகீரங்க சவால் விட்டார்.
எம்.ஜி.ஆர் இதற்கு பதில் சொன்னார்.
” தம்பி கணேசன் நடிப்பில் சந்திப்போமா? என்று என்னைப் பார்த்துக்கேட்கிறார்.நடிப்பில் என்னுடைய பாணி வேறு.அவருடைய பாணி வேறு என்பது அனைவருக்கும் தெரியும்.ஏன் என் தம்பிக்கே தெரியும்.பின் ஏன் என்னை அவர் நடிப்புக்கு சவால் விட்டுக் கூப்பிடவேண்டும்.ஒரு வேளை ’சிவந்த மண்’ படத்தில் இவரை விட நண்பர் முத்துராமன் சிறப்பாக நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்களே! அதனால் சிவாஜிக்கு தன் நடிப்பில் சந்தேகம் வந்து விட்டது போலும்! (இந்த இடத்தில் சற்று நிறுத்தி எம்.ஜி.ஆர் சொன்னார்)
வீரத்தில் சந்திப்போமா என்று கேட்கிறார்! ஐயோ பாவம்!”
கடலலையெனத்திரண்டிருந்த கூட்டத்தின் சிரிப்பும் ஆரவாரமும் அளவிடமுடியாதபடி நீண்ட நேரம் நீடித்தது.
’தங்கச்சுரங்கம்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக நடித்த ஓ.ஏ.கே தேவர் திமுக மேடையொன்றில் “ கணேசா! நீ முதலில் என்னுடன் நடிப்பில் மோதிப்பார்.’ என்று எதிர் சவால் விட்டார்.

1973ம் ஆண்டு மறைந்து விட்டார். இவர் மகன் தான் ஒ.ஏ.கே.சுந்தர்.


ஒ.ஏ.கே தேவர் அந்த காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் இவரோடு ராயப்பேட்டையில் ஒரு கவிஞர் ஒரே அறையில் தங்கியிருந்தார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!



நிர்ப்பந்தமான ஒரு சூழலில்
( பணத்தட்டுப்பாடு தான்! காச்சப்பாடு! )ஒரு தடவை
ஒ.ஏ.கே.தேவர் அறையிலிருந்த புத்தகம் பேப்பரை எல்லாம் எடைக்கு போட்டு காசு வாங்கி விட்டார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வந்து பார்க்கிறார்.
இவர் எழுதிய பல கவிதைகளையும் தேவர் வீசைக்கு பேப்பர்க்காரனிடம் போட்டு விட்டதை கண்டறிந்து பதறி வேதனைப்படுகிறார். ''அட, 'மடை' மாயி.... ''
ஒ.ஏ.கே.தேவர் அவரை தேற்றி ஆறுதல் சொன்னாராம்.
" இதை விட நீ நல்லா நிறைய கவிதை எழுதிடுவே. கவலைப்படாத கல்யாணி. ஒன் மூளைக்கு பிரமாதமா நீ எழுதுவே பாரு ! பேப்பர்காரனாவது காசு கொடுத்தானேன்னு நாம சந்தோசப்படனும்.. "

Down to Earth!
..................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.